December 27, 2005

ஆஸ்பத்திரி

எனது அடுத்த நாவலை எழுதி முடித்துவிட்டேன். வரிசைக்கிரமப்படி நான் எழுத நினைத்திருந்த வேறொரு நாவலை முந்திக்கொண்ட இந்த நாவலின் பெயர் 'ஆஸ்பத்திரி'. அந்த வகையில் இதை ஒரு Quicky என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். ஒரே வருடத்தில் இரண்டு நாவல்கள் எழுதி முடிப்பதற்கு நானொன்றும் நாவல் எழுதும் இயந்திரம் அல்ல என்பதனால் இப்படித்தான் நினைக்க வேண்டியிருக்கிறது. பரவாயில்லை. இந்த நாவல் அடுத்த வருடம்தான் வெளிவரும் என்பதாகத் தெரிய வருவதால் பாரெங்கும் பரந்து விரிந்து காணப்படும் எனது ஏராளமான ரசிகர்கள் இதற்காக டிக்கெட் போட்டுக்கொண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் வந்து தேட வேண்டாம்.

எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அதற்காக ஒரு முன்னுரை எழுதிக்கொண்டிருக்கிறார். (நாஞ்சில்நாடன் இந்த வருடம் தன் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார் என்கிற கிசுகிசு ஒன்றையும் இந்த இடத்தில் நான் வெளியிட்டு விடுகிறேன். புவனமெங்கும் நீங்கள் பரப்பலாம்.) நாஞ்சில் முன்னுரை தந்ததும் நாவல் அச்சுக்குப் போகும். யார் வெளியிடப்போகிறார்கள் என்பது இன்னும் தீர்மானமாகாத நிலையில் இவ்வளவு சொல்வதே அதிகம்.

இருந்தாலும் கவிஞர் விக்ரமாதித்யனுக்கு எனது அன்பு கலந்த நன்றியை இப்போதே வெளியிட்டு விடுகிறேன். எனது முதல் புத்தகமான அப்பா (கவிதைகள்) வெளிவந்தபோது விக்ரமாதித்யன் என்னிடம் தன் இசைவின்மையை மிகவும் மென்மையாக வெளியிட்டார். அயல் மொழிகளில் ஒரே வி்ஷயத்தை வேறு வேறு வடிவங்களில் எழுதிப் பார்க்கும் வழக்கம் உண்டு என்பதைக் குறிப்பிட்டு, நீங்கள் ஏன் இதை வேறு வடிவத்தில் எழுதிப் பார்க்கக்கூடாது என்று அவர் கேட்டார். 'அப்பா'வைப் பொறுத்தவரை அது அந்த வடிவத்தில் எழுதப்பட்டதுதான் புதிது என்பதை நான் நன்கறிவேன் என்பதால் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் (அப்பா எழுதிய காலத்திலிருந்து கணக்கிட்டால் 11 வருடங்கள்) கழித்து ஆஸ்பத்திரியை ஒரு சிறுகதையாக முதலில் எழுதினேன். சிறுகதை என்கிற அளவில் அது சிறப்பானதாகவே இருந்தபோதும் எழுதியவனின் மனத்துள் கொட்டிக் கிடக்கும் மிச்ச சொச்ச சரக்கை உத்தேசித்து அதை முழுமையாக எழுதி விடுவதுதான் சரியானது என்பதாக தோன்றிக்கொண்டேயிருந்தது. கிட்டத்தட்ட இருபதே நாட்களில் அதைச் செய்து முடித்துவிட்டேன். முடித்துவிட்டு ஒரு முறை வாசித்துப் பார்த்தபோது, விக்ரமாதித்யன் சொன்னதைத்தான் ஓரளவு முயன்று பார்த்திருக்கிறேனோ என்கிற வியப்பு என்னுள் எழுந்தது. அது உண்மையானால் அவருக்கு இன்னுமொரு முறை நன்றி.

December 06, 2005

சாம்பலின் மறுவருகை

சாம்பல் விரும்பிகளுக்கு ஓர் நற்செய்தி!வரும் சென்னை புத்தகத் திருவிழாவில் மீண்டும் உங்கள் கண்ணில் விழப்போகிறது சாம்பல். அறியாதவர்களுக்காக ஒரு சிறு முன்னுரை. சாம்பல் தமிழ் இலக்கிய உலகில் பெரிதும் அறியப்பட்ட சிற்றிதழ். அதன் வடிவமைப்பும் உள்ளடக்கமும் பலராலும் குறிப்பிடப்பட்டது. அண்மையில் காலமான எழுத்தாளர் சுந்தரராமசாமியின் புகைப்படத்தை முன்னட்டையில் வெளயிட்டு அவரை கெளரவப்படுத்திய முதல் இதழ் சாம்பல்தான். அந்த இதழில் புதுவை இளவேனிலின் புகைப்பட காலரி ஒன்றும் இருந்தது. அத்தனை புகைப்படங்களிலும் சுந்தரராமசாமிதான் இடம்பெற்றிருந்தார். தமிழ் சிற்றிதழ்களின் பேரணியில் குழந்தை இலக்கியத்துக்காக சில பக்கங்களை ஒதுக்கிய ஒரே இதழும் சாம்பல்தான். இயக்குனர் சேரனின் ஆட்டோகிராப் திரைப்படத்திற்கு சாம்பலில் வெளிவந்த விமர்சனம்தான் ஆகச்சிறந்ததாக அறியப்பட்டது. இவற்றையெல்லாம் கூட மறந்துபோய்விட்டவர்கள் சாம்பலில் வெளிவந்த ஒரு கவிதைக்காக சங்கரராமசுப்பிரமணியன் ஒருசிலரால் துன்புறுத்தப்பட்டதை நிச்சயம் நினைவு வைத்திருப்பார்கள். இலக்கியம், மொழிபெயர்ப்பு, சினிமா, ஓவியம், புகைப்படம், இதர கலைகள் என தன் வெளியைத் தீர்மானித்திருப்பது சாம்பல்.மீண்டும்...

February 08, 2005

காக்டெய்ல்

தீர்த்தவாரி

காக்டெய்ல் என்கிற தமிழின் அதி உன்னதக் குடிகார நாவல் சமீபத்தில் வெளிவந்தது. அதை உங்களுக்காக ஆக்கி அளித்திருப்போனின் திருநாமம் சுதேசமித்திரன் என்பது. ஆசாமி சாதாரணமான ஆளில்லை. நண்பர்களைக் குடிகாரர்களாக மாற்றிய சகவாசங்கள் குறித்துதான் நாம் பெரிதும் அறிந்து வந்திருக்கிறோம். ஆனால் ஒரு நாவலையே குடிகார நாவலாகக் கெடுத்துக் குடிச்சுவராக அடித்திருப்பது மேற்கண்ட திருமேனிதான். பொல்லாத ஆசாமி ஸ்வாமி... பொல்லாத ஆசாமி.

இந்தக் குடிகார நாவலை இதுவரை படித்த குடிகாரர்களெல்லாம் மதுப்புட்டிக்குக் கோவில் எழுப்ப முயன்று வருவதாகவும், மதுப்புட்டிகள் வெவ்வேறு வடிவங்களில் காணப்படுவதால் புதுப் புதுக் கடவுள் அவதாரங்களும், புதுப் புதுக் கடவுளர்களும், புதுப்புது மதங்களும் தோன்றக்கூடிய அபாயம் தமிழகத்தில் உண்டாகியிருப்பதாகவும் அறிய வருகிறது. (உதாரணமாக விஸ்கேஸ்வரன், பிராந்திமா, ரம்பெருமாள் ஆகிய அதி தெய்வங்களும், மண்டேஸ்வரி, எம்சிகணபதி, வைனாம்பிகை, 'பார்'வதி, பீர்முருகன் ஆகிய துணை தெய்வங்களும், கள்மாடன், வாற்றுமுனி ஆகிய வட்டார தெய்வங்களும், விஸ்கித்துவம், பிராந்தித்துவம், ரம்லாம், ஜின்னம் ஆகிய புது மதங்களுமாக நாம் கருத ஞாயமுண்டூ...)

மேற்கண்ட அதியற்புத நாவலை வாசிக்க நேர்ந்த, குடிப்பழக்கம் இல்லாத அன்பர்களும்கூட ஆஹா ஓஹோ என்று சப்புக்கொட்டிக்கொண்டு அலைவதாகவும் ஒரு ஏஜென்சி செய்தி தெரிவிக்கிறது.

மேலும் இந்த நாவலை வெளியிட்டிருப்பது யுனைட்டட் ரைட்டர்ஸ் என்கிற தமிழ்நாட்டின் முக்கியமான பதிப்பகம் என்பதாகத் தெரியவருகிறது. கடந்த பிப்ரவரி ஆறாம் தேதி கோவையில் நடந்த ஒரு விழாவில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டதாகவும், வெளியீட்டு விழாவில் மேற்படி சுதேசமித்திரன் குடியின் பெருமைகளைச் சிறப்புற உரையாற்றியதாகவும், குழுமியிருந்த முன்னூற்றி சொச்ச பார்வையாளர்களும் மெய்மறந்து போனதாகவும், விழாவின் முடிவில் அந்த ஏரியாவில் இருந்த பார்களும் வைன்்ஷாப்களும் நிரம்பி வழிந்ததற்கும் தனது உரைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதாக மானசீகப் பத்திரிகை ஒன்றுக்கு மேற்படி எழுத்தாளர் பேட்டியளித்ததாகவும் மேற்கொண்டு அந்த ஏஜென்சி செய்தியிலிருந்து தெரியவருகிறது. புத்கத்தின் முகப்பு மற்றும் விலை குறித்த விலாசங்களைப் பெட்டிச் செய்தியில் காண்க.