August 29, 2009

சினிமாவும் சமூக அங்கீகாரமும்

நாடோடிகள் படத்தில் ‘நேர்மை’யான கதாபாத்திரம் ஒன்று வருகிறது. தன் சொந்த மகளை, தன் சொந்தத் தங்கையின் மகனுக்கு மணமுடித்துக்கொடுக்க அந்தக் கதாபாத்திரம் ஓர் எளிய எதிர்பார்ப்பை முன்வைக்கிறது. மாப்பிள்ளை கவர்ன்மென்ட் உத்யோகஸ்தனாக இருக்க வேண்டும் என்பதே அது! கவர்மென்ட் உத்யோகம் உறவை விடவும் பெரியதா என்று கேள்வி கேட்கக்கூடாது. அதெல்லாம் அவரவர் மனோபாவத்தைப் பொறுத்தது!

கவர்மென்ட் உத்யோகம் என்பது நிலையானது; அந்தஸ்தானது; ஓய்வு பெற்ற பிறகும் ஊதியம் தரக்கூடியது என்பதனால் தன் மகள் எவ்விதமான பொருட்குழப்பமும் இல்லாமல் வாழ்வை நிம்மதியாகக் கழிக்க இயலும் என்பதாகக் கணக்கிடும் இந்த கிராமத்து மனப்போக்கு சற்று பரிணாமமடையும்போது ஏற்கப்பட வேண்டிய வேலைகள், மறுக்கப்பட வேண்டிய வேலைகள் என்று இளைஞர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் வேலைகள் இரண்டு விதமாகப் பிரிக்கப்படுகின்றன.

டாக்டர், என்ஜினியர், ஸயன்டிஸ்ட், லெக்சரர் ஆகிய வேலைகள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த கவர்ன்மென்ட் வேலை எதிர்பார்க்கப்பட்ட இடத்தில் இட்டு நிரப்பப்பட்டன. இவர்களெல்லாம் நல்ல வருமானமுள்ளவர்கள் என்பதாக பெண்ணைப் பெற்றவர்கள் கவனத்திற்கொள்ள ஆரம்பித்தார்கள். வக்கீல்கள் இந்த விஷயத்தில் அத்துணை பேணப்படவில்லை என்றே நினைக்கிறேன். ஏனென்றால் அவர்கள் மாமனாரிடமே சட்டம் பேசிவிடக்கூடும்.

ஆக, இந்த வெகு ஜாக்கிரதையான தேர்ந்தெடுப்பில் பின்னுள்ள வேலைகளெல்லாம் புறந்தள்ளப்படுகின்றன. வேண்டுமானால் குலத் தொழில் செய்கிற இளைஞர்களை குலத்தொழில் செய்கின்ற மாமனார்கள் தொழில் விருத்தி நிமித்தம் ஏற்றுக்கொண்டு வந்தார்கள் என்பது தொன்று தொட்டு இருந்து வருவதே என்பதனால் அதனை விட்டுத் தள்ளுங்கள்.

இப்படி ஒரு நிலைப்பாடு எழுவதற்கு முன்னும் ஒரு காலம் இருந்தது. அப்போது மணமகனின் தகுதி கவனிக்கப்படவில்லை, அவனது தகப்பனார் மற்றும் மூதாதையரின் அந்தஸ்தே பெண்ணைப் பெற்றவர்களால் கண்காணிக்கப்பட்டது. இன்னாருடைய பேரன்; இன்னாருடைய மகன்; இப்படியாப்பட்ட சொத்துடையவன்; இத்தனை பேரோடு பிறந்தவன்; உடன் பிறந்தவர்கள் இப்படியிப்படியெல்லாம் இருக்கிறார்கள்; அவர்களின் வம்சம் இப்படியிப்படியெல்லாம் பெருகிற்று என்பதெல்லாம் பெண்ணைக் கொடுப்பதற்கான உபாயமாக இருந்த காலம் அது. அதையும் விட்டுத்தள்ளுங்கள்.

நாம் வாழும் காலத்திற்கு வருவோம். இப்படி கொள்ளத் தக்கவை மற்றும் தகாதவை என்று இரண்டு தரப்பட்ட தொழில்கள் அல்லது வேலைகள் இந்திய தேசத்தில் விரிந்து பரந்து கிடக்கவே செய்கின்றன. ஐரோப்பிய நாடுகளைப் போல எல்லாத் தொழிலும் சமமானதே என்கிற நிலைப்பாடு வர்ணாசிரம தர்மத்தில் ஊறிய பாரதத் திருநாட்டில் இனியும்கூட எப்போது முகிழ்க்குமோ என்பதும்கூட ஐயப்பாடே.

சரி, என்னத்துக்கு இந்த முகாந்திரம் என்று கேட்கிற நேரம் வந்துவிட்டதா? வேறு எதற்கு? சொந்தமாக லட்சக்கணக்கில் முதலீடு செய்து லேத் வொர்க் ஷாப் வைத்திருப்பவன், டூரிஸ்ட் வாகனங்கள் வைத்துக்கொண்டு தொழில் செய்பவன், டைலரிங் கடை அல்லது ரெடிமேட் ஆடைக் கடை வைத்திருப்பவன், ஏஸி மற்றும் ரெஃப்ரிஜிரேட்டர் பழுது பார்ப்பவன், டிஃபார்ம் முடித்து மெடிக்கல் ஷாப் வைத்திருப்பவன், புத்தகங்களைப் பதிப்பிப்பவன் என்று பல்லாயிரம் தொழில்கள் மற்றும் வேலைகள் கல்யாணச் சந்தையில் பின்தள்ளப்பட்டே வருகின்றன. இவர்களுக்கு சமுதாய அந்தஸ்து மற்றும் கல்வி அந்தஸ்து ஆகியவற்றில் இரண்டாந்தர மணமகள்களே வேண்டா விருப்பாக கட்டிவைக்கப்படுகிறார்கள் என்பதோடு காலமெல்லாம் குத்திக்காட்டவும் படுகிறார்கள்.

இவர்களுக்கே இதுதான் நிலைமை என்றால், சமுதாயத்தால் மிகுந்த ஒழுக்கக்கேடு நிறைந்த தொழில் என்பதாகக் கருதப்படும் சினிமாத் தொழிலில் இயங்கும் இளைஞர்களின் நிலைமையை நினைத்துப் பாருங்கள்! (எப்புடீ? சுற்றி வளைத்தாலும் சப்ஜக்ட்டுக்கு வருவதில் என்னைவிட சமர்த்தன் யாராவது இருந்தால் நீங்களே சொல்லுங்கள்!)

எமது சினிமாவில் இருக்கும் பல்வேறு இளைஞர்கள் தம் இளமையை இவ்விதமாகவே தொலைத்து வந்திருக்கிறார்கள். சினிமாவில் வேலை பார்த்துவிட்டு அது தேவையில்லை என்று சொந்தத் தொழில் அல்லது ஏதாவது வேலைக்குத் திரும்ப நேர்ந்தாலும்கூட சமுதாயம் அவர்களை ஜெயிலுக்குப் போய்விட்டு வந்தவனைப் பார்க்கிற கோணத்திலேயே பார்க்கிறது. பொதுப்புத்தி சார்ந்து சமுதாயம் நினைக்கிறது, ‘ஒருமுறை ஜெயிலுக்குப் போய்விட்டு வந்தவன் மீண்டும் ஜெயிலுக்குப் போகவே செய்வான்!’ ஏனென்றால் அவனது முந்தைய குற்றப் பின்னணி அவனைப் பின்தொடரும்; போலீஸ்காரர்கள் அவனைக் கண்காணித்தவாறே இருப்பார்கள்; அந்த பிராந்தியத்தில் எந்தக் குற்றம் நிகழ்ந்தாலும் இவனும் விசாரிக்கப்படுவான் இந்தச் செயல்பாடுகள் அவனை மீண்டும் ஜெயிலுக்குள் செலுத்தவே முனையும் என்பதனால் அவனுக்குப் பெண்ணைக் கொடுக்கக்கூடாது என்பது எத்தனை நியாயமானதோ, அதே அளவுக்கு நியாயமானதுதான் சினிமாத்துறைக்குப் போய்விட்டு வந்தவன் அல்லது இப்போதும் அதில் இருப்பவனுக்கு பெண்ணைக் கொடுக்க மாட்டேன் என்று சொல்வதும்!

இது பெண்ணைக் கொடுப்பது என்பதில் மாத்திரம் முடிந்து போகிற விஷயமல்ல, ஒரு பாங்க் லோன் வாங்கப்போனாலும் சரி, ஒரு விற்பனைப் பிரதிநிதி வேலைக்கு மனுப் போட்டாலும் சரி, பெரும் தடையாகவே அவனது சினிமா ஆர்வம் அவனை இம்சித்து வருகிறது. இதனாலேயே சினிமாத் துறை என்பது ஒரு இளைஞனை புலி வாலைப் பிடித்ததைப்போல வருத்தவே செய்கிறது.

உண்மையில் மற்றவர்கள் குற்றஞ்சாட்டுமளவுக்கு இந்தத் துறை அத்தனை மலிவானதா? உண்மையிலேயே ஒழுக்கக் கேடுகள் நிறைந்ததா? சம்பாத்திய நிலையின்மையை முன்வைப்பதா என்கிற கேள்விக்கெல்லாம் பதில் ஒன்றே ஒன்றுதான், ‘இது முழுக்கவும் உண்மையுமல்ல, முழுக்கவும் பொய்யுமல்ல!’

இந்த மாதிரி ஒழுக்கக் கேடு என்பது வேறு தொழில்களில் இல்லையா? டாக்டர்கள், என்ஜினியர்கள் எல்லோருமே ரொம்பவும் ஒழுக்கசீலர்கள்தானா? நைட் டூட்டிகள், கார்ப்பரேட் அலுவலகத்தின் நான் சர்வயலன்ஸ் அறைகள் ஆகிய பொழுதுகள் மற்றும் ஸ்தலங்களில் அவர்களின் ஒழுக்கங்கள் சரியாகத்தான் பேணப்படுகின்றனவா? கலாச்சார மாற்றத்தின் முன்னால் கற்புநெறி தப்பிப் பிழைத்துதான் இருக்கிறதா என்கிற கேள்விகளுக்கெல்லாம் உங்களுக்கே விடைகள் தெரியும்.

நீங்கள் இருக்குமிடத்தில் உள்ள அத்தனை சாத்தியங்களையும் நீங்கள் முகர்ந்து பார்த்துவிடுகிறீர்களா? அதெல்லாம் தனி மனிதர்களின் ஆசாபாசங்கள், ஒழுக்கநெறிகள் சார்ந்த பூர்வீக மனப்பதிவுகள், நோயுறுநிலைகள் குறித்த தெளிவுகள் என்று வித்தியாசப்படத்தானே செய்கின்றன!

முதற்கண் இந்தச் சமுதாயம் சினிமாவைப் பார்க்கிற பார்வை மாற வேண்டும் என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்! இதற்கு சினிமா என்பது கூத்தாடிகளின் வேலையல்ல என்கிற தெளிவே பிரதானமானது. சினிமா என்பது ஒரு தொழில் என்கிற போதத்தை அப்போதுதான் சமூகத்தால் எட்ட முடியும். அந்த போதமே அங்கீகாரத்தை முன்வைக்க முடியும்.

சினிமா இவ்வாறு வெறுக்கப்பட்டு வந்ததற்கான அடிப்படைக் காரணம் முந்தைய தலைமுறையில் படிப்பு வராதவர்கள் சென்னைக்கு ரயிலேறி சினிமாவில் சேர்கிறேன் என்று அடித்த கொட்டத்தால்தான்! பொதுவாகவே, கலைத்திறன் உள்ள மனத்திற்கு கணக்கு வராது என்பது விதி. இதற்கு சுஜாதா மாதிரி விலக்குகள் இருக்கலாம். ஆனால் கணக்கு வராதவர்கள் எல்லாம் தாங்கள் கலைத்திறன் உள்ளவர்கள் என்பதாக கருதிக்கொண்ட அவலமே இவ்விதமான தப்பிதமான எண்ணப் பதிவை முன்வைத்துத் தொலைத்தது.

அந்தக் காலத்தை விட்டுத் தள்ளுங்கள்! இப்போது அப்படியா? சினிமா என்பது கல்லூரியிலேயே போதிக்கப்படும் தொழிலாக விஸ்வரூபமெடுத்துவிட்ட காலம் இது! விஷுவல் கம்யூனிகேஷன் என்பது திரைப்படக் கல்லூரிக்கு வெளியேயும் திரைப்படக் கலையை போதிக்கக்கூடிய வாய்ப்பை கல்வித்துறைக்கு நல்கியிருக்கிறது. சினிமா மட்டுமல்லாமல் விளம்பரத் துறை முதலான பல்வேறு கதவுகளை இந்தப் படிப்பின் வாயில் திறக்கிறது.

படித்த இளைஞர்கள் சினிமாவுக்குள் நுழைகிறார்கள். சினிமா என்கிற மகாவிருக்ஷத்தில் தங்கள் கிளை எது என்பதிலும் அவர்கள் தீர்மானமாக இருக்கிறார்கள். முன்னைப்போல டைரக்டராகப்போகிறேன் என்கிற ஒற்றைக் கனவோடு சினிமாவுக்குள் நுழைகிற போக்கு இப்போது முற்றிலும் மாறிவிட்டது. சினிமா என்பது எண்ணற்ற வேலைவாய்ப்புகளின் சாத்தியங்களை உள்ளடக்கியது என்கிற தெளிவு இளைஞர்களின் மத்தியில் இப்போது எழுந்துவிட்டது.

தொழில்நுட்ப வளர்ச்சியைத் தன் இரு கைகளாலும் தழுவிக்கொண்ட துறைகளில் மிக முக்கியத்துவம் பெறுவது சினிமா என்கிற நிலைப்பாடு மிகவும் ஆரோக்கியமானது. இது படித்த இளைஞர்களின் சேவையைப் பெருமளவில் கோரவே செய்கிறது. இதனால் முன்னைப்போல திருட்டு ரயிலேறி சினிமாவுக்கு வருகிற அவசியம் ஏதும் இல்லாத நிலையே இப்போது காண்பது. ஒரு வாரம் முன்பாகவே ரிசர்வ் செய்து ஏஸி கோச்சில் சென்னைக்கு இளைஞர்கள் வரக்கூடிய காலமிது.

மற்ற சாத்தியங்கள் கிடக்கட்டும், உதவி இயக்குனர் என்கிற வேலையையே எடுத்துக்கொள்வோம், இந்த வேலை எவ்விதமான சம்பாத்திய சாத்தியங்களை உள்ளடக்கியது என்கிற கேள்வி நியாயமானதே! உண்மையில் இன்றைய பொழுதில் திறமையுள்ள ஒரு உதவி இயக்குனர் சாதாரணமாக வருடத்திற்கு குறைந்த பட்சம் ஒன்றரை லட்சம் சம்பாதிக்கக்கூடிய நிலைப்பாடு உண்டு என்பதே உண்மை. இன்றைய காலகட்டத்தில் கடைசி உதவி இயக்குனர் என்பவருக்கே ஆறு மாதத்திற்கு நாற்பதாயிரம் கொடுக்கப்படவேண்டும் என்பதே இயக்குனர் சங்கத்தின் முன்வைப்பு! இது சரிவரக் கிடைக்கிறதா இல்லையா என்பதை சங்கம் சரிவரக் கண்காணிக்கிறதா என்பதே கேள்வி என்றபோதும், இந்தத் துவக்கம் நல்ல எதிர்காலத்தையே முன்வைக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது.

அதே உதவி இயக்குனர் ஒரு வெற்றிகரமான இயக்குனராக மாறும்போது மிகக் குறுகிய காலத்தில் அவர் சம்பாதிக்க முடிகிற தொகை எவ்வளவு என்று பார்த்தால், அது பல லட்சங்கள் செலவு செய்து ஸாஃப்ட்வேர் இன்ஜினியரான ஒருவர் ஆயுட்காலத்தில் சம்பாதிக்க முடிகிற தொகையை விடவும் பன்மடங்கு உயர்ந்தது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. அதை ஜாக்பாட் என்று நீங்கள் வேண்டுமானால் நினைக்கலாம், ஆனால் அதைக் கருத்தில் கொள்ளாமல் போவது எவ்விதத்தில் நியாயமானது என்பதே எனது கேள்வி!

சினிமாவின் போக்கில் இத்தனை மாற்றங்கள் இருந்தாலும் சமூகத்தின் போக்கில் ஏதும் மாற்றமிருக்கிறதா என்பதே எனது கேள்வி! சமூகம் சினிமாவை இன்னும் மாற்றாந்தாய்க் கண்ணோட்டத்தோடே பார்க்கிறது. ஒழுக்கக்குலைவு, நிரந்தரமில்லாப் பணிச்சூழல் ஆகிய காரணங்களை அது முன்வைக்கவே செய்கிறது.

அறை எண் 305இல் கடவுள் படத்தில் சிம்பு தேவன் நையாண்டி செய்ததைப்போல விரல்களை இழந்துவிட்டால் அப்புறம் ஒரு ஸாப்ட்வேர் இன்ஜினியர் என்ன செய்ய முடியும் என்கிற கேள்வியை இங்கே தாராளமாக முன்வைக்கலாம். இந்தக் கட்டுரை எழுதப்படும் காலம் ஐடி துறையில் ரெஸிஷன் உள்ள காலம் என்பதால் அந்தச் சகோதரர்களை மேலும் புண்படுத்துவதல்ல என் நோக்கம் என்பதனால் இதோடு நிறுத்திக்கொள்ளலாம்.

ஒரு சினிமா வெளிவருகிறது என்று சொன்னால் பால்குடம், பதினைந்தடிப் பூமாலை, தாரை தப்பட்டை என்று எதிர்கொள்ளத் தயாராகிறது சமூகத்தின் ஒரு பிரிவு. குடும்பத்தோடு அதைப் போய்ப்பார்ப்பதற்கு குடும்ப பட்ஜெட்டில் நிதி ஒதுக்குகிறது வேறொரு பிரிவு, போய்ப் பார்க்கிறதோ இல்லையோ, பத்திரிகைகள் மற்றும் மீடியாக்களின் வாயிலாக அந்தப் படத்தின் ரிஸல்ட்டை அறிந்து அதைத் தமக்குள் விவாதித்துப் பொழுதைக் கழிக்கிறது இன்னுமொரு பிரிவு, தான் பெற்ற உத்தியோக உயர்வு, வருமான உயர்வு, தனது பிறந்தநாள், கல்யாண நாள் ஆகிறவற்றுக்காக சக நண்பர்கள் அல்லது உத்தியோகஸ்தர்களை அந்தச் சினிமாவுக்கு அழைத்துப்போய் கடன் தீர்க்கிறது மற்றுமொரு பிரிவு.

இப்படி சினிமாவைத் தங்கள் வீட்டு விசேஷம் போலக் கொண்டாடுகிற இந்தச் சமூக மனம், சினிமாவில் கொடிகட்டிப் பறக்கிற ஆட்கள் தவிர்த்து மற்றவர்களெல்லாம் தரங்கெட்டவர்கள் என்பதைப்போன்ற நிலைப்பாட்டை எடுத்திருப்பது எதனால்?

சமூகம், பணம் என்கிற ஒரே சாளரத்தின் வாயிலாகவே உலகத்தைப் பார்க்கிற காலம் இது. சினிமாவில் சம்பாதித்து அந்தப் பணத்தை சரிவர வேறு இடங்களில் முதலீடு செய்து வைத்திருக்கும் ஒருவரை சமுதாயம் விரும்பவே செய்கிறது. எது எப்படியானாலும் அவன் பணக்காரன் என்பதனால் அவனை ஏற்றுக்கொள்வதில் எவ்விதமான தயக்கமும் வேண்டியதில்லை என்பதே அதன் வாதமாயிருக்கக்கூடும். டாக்டர்களும் இன்ஜினியர்களும் இந்த அடிப்படையில்தான் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள் என்பதே அடிப்படை உண்மை!

ஆனால் சினிமா என்கிற தொழிலில் கிட்டத்தட்ட நிரந்தர வருமானமுள்ள எத்தனையோ பேர்கள் உண்டு என்கிற போதம் சமூகம் முழுக்கப் பரவலாக இன்னும் சில காலம் பிடிக்கக்கூடும். அதற்கு இந்தக் கட்டுரை ஒரு திறவுகோலாக இருந்தால் நான் விரும்பும் சினிமாவுக்கு என்னாலான கொடையாக அது இருந்துவிட்டுப் போகட்டும்!

August 04, 2009

சினிமா எனும் சில்லரை வியாபாரம்!


சினிமா என்பதொரு தொழிலாகவும் இருப்பதனால் அதில் வியாபார நுணுக்கங்களைப் புகுத்துவதும் அவசியமாகவே ஆகிறது. ஒரு சினிமா வெற்றி பெறுவதற்கு விளம்பரங்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதை அலிபாபா திரைப்படத்தைக் குறிப்பிட்டு ஏற்கனவே எழுதியிருந்தேன். ஏனென்றால் இந்தக் காலத்தில் விளம்பரம் இல்லாமல் கன்ஸ்யூம் செய்யப்படுவது தாய்ப்பால் மட்டும்தான்!


ஒருகாலத்தில் மாட்டுவண்டிகளில் அல்லது குதிரை வண்டிகளில் மைக்செட் கட்டி கிராமம் கிராமமாக சினிமாவுக்கு விளம்பரம் செய்துகொண்டு போனார்கள். துண்டுப் பிரசுரங்களைப் பொறுக்குவதற்கென்றே குழந்தைகள் வண்டியின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தன. இந்தக் காட்சி பெரும்பாலும் இப்போது அழிந்தேவிட்டது. அதனிடத்தில் போஸ்டர்கள் பெருமிதத்தோடு வந்தமர்ந்துகொண்டன. இதனால் கழுதைகளுக்கும் மாடுகளுக்கும் பூதாகரமாக்கப்பட்ட முலைகள் உணவாயின. இப்போது வந்துவிட்ட ப்ளெக்ஸ் டெக்னாலஜியோ அவற்றைப் பட்டினி போடுவதாக இருக்கிறது. கடவுளுக்கு பயந்த ஒருவன் போகிற பாதையில் உள்ள கோவில்களுக்கெல்லாம் சலாம் போட்டுக்கொண்டு போவதுபோல சினிமா பேனர்களுக்கு சலாம் போடுகிற ஒருவனை ஒரு டிடீயெச் டீவி விளம்பரத்துக்காகப் பயன்படுத்தியது. அந்த அளவுக்கு திரும்பிய பக்கமெல்லாம் பேனர்கள் மயம்தான்.

இது இல்லாமல் பத்திரிகைகள் வாயிலாக செய்யப்படும் மறைமுக விளம்பரங்களோ அதைவிடவும் முக்கியமானவை. ஒரு படத்திற்கு டைரக்டர் அவசியமோ இல்லையோ, பீயாரோ அவசியம் என்பதையே இவை முன்னிறுத்துகின்றன. சரியான ஆள் கையில்தான் அந்த வேலையைக் கொடுக்கவேண்டும். எந்த பத்திரிகைக்கு எந்த ஸ்டில்லை கொடுக்கலாம், அதை எப்போது கொடுக்கலாம்; ஒவ்வொரு பத்திரிகையிலும் யாரை கவனித்தால் படமும் செய்தியும் வருகிற சைஸில் வரும்? படத்தைப் பற்றி கவர்ஸ்டோரிகள் வரவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? டைரக்டரின் பேட்டி வரவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? என்று எண்ணற்ற கேள்விகளுக்கு பதில் தெரிந்த ஒருவர்தான் அந்த வேலையைச் சரியாக செய்ய முடியும்.

படங்களின் ஸ்டில்கள் பத்திரிகைகளில் வெளிவருவதால் பத்திரிகை விற்கிறதா அல்லது படம் ஓடுகிறதா என்கிற கேள்வி கோழி-முட்டை கதை மாதிரி பதிலே இல்லாதது. இதன் அடுத்த கட்டமாகத்தான் படத்தின் ஸ்டில்கள் என்பதற்கு முந்தியே, பூஜை போடும்போதே அல்லது அதற்கு முன்பாகவே ஸ்டில் செஷன்கள் நடந்தேறுகின்றன. படத்தில் சம்பந்தப்பட்ட நாயகன் மற்றும் நாயகி ஆகியோரை ஒருநாள் முன்கூட்டியே கால்ஷீட் பெற்று வித விதமான காஸ்ட்யூம்களில் சுட்டுத் தள்ளுவது என்பதாக ஆரம்பித்த இந்த ஸ்டில் செஷன்கள் இப்போது முக்கிய ஆர்ட்டிஸ்டுகளையும்கூட சேர்த்துக்கொண்டுவிட்டது. இதனால் படம் எடுக்கப்படுகிறதோ இல்லையோ, பப்ளிசிடி உறுதியாகிவிடுகிறது.

ஒரு பத்திரிகையில் ஒரு பக்கம் விளம்பரம் தரவேண்டுமானால் சில லட்சங்கள் செலவாகும், அதே பத்திரிகையில் படத்தைப் பற்றிய செய்தி வரவேண்டுமானால் சில ஆயிரங்கள் செலவு செய்தால் போதும் என்கிற நிலைப்பாடு எப்போதுமே சிறப்பானதுதானே! சமீபத்தில் தினமணிக் கதிரில் மூன்று பக்கங்கள் சினிமா செய்திகளைப் பார்த்து ஆச்சர்யமாக இருந்தது. சினிமா என்கிற பூதம் அவ்வளவு பெரியது.

பரஸ்பரம் கொடுத்து வாங்கிக்கொள்கிற இந்த யுக்தி பிழையானதல்ல. இரண்டு பக்கமும் பிழைப்பு ஓடத்தானே வேண்டியிருக்கிறது. அதிலும் திடீர் திடீரென்று சுவரொட்டி ஒட்டுவதற்குத் தடை, ஃப்ளெக்ஸ் பேனர் வைப்பதற்குத் தடை என்று அரசாங்கம் அதன் இஷ்டப்படி சில ரகளைகள் செய்வதும் பிற்பாடு தளர்த்துவதுமாக விளையாடிக்கொண்டிருக்கையில் கிரகண காலங்களில் வெளிவரும் படங்கள் வம்பில் மாட்டிக்கொள்வது தவிர்க்க இயலாததுதானே, இந்த நேரத்தில் அவர்களுக்குக் கை கொடுப்பது பத்திரிகை வாயிலான செய்திகளைத் தவிர வேறென்ன!

அடுத்த கட்ட விளம்பர யுக்தி டீவியோடு தொடர்புள்ளது. டீவிக்கு காட்சிகளைக் கொடுப்பது என்பதில் தொடங்கி, டீவியில் விளம்பரம் கொடுப்பது என்று விரிவடைந்து, இப்போது படம் வெளி வந்த முதல் வாரமே சம்பந்தப்பட்ட டெக்னீஷியன்கள் மற்றும் நடிக நடிகைகள் கூட்டாக பேட்டி கொடுப்பது, படத்தைப் பற்றி உரையாடுவது என்பதாக வந்து நிற்கிறது. இதனால் கதை தெரியாமல் படம் பார்க்க விரும்புபவர்கள், முதல் நாள் முதல் ஷோவிலேயே க்யூவில் நின்றோ, ஃபோனில் புக் செய்தோ, திருட்டு டிவிடி வாங்கியோ படத்தைப் பார்த்துவிடுவதே சாலச் சிறந்தது என்கிற நிலைப்பாடே இன்று எழுந்திருப்பது.

அப்படிப் பார்க்கவில்லையானால் சம்பந்தப்பட்ட நடிகையை டீவியில் பார்த்ததும் சித்தம் இழந்து வாயைப் பிளந்துகொண்டு பார்க்க ஆரம்பிக்கிற வகையில் அந்த நடிகையின் வாய் வாயிலாகவே கடைசிக் காட்சியில் நான் செத்துப்போகும்போது என்கிற வார்த்தைகளைக் கேட்டு வாயடைத்துப் போவது தவிர்க்க இயலாததாகும். இப்படியாக படத்தின் முக்கிய திருப்பங்கள், கதை முதலான எதுவும் ரகசியமில்லாமல் போகும்.

மணிரத்னம், ஷங்கர், என்று ஏதோ ஒரு சில டைரக்டர்கள்தான் இப்போதும் தங்கள் பாப்புலாரிடி கொடுக்கிற தைரியத்தில் இவற்றை ரகசியமாக வைத்துக்கொள்ள சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த பத்திரிகையாளர் ஒருவர், சிவாஜி வெளிவருவதற்கு முன் என்னிடம் ஒரு செய்தியை சொன்னார். இந்தப் படத்தில் ஒரு பாடலை ஸ்டன்ட் காட்சியாகப் படமாக்குகிறார்கள் என்று. இந்த செய்தியை அவர் பத்திரிகையில் எழுதியபோது ஷங்கரே ஆச்சர்யப்பட்டார் என்பதும் பின்னால் நிகழ்ந்த சம்பவம். அவர் எப்படி இதை அறிந்தார் என்று கேட்டால், அவர் ரொம்ப 'கூலாக' சொன்னார், ஏவியெம்மில் செட் போட்டு உள்ளே யாரையும் விடாமல் ரகசியமாக ஷூட் செய்துகொண்டிருந்தார்கள். உள்ளேயிருந்து பாட்டு சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. அதனால் பாடல்காட்சி பதிவாவது தெரிந்தது. ஆனால் ஸ்டன்ட் நடிகர்கள் வெளியே வந்து தம்மடித்துக்கொண்டிருந்தார்கள். இந்த இரண்டையும் ஒட்டுவது என்ன சிரமமா?

இப்படியெல்லாம் ரகசியமாக ஷூட் செய்தாலும் இந்தச் செய்திக் கசிவுகளை விரும்பாத சினிமாக்காரர் ஒருவர் இருக்க முடியுமா என்ன? மணிரத்னம் ஊட்டி மலைக் காட்டில் ஆதிவாசிகளின் குடியிருப்பை அமைத்திருக்கிறார். ராவணா படத்துக்காக பலநாட்கள் அங்கும் சாலக்குடியிலும் ஷூட்டிங் நடக்கிறது என்று சொன்னால், ராமாயணத்தில் வரும் போர்க்காட்சிகளுக்கு பதிலாக வனத்தில் நீண்ட சேஸிங் காட்சிகள் இருக்கப் போகின்றன என்று அனுமானிப்பது பிழையாகப்போவதில்லை. ஆங்கிலத்தில் வெளிவந்த எத்தனையோ வன விரட்டல் காட்சிகள் நம் மனத்தின் மேல்மட்டத்தில் மிதக்க ஆரம்பிப்பதிலும் வியப்பில்லை.

வீட்டில் உலை கொதிக்கிறதோ - ரைஸ்குக்கர் விசிலடிக்கிறதோ – இல்லையோ பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பாதவர்கள் யாரும் உண்டா? அதே ஆவல்தானே சினிமாவில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதிலும் இருந்து தொலைக்கிறது. இந்த ஆர்வத்துக்கான தீனி என்கிற பெயரில் மறைமுகமான இவ்விதமான கிசுகிசுக்களும், செய்திகளும் எல்லோருக்கும் ஏதாவதொரு பலனை அளிப்பதாக இருக்கத்தானே செய்கின்றன!

சரி, படத்துக்கு பூஜை போட்டாயிற்று, போஸ்டர் ஒட்டியாயிற்று, விளம்பரங்கள் கொடுத்தாயிற்று, பத்திரிகைகளுக்கு செய்திகள் கசியவிட்டாயிற்று. ஸ்டில்கள் வழங்கப்பட்டாயிற்று. படம் ரிலீஸ் ஆகப்போகிறது. படம் வேறு சுமாராகத்தான் வந்திருக்கிறது. ஓடவேண்டுமானால் இவை மாத்திரம் போதாது. என்ன செய்யலாம்?

இப்படியொரு குழப்பம் வந்தபோது சமீபத்தில் நம்மாட்கள் ஒரு மிகப்பெரிய லூட்டியை அடித்தார்கள். கலா மாஸ்ட்டர் தயவால் கெமிஸ்டரி என்கிற வார்த்தை இந்த நேரத்தில்தான் டீவியில் வாயிலாக பிராபல்யமடைந்திருக்கிறது. இதை ஏன் நாம் உபயோகித்துக்கொள்ளக்கூடாது? இந்த யோசனையின் பலன்தான் இப்போது நாம் படிக்கும் ஒருசில செய்திகள்.

நகுலுக்கும் சுனைனாவுக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகிறது. அடுத்த படத்திலும் அவர்களே ஜோடியாக நடிப்பதற்கான காரணம் அவர்களுக்டையே பூத்துள்ள காதல்தான்! ஸ்நேகாவுக்கும் ப்ரசன்னாவுக்கும் கெமிஸ்டரி ஒர்க் அவுட் ஆகிவிட்டது. அடுத்தது கல்யாணம்தான்!

இந்த மாதிரி செய்திகள் முன்பெல்லாம் பத்திரிகையாளர்களால்தான் புனையப்பட்டு வந்தன. ஆனால் இன்றைக்கோ சம்பந்தப்பட்ட படத்தின் டீமே இதை தீர்மானித்துவிடுகிறது. படம் நன்றாக ஓட இதுவொரு விளம்பர யுக்தியாகக் கையாளப்படுகிறது. எல்லோரும் சேர்ந்தே செய்கிற இந்தக் கூட்டுக் களவாணித்தனத்துக்கு பத்திரிகைகளும் துணைபோவதே இப்போது நடப்பது. அதாவது, அதைப் படிப்பவர்களைத் தவிர மற்ற அனைவருக்குமே தெரியும், அது பொய் என்பது!

நம்ம விசிலடிச்சான் குஞ்சுகள், அடடா ஸ்நேகா கல்யாணம் செய்துகொண்டால் அப்புறம் சினிமாவில் நடிக்க வாய்ப்பில்லையே, இந்தப் படத்தைப் பார்த்துத் தொலைத்துவிடுவதுதான் சரியாக இருக்கும்போல இருக்கிறதே என்று அஞ்சி அஞ்சி குறிப்பிட்ட சினிமாவைப் போய் பார்த்துவிடுவார்கள் என்பதே அவர்கள் போடும் கணக்கு!

காதல் என்பதும் கல்யாணம் என்பதும் அவரவர் சொந்த விவகாரங்கள் என்பதை யாரும் மறுக்க இயலாது. ஆனால் பிரபலங்களின் அசைவுகள் அனைத்துமே கண்காணிக்கப்படுவனவாக இருப்பதனால் அவர்கள் எங்கே போகிறார்கள், யாரோடு உறங்குகிறார்கள், யாருடைய வலையில் விழுகிறார்கள், யாரை வலையில் வீழ்த்துகிறார்கள் என்பன யாவுமே செய்திகளாகிவிடுகின்றன.

இப்படியொரு செய்தியுருவாக்கத்தை சாதிப்பதன் வாயிலாக பத்திரிகைகள் சம்பாதிக்க முடியுமானால் அதே உத்தியை உபயோகித்து படமுதலாளிகள் ஏன் சம்பாதிக்கக்கூடாது என்பதே இப்போது எழுந்திருக்கும் கேள்வி.

எம்ஜியார் கத்தி வைத்துக்கொள்ளச் சொன்னதுபோல பரபரப்பான செய்தியொன்று எப்போதும் தேவைப்படுவதாகவே இருந்து வருகிறது. அதை யார் எதற்காக உற்பத்தி செய்கிறார்கள் என்பதைப்பற்றியெல்லாம் யாருக்கு அக்கறை? சம்பந்தப்பட்ட நடிகரும் நடிகையும் அல்லது இயக்குனரும் நடிகையும் உள்ளூர புன்னகைத்துக்கொள்வார்கள். நடிகர் அல்லது இயக்குனர் வீட்டில் பார்க்கும் பணக்காரப் பெண் ஒருத்தியை மணந்துகொண்டு வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிடுவார், நடிகை மார்க்கெட் சரியும் நேரத்தில் வலையில் விழும் என்னாரையை மணந்துகொண்டு தேசத்தைப் பார்த்துப் போய்விடுவார். அதையெல்லாம் எப்போதோ மறந்துவிட்டு அப்போதுதான் புதிதாக கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆன புதிய நடிகர்களைப் பற்றி படித்து முதுகைச் சொறிந்துகொண்டிருப்பார்கள் ரசிகமஹாஜனங்கள்.

சினிமா ஒரு சில்லரை வியாபாரம் என்று சொல்வது இதனால்தான். ஒரு படம் ஜெயிக்க வேண்டுமானால் எந்தவிதமான சில்லரைத்தனமான காரியத்தையும் செய்யத் துணியவேண்டும் என்பதே பாலபாடமாக இருக்கும்போது இந்த வாக்கியம் பொருந்தவே செய்கிறது.

சரி விளம்பர யுக்தி என்பது இவ்வளவு தூரம் வந்துவிட்டது. அடுத்து வேறென்னவெல்லால் செய்யலாம்?

சம்பந்தப்பட்ட நடிகரையும் நடிகையையும் உல்லாசமாக இருக்க வைத்து அந்தப் பொழுதுகளை ரகசியமாகப் படம் பிடித்து இன்டெர்நெட்டில் போடலாம். அது நாங்கள் இல்லை என்று மிகச் சாதாரணமாக அவர்கள் மறுத்துவிட்டுப் போய்விடுவார்கள் என்பதனால் ஒரு வம்பும் வரப்போவதில்லை.

அல்லது, ரகசியம்கூட வேண்டாம், கான்ட்ராக்டில் விளம்பரம் வரைக்கும் எழுதும்போது இதையும் எழுதி வாங்கிக்கொள்வது உசிதமாக இருக்கும். ரசிகர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் இரட்டை லாபமாகத்தானே போகும்!

சம்பந்தப்பட்ட நடிகர் கல்யாணமானவராக இருந்தால் அவரது மனைவியையும் ஒரு ஒப்பந்தத்துக்குள் கொண்டு வரலாம். அதாவது இவ்விதமாக ஒரு வதந்தி பரப்பப்படும். அதைப் பார்த்து மனைவியானவர் நடிகருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப வேண்டும். படம் ஓட ஆரம்பித்து வெற்றி பெற்றுவிடும் என்கிற நம்பிக்கை வரும்போது சமாதானமாகிவிட்டதாக கூட்டாக காஃபி வித் ஹாசனில் நடிகை சகிதம் காட்சி தந்துவிடவேண்டும். இதைவிட வேறென்ன பப்ளிசிடி வேண்டும்?

தன் மனைவியை மீடியாக்களுக்குக் காட்ட விரும்பாதவர்கள், மாமனாரின் கையில் ஒரு அரிவாளைத் தரலாம். கொஞ்சம் படித்தவராக இருந்தால் துப்பாக்கியைக்கூட கொடுக்கலாம். ஏனென்றால் மகள் விதவையாவதை எந்தத் தகப்பனும் விரும்புவதேயில்லை!

இந்த மாதிரி உங்களுக்குத் தோன்றும் ஐடியாக்களை ஒரு போஸ்ட் கார்டில் எழுதி நீங்களே கிழித்துப் போட்டுவிடுங்கள், அவர்களின் கண்களில் கிண்களில் தென்பட்டுத் தொலைக்கப்போகிறது!

July 28, 2009

கோவை போ போ என்கிறது, சென்னை வா வா என்கிறது!

இன்னும் பதினைந்திலிருந்து முப்பது தினங்களுக்குள் சென்னைக்கு புலம் பெயர்வதாக ஒரு திட்டம். இது இன்றைக்கு நேற்றைக்கு போட்ட திட்டமல்ல, கிட்டத்தட்ட பன்னிரெண்டாட்டுத் திட்டம். ஒருவழியாக இப்போதுதான் கோவையோடான ஜென்ம பிராப்தியை முடித்துக்கொண்டு சென்னைப்பக்கம் வந்து காலை வைக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

உண்மையில் இந்த உலகில் நான் வெறுக்கும் இடங்களில் முக்கியமானது சென்னைதான். என்ன செய்யலாம்? கோவை மாதிரி ஒரு நகரில் வாழ்ந்து பார்த்தவர்களுக்குத்தான் நான் சொல்வதன் அருமை புரியும். நண்பர்கள் பலரும் திரும்பத் திரும்ப கட்டளையிட்டு வந்திருந்தும் இப்போதுதான் இது சாத்தியமாகிறது. எழுத்தாளர்கள் பொதுவாகவே ஏழைகள் என்பதனால் அவர்களை சென்னை ஏளனத்துக்கும் உள்ளாக்கலாம், சீராட்டவும் செய்யலாம் என்பது தொன்றுதொட்டு நாம் பார்த்து வருவதே.

சென்னை எனக்குப் புதிதல்ல என்பதனால் அந்த அச்சமொன்றும் இல்லை. அச்சமெல்லாம் வாடகை வீடுகள் பற்றியதாக மட்டுமே இருக்கிறது. நண்பர்கள் யாரேனும் இவ்விஷயத்தில் உதவ முடியுமானால் sudesi@gmail.com என்ற என் ஈமெயில் முகவரிக்கு உங்கள் அழைப்பெண் சகிதம் எழுதலாம். நானே அழைக்கிறேன்.

உதவுவது என்றால் அட்வான்ஸ் தொகையை கொடுத்து உதவுவது, மாதாமாதம் வாடகை கொடுத்து உதவுவது என்று பிச்சைக்கார எழுத்தாளர்களைப்போல உங்களை நான் அச்சுறுத்தவில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள். அதையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். நல்ல இடத்தில் கையைக் கடிக்காத வாடகையில் ஒரு வீடு! அவ்வளவுதான் தேவையானது! மற்றபடி பக்கத்து வீட்டில் அழகிகள் இருக்கவேண்டும் என்கிற அவசியம்கூட இல்லை.

சரி, என் அகராதியில் நல்ல இடம் என்பது எது? கையைக் கடிக்காத வாடகை என்பது எது என்பதாகவெல்லாம் பிரத்யேகமாகத் தெரிந்து கொள்ள மட்டும் விரும்புபவர்களுக்கும் மேற்கண்ட மெயிலுக்கு முறையிட உரிமை வழங்கப்படுகிறது.

Atleast இதை யாராவது படித்தார்கள் என்கிற நம்பிக்கையையாவது மாதாவைப் போல மடியில் போட்டுக்கொண்டு அது ஊட்டும் என்பதனால் அதையும் நான் விரும்பவே செய்கிறேன்.

-சுதேசமித்திரன்

பி.கு.: இவ்விஷயத்தில் முந்துபவர்களுக்கு, ஆடிமாத ஆஃபராக, அவர்கள் விரும்புமிடத்தில் ஆட்டோகிராஃப் போட சித்தமாயிருக்கிறேன்.

July 27, 2009

நான் சினிமா பார்ப்பதில்லை

என்னிடம் ஒருசிலர் இந்த வாசகத்தைச் சொல்லியிருக்கிறார்கள்: நான் சினிமாபார்ப்பதில்லை!

இந்தக் காலத்தில் இப்படியும் ஒருத்தர் இருக்க முடியுமா என்று உங்களில் ஒருசிலர் கருதலாம். ஆனால் இது உண்மைதான். அதெப்படி? வீட்டுக்குள்ளேயே டீவியை வைத்துக்கொண்டு ஒருவர் சினிமாவையே பார்ப்பதில்லை என்று சொன்னால், குடும்பஸ்தன் கலவியிலேயே ஈடுபட்டதில்லை என்று சொல்வதைப் போல அபத்தம் அல்லவா என்றும் நீங்கள் கேட்கலாம்! ஆனால் இப்படியும் சிலர் இருக்கவே செய்கிறார்கள்.

சினிமா பார்க்காமல் இருப்பதே ஒரு சமூக அந்தஸ்து என்று கருதுபவர்கள் அவர்கள். அவர்களில் ஒரு சினிமாகூட பார்த்தேயிராதவர்கள், சில சினிமாக்களைப் பார்த்து பின் ஒதுங்கிவிட்டவர்கள், சினிமா பார்க்க வகையில்லாதவர்கள், சினிமாவை வெறுப்பவர்கள் என்று பல பிரிவுகள் இருக்கலாம்.

பொழுதுபோக்கு கலை என்று எவ்விதமான ஆர்வமும் இல்லாமல் தொழில் ஒன்றே குறியாய் வாழ்கிறவர்களில் பலரும், சம்பாதிக்கும் காசு கைக்கும் வாய்க்கும் எட்டாத நிலைமையில் சினிமா டிக்கெட் விற்கிற விலையில் மனைவியின் உடலே சினிமாதான் என்று நொந்து கிடப்பவர்களில் பலரும் சினிமா பார்ப்பதில்லை; தாங்கள் சார்ந்த மதம் ஆபாசம் என்பதாக அறிவுறுத்துவதால் பலர் சினிமா பார்ப்பதில்லை. சினிமா என்பது வீணர்களின் வேலை என்று கருதும் பல புத்திஜீவிகள் அல்லது ஆராய்ச்சியாளர்கள் அல்லது விஞ்ஞானிகள் சினிமா பார்ப்பதில்லை.

இவர்களுக்கெல்லாம் நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். இதனால் சினிமாவுக்கு எந்த நஷ்டமும் இல்லை சகோதரர்களே! இழப்பு உங்களுக்குத்தான்!

லூமியர் சகோதரர்கள் முதன்முதலில் சலனப் படத்தைத் திரையிட்டபோது திரையில் ரயிலைப் பார்த்ததும் பார்வையாளர்கள் பயந்து வெளியே ஓடினார்கள் என்பதுதான் சினிமா மனித உள்ளங்களில் நிகழ்த்திய முதல் அனுபவம். அதன் மிச்ச சொச்ச டியென்னேக்கள்தான் இவர்களுக்குள் இருக்கிறதோ என்பதாகவே தோன்றுகிறது.

உண்மையில் இப்போதும் ரயிலைப் பார்த்திராதவர்கள் நம் தமிழகத்தில் பலரும் உண்டு. கடலைப் பார்த்திராதவர்கள் அதனினும் ஏராளம் உண்டு. ஆனால் அவர்களும் அவற்றை சினிமாவில் பார்த்துவிட்டவர்கள்தான். தண்டவாளம் போட முடியாத ஊர்களுக்கெல்லாம் ரயிலைக் கொண்டுபோகிற சாதனையை சினிமாவைத் தவிர வேறு எதுசெய்ய இயலும்?

சினிமா அறிமுகமான புதிதில், பெண்ணடிமைத்தனம், சமூக கட்டுத்திட்டங்கள் என்று மிகவும் உள்ளொடுங்கியிருந்த நம் மனங்கள் சினிமாவைப் பார்ப்பதை ஒரு பாவமாகவே கருதிய காலம் இருந்தது. சினிமா நடிகன் என்றால் கூத்தாடி என்றும் நடிகை என்றால் வேசி என்றும் வர்ணிக்கப்பட்ட அந்தக் காலத்தில் சினிமா மைனர்களின் கேளிக்கைகளில் ஒன்றாகவே கருதப்பட்டுவந்தது நியாயமானதுதான். ஆனால் இப்போது எத்தனையோ தொழில்நுட்ப சாத்தியங்களை உள்வாங்கிக்கொண்டு இவ்வுலகில் உலவும் எத்தனையோ தொழில்களோடு நெஞ்சு நிமிர்த்தி சவால்விடும் சினிமா எனும் பேரியக்கத்தை உங்களால் எப்படி வெறுக்க முடியும்?

நடிகர் சிவாஜிகணேசன் ஒருமுறை விமானத்தில் அருகில் உட்கார்ந்திருந்தவரிடம் பேச்சுக் கொடுத்த கதை உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும். தன்னைக் கண்டுகொள்ளாத சக பயணியிடம் நான்தான் சிவாஜி கணேசன் என்று அவர் சொன்னார்.

அதற்கு அவர் அப்படியா என்ன பண்றீங்க என்று கேட்டார் என்பது அந்தச் சம்பவம். இதில் உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். அவர் சினிமா பார்க்காதவராகவே இருக்கட்டும். சாலையில்தானே அவர் பயணிக்கும் கார் ஓடுகிறது! சுவர்களெங்கும் ப்ளோஅப்களாக இந்த சகபயணியின் முகத்தை ஒருமுறைகூட அவர் கண்டதேயில்லையா? இதற்கான பதில் மிகவும் எளிமையானது. கண்டிப்பாகப் பார்த்திருப்பார். நாட்டமில்லாத ஒன்று மனத்தில் பதிவதில்லை என்பதனால் நேரில் பார்க்கும்போது அடையாளம் தெரிய இயலாமல் போவது இயல்பானதே!

இந்த நாட்டம் என்கிற வார்த்தைதான் மிகவும் முக்கியமானது. ஊரில் எத்தனையோ கோவில்கள் இருக்கின்றன. எல்லோருமா கோவில்களுக்குப் போகிறார்கள்? வருஷாவருஷம் உங்கள் ஊரில் சர்க்கஸ் நடக்கிறது, ஒவ்வொரு வருஷமுமா நீங்கள் போய்ப் பார்க்கிறீர்கள்? எத்தனையோ டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கின்றன. அதற்காக எல்லோருமா குடிக்கிறார்கள்? எதிலும் ஒரு நாட்டம் வேண்டும். நீங்கள் பழகாத ஒன்றை நீங்கள் எப்படி விரும்ப முடியும்?

என்னுடைய இரண்டு நண்பர்களைப் பற்றி இங்கே குறிப்பிடலாம், ஒருவர் கிறிஸ்துவத்தைச் சார்ந்தவர். அவர் உறவுக்காரப் பெண்கள் மற்றும் அறிமுகமாகும் பெண்கள் பலரோடும் கலவியில் ஈடுபடுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். அவர்களை வசீகரிக்க அவர் பல தந்திரங்களை உபயோகிப்பார். அவற்றில் முதலாவது சினிமா. அவர் புதிதாக அறிமுகமாகும் பெண்ணிடம் சொல்வார், நான் சினிமா பார்ப்பதில்லை. அவளுக்குள் ஏற்படும் மெல்லிய வியப்பு அவருக்கு போதுமானது. அதைத் தொடர்ந்து ஏன் பார்ப்பதில்லை என்கிற விவாதமொன்று அங்கே எழுந்தே தீரும் என்பதனால் மீதியெல்லாம் நடக்க வேண்டிய விதத்தில் நடந்தே தீரும். அவர் உண்மையிலேயே சினிமா பார்க்க விரும்பாதவர்தான். அவருக்கு சினிமா ரத்தமும் சதையுமாக வேண்டும். திரையில் எல்லாம் போட்டுக் காட்டினால் போதாது. தற்போது அவர் ஒரு மதபோதகராக சிறப்பாக இயங்கி வருகிறார். வீடு வீடாகச் சென்று மதப் பிரசங்கங்கள் செய்கிற வேலை. எதன்இடத்தை எது பிடித்துக்கொண்டது என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை.

இன்னொரு நண்பர், மிக முக்கியமான ஒரு நடிகையை ஒரு கெஸ்ட் ஹவுசில் பார்த்த கதையை நெடுங்காலமாக சிலாகித்து வருபவர். அவள் இறுக்கமான அரைக்கால் சட்டைஅணிந்து (அதைக் கால்கால் சட்டை என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்) கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தாள். அந்த மாதிரி தொடைகளை நான் என் ஆயுட்காலத்தில் பார்த்ததில்லை என்று அவர் மருகுவார். தொடையைப் பார்த்ததற்கே இத்தனை மருகினால் உடையை நீக்கியிருந்தால் எத்தனை பதற்றம் ஆகியிருப்பார். அவர் தானாக ஒருபோதும் சினிமாவுக்குப் போக மாட்டார். எப்போதாவது நான் வலியுறுத்தினால் வருவார். அப்படி அவர் பார்த்த படங்கள் குணா மற்றும் மகாநதி. அந்தப் படங்களின் சோகமான முடிவு அவருக்குள் ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்தியது. தொடையும் உடையும் தருகிற பதற்றத்தைவிடவும் சோகம் தரும் பதற்றம் மிகப் பெரியது என்பது அப்போது தெரிந்தது. ஏனென்றால் அதன்பிறகு அவர் எந்தப் படத்துக்கும் வரத் தயாராக இல்லை.

இப்படியொருவர் சினிமா பார்த்து மனநடுக்கம் கொள்ள முடியுமா? ஏன் முடியாது? ஒவ்வொருவர் மனத்தின் சுமை தாங்கும் அளவும் ஒவ்வொருவிதமானதுதானே! என் உறவுக்கார மூதாட்டி ஒருவர். பெரும்பாலும் சினிமாவுக்கே போகாத அவரை வெள்ளை ரோஜா என்கிற சிவாஜி கணேசன் நடித்த படத்துக்குக் குடும்பத்தோடு கூட்டிப்போனார்கள். மொழுமொழுவென்று க்ஷவரம் செய்த முகத்தோடு வெள்ளங்கி புனைந்து அடர்த்தியான கறுப்பு ப்ரேம் கண்ணாடியோடு சிவாஜிகணேசன் ஒரு பாதிரியார் பாத்திரத்தில் அந்தப் படத்தில் நடித்திருப்பார். அந்த ஊரில் ஒரு பெண் கொலை செய்யப்படுவாள். போஸ்ட் மார்ட்டம் செய்யாமல் உடலைப் புதைத்துவிடுவார்கள். பாதிரியார் தன் சகோதரரான டியெஸ்பி (மற்றொரு சிவாஜி)யிடம் புதைத்த உடலைத் தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்வார்.

மறுநாள் டியெஸ்பி ஊர்க்காரர்கள் முன்னிலையில் சவப்பெட்டியைத் தோண்டியெடுத்து திறந்து பார்த்தால் உள்ளே பாதிரியாரின் சவம் இருக்கும். இது அந்த சமயத்தில் சாதாரணமாக எல்லா பார்வையாளர்களையுமே சீட்டின் நுனிக்குக் கொண்டு வந்த காட்சி.

இந்தப் படம் துவங்கியதிலிருந்தே நான் சொல்லும் மூதாட்டி, இந்த கெட்டப்பில் சிவாஜி தன் இறந்துபோன சகோதரனைப் போலவே இருப்பதாக சொல்லிக்கொண்டிருந்திருக்கிறார். இந்தக் காட்சியில் ஏற்பட்ட அதிர்ச்சியில் மாரடைப்பில் திரையரங்கிலேயே அவர் இறந்துவிட்டார். இது கோவையில் நடந்த சம்பவம்.

சினிமாவின் தத்ரூபம் ஏற்படுத்துகிற மாயையின் வினை இது. அவர் சினிமா பார்க்காமலே இருந்திருந்தால் இருந்திருக்கலாம்!

இந்த மாதிரி உதாரணங்கள் இருந்தாலும் சினிமா என்பது எவ்வளவு உன்னதமான கலைவடிவம் என்பதை பார்வையாளர்கள் உணரவேண்டும் என்பதே முக்கியமானது. சினிமா பார்க்க விரும்பாதவர்கள் பலரும் எப்படி சினிமாவைப் பற்றிய தவறான அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கிறார்களோ, அதேமாதிரிதான் சினிமா பார்க்க விரும்புபவர்களில் பலரும்கூட சினிமாவைப் பற்றிய அபத்தமான புரிதலைக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

நான் சினிமா பார்க்க விரும்புகிறேன் என்று மார்தட்டிக்கொள்ளும் ஒருவருக்கும் நான் சினிமா பார்ப்பதில்லை என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் ஒருவருக்கும் இந்த இடத்தில்தான் எவ்விதமான வித்தியாசமும் இல்லாமல் போகிறது.

நான் சினிமா பார்க்க விரும்புகிறேன் என்று சொல்பவர் பார்க்க விரும்புகிற சினிமா எது என்று கேட்டுப் பாருங்கள், அதற்கு பதிலாக அவர் சினிமா பார்க்காமலே இருந்துவிடுவதுதான் பெட்டர் என்பதுதான் தெரியவரும். சினிமா என்றால் ஒரே ஆர்ப்பாட்டமாக இருக்க வேண்டும்; குத்தாட்டம், கும்மாளம் என்று ஜங்கு ஜங்கென்று குதிப்பதாக இருக்க வேண்டும்; ஒற்றை ஆள் ஐம்பதுபேரை அடி பின்னுவதாக இருக்க வேண்டும்; சீறிப் பாய்கிற கார்கள் ஒன்றோடொன்று மோதி ஆகாயத்தில் பறக்க வேண்டும்; உலகில் உள்ள அழகான லொக்கேஷன்களிலும் ஸ்டுடியோவில் கோடிக்கணக்கான செலவில் போடப்பட்ட செட்டுகளிலும் நாயகனும் நாயகியும் தறிகெட்டு நாட்டியமாடவேண்டும்; நகைச்சுவை என்கிற பெயரில் காமெடியன்கள் வந்து கூத்தடிக்கவேண்டும், கதாநாயகி அல்லது கவர்ச்சி நடிகை (எவ்வளவு அபத்தமான பிரயோகம் இது!) ஆகக் குறைந்த ஆடையில் வந்து மனசை அள்ளவேண்டும். இப்படியெல்லாம் எந்த சினிமா இருக்கிறதோ அந்த சினிமாவை நான் பார்க்க விரும்புகிறேன் என்று ஒருவர் சொன்னால், அந்த சினிமா வரவும் வேண்டாம், அதை அவர் பார்க்கவும் வேண்டாம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

இம்மாதிரி படம் எடுப்பது தவறு என்று மற்ற விமர்சகர்கள்போல நான் சொல்ல வரவில்லை. வரட்டும், சினிமாவின் தவிர்க்க இயலாத ஒரு வடிவமாக இதுவும் இருந்துவிட்டுப் போகட்டும், பெரும் பணம் முதலீடு செய்யப்படும் ஒரு சினிமா வடிவம் தவறுதலாக பூதத்தைக் கிளப்பியதுபோல கிளம்பிவிட்டது. அதை அடக்குவது இயலாதுதான். ஆனால் இந்தக் காரணத்தால்கூட பலரும் சினிமாவைப் பார்க்க விரும்பாமல் இருக்கலாம் அல்லவா! அவர்கள் அளவில் குறைந்தவர்கள் என்பதனால்தானே கருத்தில் கொள்ளப்படுவதேயில்லை!

நல்ல சினிமா வரட்டும் பார்க்கிறேன் என்று ஒருசிலர் என்னிடம் சொன்னதுண்டு. அவர்களில் எவ்வளவு நல்ல சினிமாவைக் கொடுத்தாலும் நொட்டை நொள்ளை சொல்லும்ஆசாமிகளைத் தள்ளிவிடலாம், சினிமா என்பது அபத்தங்களும் ஆபாசங்களும் நிறைந்ததல்ல என்கிற உத்திரவாதத்தைத் தருகிற சினிமாக்களை மட்டுமாவது நம்மால் அவர்களுக்குக் கொடுக்க முடிந்தால் அதுவே பெரிய வெற்றிதானே!

July 16, 2009

அழகர் உலகம்


அழகர் உலகம் என்பது பல வருடங்களுக்கு முன்னால் நான் வானொலிக்காக எழுதிய நாடகத்தின் தலைப்பு. அழகான நடிகன் ஒருவனை அவலட்சணமான நிருபன் ஒருவன் பேட்டியெடுக்கிறான். பேட்டியின் முடிவில் அழகற்றவன் அழகனாகவும் அழகானவன் அவலட்சணமாகவும் தோற்றமளிக்கிறார்கள். அவர்களைத் தவிர வேறு பாத்திரங்கள் நாடகத்தில் கிடையாது. கதாபாத்திரங்களுக்கு சொந்தமாக வசனம் பேசுகிற சுதந்திரம் அந்த நாடகத்தில் இருந்தது. அதாவது தாங்கள் ஒரு நாடகத்தில் நடித்துக்கொண்டிருக்கிறோம் என்றுகூட கதாபாத்திரங்கள் பேசிக்கொள்வார்கள். என்னைவிட உனக்குத்தான் நல்ல வசனம் எழுதியிருக்கிறான் சுதேசமித்திரன் என்றுகூட ஒரு வசனம் வரும். இப்படியெல்லாம் எழுதினால் ஒலிபரப்புவதற்கு நம் வானொலி என்ன அகில உலக வானொலியா? இதனால் அந்த நாடகம் வானொலியில் வெளிவரவே இல்லை. இருந்தாலும் அந்த நாடகம் சொல்ல வந்த விஷயத்தை ஒரு கட்டுரையின் வாயிலாக இங்கே சொல்லிவிட முடியும். தலைப்பாவது வீணாகாது பாருங்கள்!


சமீபத்தில் என் எதிர்வீட்டுப் பெண்ணுக்குக் கல்யாணம் நடந்தது. சாதாரணமாக ஓரளவு அழகான பெண்தான் அவள். ஆனால் கல்யாணத்திற்காக மேக்கப் என்பதாகவோர் அயோக்கியத்தனம் செய்யப்பட்டு, மணப்பந்தலில் முகத்தைப் பார்க்க சகிக்கவில்லை. இதில் மூன்று காமிராக்களை வைத்து க்ளோஸப் வேறு யெல்ஸீடி திரைகளில் விரிக்கப்பட்டது. இந்தக் கொடுமைகள் இப்போது பொதுவாக எல்லா கல்யாணங்களிலும் நடந்தேறுகின்றன. இதற்கு ஆதார காரணம் என்ன என்று நான் சொல்ல வேண்டியதில்லை.

உண்மையில் மேக்கப் என்கிற ஒப்பனை ஒரு சில முகங்களை அழகாக மாற்றிவிடுகிறது. ஒருசில முகங்களை விகாரமாக மாற்றிவிடுகிறது என்பதே உண்மை. மேக்கப் டெஸ்ட் என்பது ஒருவர் ஃபோட்டோஜினிக் முகம் கொண்டவரா இல்லையா என்பதைத்தான் தீர்மானிக்கிறதே தவிர, மேக்கப் செய்தால் அழகாக இருக்கிறாரா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதில்லை. ஃபோட்டோஜினிக் என்பது காமிரா லென்சுக்கு ஒரு முகத்தைப் பிடித்திருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றிய சமாச்சாரம்.

உதாரணமாக பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி நல்ல போட்டோஜினிக் முகம் கொண்டவர். ஆனால் அவரின் பேத்தியான நடிகை வைஷ்ணவி போட்டோஜினிக் முகம் இல்லாதவர். வைஷ்ணவியோடு நான் பணியாற்றியிருக்கிறேன். முதல் நாள், டாப்ஸும் இறுக்கமான முக்கால் பேன்ட்டும் அணிந்து மேக்கப் கீக்கப் ஏதும் இல்லாமல் அவர் வந்து நின்றபோது, யார் இந்த சூப்பர் பிகர் என்றுதான் முதலில் நினைத்தேன். உண்மையிலேயே மிக அழகான பெண் அவர். ஆனால் லென்ஸுக்குத்தான் ஏனோ அவர் முகத்தைப் பிடிப்பதேயில்லை. திரைப்படத்தில் பார்க்கும்போது முகம் விரிந்து ஒருமாதிரியாகத் தெரியும். பெரும்பாலும் அழுகைக் கதாபாத்திரங்களையே வேறு அவர் தாங்கி வந்த வகையிலும் அவர் உண்மையிலேயே நல்ல அழகி என்பது பலருக்கும் தெரியாமலே போய்விட்டது.

சார்லி சாப்ளின் என்கிற நடிகனின் முகம் அவனது சொந்த முகத்திலிருந்து முற்றிலும் வேறானது என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். ஹிட்லர் மீசையும் கண்களைச் சுற்றிலும் அப்பிய மையும் உயர்த்திய புருவமுமே அந்த வேறொரு முகத்தை அவருக்கு வழங்கின. பழைய தமிழ்ப்படங்களைப் பாருங்கள், எம்ஜியார் முதற்கொண்டு விதிவிலக்கேயில்லாமல் நடிகர்கள் கண்ணுக்கு மையிட்டிருப்பார்கள். மையிட்ட கண் ஹைலைட் ஆகிறது. ஓவியத்தில் தேவைப்படுமிடங்களில் வைக்கப்படும் கறுப்புதான் ஓவியத்தின் டெப்த்தைத் தீர்மானிக்கிறது. இதே வேலையைத்தான் முகத்தில் மை செய்கிறது.
இதனால்தான் மேக்கப் இல்லாத நடிகையின் முகம் விகாரமானது என்பதுபோன்ற விகடங்கள் எழுந்து தொலைத்திருக்கின்றன. மிக அழகாக அலங்காரம் செய்யப்பட்ட முகம் அந்த அலங்காரங்களைக் கலைத்துவிட்டுப் பார்த்தால் மிகச் சாதாரணமாகத் தெரிவதில் வியப்பென்ன இருக்கிறது!

சரி, அழகு என்பது என்ன என்பதற்கு வருவோம். வசீகரமானது அழகு. சினிமாவில் இவ்விதமான வசீகரம் எல்லா தரப்பிலும் தேவைப்படுவதை நம்மால் தவிர்க்க முடிவதேயில்லை. சத்யஜித்ரேகூட தன்னுடைய படங்களில் நடிக்கும் நடிகனோ நடிகையோ கண்டிப்பாக அழகாக இருக்கவேண்டும் என்று பிடிவாதமாக இருந்ததாக அவர்மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு.

அழகு என்கிற வசீகரம் ஆளாளுக்கு மாறுகிற காரணத்தாலேயே பலவிதமான ஆளுமைகள் சினிமாவில் நமக்குக் கிடைக்கின்றனர். ரஜினிகாந்த்தின் கண்கள் வசீகரமானவை, கமலஹாசனின் ஒயில் வசீகரமானது, அஜீத்தின் புன்னகை வசீகரமானது, விஜய்யின் முகம் வசீகரமானது, பிரபுதேவாவின் நடனம் வசீகரமானது, ஜேகேரித்தீஷின் பர்ஸ் வசீகரமானது என்று வசீகரத்தின் தன்மைகள் மாறுபட்டுக்கொண்டே இருக்கின்றன.

அழகு அவசியமானதுதான். சாலையில் நடந்து போகிறவர்களில்கூட அழகானவர்கள்தான் திரும்பிப் பார்க்கப்படுகிறார்கள். இப்படியிருக்க, சினிமாவோ பார்வையாளனை மனதிற்கொண்டே படமாக்கப்படுவது. ஏதோவொரு விதத்தில் பார்வையாளனைக் கவர வேண்டிய கட்டாயம் அதற்கு உண்டு. அழகானவர் என்பதாக அறியப்படும் கமலஹாசன் தன் குணா படத்தில் கறுப்பாக மாறியபோது களையில்லாத அவரது முகத்தோற்றத்தைப் பார்த்து நாவிதராக வரும் சிவாஜி (கணேசன் அல்ல), நம்ம மாதிரி வித்தியாசமான முகம் இருந்தாலே அப்படித்தான் பாப்பாங்க என்று சொல்வார்.

இந்த இடத்தில்தான் சினிமா சறுக்குகிறது. உண்மையிலேயே வசீகரம் இல்லாத ஒரு நடிகனை வசீகரம் இல்லாத ஒரு கதாநாயகப் பாத்திரத்துக்குப் பொருத்திப் பார்க்க எமது சினிமா தயாராக இல்லை. நாயகன் அழகற்றவன் என்றால் அழகான நாயகன் ஒருவன் அழகற்றவனாக மேக்கப் செய்யப்படுவானே தவிர, வேறு ஒன்றும் நிகழாது. குணாவாக மட்டுமல்ல, சப்பாணியாகவும்கூட ஒரிஜினல் சப்பாணி ஒருவர் நடிக்க முடியாது.

இந்த விஷயத்தில் கேரளா ஓரளவு தேவலாம். இத்தனைக்கும் மலையாளிகள் பொதுவாகவே தமிழர்களை விடவும் அழகானவர்கள் என்பதே எனது பர்சனல் கருத்து. என்ன இருந்தாலும் தெய்வத்தின்டெ ஸ்வந்தம் மாந்தரல்லவா அவர்கள்! மலையாளத்தில் ஸாந்தம் என்ற படத்தில் இயக்குனர் ஜெயராஜ், ஐயெம் விஜயன் என்கிற நடிகரைக் கதாநாயனாக அறிமுகப்படுத்தினார். அவர் இந்திய கால்பந்து அணியின் வீரர். அவரது தோற்றம் தமிழில் திமிரு திரைப்படத்தில் வில்லனாக நடிக்க மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நாயகர்களை விடுங்கள், நாயகியரைப் பொறுத்தவரைக்கும் இயக்குனர்கள் சின்ன வயசில் காதலித்துத் தோற்றுப்போன முகங்களுக்கே இங்கே முன்னுரிமை தரப்படுகிறதோ என்றே தோன்றுகிறது. சற்று கூர்ந்து கவனித்துப் பாருங்கள், பாரதிராஜா பெரும்பாலும் ஒருவிதமான முகத்தால் வசீகரிக்கப்பட்டு வந்திருக்கிறார். என்னுயிர்த் தோழன் ரமா, கருத்தம்மா ராஜஸ்ரீ, அலைகள் ஓய்வதில்லை ராதா, முதல் மரியாதை ரஞ்சனி, கல்லுக்குள் ஈரம் அருணா முதலான முகங்கள் அவருக்குப் பிடித்தமானவை. மணிரத்னம் சரண்யா, மதுபாலா ஆகியவர்களின் எளிய முகங்களால் வசீகரிக்கப்படுகிறார். பாலச்சந்தருக்கு கண்கள் பெரிதாகவும் கன்னம் பம்மென்றும் இருந்தாகவேண்டும். பாலுமகேந்திராவையோ கேட்கவே வேண்டாம், டிபிகல் தமிழ் முகம் அவரை வசீகரித்துவிடுகிறது. ஷோபா, அர்ச்சனா, மவுனிகா என்று ஒரு பட்டியல் நீள்கிறது. இதனாலேயே இயக்குனர்களின் பர்சனல் காதல் தோல்விகள்தான் முகங்கள் குறித்த அவர்களின் வசீகரத்தைத் தீர்மானிக்கின்றன என்று சொல்லவும் ஏதுவாகிறது.
அவர்களுக்கு எது அழகு என்று தோன்றுகிறதோ, அந்த முகங்களைத் தமிழன் பார்த்துத் தொலைய வேண்டியதிருக்கிறது. அவர்களில், நெளிவுகள் சுளிவுகள் பிணைந்த ஆற்றல் உடையவர்கள் நிலைத்து நின்றுவிடுகிறார்கள். மற்றவர்கள் நம்மை அதிகம் இம்சைப்படுத்தாமல் ஓரங்கட்டப்பட்டுவிடுகிறார்கள்.

அழகானவர்கள் என்பதாகக் குறிப்பிட முடியாத சிலரும் சினிமாவில் உயரங்களை எட்டியிருக்கவே செய்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் ஹீரோவாக நடித்த இயக்குனர்களாகவே இருப்பார்கள். நடிகர் ராபார்த்திபனின் முகம் எவ்வளவு கரடு முரடானது! ஆனால் அவரிடம் இருக்கும் நக்கல் அவரது வசீகரமாகிறது. அதுவே அவரது அழகாக ஒப்புக்கொள்ளப்பட்டு அவர் ரசிக்கப்படுகிறார். பாக்கியராஜ், பாண்டியராஜன் ஆகியோரின் காமெடி சென்ஸ் அவர்களின் அழகு. நாசரின் வித்தியாசமான மூக்கு அவருக்கான அழகாக நினைவுகொள்ளப்படுகிறது. பிரகாஷ்ராஜின் ஆளுமை அவரது அழகாகிறது.

இந்த உதாரணங்கள் சினிமாவில் பொதுவாக அழகு என்பதாக அறியப்படும் கருத்துக்கு மாற்று தேவை என்பதையே உணர்த்துகின்றன. ஒரு நடிகராக சேரனிடம் ஒரு வசீகரமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஓர் இயக்குனராகவே அவரை நான் மதிக்கிறேன். இருந்தாலும் அவரும் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். சொல்ல மறந்த கதைக்கு அவர் சரிதான். ஆனால் ஆட்டோகிராஃபுக்கு அவர் தேவையில்லை என்பதே எனது கருத்து. ஏனென்றால் காமிராவுக்கு முன்னால் புதிதாக அவர் எதையும் செய்துவிடுவதேயில்லை. ஆனாலும் அவருக்கு வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த உதாரணம் எதைக் காட்டுகிறது? ஒருவர் கதாநாயகனாக நிலைக்க வேண்டுமானால் அதற்கு அவர் நடித்த படங்கள் ஓடினால் மட்டுமே போதும் என்கிற நிலைமையையே காட்டுகிறது. அப்படியானால் ஒருவர் அழகாய் இருப்பதால் புதிதாக என்ன ஆகிவிடப்போகிறது?

ஆகச்சிறந்த நடிப்புத் திறமை உள்ள ஒருவர் மிகுந்த விகாரமான தோற்றம் கொண்டவர் என்கிற காரணத்தினால் மட்டுமே நாயகனாக நடிக்க முடியாமல் போவது உண்மையிலேயே துன்பகரமானது என்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. மிக அற்புதமான நடிப்பாற்றல் உள்ள ஒரு நடிகை களையில்லாத முகத்தோற்றம் கொண்டிருப்பதனால் இரண்டாம் கதாநாயகி, தோழி, தங்கை என்று பின்னுக்குத் தள்ளப்படுவது எவ்விகிதத்தில் சரி என்பதும் எனக்கு விளங்கவேயில்லை.

யாருக்கு பயந்து இவ்விதமான தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன? பார்வையாளர்களுக்கு பயந்தா? பார்வையாளர்கள் அழகை மட்டுமே பார்க்கக்கூடிய அரைக் குருட்டுத்தனம் கொண்டவர்கள் என்பதாக அவர்கள் கருதுகிறார்களா? தேவலோகத்தில் அப்சரஸ்கள் அழகாக இருப்பார்கள் என்றால் அழகிகளை அப்சரஸ்களாகக் காட்டுங்கள், மெக்கானிக் பையன் அழுக்காக மட்டுமல்ல, அதிக வசீகரமும் இல்லாதவனாகத்தானே இருப்பான், அதற்கு எதற்கு பரத் மாதிரி ஒரு நடிகரின் அவசியம் வருகிறது?

கடைசியாக நான் சொல்லிக்கொள்ள விரும்புவது இதுதான், வசீகரம் இல்லாத முகம் என்பதாக ஒன்று இல்லவே இல்லை. அது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லை என்பதைத் தவிர வேறு குறையேதும் இல்லை. மிகச் சாதாரணமான முகம் கொண்டவர்கள் பழகப்பழக மிக அழகானவர்களாகத் தோன்ற ஆரம்பிப்பதே இயற்கையானது. மிக அழகாக இருப்பவர்கள் தங்கள் குணத்தால் மிகக் குரூரமானவர்களாகத் தோன்றுவதும் நிகழ்ந்தே வருவது. பழக்கமே அழகைத் தீர்மானிக்கிறது. திரும்பத் திரும்பப் பார்க்கப்படும் முகம் மனத்தில் பதிந்து நம் சொந்த முகத்தைப்போல மாறிவிடுகிறது.
தான் அழகற்றவன்/அழகற்றவள் என்பதை ஒப்புக்கொள்ள ஒருத்தரும் இங்கே தயாராக இல்லை. தான் என்பது தோற்றமும் மனமும் ஒருங்கிணைந்த ஒன்று. முகம் எப்படி ஒரு அடையாளமோ, அதேமாதிரிதான் செய்கைகளும் அடையாளமாகின்றன. அதேமாதிரிதான் திறமைகளும் அடையாளமாகின்றன. மிகச் சிறப்பாக கிரிக்கெட் விளையாடும் ஒருவன் அழகாக இல்லை என்பதற்காக டீமில் சேர்க்கப்படாமல் தவிர்க்கப்படுவதில்லை. மிக இனிமையாகப் பாட்டுப் பாடும் ஒருத்தி அழகாக இல்லை என்பதற்காக மேடையில் மறுக்கப்படுவதில்லை.
சினிமாவில் மட்டும் ஏன் இந்தப் பாரபட்சம்? அதுவும் முழுக்க முழுக்க திறமைக்கே முக்கியத்துவம் தரப்படவேண்டிய அந்த உலகில் திறமை என்பதை அழகு என்பது தன் காலால் மிதித்து நர்த்தனம் ஆடிக்கொண்டிருப்பதில் அர்த்தமென்ன இருக்கிறதோ விளங்கவேயில்லை.

July 14, 2009

இடையில் எதற்கொரு வேளை?


ஒருகாலத்தில் மாருதியின் வால் போல எமது சினிமாக்கள் நீண்டு கிடந்தன. (மாருதி என்றதும் மாருதி உத்யோக் நிறுவனத்தின் படைப்புகளுக்கு ஏது வால் என்று கேட்கக்கூடாது. இது கரசேவை கால்சேவை என்று தரமிழந்து போகாத சாக்ஷாத் ராமபக்த மாருதியின் வால்) மூன்று மணி நேரம், நான்கு மணி நேரம் என்று இலக்கில்லாமல் சுட்டுத்தள்ளப்பட்டு எடிட் செய்யப்பட்ட அந்தப் படங்களை மகாஜனங்கள் பார்க்குங்கால் நடுவில் மூத்திரம் முட்டுவதில் நியாயம் இல்லாது போகாது.

அந்தக் காலத்தில் பாட்டு போட்டால் எழுந்து வெளியே போகிற சுதந்திரம் தங்களுக்கு உண்டு என்பதைக்கூட பார்வையாளர்கள் அறிந்திருக்கவில்லை. ஏனென்றால் படமே முழுக்க பாடல்களாலேயே நிரம்பியிருந்தது. இதனால் பாட்டுக்குப் பாட்டு மூத்திரம் பெய்ய வேண்டுமானால் தண்ணீர் பாட்டிலைக் கையோடு கொண்டுவந்திருந்தால்கூட ஆகாது. ஆங்கிலப்படங்களில்கூட இம்மாதிரி நீண்ட படங்கள் நிறைந்திருந்த காலமாகவே அது இருந்தது. இதனால் ஒரு இடைவேளைக்கு பதில் இரண்டு இடைவேளை விட்ட சரித்திரம்கூட உண்டு. ஹிந்தியில் சங்கம், மேரா நாம் ஜோக்கர் ஆகிய படங்கள் இரண்டு இன்டர்வெல் விடப்பட்ட படங்கள். தமிழில் நீண்ட படங்கள் வந்திருந்தும் இரண்டு இன்டர்வெல் விட்ட வரலாறு இருப்பதாக நினைவில்லை. ஆனால் கிராமத்து டூரிங் டாக்கீஸ்கள் ஒரே ப்ரொஜக்டர் வைத்து இயக்கப்பட்டதனால் ரீல் மாற்றுவதன்பொருட்டு மூன்று இடைவேளைகள் விடும் பழக்கம் இன்னும்கூட உண்டு.

இரவெல்லாம் விழித்திருந்து கதைசொல்லிகளின் பிரசங்கங்களையும் தெருக்கூத்துகளையும் பார்த்துப் பழகிய கூட்டமாக இருந்த வகையில் சினிமாவும் அவ்விதமாக நீண்டதாகவே இருந்தது இயல்பானதே. அதற்கு இடைவேளைகள் தேவைப்படுவதும் இயல்பானதே. ஆனால் இன்றைக்கு அப்படியா?

இரண்டரை மணிநேரப் படம் என்பது எழுதப்படாத சட்டமாக ஆனபின்னால் இடைவேளை என்பதும் மறுக்கப்படாத ஏற்பாடாக ஆகிவிட்ட சூழல் இன்று. இதனால் இடைவேளை என்பது கான்டீன் என்பதாக ஒன்றையும் உற்பத்தி செய்துகொடுத்தது. பூங்காக்களுக்கோ கடற்கரைக்கோ பொழுதைப் போக்கச் செல்பவர்கள் எதையாவது வாங்கி உண்பதில்லையா, அதுபோல சினிமாத் தியேட்டர்களுக்கு கேளிக்கை நோக்கத்தில் போகிறவர்களும் எதையாவது வாங்கித் தின்ன வேண்டும் அல்லவா. இப்படி உற்பத்தியான இந்த வழக்கம் இன்றைக்கு இதற்காகவே திரைப்படங்கள் இடைவேளை விடவேண்டும் என்கிற கொடுமைக்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

இதன் உச்சபட்ச ரகளைதான் வெறும் ஒன்றரை மணிநேரமே ஓடுகிற ஆங்கிலப் படங்களுக்குக் கூட எமது தியேட்டர்களில் விடப்படும் இடைவேளை. இந்தக் கான்டீன் ஒரு பெரிய ஹோட்டல் சாம்ராஜ்ஜியத்தையே உற்பத்தி செய்து கொடுத்த ஆச்சரியம்கூட கோவையில் நிகழ்ந்தது. கோவை சென்ட்ரல் தியேட்டரில் தாமோதரசாமி நாயுடு என்பவர் ஒரு கான்டீன் நடத்தினார். கான்டீனில் இட்லி கொடுக்கலாம் என்பதாக அவருக்குத் தோன்றியது. அவரது இட்லியும் சாம்பாரும் பருப்பு வடையும் தியேட்டரில் கூட்டத்தைச் சேர்த்தன. தியேட்டரிலிருந்து வெளியே வந்தபோது அன்னபூர்ணா என்கிற பெயரில் ஒரு பெரிய சாம்ராஜ்ஜியமாகவே அது மெல்ல மெல்ல பரிணாமமடைந்தது.

இப்படி எங்காவது ஒருவருக்கு உதவியாக இருந்தபோதும் இந்த இடைவேளை என்பது சினிமாவின் கதைக்குள்ளும் தலையை நுழைத்து கதாசிரியனுக்கு அடுத்த கட்ட பிரச்சினை ஒன்றையும் கொண்டு வந்து சேர்த்தது என்பதே உண்மை. சாதாரணமாகவே கதை என்றால் அதற்கு உச்சக்கட்டம் என்கிற க்ளைமாக்ஸ் மிகவும் அவசியம். கதாசிரியன் படத்தின் க்ளைமாக்ஸ் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் எப்போதுமே அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது. படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது எழுகிற அபிப்பிராயமே படத்தின் வெற்றி தோல்வி ஆகியவற்றை நேரடியாகத் தீர்மானிக்கிறது என்பதனால் இது அவசியமானதே. ஆனால் இடைவேளை?

இடைவேளை என்பது கட்டாயமாக்கப்பட்ட பிறகு அதற்கும் க்ளைமாக்ஸுக்குத் தருகிற முக்கியத்துவத்தைத் தரவேண்டிய கட்டாய நிலைக்கே கதாசிரியன் தள்ளப்பட்டான். ஏனென்றால் ஒழுங்காக உட்கார்ந்து படம் பார்த்துக்கொண்டிருபவர்களை நம்பி சற்று நேரம் வெளியே அனுப்புகிறோம். அவர்கள் அப்படியே ஓடிப்போய்விடக்கூடாதல்லவா!

இதனால்தான் பத்தாவது வரைக்கும் நல்லா படிச்சான், ப்ளஸ்டூலதான் மனசு கண்டபக்கமும் அலைஞ்சு கோட்டை விட்டுட்டான் என்று இளம்பிராயத்தினரை விமர்சிப்பதைப்போல இன்டர்வல் வரைக்கும் பிரமாதம், செகண்ட் ஹாஃப் குப்பை என்று சொல்கிற நிலைப்பாடு எழுந்திருக்கிறது. இந்த பர்ஸ்ட் ஹாஃப் செகண்ட் ஹாஃப் என்கிற சங்கதியெல்லாம் ஆங்கிலப் படங்களில் இல்லாத வகையில்தான் அவர்களின் படங்கள் ஒவ்வொரு காட்சியும் க்ளைமாக்ஸ் காட்சிக்குண்டான சிரத்தையோடு எடுக்கப்படுகின்றன.

இங்கே கதை செய்ய வேண்டுமானால் மூன்று அம்சங்களை மட்டும் பார்த்துப் பார்த்துச் செய்தால் போதும் என்கிற நிலைப்பாடே இன்று நிலவுவது. படத்தின் துவக்கம், இடைவேளை, க்ளைமாக்ஸ் ஆகியவையே அவை. இவை சிறப்பாக இருந்துவிட்டால் நடுவில் தவிட்டைக் கொட்டி நிரப்பினாலும் பார்வையாளர்கள் சப்புக்கொட்டிச் சாப்பிடுவார்கள் என்பதைப் போலவே பெரும்பாலான சினிமாக்காரர்கள் நினைக்கிறார்கள். இதனாலேயே எமது படங்கள் குப்பையாக இருக்கின்றன.

அதிலும் இன்டர்வெல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகித் தொலைத்த வகையில் ஏதாவதொரு எதிர்பார்ப்பு அல்லது திருப்பத்தை அங்கே வைக்க வேண்டிய அவலம் கதாசிரியனுக்கு இருக்கிறது. எதிர்பார்ப்பை க்ளைமாக்ஸில் வைக்க முடியாது. ஆனால் படத்தின் துவக்கத்தில் வைக்க முடியும். ஆனால் மிக முக்கியமான திருப்பமொன்றை வைக்க சரியான இடம் இடைவேளைதான் என்பதாகவே தெரிகிறது. இதைச் சாக்கிட்டே படத்தில் முக்கியமான திருப்பம் என்பதாக ஒரு அபத்தம் வேறு உற்பத்தி செய்யப்படுகிறது.

முந்தானை முடிச்சு படத்தில் குழந்தையைத் தாண்டி பொய் சத்தியம் செய்கிறாள் நாயகி. இனி என்ன நடக்கப்போகிறதோ என்கிற பதைபதைப்போடு கான்டீனில் பர்ஸ் கரைவதைக்கூட அறியாமல் அமிலம் சுரந்த வயிற்றை நிரப்பிக்கொண்டே விசனப்பட்டுக்கொண்டிருக்கிறான் தமிழன். குழந்தையைத் தாண்டிவிட்டால் என்ன ஆகும்? உம்மாச்சியா வந்து கண்ணைக் குத்திவிடும்? அதன்பிறகு அவர்கள் இருவரும் இன்னொரு குழந்தையை உற்பத்தி செய்கிற சேவையில் ஈடுபட்டார்களா இல்லையா என்பதுதானே கதையாக இருந்தது. தாண்டப்பட்ட குழந்தைக்காகவோ தாண்டிய சிறுமிக்காகவோ பதைத்த மனம் அதற்கான பதிலைப் பெற்றதா?

இதைத்தான் இடைவேளைச் சூத்திரம் என்பதாக நாம் கண்டுபிடித்திருக்கிறோம். இடைவேளை என்கிற பொழுதில் பார்வையாளன் படத்தைத் தவிர வேறு யோசனைகள் இல்லாமல் இருந்துவிட்டால் போதும். அதற்கு அவனது மூளையில் ஒரு துளையைப் போட்டுவிட்டால் போதும் அது திரும்பவும் உள்ளே வருகிறவரைக்கும் குடைந்துகொண்டேயிருக்கும். உள்ளே வந்ததும் கொஞ்சம் களிமண்ணை அதில் நிரப்பிவிட்டால் அவன் கேள்விகளையெல்லாம் விட்டுவிட்டு தன் வேலையைப் பார்த்துக்கொண்டு போயே போய்விடுவான்.

இப்போது வருகிற படங்களில் கதையே தக்னூண்டுதான் இருக்கிறது. இதில் ஃபர்ஸ்ட் ஹாஃப் வேறு செகண்ட் ஹாஃப் வேறு! அப்புறம் கதையில் எதைத்தான் செய்ய முடியும்? கதையின் போக்கைக் கதைதான் தீர்மானிக்க வேண்டுமே தவிர இடைவேளை தீர்மானிக்கக்கூடாது என்பதே எனது ஆதங்கம். கதை துவங்குகிறது, நகர்கிறது, முடிகிறது. இதுதான் சரியான செயல்பாடாக இருக்க முடியும். நடுவில் இடைவேளை எதற்கு விடப்படுகிறது? தியேட்டர் உரிமையாளன் படத்தில் சம்பாதித்தது போதாதென்று கான்டீனை ஏலம் விட்டும் சம்பாதிப்பதற்கெனப் படைப்பாளி எதற்காக மண்டையைப் பிய்த்துக்கொள்ள வேண்டும்?

சினிமாவைப் பொறுத்தவரை படைப்பாளியின் தலையில் மிகப்பெரிய பாரம் ஏற்றப்படுவது இவ்விதமாகத்தான். அவன் தயாரிப்பாளரைத் திருப்திபடுத்த வேண்டும், நடிகரைத் திருப்திபடுத்த வேண்டும், ஃபைனான்சியரைத் திருப்திபடுத்த வேண்டும், டிஸ்ட்ரிபியூட்டரைத் திருப்திபடுத்தவேண்டும், இந்த தியேட்டர் உரிமையாளர்களையும் திருப்திபடுத்த வேண்டும் என்றால் பார்வையாளனை எங்கிருந்து அவனால் திருப்திபடுத்த இயலும்?

இதையும் மீறி நல்ல சினிமாக்கள் வருகின்றன என்று சொன்னால் எமது சினிமாக்காரர்கள் எத்தனை கில்லாடிகள் என்பதை நீங்களே உணர்ந்துகொள்ளுங்கள்.

சமுத்திரகனியின் நாடோடிகள் படத்தின் இன்டர்வெல் மிகவும் முக்கியமானது. அது உண்மையில் இதுவரை வந்த தமிழ்ப்படங்களின் க்ளைமாக்ஸ் காட்சிகளை மெல்லிய அங்கதத்தால் தாக்குவது. ஏனென்றால் இரண்டொரு சண்டைக் காட்சிகள், டூயட்கள், காமெடி ட்ராக் ஆகியவற்றைச் சேர்த்திருந்தால் அந்தப்படம் இன்ட்டர்வெல்லோடு முடிந்துபோய்விடும். பார்வையாளனும் வழக்கம்போல திருப்தியோடு தியேட்டரை விட்டு வெளியே வந்துவிடுவான். ஆனால் சமுத்திரகனி வழக்கமாக காதல் கல்யாணம் செய்துகொள்கிற சினிமாக்களில் கல்யாணத்தோடு கதை முடிந்துவிடுவதை நையாண்டி செய்கிறார். சரி, நண்பர்கள் எல்லாம் சேர்ந்து கல்யாணம் செய்துவைத்துவிடுகிறீர்கள், அப்புறம் அவர்கள் யோனிப்பொருத்தம், கீனிப்பொருத்தம் எல்லாம் சேர்ந்து ஒழுங்காக வாழ்ந்தார்களா? இந்தக் கேள்வியையே இரண்டாவது பாதிக்குக் கொண்டு செல்கிறார்.

இதனால் இந்தப் படத்தின் இடைவேளை பார்வையாளனுக்கு ஏற்படுத்திய எதிர்பார்ப்பு முற்றிலும் புதிதானது. இதனாலேயே இந்தப்படத்தின் இன்டர்வல் கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் போலவே விறுவிறுப்பானதாக அமைந்துவிட்டது. ஏனென்றால் மற்றப் படங்கள் அதுவரைக்கும்தான் யோசிக்கின்றன என்பதனால் அதுதான் க்ளைமாக்ஸ். நாடோடிகள் படத்தின் க்ளைமாக்ஸ், இன்டர்வெல் அளவு விறுவிறுப்பானதல்ல. சமுத்திரகனி அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. இதனாலேயே அவர் ஒரு சிறந்த கலைஞராகத் தென்படுகிறார். இந்தப்படம், சுப்ரமணியபுரத்திலும் அவரது பங்களிப்பு எத்தனைதூரம் இருந்திருக்கும் என்பதையே பார்வையாளனுக்கு விளக்குகிறது.

தான் வேறொருவரைக் காதலிப்பதாகக் காதலி சொல்கிறாள், அம்மாவைக் கொன்ற வில்லனைப் பழிவாங்குவதாக ஹீரோ சபதமேற்கிறான், ஹீரோவுக்குத் தெரியாமல் அவனுக்கு எதிராக ஒரு சதி தீட்டப்படுகிறது, ஹீரோவைக் கொல்வதற்காக வில்லன் வாடகைக்கமர்த்திய கொலைகாரன் புறப்படுகிறான், ஜனசந்தடியுள்ள முக்கிய இடங்களில் பாம் வைக்கப்படுகிறது என்று இன்டர்வெல்லுக்கான ஆலோசனைகள் ஒரேவிதமாகவே நெடுங்காலம் இருந்து வருகிற சூழலில் மற்றவர்களெல்லாம் க்ளைமாக்ஸ் என்று யோசிக்கிற விஷயத்தையே இன்டர்வெல்லாக வைக்கலாம் என்று யோசித்த பெருமை சமுத்திரகனியையே சாரும் என்றாலும், இப்படி ஏதாவதொரு காரணத்துக்காக இன்டர்வெல் என்பதற்காக மெனக்கெடவேண்டிய சூழலில்தானே அவரும் ஆழ்ந்திருக்கிறார்!

பாலச்சந்தரின் ஒருவீடு இரு வாசல் படத்தில் இன்டர்வெல் வரை ஒரு கதையும் இன்டர்வெல்லுக்குப் பிறகு மற்றொரு கதையும் இருந்தன. இது தமிழுக்குப் புதிதொன்றுமல்ல. இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஃபிலிம் அல்லது புட்டேஜுக்கு ரேஷன் இருந்த வகையில் சிறிய படங்களாக பல எடுக்கப்பட்டன. ஹரிதாஸ்கூட அவ்விதமாக எடுக்கப்பட்ட படம்தான். இதனால் பல படங்கள் இவ்விதமாக இரண்டு படங்களை இணைத்துக் காட்டப்பட்ட வகையில் இன்டர்வெல் என்பதன் அவசியம் ஏற்பட்டது. ஒருவேளை இதுகூட இன்டர்வெல்லுக்கான துவக்கமாக இருந்திருக்கலாம் என்பதாகவே தோன்றுகிறது.

எல்லா விஷயங்களிலிலும் மேற்கத்தியமயம் நிகழ்ந்துகொண்டிருக்கும்போது சினிமா மட்டும் ஏன் இன்னும் பத்தாம்பசலியாகவே இருந்துகொண்டிருக்கிறது என்பதுதான் விளங்கவேயில்லை. சொல்ல வந்த விஷயத்தை மட்டும் கச்சிதமான திரைக்கதைகளில் இன்டர்வெல் கின்டர்வெல் எல்லாம் இல்லாமல் ஒன்றரை மணிநேரத்தில் சொல்லக்கூடிய படங்களுக்காக தமிழன் இன்னும் எத்தனை காலம்தான் காத்துக்கொண்டிருக்கப் போகிறானோ தெரியவில்லை.

July 07, 2009

சாமான்யர்களின் சினிமாவும் சீமான்களின் சினிமாவும்


சாமான்யர்களின் சினிமாவும் சீமான்களின் சினிமாவும் என்கிற தலைப்பு இரண்டு மூன்று விதங்களாகப் பொருள்கொள்ளப்படலாம். சாதாரண மனிதர்கள் விரும்பும் சினிமா, சீமான்கள் விரும்பும் சினிமா; சாதாரண மனிதர்களுக்காக எடுக்கப்படும் சினிமா, சீமான்களுக்காக எடுக்கப்படும் சினிமா; சாமான்யர்கள் எடுக்கும் சினிமா, சீமான்கள் எடுக்கும் சினிமா! (நான்காவதாக இயக்குனர் தோழர் சீமான் எடுக்கும் சினிமா என்பதாக ஏதும் தப்பர்த்தம் செய்துகொள்ள வேண்டாம்!)

இந்தத் தலைப்பில் விட்டுப்போன இன்னொரு சங்கதி உண்டு. அது அறிவுஜீவிகளின் சினிமா. தமிழகத்தில் யாருக்குமே அறிவு என்பதாக ஒன்று இல்லாத காரணத்தால் அது இங்கே ஒரு பாடுபொருளாக இல்லாமற்போவதில் வியப்பில்லை. இப்படிச் சொல்வதற்காக அறிவு ஜீவிகளின் வாயிலிருந்தும் விரல்களிலிருந்தும் மட்டுமே வசைகள் வரும் என்பதனால் தேகத்தில் கீறல் விழாமல் தப்பித்துக்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையில் நான் இதை எழுதவில்லை. ஏனென்றால் அறிவு ஜீவிகள் சினிமாக்காரர்களால் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டே வருகிறார்கள். அதனால் அவர்கள் இருக்கிறார்கள் என்கிற போதமே இங்கே ஒரு பண்ணாடைக்கும் இல்லை. இந்த லக்ஷணத்தில் சினிமா எதைக் காட்டுகிறதோ அது மட்டுமே நிஜம் என்பதாகவே தமிழ் மனங்கள்வேறு நம்பித் தொலைக்கின்றன. அதனால் அவர்களை விட்டுத்தள்ளுங்கள்.

சாமான்யர்கள் விரும்பும் சினிமா சீமான்கள் விரும்பும் சினிமா அல்லது சாமான்யர்களுக்காக எடுக்கப்படும் சினிமா சீமான்களுக்காக எடுக்கப்படும் சினிமா ஆகியவை வேறு வேறு அல்ல என்பதே உண்மை. சாமான்யன், தன்னால் முடியாததைச் செய்கிற ஒருவனைத் தலைவனாகக் கொண்டாடுகிறான். சினிமாவில் ஒரு கதாநாயகன் அதைச் செய்யும்போது அவனை இயல்பாகவே தன் தலைவனாக ஏற்றுக்கொள்வதற்கே இது வித்திடுகிறது. இதனால் அவ்விதமான சினிமாக்களை அவன் கொண்டாடுகிறான். சீமான் என்கிற வசதி படைத்த ஒருவன் தான் நினைத்தால் செய்துவிடக்கூடிய சாகசங்கள் என்பதனாலேயே அவற்றை ரசிக்கிறான். செலவில்லாமல், உடல்வதையுமில்லாமல் பார்த்து ரசிக்க முடிகிறதே, அது நல்லதுதானே! இதனால்தான், தான் வாழும் சூழலான ஏழ்மையைப் பிழியும் சினிமாவை சாமான்யனும் விரும்புவதில்லை, தான் பார்க்க விரும்பாத பக்கங்களை சீமானும் விரும்புவதில்லை. இதனால் இவர்கள் இருவரும் விரும்பும் சினிமா ஒரே வகைப்பட்டதுதான் என்பதனால் இந்த விஷயங்களைத் தள்ளிவிடலாம்.

நான் சொல்ல வருவது, சாமான்யர்கள் எடுக்கும் சினிமா மற்றும் சீமான்கள் எடுக்கும் சினிமா என்கிற இரண்டே பதங்களைப் பற்றித்தான். இன்னும் சொல்லப்போனால் சீமான்களால் நல்ல சினிமா கொடுக்க முடிகிறதா என்கிற கேள்வியே இக்கட்டுரையைப் பிணைத்திருக்கும் சங்கிலி.

தமிழ் சினிமாவின் நெடும் வரலாற்றில் ஸ்டுடியோக்களின் கைகளில் சினிமா இருந்த காலத்தில் சீமான்களே படங்களை எடுக்கும் நிலைப்பாடு நிலவியது. அதாவது தயாரிப்பாளர் தீர்மானிக்கும் சினிமாவே எடுக்கப்படும். அவர் விரும்பும் சினிமாவை மற்ற டெக்னீஷியன்கள் எல்லோரும் முனைந்து செய்து தரவேண்டும். இதனால்கூட ஆரம்பக்காலப் படங்கள் ராஜாகாலத்துப் படங்களாக இருந்திருக்கலாம். ஏனென்றால் ஒரு சீமான் மற்றவனை மகிழ்விக்க விரும்பினால் ஆடம்பரத்தைக்கொண்டே அதைச் செய்வான். ஒரு சீமானுக்கு மற்றவனிடம் ஒரு காரியம் ஆகவேண்டுமானாலும் அவன் அதே உத்தியையே கையாள்வான். இதனாலேயே கோட்டைகள், கொத்தளங்கள், மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் (எவ்வளவு அழகாகச் சொல்லிவைத்திருக்கிறார்கள் பாருங்கள், மாட மாளிகை என்று வந்தால் கூடவே ஒரு கூட கோபுரம். கூடம் என்றால் ஹால். கோபுரம் என்றால் உயரமான கட்டடம் அல்லது மேல்மாடி. எனவே முதல் தளம் அல்லது இரண்டாவது தளத்தில் உள்ள பெரிய ஹால் என்பதே கூட கோபுரம். கான்க்ரீட் இல்லாத காலத்தில் பல மாடிகளில் கட்டப்பட்டவை அரண்மனைகளல்லாமல் வேறு எவையாக இருக்கக்கூடும்?) என்று பார்வையாளனை வசப்படுத்தி அவன் கையில் அல்லது வேட்டி மடிப்பில் உள்ள காசை உருவியெடுத்துவிடுவதே ஆரம்பக்கால சினிமாகர்த்தாக்களின் சூத்திரமாக இருந்தது. (அதன் இன்றைய பரிணாமம்தான் கிராஃபிக்ஸ் முதலான பிரம்மாண்டங்கள்!)

எல்லிஸ் ஆர் டங்கன் முதலாக ஏ.பி. நாகராஜன், பீயார் பந்துலு, பீம்சிங் என்று கேயெஸ் கோபாலகிருஷ்ணன் வரைக்கும் இவ்விதமாக ஸ்டுடியோக்களுக்குக் கட்டுப்பட்டு உழைத்தவர்கள்தான். இதற்குப் பின்னால்தான் ஸ்டுடியோக்களின் கட்டுப்பாட்டிலில்லாத இயக்குனர்களின் காலம் தொடங்குகிறது.

இந்தக் காலத்தில் இயக்குனர்கள் சம்பளம் வாங்குபவர்கள் அல்ல. தயாரிப்பாளரின் வருமானத்தைத் தீர்மானிப்பவர்களாக மாறிப்போகிறார்கள். ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன் முதலானவர்களின் தோற்றம் இந்தக் காலத்தில்தான் நிகழ்கிறது. இவர்களில் ஸ்டுடியோவில் தொடங்கி வெளியே வந்தவர்கள் முதல் இருவரும். பின்னவர்கள் முற்றிலும் சுதந்திரமானவர்கள். இவர்கள் உள்ளே நுழையும்போதுதான் சாமான்யர்களின் சினிமா உருவாக்கப்படுகிறது.

பாலச்சந்தர் ஒரு நடுத்தரவர்க்கத்து அரசு அலுவலர், பாரதிராஜா ஒரு சாதாரண கிராமத்துக் குடும்பத்திலிருந்து வந்த மலேரியா இன்ஸ்பெக்டர், மகேந்திரனும் நடுத்தர வர்கத்தைச் சார்ந்தவர்தான். அவர் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர். இவர்களின் வரவே நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வை சினிமாவாகப் பார்க்க நமக்கு வகை செய்கிறது. அதுவரைக்கும் எடுக்கப்பட்ட கிராமத்து சினிமாக்களைப் பார்த்தால் அந்த வித்தியாசம் நன்றாகவே உணரப்படும். வீடு என்றால் முற்றம் வைத்த தொட்டிக் கட்டு வீடு செட் போடப்பட்டிருக்கும். அதுவும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் பார்த்த காரைக்குடி வீடு அளவு இல்லாவிட்டாலும் சற்று அதிக விசாலமாகவே விரிந்திருக்கும். ஆனால் வறுமையோ மின்னிக்கொண்டிருக்கும். சிவாஜி கணேசன் மட்டும் பிராந்திய மொழியைப் பேச முயல்வார், மற்றவர்கள் எல்லாம் அவரவர் தமிழில் பிளந்துகட்டிக்கொண்டிருப்பார்கள்.

இந்த அபத்தங்களையெல்லாம் தாண்டி வரக்கூடிய சாத்தியம் பாரதிராஜா முதலானவர்களுக்கு நேர்ந்தது அவர்கள் கடந்து வந்திருந்த பின்னணியால்தான். பாரதிராஜாவின் ஆரம்பக்காலப் படங்களான 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் முதலானவை அவரது கிராமத்துப் பின்னணியிலிருந்தும் அடுத்து வந்த நிழல்கள் அவரது ஆரம்பக்கால சென்னை வாழ்க்கைச் சூழலிலிருந்தும் சிகப்பு ரோஜாக்கள் அவரது குற்றப் பின்னணியிலிருந்தும்... பாரதிராஜா மன்னிக்க! சும்மா ஒரு ப்ளோவில் வந்துவிட்டது. சிகப்பு ரோஜாக்கள் அவர் பார்த்த ஹாலிவுட் படங்களின் பாதிப்பிலிருந்தும் வெளிப்படுகின்றன.

அவரது முதல் ஐந்து படங்களில் அவர் ஒருவிதமான வெரைட்டி தர முயன்றார் என்றாலும் பிற்பாடு வெகுகாலம் அவர் அழுத்தமான கிராமிய மணம் வீசும் காதல் படங்களுக்காகவே அறியப்பட்டார். அவரது கருத்தம்மா வரைக்கும் இதன் நீட்சி தொடர்கிறது. ஆனால் இப்போது அவரால் அப்படியொரு படம் கொடுக்க முடியுமா என்று கேட்டால் இந்தக் கட்டுரைக்கான விளக்கம் தனியாக எழுதப்படவேண்டியதில்லை. சாமான்யன் என்கிற வார்த்தையை இங்கிருந்துதான் அர்த்தப்படுத்துகிறேன். தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரைக்கும் ஒரு படைப்பாளி, தான் சார்ந்துள்ள நிலையைப் பொறுத்தே தனது படைப்புகளை வெளிப்படுத்துகிறான். இது தவிர்க்க இயலாததாகவே இருக்கிறது.

இதனால்தான் மணிரத்னம் சேரியைக் காட்ட முயன்றாலும் அதில் கொஞ்சம் கற்பூர வாசனை வந்துவிடுகிறது. தமிழில் அக்னி நட்சத்திரம் படத்தில்தான் முதன்முதலில் தனிநபர் விசாரணைக் கமிஷன் என்பது அழுத்தமாக உபயோகிக்கப்பட்டது. அதற்கு முன்னால் ஆர்கே செல்வமணி முதலான இயக்குனர்கள் ஒருவேளை இதனைக் கையாண்டிருக்கலாம். எனக்கு நினைவில்லை. ஆனால் ஒரு அரிஸ்ட்ரோக்ராட் அல்லது வசதியான பீரோக்ரட் ஆகியவர்களோடு சிறுவயது முதலே பரிச்சயம் உள்ள ஒருவர்தான் அவர்களைத் தங்கள் கதாபாத்திரங்களாக அழுத்தமாகப் பதிவு செய்ய முடிகிறது. இதுவே சீமான்களின் சினிமா என்று நான் சொல்லவருவது.

ருஷ்ய இலக்கியமேதை லியோ டால்ஸ்டாயின் போரும் அமைதியும் போல ஒரு இலக்கியத்தைப் படைக்க தமிழில் நாதியில்லை என்று நான் அடிக்கடி புலம்புவதுண்டு. அரசர்களின் அந்தரங்க வாழ்வும் அரசியல் வாழ்வும் குறித்த மிகத் தடிமனான புத்தகம் அது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அது அழுத்தமான இலக்கியமாக ஆகவேண்டுமானால் நீங்கள் அவர்களோடு நெருங்கிப்பழகியிருக்கவேண்டும். அவர்களது வழித்தோன்றல்களோடாவது தோழமை பாராட்டியிருக்கவேண்டும். இல்லாவிட்டால் அது எப்படி சாத்தியமாகும்?

தமிழ்தேயத்திலோ எழுத்தாளன் ஏழை. கண்ணதாசன் விருது பெற்றுக்கொண்ட மேடையில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் குறிப்பிட்டதுபோல எழுத்தாளன் என்பவன் பிச்சைக்காரனுக்கு சற்று மேல் தளத்தில் உள்ளவன். அவன் எங்கே அரசபோகம் குறித்து எழுத?

இதே நிலைதான் இயக்குனர்கள் என்பதாக தமிழ் சினிமாவுக்குக் கிடைப்பவர்களுக்கும் உள்ளது. இதனால்தான் ஏழைகளின் அல்லது நடுத்தர வர்க்கத்தின் வாழ்வை மிகத் துல்லியமாகக் காட்ட முடிகிற அவர்களால் பணக்காரர்களின் உண்மையான வாழ்வை மிகச்சரியாகக் காட்ட முடிவதில்லை.

இதில் ஒரு கேள்வி எழலாம். ஒரு சினிமாக்காரன், சினிமாவுக்கு வரும்போது ஏழையாக இருக்கலாம், பிற்பாடு அவனே ஒரு பெரும் பணக்காரனாக சினிமாவாலேயே உருவாகும்போது அவன் பணக்காரர்களின் வாழ்வை அறிய மாட்டானா என்று! இதற்கு வாய்ப்பே இல்லை என்பதே எனது பதில். புதுப்பணக்காரனின் கண்ணோட்டத்திற்கும் பரம்பரைப் பணக்காரனின் கண்ணோட்டத்திற்கும் உள்ள வித்தியாசம் காலுக்கும் தலைக்குமானது.

நான் பேசிக்கொண்டிருப்பது வர்க்க வாதமல்ல, வர்க்க வழக்கு.

மலையாளத்தில் ஆகாச கோபுரம் என்று ஒரு படம் வெளிவந்தது. மோகன்லால் ஹீரோ. இப்சன் எழுதிய மாஸ்டர் பில்டரின் அடாப்டேஷன் என்பதாக பறைசாற்றிக்கொண்ட அந்தப் படம் மோகன்லால் கேரியரிலேயே மிக மோசமான கரும்புள்ளி. தமிழில்கூட அவ்வளவு மோசமான படமொன்று இதுவரை எடுக்கப்பட்டதில்லை. சர்ரியலிசப் படமொன்றை எடுத்துக்கொண்டிருப்பதாக இயக்குனர் நினைத்தால் மட்டும் போதாது. அது உண்மையிலேயே அப்படி இருக்க வேண்டும். மோகன்லால் இந்தமாதிரி ஒரு படத்துக்கு எப்படி கால்ஷீட் கொடுத்தார் என்று மலையாள நண்பர்களிடம் வினவியபோது உண்மை வெளியே வந்தது. படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமானவர் வெளிதேசத்தில் வாழும் மலையாளி. அவர் மோகன்லால் அதுவரை வாங்கியிராத பெருந்தொகையை முழுவதும் அட்வான்ஸாகக் கொடுத்து அவரை புக் செய்தார் என்று அவர்கள் தெரிவித்தார்கள்.

பணக்காரர்கள் நினைத்தால் இந்தமாதிரிதான் கலை சேவை செய்ய முடியும். இருந்தாலும் சீமான்களின் சினிமா இந்த லக்ஷணத்தில்தான் இருக்கும் என்று நான் பொத்தாம்பொதுவாகச் சொல்ல வரவில்லை. ஒருவன் சீமானாக இருந்தாலும் அவனுக்குள் கலையார்வமும் திறமையும் இருந்தால் மட்டுமே அவனால் தமிழ் இதுவரை பார்த்திராத புதிய தளங்களில் சினிமாக்களை உருவாக்கித் தர முடியும் என்றே நான் சொல்கிறேன்.

கேயெஸ் ரவிக்குமார் வசதியான வீட்டிலிருந்து வந்தவர் என்பதாகச் சொல்வார்கள். ஆனால் அவர் செய்வதெல்லாம் வெறும் ரகளைகள்தான். சுப்ரமணியபுரம் சசிகுமாரை வேண்டுமானால் சொல்லலாம், மதுரையைச் சார்ந்த வசதியான குடும்பத்திலிருந்து வந்தவர் இவர். இருந்தாலும் தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் சென்னையைத் தவிர வேறு முக்கிய நகரங்கள் எல்லாம் கிராமங்களின் மீது போர்த்தப்பட்ட மஸ்லின் துணியைப் போலவே காண்பதால் இவரும் தான் சார்ந்த உலகத்தை மட்டுமே நமக்குக் கொடுக்க இயலக்கூடும்.

தமிழைப் பொறுத்தவரைக்கும் சீமான்களின் சினிமாவான அப்பர் கிளாஸ் சினிமாவைக் கொடுப்பதற்கு திரும்பவும் மணிரத்னம் முன்னால்தான் மண்டியிட வேண்டியதிருக்கிறது. அடுத்த தளத்தில் ராஜீவ்மேனனோ கௌதம் மேனனோ விஷ்ணுவர்தனோ வரக்கூடும். அவர்கள் செய்தால்தான் உண்டு. ஆனால் பிரதாப் போத்தன் நினைத்திருந்தால் செய்திருக்கலாம். அவரும் செய்யவில்லை. அது தமிழின் தலையெழுத்தே தவிர வேறில்லை.

பொதுவாகவே பணக்காரர்களுக்குக் கலைத்திறன் குறைவு என்பதையே இது காட்டுகிறது.
அவர்கள் தங்கள் பெண்களுக்கு பரதநாட்டியம் பயிற்றுவிப்பதோடு தங்கள் கலையார்வத்தைத் தணித்துக்கொள்கிறார்கள் போலும்.

இப்போது சினிமாக்காரர்களின் அடுத்த தலைமுறைகள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். மேல்தட்டு நுணுக்கங்களை நுகர்ந்துபார்க்கக்கூட அவர்களின் ஒருதலைமுறை டாம்பீகம் போதாது என்றபோதும், அவர்கள் தாங்கள் சார்ந்த சமூகத்தை நம் கண்முன் கொடுக்க வல்லவர்களாக இருந்தால் ஒருசில படங்கள் கிடைக்கலாம்.

மற்றபடி தமிழில் வெளிவரும் சினிமாக்கள் எல்லாமே சாமான்யர்களின் சினிமாக்களாகவே இருப்பதை வியப்பதற்கு என்ன இருக்கிறது!

June 27, 2009

கதை கேளு! திரைக் கதை கேளு!!

எமது சினிமாவில் சாதாரணமாகவே இந்தக் கதை கேட்டல் வைபவம் என்பது, அதன் அந்தராத்மாவை ரம்பம் கொண்டு அறுக்கிற வேலையாகவே பன்னெடுங்காலமாக நிகழ்ந்து வருகிறது.

அதாகப்பட்டது, ஒரு சினிமா, ஷூட்டிங் வரைக்கும் வந்துவிட்டதென்றால் (அது ரிலீஸ் ஆகவேண்டும் என்பதாக எவ்விதமான உத்திரவாதமும் தேவையில்லை) அதற்கு முன்பாகக் கதை கேட்டல் என்கிற நிலைப்பாடு ஒன்று நிகழ்ந்தேயிருக்க வேண்டும். படத்துக்கு முதல் போடுகிறவரோ, நடிப்பவரோ, தயாரிப்பவரோ என யார் யாரோ கதையைக் கேட்கிறார்கள். நியாயப்படி தனக்கு எவ்விதமான கொள்வினையும் இல்லாத ஏரியாவாகிய கதை உருவாக்கத்தை மிகக் கஷ்டப்பட்டு அல்லது களவாடி இயக்குனர் அல்லது இயக்குனராக விரும்புபவர் செய்து வைத்திருக்கிறார். அது ஒரு ஹீரோவுக்குப் பிடித்தால் அவருக்கு தயாரிப்பாளர் கிடைத்துவிடுவார். தயாரிப்பாளருக்குப் பிடித்தால் ஹீரோகூட முக்கியமில்லை. படம் வெளிவந்துவிடும். இதனால் கதையைச் சுமப்பதும் அதை சரியானவர்களிடம் கொண்டு சேர்ப்பதும் ஒரு தேர்ந்த கலையைப் போல பயில வேண்டிய ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் இந்தக் கலையை திரைப்படக் கல்லூரி சொல்லித் தருவதில்லை.

இது ஒருபுறம் இருக்க, நமது ஹீரோக்கள் எந்த அடிப்படையில் கதை கேட்கிறார்கள் என்கிற வாதத்துக்குள் நுழையலாம். ஏனெனில் அதுவே இதன் ஆதாரக் காரணமாக இருக்க முடியும். ஏனென்றால் எமது ஹீரோக்கள் கேட்பது கதையை அல்ல. தங்களின் பாத்திரம் என்ன என்பதையே அவர்கள் கேட்கிறார்கள். ஹீரோவின் பாத்திரம் மையமானது அதைச் சுற்றி நிகழ்வதுவே கதை என்பதைப்போன்ற மாயத் தோற்றமே அவர்களின் மனத்தில் காண்கிறது.

இதனாலேயே சினிமாவுக்கான கதை என்பது ஹீரோவை மையப்படுத்தியே எழுதப்படுவதாக ஆகிவிடுகிறது. தமிழ் சினிமாவைப் பொருத்தவரைக்கும் அதுவும்கூட இரண்டே இரண்டு வகையில் அடங்கிவிடுகிறது என்பதாகவே தோன்றுகிறது. ஒன்று ரஜினிகாந்த்துக்குப் பொருந்தும் கதை, மற்றது கமலஹாசனுக்குப் பொருந்தும் கதை!

ரஜினிகாந்த்துக்கு கதை சொல்வதற்கும் கமலஹாசனுக்குக் கதை சொல்வதற்கும் நேரெதிரான வித்தியாசங்கள் உண்டு என்பதை நாம் அனைவருமே அறிவோம். முன்பொரு காலத்தில் இருவரும் ஒரேவிதமான படங்களிலேயே நடித்துக்கொண்டிருந்தார்கள் என்பது வேறு விஷயம். அவர்கள் தங்கள் பாதைகளைத் தீர்மானிக்கும் வரைக்கும் நிகழ்ந்து வந்த விபத்துக்களே அவை! இப்போது அப்படியா?

இதனால்தான் இன்றைக்கும் இவர்கள் இருவரில் ஒருவர் நடிக்கக்கூடிய கதை என்பதான இரண்டே வகைப்பட்ட கதைகளில் ஒன்றையே ஒவ்வொருவரும் உருவாக்குகிற நிலைமையே காண்கிறது. அதாவது, நல்ல நடிப்புத் திறமை உள்ள நடிகர் என்பதாகப்பெயர் வாங்கும் ஒருவருக்கு கமலஹாசனுக்குப் பொருந்தும் கதைகளையும், பெரியமாஸ் ஹீரோ அல்லது மாஸ் ஹீரோவாக ஆகக்கூடியவர் என்கிற நிலைப்பாட்டில்காணும் ஒருவருக்கு ரஜினிகாந்த்துக்குப் பொருந்தும் கதைகளையும் கதாசிரியர்கள் என்கிற இயக்குனர்கள் உருவாக்க வேண்டியிருக்கிறது. இந்த உண்மை தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் இதையே செய்து வருகிறார்கள்.

இதில் கமலஹாசன் பட்டியலில் சிக்கிக்கொண்டிருப்பவர்கள் விக்ரம், சூர்யா, தனுஷ் மற்றும் ஜீவா! சிக்கிக்கொண்டிருப்பவர்கள் என்று ஏன் சொல்கிறேன் என்றால் அது வெற்றிக்கான உத்திரவாதமில்லாத பாதை என்பதனால்தான். சமீபத்தில் நடிகர் ஜீவாகூட ஒரு பேட்டியில் இதையேதான் சொல்லியிருக்கிறார். நாலு படங்களுக்கு ஒரு படம் பரீட்சார்த்தமாக முயல்வதாக இருக்கிறேன் என்று. கொஞ்சம் நல்ல மெமரி உள்ளவர்கள் இதையேதான் பன்னெடுங்காலமாக கமலஹாசன் செய்துவருகிறார் என்பதை நினைவுகூர்வார்கள். வெற்றிக்கு உத்திரவாதமாக கமலஹாசன் கைக்கொள்வது காமெடியை. மற்றவர்கள் அதோடு ஆக்ஷனையும் சேர்த்துக்கொள்ளும்போது அது கமலஹாசனையும்கூட பாதித்துவிடுகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

சரி, வித்தியாசமான முயற்சிகளை விடுவோம். உத்திரவாதமாக ஜெயிக்கும் என்று மாஸ் ஹீரோக்கள் நம்புகிற கதைகள் உண்மையில் எவ்விதமாக இருக்கின்றன? அதாவது ரஜினி டைப் கதைகள் எவ்விதமாக உருவாகின்றன, அவற்றில் எந்ததெந்த அம்சங்கள் ஹீரோக்களைக் கவர்கின்றன என்கிற கேள்விக்கு பதில் சொல்வது அத்தனை கஷ்டமானதல்ல.

எடுத்த எடுப்பிலேயே ஏதாவதொரு அநியாயம் நிகழ வேண்டும். அப்போது ஹீரோ பாய்ந்து வந்து பாகம் பாகமாகக் காட்டப்பட்டு ஒரு கணத்தில் முகம் ஃப்ரீஸ் செய்யப்பட்டு ரசிகர்களின் ஏகோபித்த விசில்களுக்கு இடம்விட்டு பிறகு பிழையாளர்களைப் பின்னியெடுக்க வேண்டும். அல்லது மிகப்பெரிய சாதனையாளனாக அவன் முன்வைக்கப்பட, அவனோ தன்னடக்கத்தோடு காட்சியளிக்க வேண்டும். இல்லையா, நூறுபேர் சூழ நடுத்தெருவில் ஒரு ஃபாஸ்ட் பீட்டுக்கு நடனமாட வேண்டும். இவற்றின் வாயிலாக தலைவன் வந்துவிட்டான் என்கிற நம்பிக்கையைப் பார்வையாளனுக்கு ஊட்டவேண்டும். அந்த ஊட்டமே படத்தின் வெற்றிக்கான அஸ்திவாரமாக அமைய முடியும் என்பதே தொன்றுதொட்ட நம்பிக்கை. இதனால்தான் கதை கேட்கப்படும்போது ஹீரோ இன்ட்ரொடக்ஷன் என்பது முக்கியமான அம்சமாகக் கோரப்பட்டு வருகிறது.

வித்தியாசமாக ஹீரோவை எப்படி இன்ட்ரொட்யூஸ் செய்வது என்கிற போதமே பிற்பாடு உள்ள கதை என்கிற அம்சத்தைக் குலைக்கும் ஆதாரமாகிறது என்பதை நான் ஏற்கனவே எழுதிய ஞாபகம் இருக்கிறது. வில்லு படத்தில் ஹீரோ இன்ட்ரொடக்ஷன்
மேற்சொன்னவற்றில் முதல் விதமாக நிகழ்கிறது. எனக்கு எம்ஜியாரைத்தான் பிடிக்கும் என்று சொல்கிற ஒரு பூக்காரக் கிழவி இன்னொருத்தனையும் பிடிக்கும் என்று ஹீரோவின் சாதனையொன்றை விவரிக்கும் விதமாக (பெரிய விக்ரமாதித்யன் கதை பாருங்கள்) சொல்கிறார். பாட்டியின் பேத்தியை கயவர்கள் கற்பழிக்க விரும்பி கடத்த முயல்கிறார்கள். அந்தப் பிரதேசத்தில் நிறைய வண்ண வண்ணப் புடவைகள் கொடிகளில் காய்கின்றன. ஹீரோ சூப்பர்மேன் போல புடவைகளினூடாகப் பறந்து வருகிறார். ஓடுகிற ரயிலின் மீது பேலன்ஸ் செய்து நிற்பதுபோல ஜம்மென்று நிற்கிறார். ஆடி மாசம் போலிருக்கிறது. செம காத்து அடிக்கிறது. புடவைகள் பதாகைகள் போலப் பறக்கின்றன. உடல் முழுக்க வண்ணப் புடவைகள் சுற்றிய கோலத்தில் அவரது முகம்கூட நமக்குத் தெரியவில்லை. அடியாள் ஒருவன் அவரை சீண்ட, ஆகாயத்தில் தட்டாமாலை சுற்றி புடவை அவிழ்ந்து பூமியில் வந்து நிற்கிறார். அப்போது அடியாள் ஒருவன் கேட்கிறான், யார்ரா இவன், புரூஸ்லியா, ஜெட்லியா என்று, ஹீரோவான விஜய் சொல்கிறார், "கில்லிடா!"

எப்படி?

அதாவது இப்படி ஒரு இன்ட்ரொடக்ஷன் சொன்னால் விஜய் கால்ஷீட் கிடைத்துவிடும் போலிருக்கிறது. அடுத்த தலைமுறையின் முன்னோடியாக இவர்தான் அறியப்படுகிறார் என்பதனால் பின்னால் வருகிற அத்தனை நடிகர்களும் இதே பாணியையே பின்பற்றுவதும் தவிர்க்க இயலாததாகிறது.

ஏனென்றால் வில்லு என்கிற இந்தப் படத்தில் கதை என்பதாக ஒரு சுக்கும் கிடையாது. பிரபுதேவா இயக்குனர் என்பதனால் ரீலுக்கு ரீல் பாட்டு. நயன்தாராவை ஜாடியில் போட்டு குலுக்காத குலுக்காக நடனங்கள், ஓட்டங்கள். பனிமலைகள், ஹெலிகாப்டர்கள் லாஞ்ச்சுகள் என்று பிரம்மாண்டச் சூழல்கள். சரி கதை? கதை என்பதாக எதுவும் இல்லை. ஆனால் தேசபக்தி என்பதாக ஒரு ஆதாரம் கதைக்குள் இருக்கிறது. அது போதாதா?

கொலையுண்ட நிரபராதியின் மனைவியின் நெத்தியில் தேசத்துரோகியின் மனைவி என்று பச்சை குத்துகிறார்கள், மணல் புயல் வீசி புதைகிறது சடலம். அதைக் கண்டுபிடிக்கவேறு முடியவில்லை, சர்வ தேசக் குற்றவாளிகளை தான் போய் பிடிக்காமல் ஒரு சாதாரண இளைஞனின் பகை தீர்க்க உதவுகிறார் ஒரு போலீஸ் அதிகாரி என்று இத்தனை இத்தனை அபத்தங்களை ஒன்று சேர்த்து ஒரு கதை பண்ண முடியுமா என்று உண்மையிலேயே எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. இது ஒரு ஹீரோவுக்கு பிடிக்கிறது என்று சொன்னால் தமிழ் சினிமாவின் விதியை எங்கே போய் நொந்துகொள்வது?

பிரபுதேவா நல்ல நாட்டியக்காரர். நல்ல நாட்டிய ஆசானும்கூட. அவருக்கு எதற்கு இந்த வீண் பழி என்றே தோன்றுகிறது. சரி, கதையை அவர் செய்யவில்லை, தெலுங்கிலிருந்து கொண்டு வந்தார் என்று சொல்கிறீர்களா? உங்கள் வாக்கிலேயே அதற்கான விடையும் இருக்கிறது. மேற்சொன்ன விஷயங்கள் எல்லாம் தெலுங்குக்கு ஒருவேளை இப்போதும் சரிப்பட்டு வரலாம், அதைத் தமிழ் நாட்டுக்குப் பொருத்தமாக மாற்ற ஒரு கதையறிவு உள்ள மனிதன் வேண்டாமா? அப்படியே காப்பியடித்தால் அப்புறம் இப்படித்தானே இருக்கும்!

விஜய்யின் கில்லியும் இவ்விதமாக தெலுங்கிலிருந்தே தமிழுக்கு வந்தது. ஆனால் அந்தக் கதையில் ஒரு உயிர் இருந்தது. ஒரு கமர்ஷியல் படத்தைப்போய் உயிர் கியிர் என்று சொல்லலாமா என்று கேட்கிற அளவுக்கு நீங்கள் ஆர்த்தடாக்ஸ் அல்ல என்று நம்புகிறேன். கொடூரமான ஒரு கிராமத்து பணக்காரன், தன் முறைப்பெண்ணின் மீது உயிரையே வைத்திருக்கிறான். அவளைக் கதாநாயகன் அவனிடமிருந்து காப்பாற்றுகிறான். இது கதை. ஆனால் இந்தக் கதை மட்டும் போதுமா? அருமையான ஒரு திரைக்கதையும் இருந்தால்தானே கதை சினிமாவாக மாறும்! அந்த வித்தை அந்தப் படத்தில் மிக அருமையாக செய்யப்பட்டிருந்தது என்பதை பார்த்தவர்கள் அறிவீர்கள்.

கதை என்பது வில்லு படத்தில் போல இல்லாமல் அடிப்படை லாஜிக் உள்ளதாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் அதைவிடவும் முக்கியமானது திரைக்கதைதான். ஏனென்றால் திரைக்கதை என்பது லாஜிக் இல்லாத கதையைக்கூட ஓடவைக்கக்கூடிய வல்லமை உடையது. இரண்டு விஷயங்களிலும் ஜெயித்தது கில்லி. அப்படியொரு படத்தில் நடித்துவிட்டு வில்லு மாதிரி ஒரு படத்தின் கதையை எப்படி விஜய் தேர்ந்தெடுக்கிறார் என்பதைத்தான் விளங்கிக்கொள்ளவே முடியவில்லை என்பதாகச் சொல்கிறேன்.

இதேபோலத்தான் தமிழில் ஹரி இயக்கிய ஐயா என்கிற திரைப்படமும்! அருமையான கதை, அற்புதமான திரைக்கதை. இந்த இரண்டுமே அந்தப் படத்தின் வெற்றிக்கும் வசூலுக்கும் ஆதாரமாக அமைந்தன. இந்த இடத்தில் ஒரு விஷயத்தை யோசிக்க வேண்டியிருக்கிறது. ஐயா ரஜினிக்காக உருவாக்கப்பட்டு சொல்லப்பட்ட கதை என்பதாக இன்டஸ்டரியில் ஒரு பேச்சு உண்டு. அது உண்மை என்று பார்த்தால் ஒரு நல்ல படத்தை இழந்த வகையில் ரஜினி செய்த தவறு என்ன? அவருக்கு கதை பிடிக்கவில்லையா, திரைக்கதை பிடிக்கவில்லையா? அவை சிறப்பாக இருப்பதை அவர் கவனிக்காமல் போனதற்கான ஆதாரமான காரணம் என்ன? தமிழகத்தின் முதல்வராக வருவார் என எதிர்பாக்கப்படுகிற ஒருவர் வெறும் எம்மெல்லே பாத்திரத்தில் நடிப்பதா என்பதாக அவர் நினைத்தாரா? இதை ஹரிதான் சொல்ல வேண்டும்.

இதே ரஜினிகாந்த்துக்காக பாரதிராஜா ஒரு கதையை உருவாக்கினார். அது கடலோரக் கவிதை. ரஜினி மறுத்த வகையில்தான் சத்தியராஜ் உள்ளே நுழைகிறார். அவரை ஒரு ஸ்டாராக அந்தப் படமே உருவாக்குகிறது. முட்டம் சின்னப்பதாஸாக ரஜினி வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? ஒருவேளை அவரது கேரியரில் குறிப்பிடத்தக்க மாற்றமொன்று நிகழ்ந்திருக்கும். ஆனால் அவரோ அதே பாரதிராஜாவின் கொடி பறக்குது என்று லாஜிக் பறக்கிற கதையொன்றில் நடித்து தன் பட்டியலில் இன்னொரு தோல்விப்படத்தைத் தாங்குகிறார். இந்த அபத்தம் எதனால் நடிகர்களுக்கு நிகழ்கிறது என்பதைத்தான் அவர்கள் ஆராயவேண்டும் என்று சொல்கிறேன்.

அதற்கு அவர்கள் செய்ய வேண்டியது மிகவும் சுலபமான காரியம்தான். தாங்கள் இப்போது எந்த அடிப்படையில் கதை கேட்கிற வைபவத்தை எதிர்கொள்கிறார்களோ, அதற்கு நேரெதிரான நிலைப்பாட்டை அவர்கள் எட்ட வேண்டும். இது உண்மையிலேயே சுலபமானதுதானா என்று கேட்கிறீர்களா?

வெற்றி உத்திரவாதமென்கிற போதமிருந்தால் ஏன் இது சுலப சாத்தியமாகாது? அவர்கள் யோசிக்க வேண்டியது இதைத்தான், படத்தில் அவர்கள் எவ்விதமாக இன்ட்ரொடியூஸ் செய்யப்பட்டாலும் சரி, எத்தனை சண்டைக்காட்சிகளில் நடித்தாலும் சரி, எத்தனை கதாநாயகியை அல்லது சென்ட்டிமென்ட்டைப் பிழிந்தாலும் சரி, அவை அந்தப் படத்தின் வெற்றிக்கு எந்த உதவியும் செய்யப்போவதில்லை. படத்தின் வெற்றியைத் தீர்மானிப்பவை முதலில் திரைக்கதை, அடுத்தது கதை, மூன்றாவதாக மேக்கிங். இந்த மூன்று விஷயங்களில் அக்கறை செலுத்திய படங்கள் தோல்வியைத் தழுவுவது கடின சாத்தியமே!

இதனால்தான் சொல்கிறேன், நடிகர்கள் தங்கள் பாத்திரத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அவர்களுக்கு பணத்தையும் புகழையும் வாரிவாரிக் கொடுக்கலாம், ஆனால் தொடர்ந்து நான்கு படங்கள் ஊற்றிக்கொண்டால் அவர்கள் பெற்ற அனைத்தும் வந்த வழி தெரியாமலே ஒழுகியோடிவிடவும் செய்யும். இதை நடிகர்கள் உணர்ந்துகொண்டால், வெற்றி என்பதன் அவசியம் உணர்ந்து, ஹீரோயிசம் என்கிற அடைப்புக்குள்ளிருந்து அவர்கள் வெளிவந்துவிட வாய்ப்பாக அமையாதா?

இதை மனதில் நிறுத்தி இனிமேலாவது தன் பாத்திரம் என்ன என்று பார்ப்பதை நிறுத்தி, கதையையும் திரைக்கதையையும் அளந்துபார்க்கும் மனநிலையை எட்டுங்கள் நண்பர்களே என்று நான் சொல்லலாம், அவர்கள் கேட்க வேண்டுமே!

June 23, 2009

சினிமா செய்திகள்

பிரபாகரன் சடலம் கண்டெடுப்பு, ராஜபக்பச சடலம் சல்லடையாகத் துளைப்பு! என்பதாக ஏதேனும் அதிரடி செய்திகள் வந்தாலே தவிர, நாமெல்லாம் விரும்பிப் படிப்பவை சினிமா செய்திகளை மட்டுந்தான். இதனால்தான் செய்தித்தாள்கள்கூட சினிமாவுக்கெனப் பக்கங்கள் ஒதுக்குவதும் தவிர்க்க இயலாததாகிப் போய்விட்டது.

சலூன்களிலாகட்டும், டீக்கடைகளிலாகட்டும், பெட்டிக்கடை பெஞ்சுகளிலாகட்டும், எமது தமிழ் மறவர்கள் இனிதே கூடி விவாதிப்பது நமீதாவின் நடையழகும் நயன்தாராவின் இடையழகும் குறித்துதான் என்று நான் குற்றஞ்சாட்டினால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? இது காலத்தின் கட்டாயம். இவர்கள் இடத்தில் வேறு சிலர் முன்பு இருந்தார்கள். வேறுசிலர் பின்பு வருவார்கள். எவ்வளவு தத்துவார்த்தமான பதில்! பகவத்கீதையை சுருக்கவுருவில் கேட்டது போல இல்லை? ஆனால் இந்தத் தத்துவ போதமெல்லாம் எமக்குக் கிடைத்தது எதனால்? சினிமாவால்! பின்னே ஆளுக்காள் குருக்ஷேத்ரத்திற்குப் போய் நின்றால் பார்த்தசாரதிதான் கடுப்பாகிவிட மாட்டானா! இப்படி சினிமா செய்திகளைப் போட்டு அலசுகிறீர்களே அவற்றை உங்களுக்கு யார் சொன்னார்கள்? அல்லது நீங்களே நேரில் போய் நடிக நடிகையரின் வீட்டுக்குள் நுழைந்து சேகரித்தவையா இவை?

ஆக, சினிமா செய்திகளை உங்கள் பின்மண்டை வரைக்கும் கொண்டு வந்து தருகிற சேவை என்பதாக ஒன்று அவசியப்படுகிறதா இல்லையா? அதற்கென ஊடகங்களின் தேவையும் உள்ளது என்பதை நீங்கள் மறுக்க முடியுமா?

இதில் பொதுவாக சினிமா செய்திகளை வெளியிடுவதற்கும் அரசியல் செய்திகளை வெளியிடுவதற்கும் என்ன வித்தியாசம் என்று பார்த்தால், அரசியல் செய்தியில் ஓர் அரசியல்வாதியின் (அவர் ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கட்டும்) அழகிய முகத்தைத் தவிர வேறொன்றையும் மிகைப்படுத்திக் காட்ட முடியாது என்பதனால் வேறு வழியில்லாமல் செய்தியைப் பெரியதாகவும் படத்தைச் சிறியதாகவும் போட்டுத் தொலைய வேண்டிய கட்டாயம் காண்கிறது. ஆனால் சினிமா செய்தி என்றால் அப்படியா? வளைவுகள், நெளிவுகள், பள்ளங்கள், மேடுகள், வசீகரமான புன்னகைகள், காமத்தைப் பிழியும் கரங்கள் என்று பார்ப்பவர் அல்லது படிப்பவரின் உள்ளத்தில் ஆசைத்தேனைக் குடம் குடமாக ஊற்றுவதற்குத்தான் எத்தனை வசதிகள் காண்கின்றன!

இந்த நிலைப்பாட்டை முதன் முதலில் எட்டியது தினத்தந்தி என்பதாகக் கொள்ளலாம். முதல் பக்கத்தில் தலைப்புச் செய்திக்குப் பக்கத்திலேயே கவர்ச்சிப்படம் என்று டைட்டில் போட்டு நடிகைகளின் படங்களை வெளியிட்ட சாதனை தந்தியையே சாரும். ஆனால் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அந்த இடத்தில் வெளிவந்த எந்த நடிகையின் படமும் கொஞ்சமும் கவர்ச்சியே இல்லாமல் இடம்பெற்றது என்பதே அவர்களின் தந்திரமும்!

சினிமா என்றால் பெண்ணுடல் மட்டும்தானா? ஆணுடலும்தான்! சினிமாவில் இருக்கும் ஆண்களும் பெண்களும் எப்போது எங்கே சவரம் செய்துகொள்கிறார்கள் என்பதிலிருந்து அவர்களின் தனிப்பட்ட தொடர்புகள் எத்தனை ஆழமானவை என்கிறவரைக்கும் நமக்குத் தெரிந்துகொள்ள எத்தனை எத்தனை விஷயங்கள் இருக்கின்றன என்பதை நாமேகூட பூரணமாக அறிய மாட்டோம். ஏனென்றால் சினிமாவைப் பொறுத்தவரை எல்லாமே செய்திதான்!
ரஜினிகாந்த் இனிமேல் பஞ்ச் வசனம் பேசக்கூடாது! இயக்குனர் அமீர் கருத்து!

இது ஒரு செய்தி! எவ்வளவு வசீகரமான கருத்து பாருங்கள். உடனே அமீரிடம் ஒரு பத்திரிகை பேட்டி எடுக்கிறது. ரஜினிகாந்திடம் இனிமேல் பஞ்ச் வசனம் பேசக்கூடாது என்று சொன்னீர்களாமே! அது உண்மையா வதந்தியா? அதற்கு அமீர் பதில்: நீங்கள் விசாரிப்பது உண்மைதான்! அவரைப் பார்த்து இப்போது போகிறவர் வருகிறவர் எல்லாம் பஞ்ச் வசனம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் பஞ்ச் வசனத்துக்கு ஒரு மரியாதையே இல்லாமல் போய்விட்டது. அதனால்தான் அவர் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று சொன்னேன்.
இப்போது நீங்கள் ஒரு சினிமா செய்தியைப் படித்துவிட்டீர்கள். இதை ஏற்கனவே ஊடகங்களில் நீங்கள் படித்திருக்கவில்லையானால் இப்போது ஒரு சினிமா செய்தியை எழுதியவனாக என்னையும் ஆக்கிவிட்டீர்கள். அட அமீர் அப்படியா சொன்னார்? என்று உங்களுக்குள் ஒரு வியப்பு மேலிட்டிருக்கும். அதைத் தொடர்ந்து கொஞ்சநேரம் ஓடுகிற சிந்தனைகள் உங்களின் சொந்தப் பிரச்சினைகளிலிருந்து உங்களைச் சற்றுநேரம் சாந்தப்படுத்தியிருக்கும்.
இதேபோல்தான் நானும் இந்த செய்தியைப் படிக்கிறேன். என் புத்தி தெரிந்ததுதானே! அது வழக்கம்போல குறுக்கே ஓடுகிறது. அமீர் உண்மையில் என்னதான் சொல்கிறார்? இது கரிசனையோடு சொல்லப்படுவதுபோலத் தெரிந்தாலும் இதில் கள்ளத்தனமான எண்ணம் ஏதோ இருக்கிறது போலிருக்கிறதே! இவர் சொல்வதைக் கேட்டு ரஜினிகாந்த் பஞ்ச் வசனம் பேசமாட்டேன் என்று சொன்னால் அப்புறம் அவர், பேச்சுத்திறன் இல்லாதவராக அல்லவா நடிக்க வேண்டிவரும்! ஏனென்றால் பஞ்ச் வசனம் பேசக்கூடாதென்றால் அப்புறம் ரஜினிகாந்த் வேறென்ன வசனம்தான் பேசமுடியும்?

இது ஏதோ நக்கல்மாதிரி உங்களுக்குத் தெரிகிறதா? அதெல்லாம் ஒரு கிக்கலும் இல்லை. ரஜினிகாந்த்துக்கு சில பல வருடங்களாகவே எவ்விதமான வேடங்கள் கிடைக்கின்றன என்று பாருங்கள்! சவால் விடுவது, சவால் விடப்படுவது, தூண்டப்படுவது, கொதித்தெழுவது என்று பேகிரவுண்ட் ஸ்கோருக்கும், பஞ்ச் வசனத்துக்கும் மட்டுமே வாய்ப்பளிக்கிற வேடங்களையே அவர் தொடர்ந்து தாங்கிவருகிறார். இடையீடாக ஓரிரு காமெடிச் செருகல்களும் தவிர்க்க இயலாதவையே! இப்படியொரு பாத்திரத்தில் நடிக்கிற நடிகர் குழலினிது யாழினிது என்று தொடங்கி ஐந்தரைப்பக்கக் காதல் வசனத்தையா உருப்போட்டுப் பேச முடியும்? நா ஒருதடவ சொன்னா, கொசுதா(ன்) படையா வரும்! பல்லி தனியாதா வரும்! இந்தமாதிரி ஏதாவது சொன்னால்தானே குழந்தைகள் முதல் குதூகலிக்க வாய்ப்பாக இருக்கிறது!

ரஜினிகாந்த்தும் பஞ்ச் வசனமும் இணைந்தது உண்மையில் ஒரு விபத்து என்பதாகவே தோன்றுகிறது. அவருக்கான முதல் பஞ்ச் வசனம், அதுவொரு பஞ்ச் வசனம் என்பதாக அறியப்படாமலே எழுதப்பட்டது. அது, 16 வயதினிலே படத்தில் உச்சரிக்கப்பட்ட, ''இது எப்டி இருக்கு?'' -இதன் இமாலய வெற்றிதான் இன்றைக்கு இயக்குனர் ஷங்கர் படம் பூரா பஞ்ச் வசனம்தான் என்று சொல்கிற அளவுக்குக் கொண்டுபோயிருக்கிறது. இடையில் ஒரு நிலைப்பாடு இருந்தது. அப்போது ரஜினிகாந்த் எதைச் சொன்னாலும் அது பஞ்ச் வசனம் என்பதைப் போன்ற தோற்றம் காணப்பட்டது. விடுதலை படத்தில் ஜூஜூபி என்று அர்த்தமேயில்லாமல் அவர் உச்சரித்த சொல் பஞ்ச் வசனமாகி வெகுபிரபல்யமடைந்தது. இப்போதும்கூட மாறும் சந்ததியின் மொழியைத் திருடி சிவாஜியில் கூல் என்கிறார் ரஜினி! நன்றாகத்தானே இருக்கிறது.

இதனால் நான் அமீருக்கு சொல்வது இதுதான், ''இதெல்லாம் ஜூஜூபி மேட்டர்.
கூல் பேபி, கூல்!''

பாருங்கள், ஒரு பத்திரிகையில் வெளிவந்த எட்டு வார்த்தைச் செய்தி எத்தனை எண்ணக் கதவுகளைத் திறந்து விடுகிறது! நான் முன்பே சொன்னமாதிரி, மூலபவுத்திரமோ, பன்றிக் காய்ச்சலோ எனக்கு இருக்குமானால் அதன் உபாதையைக் கொஞ்சநேரம் உணராமல் போகிற அளவுக்கு ஒரு செய்தி எனக்கு ஆறுதல் வழங்கியிருக்கிறது என்பதுதானே உண்மை! இந்தச் செய்திகளால்தான் எத்தனை நன்மை!

திடீரென்று இந்த வாரம் நானோ நீங்களோ லண்டனுக்கோ, பாரீசுக்கோ போய் நிற்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அங்கேயுள்ளவர்கள் கேட்கிறார்கள். சமீபத்தில் உங்கள் நாட்டில் என்ன விசேஷம்? இதற்கு பதில் உங்களாலோ என்னாலோ சொல்லப்படுகிறது, சமீபத்தில் தமிழ்நாட்டில் இரண்டு பெரிய விஷயங்கள் நிகழ்ந்தன. அவற்றில் முதலாவது, ரஜினிகாந்த்தின் பஞ்சாயத்து தோற்றது!

இரண்டாவது நயன்தாராவின் காதல் வென்றது! அவ்வளவுதானா? வேறு செய்திகள் இல்லையா? ஏன் இல்லை? சன்டீவி சினிமா தயாரிக்கிறது! அது ஒரு நல்ல செய்தி இல்லையா?
சரி. ஏதாவது அரசியல் செய்திகள்? ஏன் இல்லாமல், தன் மகனை துணை முதல்வராக்கிய வகையில் தமிழகத்தின் பாதுகாப்பை அவர் பார்த்துக்கொள்வார் என்கிற நம்பிக்கையோடு எங்களது முதல்வரும் மூத்த கலைஞருமானவர் அடுத்த படத்துக்கு வசனம் எழுத ஆரம்பித்துவிட்டார். இதனால் நாங்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பதோடு புதிய கலா அனுபவங்களிலும் திளைக்கப்போகிறோம்.

ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுப்பதன் வாயிலாக சோறும் போட்டு சினிமாவும் காட்டும் ஒரே அரசாங்கம் எங்களுடையதுதான்!

ஏதாவது அரசியல் கிசுகிசு? பிரஜாராஜ்யம் என்று ஒற்றை ஆளாக மேடையில் நின்று பெரும் கூட்டத்தைத் திரட்டிய சிரஞ்சீவி, தேர்தலில் பெரும் ஏமாற்றத்தைச் சந்தித்ததிலிருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் இளைய தளபதி விஜய் வரைக்கும் குலைநடுங்கிப்போய்க் கிடக்கிறார்கள். இதனால் தேர்தல் கமிஷன் மிகுந்த சந்தோஷத்தில் மிதப்பதாகத் தெரிகிறது.
வட்டாரச் செய்திகள்? ஊட்டியில் இயக்குனர் மணிரத்னத்தின் ராவணா ஷூட்டிங்கில் பயன்படுத்தப்பட்ட மூன்று காரவன்கள் பிடிபட்டன. அவற்றில் ஒன்று ஒரே பதிவெண்ணை சென்னையிலிருந்த வேறொரு காரவனோடு பகிர்ந்துகொண்டுள்ளதாக போக்குவரத்துத் துறையும் காவல்துறையும் தெரிவிக்கின்றன. இதனால் இரண்டு பெரிய துறைகள் ஒன்றோடொன்று பகைமை பாராட்டிக்கொள்ளாமல் கைகோர்த்திருப்பது தேசத்தின் ஆரோக்யத்திற்கு மிகவும் நல்லது என்பதாக ஓய்வுபெற்ற நீதிபதியொருவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

வர்த்தகச் செய்திகள்? அதே மணிரத்னத்தின் திரைக்கதையில் அவருக்கே திருப்தியில்லாததால் திருத்தியமைக்கப்பட்டு படம் ரீ-ஷூட் செய்யப்படுகிற வகையில் இன்னும் ஒரு வருட தாமதம் நேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒரு வருடத்திற்கு டெக்னீஷியன்கள் முதல் நடிகர்கள் வரைக்கும் எக்ஸ்ட்ரா பணம் தரப்படுமா என்கிற கேள்வி எழுந்த வகையில் இது நியாயமான வர்த்தகம் அல்ல என்று ஒருசிலர் ஒதுங்கிக்கொண்டனர். தற்போதுதான் உடல்நிலை பாதிக்கப்பட்டு தேறி வந்திருக்கிற அந்த இயக்குனர் இதனால் தளர்ந்துபோய்விடக்கூடாது என்பதாக முண்டக்கண்ணியம்மன் கோவிலில் கூழ் ஊற்றப்பட்டது.

விளையாட்டுச் செய்திகள்? லிட்டில் சூப்பர் ஸ்டாரான சிம்பு எனும் சிலம்பரசன் பொதுவாக கிரிக்கெட்டைத்தான் விரும்பி வந்தார். இப்போதோ ரோமில்நடந்த ஃபுட்பால் மேட்ச்சை ஆசையோடு பார்வையிட்டு வந்திருக்கிறார் என்பதனால் அவரது ரசிகர்கள் கிரிக்கெட் விளையாடினால்கூட இனிமேல்ஃபுட்பாலைத்தான் பயன்படுத்துவார்கள் என்பதாகத் தெரிகிறது.

உலகச் செய்திகள்? உலக நாயகன் கமலஹாசன் அடுத்த படத்தில் களறிப்பயிற்று ஆசானாக வருவதனால் விரைவில் (அதாவது ஒரே வாரத்தில்) களரிக் கலையை முழுமையாகப் பயில உள்ளார். ஏஞ்சலினா ஜோலி வெங்கட் பிரபுவின் படத்தில் நடிக்க கேட்ட சம்பளம் படத்தை விடவும் பல மடங்கு அதிகம் என்பதனால் ஒரு ஹாலிவுட் நடிகையையே நிராகரிக்கும் அளவுக்கு தமிழ் சினிமா உயர்ந்து நிற்கிறது.

சரி, ஏதாவது சினிமா செய்திகள்? சினிமா செய்தியா? அப்படி தனியாக ஏதாவது இருக்கிறதா என்ன!

சினிமா நாகரிகம்

அடிப்படையில் நாகரிகம் என்பதே இயற்கைக்கு நேரெதிரானதுதான். மனிதனின் வளர்ச்சிநிலையில் ஓர் அங்கமாகவே நாகரிகம் என்பதும் வளர்ந்து வந்திருக்கிறது. கூச்சமும், மதமும், ஆசையும், கர்வமும், திறமையும் மனிதனை நாகரிகத்தை உற்பத்தி செய்ய வைத்திருக்கின்றன. நிகழ்த்துகலைகள் பொதுவாக நாகரிகத்தை பிரதிபலிக்கவே செய்தன. அவை நாகரிகத்தை உருவாக்கியிருக்கவில்லை. ஒரு நாவலில் எழுதப்பட்டதன் வாயிலாகவும் ஒரு நாகரிகம் உருவாகியிருக்கவில்லை. பெரும்பாலான மனங்கள் ஏற்றுக்கொள்கிற ஒரு புதுமையோ ஒரு பழமையோ நாகரிகமாக உருவாகிவிடுகிறது. அதன் சிறு பங்கு உண்மையைப் போலவே நிகழ்த்திக் காட்டப்படும் சினிமாவுக்கும் இருக்கலாம். ஆனால் நாகரிகம் என்பது ஓரளவுக்கு மனிதனுக்குத் தேவைப்படுகிற நன்மைகளை நிகழ்த்தி வந்திருக்கிறது என்றபோதும் பெரும்பாலும் அழிவை நோக்கிய பயணமாகவே இருந்துவருகிறது. இதில் சினிமாவின் பங்களிப்பும் இயல்பானதே.

சிந்து சமவெளி நாகரிகம் போன்றதல்ல சினிமா நாகரிகம். சிந்துவில் மனிதனின் புத்தியும் தேவையும் இணைந்து வீதிகள், சாக்கடைகள், சுடுமண் கலாச்சாரம் என்று ஒரு நாகரிகம் விரிந்ததைப் பாடபுத்தகங்களில் நாம் படித்திருக்கிறோம். ஆனால் சினிமாவின் நாகரிகம் குறித்து வாசித்தறிய நாம் எங்கே போவது?

அடிப்படையில் சினிமா என்பதை இருவகைப்பட்ட நாகரிக வளர்ச்சியாகக் கருதலாம். தயாரிக்கப்படுமளவில் தனக்கேயுரித்தானதொரு நாகரிகத்தையும், பார்க்கப்படுமளவில் சமுதாயத்தின் மத்தியில் எழும் நாகரித்தையுமே சினிமா கோருகிறது. இது அடிப்படை விளக்கம்.

தயாரிக்கப்படுமளவில் சினிமா எவ்விதமான நாகரிகத்தைக் கைக்கொள்கிறது என்று பார்த்தால், ஒருவருக்கொருவர் எவ்விதமான சம்பந்தமும் இல்லாதவர்களின் கூட்டு முனைப்பு, பணத்தைப் போற்றுதல், புகழைத் தொழுதல், உழைப்பை அங்கீகரித்தல், கலையைக் கடைத்தேற்றல், திறமையைக் கண்டுகொள்ளல், அதைத் திருடுதல், உழைப்பவர்களுக்கு அன்னமிடுதல், நீதி சொல்லல், நிஜமே போல நிகழ்த்திக் காட்டுவதன் வாயிலாக சொல்ல வருவதை நிறுவுதல் என்று நீள்கிறது பட்டியல்.

பார்வையாளனின் பார்வையில் பார்க்கும்போது, பொழுதுபோக்கல், நாயக விசுவாசம் கொள்ளல், காம குரோத வடிகாலாகக் கொள்ளல், நடையுடை பாவனைகளைப் பின்தொடர்தல், சினிமாவைப் பற்றிய எவ்விதமான அக்கறையும் இல்லாமல், திரையரங்கின் இருளை நம்பி தள்ளிக்கொண்டு போதல் என்று இதற்கும் ஒரு பட்டியல் உண்டு.

முதல் பட்டியலில் உள்ள புகழைத் தொழுதல் எனும் பதமும் இரண்டாம் பட்டியலில் உள்ள நாயக விசுவாசம் எனும் பதமும் எத்தனை மோசமான நாகரிகத்தை சமூகத்தின் மத்தியில் நிகழ்த்திக் காட்டின என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அடுக்குத் தமிழில் வசனம் எழுதுவதன் வாயிலாக அநியாயத்தைத் தட்டிக் கேட்பவர்களும், ரோஜாவண்ண புஜத்தை முறுக்கி, பிழையாளர்களை வன்மையால் திருத்தும் வேடமேற்றவர்களும் நாட்டை ஆளும் பொறுப்பை ஏற்ற அவலம் உலகிலேயே தமிழ்நாட்டில்தானே முதலில் நிகழ்ந்தது!

கிருஷ்ணபரமாத்மாவாக நடித்தால் தேவுடு, வில்லனாக நடித்தால் கெட்டவன், சிரிப்பு நடிகராக நடித்தால் ஜோக்கர், நாயகியாக நடித்தால் மனைவி, தங்கையாக நடித்தால் சகோதரி, தாயாக நடித்தால் அம்மா என்று பாத்திரங்களை அப்படியே உள்வாங்கிக்கொள்ளவே அறிந்திருந்த இந்த சமூகத்தை சினிமா மிகப் பிழையான நாகரிகத்திற்குள்ளேயே தள்ளிய குற்றத்தைத் தொடர்ந்து செய்து வந்திருக்கிறது. நம்பியார் இந்தப் படத்துல நல்லவனா நடிச்சிருக்கான்ப்பா என்று ஆச்சரியப்படுமளவுக்கு மனம் மயங்கிக்கிடப்பவர்களே இங்கே அனேகம். நம்பியாருக்கு பதிலாக பிரகாஷ்ராஜ் என்று மாற்றிப் போட்டுக்கொள்வதன் வாயிலாக இந்த இயல்பின் நீட்சியைக் கடத்திக்கொண்டு வருகிறோமே தவிர வேறென்ன சாதித்துவிட்டோம்?

இதே மாதிரிதான் சினிமா, சமூகத்துக்கு நீதி சொல்ல முனைவதும். சினிமா எதைச் சொன்னாலும் ஏற்கிற நாகரிகத்தையே எட்டியிருக்கும் சமூகத்தால் சினிமா திரும்பத் திரும்ப தெரிவிக்கும் நல்லவன் வாழ்வான் தீயவன் ஒழிவான் என்கிற பதமும் உள்வாங்கப்பட்டிருக்கத்தானே வேண்டும்!

ஆனால் அப்படி நடக்கவேயில்லையே! பதினாலு கொலை செய்தவன், சினிமாவைப் பார்த்துத்தான் துணிந்தேன் என்று சொன்ன வரலாறு தமிழகத்தில் உண்டு. ஆனால் பரோபகாரம் செய்த ஒரு மனிதன் சினிமாவைப் பார்த்துத்தான் செய்தேன் என்று சொன்ன சம்பவம் இதுவரைக்கும் நிகழ்ந்திருக்கிறதா?

இது எதைக் காட்டுகிறது? சினிமாவில் நல்லவன் வாழ்வான் தீயவன் அழிவான் என்கிற கருத்து படம் நெடுக்க சொல்லப்படுவதில்லை என்பதையே இது உணர்த்துகிறது. படத்தின் க்ளைமாக்ஸில் மட்டுமே நிகழ்த்தப்படும் ஒரு செய்கை இது. மற்றபடி படம் பூரா வசதியாகவும், பெண்களின் அணைப்பிலும், பொதிப்பிலும் மிக சுகமாக வாழ்கிறான் வில்லன். நாயகனோ அவலங்களையே எதிர்கொள்பவனாகவும் அதையும் மீறி, கொஞ்சம் காதலையும் பெறுபவனாகவும் மட்டுமே சித்தரிக்கப்படுகிறான். அவலம் என்பது பிரச்சினை என்பதாக வேண்டுமானால் சில படங்களில் திருத்தப்பட்டிருக்கலாம். படம் பார்ப்பவனுக்கோ சந்தோஷம் மட்டுமே மண்டைக்குள் நுழைகிறது. இப்படியெல்லாம் இருக்க முடியவில்லையே என்கிற ஆதங்கத்தையே அவனுக்குள் முகிழ்க்க வைக்கிறது சினிமா. இதனால்தான் அவன் சினிமாவிலிருந்து நீதியை எடுத்துக்கொள்வதேயில்லை. படிப்பறிவில்லாத பெண்டாட்டி புத்தி சொல்ல நேர்ந்தால் அதைத் தூக்கி வீசிவிட்டு சந்தோஷத்தை மட்டும் நீ கொடுத்தால் போதும் மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று மறுதலிக்கிற மனோபாவத்தையே பார்வையாளன் எட்டியிருக்கிறான்.

இத்தகைய சூழலில் உண்மையிலேயே வாழ்வை உரித்துக்காட்டும் ஓர் உன்னத சினிமா திடீரென்று வந்துவிட்டாலும் அதில் தான் அனுபவிக்க என்ன இருக்கிறது என்பதையே தேடக்கூடிய மனோநிலையிலேயே பார்வையாளன் இருக்கிறான். அதாவது நல்லது தீயது என்பதாகப் பகுத்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமேதுமில்லை. எது சந்தோஷத்தைத் தருகிறதோ அதுவே தேவையானது என்கிற நிலையையே அவன் எட்டியிருக்கிறான். முழுக்க முழுக்க அவலத்தை மட்டுமே காட்டும் தத்ரூப சினிமாவொன்றை அசல் கலைஞன் என்பதாக ஒருவன் வந்தாலும் எடுத்துக்கொடுக்கத்

துணியாத நிலைப்பாடே இதனால் நேர்ந்திருக்கிறது. தமிழில் நல்ல படங்கள் முனையப்படாததன் அடிப்படைக் காரணம் இதுதான்.

இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் வந்த முதல் பட்டியலில் மிகவும் ஆச்சரியமானதாக நான் கருதுவது அன்னமிடுதல். இதன் அடிப்படைக் காரணம் என்ன என்பதே எனது முதல் வியப்பாக இருந்தது. பள்ளிக்கூடங்களில் சத்துணவு இடப்படுவதைப்போல வேறெந்தத் தொழில் துறைகளிலும் இல்லாதபடி வேலை செய்பவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுவது இங்கே மட்டும்தான். பரோபகாரியானதொரு ப்ரொடியூசர் இவ்விதமாக ஆரம்பித்து வைத்து இன்னும் தொடர்கிறதா? இல்லை, காலையிலிருந்து வேலை நடந்துகொண்டிருக்கும்போது பாதியில் உணவு இடைவேளை என்று ஒன்றை விட்டு அவனவனை வீட்டுக்கு அனுப்பினால் பெண்டாட்டி மோதியதாலோ பேருந்து மோதியதாலோ திரும்ப வராமல் போய்விட்டால் அவன் வேலையை எவன் செய்வது என்கிற கொத்தடிமை மனோபாவத்தாலா? இதைக் கூர்ந்து நோக்கினால் இன்றைக்கு பிபீவோ கலாச்சாரத்திலும் இந்த முறை பின்பற்றப்படுவதன் பின்னணியும் வெட்டென விளங்கும்.

காரணம் எதுவோ, இதன் வாயிலாக சினிமா கண்டேத்திய நாகரிகம் யாதென்றால், சோறு கிடைக்க வேண்டுமானால் ஷூட்டிங்கில் இடம்பெறவேண்டும் என்கிற கொடூரமான நிலைப்பாட்டுக்கு சினிமாவின் சில துறையாளர்கள் தள்ளப்பட்டதுதான். திருப்பதியில் ஆறு மணிநேரம் வரிசையில் நின்று தரிசனம் செய்தால்தான் அன்னதான டோக்கன் கிடைக்கும் என்பதைப் போன்றதே இது. எவ்வளவோ விஷயம் இருக்க, இதைப்போய் பிரஸ்தாபித்துக்கொண்டிருக்கிறாயே என்று நினைக்காதீர்கள். காமராஜர், பள்ளிக்குக் குழந்தைகள் வரவேண்டுமானால் இந்த ஏழைநாட்டில் சோற்றால் அடித்தால்தான் ஆகும் என்று தீர்மானித்ததைப் போலத்தான் ஒரு துறையின் பணியாளர்கள் மிகக் கேவலமாகவும் அதேநேரத்தில் நுட்பமாகவும் அவமானப்படுத்தப்படுகிற செய்கையே இது என்பதே எனது வாதம்.

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஒரு பத்திரிகையாளரோ, டெக்னீஷியனின் நண்பரோ போய் நின்றால் முதலில் கேட்கப்படுவது சாப்பிடுகிறீர்களா என்பதாகத்தான். இது நல்ல குணம்தானே என்று நினைக்க வேண்டாம். நிஜமான சமூகத்தில் உள்ள கரிசனை இந்த அன்னமிடலில் இருக்கிறதா? தமிழக கிராமங்களில் யார் வீட்டுக்குப் போனாலும் முதலில் ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கிற நாகரிகம் இன்றும் பேணப்பட்டு வருகிறது. இந்த அன்னமிடுதலைவிடவும் மிகுந்த அன்பு நிறைந்த செய்கை அது.

இதனால்தான் சோற்றால் அடிப்பது என்கிற பதத்தை உபயோகிக்கிறேன். இதனால் சினிமா எட்டியுள்ள நாகரிகம் என்ன? நக்கிப்பிழைக்கும் கலாச்சாரத்தை வளர்ப்பதுதானோ! இதைத் தொடர்ந்துதான் கேரவனுக்கு உள்ளே உட்கார்ந்து சாப்பிடுபவன், வெளியே உட்கார்ந்து சாப்பிடுபவன் என்கிற கலாச்சாரமும் இன்று நிலவுகிறது. இதனாலேயே சினிமா என்பது புகழ், அந்தஸ்து, பதவி ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்களைப் பகுக்கும் இனவாத குணத்தைப் பேணிக்காப்பதாகவே இருக்கிறது என்பதே எனது குற்றச்சாட்டு. பல பெரிய படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டிலும் உலகில் உள்ள அத்தனை மாமிசமும் ஒவ்வொருநாளும் சமைக்கப்படுவதுண்டு. ஆனாலும் நாயகனோ, நாயகியோ தன் வீட்டிலிருந்து கொண்டுவந்திருக்கும் உணவை மட்டுமே உண்ணுகிற சுதந்திரத்தையும் பெற்றிருக்கவே செய்கிறார்கள். ஒருபக்கம் ஆப்பிள் ஜூஸ் அத்திப்பழ ஜூஸ் என்று இம்சை தருகிறார்கள் என்பதைப்போல ரிப்போர்ட்டர்கள் செய்தி வெளியிட்டு வெளியிட்டு இம்மாதிரியானதொரு பார்வை உண்டு என்பதையும்கூட நமது போதத்தில் பொங்கிவிடாதவாறு பார்த்துக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதே உண்மை.

இந்தப் போக்கின் உச்சக்கட்ட ஆட்டமே சமீபத்தில் ஒரு திரைப்படத்தைப் பார்க்கப் போனவர்களுக்கு பிரியாணிப் பொட்டலம் இலவசமாக வழங்கப்பட்டது! சம்பந்தப்பட்டவர் வேறு எம்ப்பியாகிவிட்ட வகையில் எழுதவே பயமாக இருக்கிறது. இருந்தாலும், இவ்விதமாக சினிமா இலவசக் கலாச்சாரத்தைத் தூண்டுவதாகவும் தான் சார்ந்த மொழியினரை பிச்சை எடுக்கத் துணிபவர்களாகவும் மாற்றுகிற அவலத்தைத்தானே கோருகிறது. அரசியல் பிழைப்பார்க்கு அறம் கூற்றென்றால், திரைப்படம் பிழைப்பார்க்கு இதுதானா கூற்று?

சினிமா ஒரு தொழில் என்கிற அடிப்படையிலேயே, 'ஒருவருக்கொருவர் எவ்விதமான சம்பந்தமும் இல்லாதவர்களின் கூட்டு முனைப்பு, பணத்தைப் போற்றுதல், புகழைத் தொழுதல், உழைப்பை அங்கீகரித்தல், கலையைக் கடைத்தேற்றல், திறமையைக் கண்டுகொள்ளல்' ஆகிய பதங்களெல்லாம் காண்கின்றன என்பதனால் இதைப் பெரிதாகப் பாராட்டுவதன் வாயிலாக நம் நேரத்தை நாம் வீணடித்துக்கொள்ள வேண்டாம் என்றே தோன்றுகிறது. கெட்டது நிறைய இருக்குமிடத்து நல்லதும் சில இருந்துதானே தீரும்.

பார்வையாளனைப் பொறுத்தவரைக்கும், சினிமா அவனுக்கு நன்றாக ஆடையுடுத்தக் கற்றுக்கொடுத்தால் அது நல்லதுதானே! சாலையில் எதிர்ப்படுபவர்கள் எல்லாம் நல்ல முறையில் ஆடையுடுத்தி, நவீன ரக வாகனங்களில் பயணம் செய்து, அவர்களுக்கருகாக நாம் நகரும்போது நறுமணம் வீச நடமாடினால் நமக்கும் நல்லதுதானே!

ஒரு சினிமாவைப் பார்ப்பதன் வாயிலாக ஒரு மனிதனின் காம வெறியோ, கொலை வெறியோ தணிந்துபோய் பசித்த சிங்கம் போல அரங்கினுள் நுழைந்தவன், பசுமாட்டைப்போல வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தால் குடும்பத்தினில் காணும் உயிர்களுக்கும் பாதுகாப்புத்தானே!

என்ன நான் சொல்வது?

June 12, 2009

சமூகத்தை சினிமா சீர்குலைக்கிறதா?

சமுதாயத்தை சீர்குலைக்கிற வேலையை சினிமா வெகுகாலமாகச் செய்து வந்தது உண்மைதான். ஆனால் இப்போதோ அந்தக் குற்றச்சாட்டு செல்லாது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் காண்கின்றன. முதலாவது அந்த வேலையை இப்போது செய்துகொண்டிருப்பது தொலைக்காட்சிப் பெட்டி. இரண்டாவதும் மிக முக்கியமானதுமான காரணம், சினிமா என்னதான் முனைந்து இன்றைய சமுதாயத்தை சீர்குலைக்கவோ மாற்றவோ முயன்றாலும் முடியாதவாறு சமுதாயம் அதைவிட வேகமாகமாற்றம் அல்லது சீர்குலைவை, தானே முன்வந்து ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பதுதான்.

சும்மா திடீரென்று உனக்குத் தமிழ் சினிமா மேல் பாசம் வந்தால் இப்படி ஒரேயடியாக உளறாதே என்று நீங்கள் கேட்கமாட்டீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. அதனால் இந்தக் கூற்றுகளை விளக்கமுடியுமா என்று பார்க்கிறேன்.

பாகவதர் படக்காலங்களில் தொப்புளுக்கு ரெண்டு இன்ச் மேலே கொசுவம் வைத்த பதினாறு கஜ சேலை கட்டிக்கொண்டுதான் பெண்கள் நடித்தார்கள். அப்போது பெண்கள் நடிக்கக் கிடைப்பதே துர்லபமாக இருந்தது என்பதனால் கிடைத்த மூஞ்சிகள்தான் வெல்லம். இந்த லக்ஷணத்தில் கஜத்தையோ இன்ச்சையோ குறைப்பதெல்லாம் சாத்தியமேயில்லாமல் இருந்தது என்பதாகவெல்லாம் வாதாடக்கூடாது. அப்போதைய ஆணின் மனம் பெண்ணை அவ்வாறு பார்ப்பதையே விரும்பியது. இப்போதும் தங்கள் வீட்டுப் பெண்கள் என்றால் மட்டும் இறுக்கமான உடையணிந்து வீதியுலா வரக்கூடாது என்று கண்டிக்க முடிகிறதோ இல்லையோ, மனதிற்குள் அவாவுறும் ஆணுள்ளங்கள்தானே பெரும்பாலும்!

பாகவதர் வீதியில் பாடிக்கொண்டு போகையில் பெண்கள் தெறித்து ஓடுவதைப் பற்றிய விளக்கமொன்றை ஏற்கனவே எழுதியிருந்தேன். அதுகூட சமுதாயத்தை சீர்குலைக்கக்கூடிய வேலை என்பதாக எனக்கு இந்தக் கட்டுரை எழுதும் வேளையில் தோன்றவில்லை. பெண்களின் மனக்கிடக்கையில் சுதந்திரம் குறித்த ஆசை எத்தனை உயரத்துக்குத் தத்தளித்துக்கொண்டிருக்கிறது என்பதை பள்ளியறைகளிலேனும் புரிந்துகொள்ள இயலாத நிலையில் அன்றைய ஆண் மனம் இருந்திருக்க முடியாது அல்லவா!

ஏன் இந்த உதாரணத்தில் ஆரம்பிக்கிறேன் என்று சொன்னால் சமுதாயச் சீர்குலைவு என்பது முதலில் பெண்களின் சீர்குலைவு என்பதையே வெகுகாலம் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்தது. இப்போதுதான் கண் காது மூக்கு என்று நவதுவாரமும் திறந்துகொண்டு பிள்ளைகளின் சீர்குலைவே சமுதாயத்தின் சீர்குலைவுக்கான அச்சாணி என்பதை ஆணுள்ளங்கள் கண்டு தெளிந்து வருகின்றன.சினிமா பார்த்தால் பெண்கள் கெட்டுப் போவார்கள் என்பதாக நம்பிய அந்தக்கால சமூகம், அதே சினிமாவில் பெண்களைப் பார்ப்பதையும் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு விரும்பியது. ஊரில் தெருவில் கரகாட்டம் என்றாலோ, ரெக்கார்ட் டான்ஸ் என்றாலோ வெட்கமில்லாமல் வெகண்டை பேசிக்கொண்டும் விசிலடித்துக்கொண்டும் கூட்டமாகப் போய் அம்மியது.

பத்திரகாளி படத்தில் ஒரு காட்சி. பிராமணக் குடும்பம். கணவன் ரெகார்ட் டேன்ஸ் பார்ப்பதில் ஆர்வம் கொண்டுள்ளதை அறிந்த மனைவி வீட்டுக் கதவை சாத்திவிட்டு மடிசார் சகிதம் ஒரு ரெகார்ட் டேன்ஸ் ஆடிக் காட்டுகிறாள். போதுமா என்று கேட்கிறாள். அவன் பரம திருப்தி என்று தெரிவிக்கிறான். தமிழ் சினிமாவில் அப்போதெல்லாம் அவ்வளவுதான் காட்ட முடிந்தது பாவம். இப்போதானால் ஒரு மடிசார் ஸ்ட்ரிப்டீஸ் சகஜமாக நம்மால் எதிர்கொள்ள முடியும். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நான் ஆளான தாமர என்று ஷோபனாவை வைத்து மிக ஆச்சாரமான உடை என்பதாக பிராமணர்கள் கருதும் மடிசாரையே கவர்ச்சியுடையாக்கிக் காட்டிய பாக்கியராஜையும் இந்த நேரத்தில் நாம் பெருமிதத்தோடு நினைவுகூரவேண்டியதுதான்.

உண்மையில் தமிழகப் பெண்கள் அணியும் ஆடைகளிலேயே மிகவும் கவர்ச்சிகரமானது புடவைதான் என்பதை நுட்பமாகப் புரிந்துகொண்ட வகையிலேயே தமிழ் சினிமா பல உன்னதமான காட்சிகளை நாசூக்காகத் திணித்து வந்திருக்கிறது. பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னால்கூட கேரளத்தில் முண்டும் ரவிக்கையும் அணிந்த பெண்களை வீதியில் பார்த்திருக்கிறேன். ஆனால் இங்கோ, ரோசாப்பூ ரவிக்கை முழுசாகவும் பருத்த முலைகளின் பிதுங்கல் கனிசமாகவும் தெரியக்கூடிய நிலைமை வந்துவிட்டால் அத்தனை விசிலடிச்சான்குஞ்சுகளுக்கும் உறக்கம் போயே போய்விடுகிற நிலைமையே வெகுகாலம் இருந்தது (அந்தக் குஞ்சுகளுக்கு சம்சாரம் என்பதாக வேறு ஒருத்தி இருந்தால் அவளுக்கும் உறக்கம் போயிருக்கும் என்பது வெறும் செயின் ரியாக்ஷன்!).

இப்போதோ கேரளத்திலேயே அவ்விதமான உடையணிய ஒருத்தரும் தயாரில்லை. அந்த உடை சரியானதா தவறானதா என்பதைக்குறித்து ஏஷியா நெட்டில் விவாதித்து விவாதித்து முடித்தே விட்டார்கள். ஆனால் இங்கோ வாய்ப்பு கிடைத்தால் போதும், விவேகமான காமெடியன்கள் வாயிலாக மும்தாஜ் முதல், எனக்குப் பெயர் தெரியாத போலீஸ் இன்ஸ்பெக்டரை கொச்சச்சன் என்று ஆசையோடு விளிக்கிற கும்மென்ற இளம் நடிகை வரைக்கும் கேரள முண்டு கலாச்சாரத்தை தமிழ் நாட்டில் நிறுவிவருகிறார்கள். உண்மையில் அப்படியொரு கனத்த இளம்பெண் அந்த ரவிக்கை உடையோடு இன்றைய சென்னை வீதியில் நடந்துபோனால் என்ன நடக்கும்? டைட்டான ஜீன்சும் தொப்புள் தெரிய இறுக்கமான டீஷர்ட்டும் அணிந்து செல்லும் பெண்களுக்கு மத்தியில் உண்மையான கவர்ச்சியுடை எது என்பது வெட்டென விளங்கும். நானும் எவ்வளவு நேரம்தான் என் எமோஷன கன்ட்ரோல் பண்றது என்று விவேக் கேட்டதுபோலத்தான் ஆகும்!

சினிமா நிகழ்த்தும் சீர்கேடுகளில் மிகவும் நுட்பமானது இந்த வகைதான். ஆனால் இந்த சீர்கேட்டை ஸிங்கிள் விண்டோ கொண்ட சினிமா தயாரித்து, டீவியிடம் விற்றுவிடுவதனாலேயே திரும்பத் திரும்ப சிறாரிலிருந்து பெரியோர் வரைக்கும் அதைப் பார்த்துப் பார்த்து மூளையின் செதில்களைக் காமத்தின் கழிவுகளால் நிரப்பிக்கொள்கிற அவலம் நிகழ்ந்து வருகிறது.

ஒரு மோசமான காட்சியை சினிமா எடுத்துக் கொடுக்கலாம், டீவி காட்டக்கூடாதா என்று கேட்கக்கூடாது. அதனால்தான் ஸிங்கிள் விண்டோ என்கிற பதத்தை உபயோகித்தேன். சினிமாவை காசுகொடுத்து தியேட்டரில் போய்த்தான் பார்க்க வேண்டும் என்கிற நிலைமை இருந்தவரைக்கும்தான் சினிமாவை குற்றஞ்சாட்டலாம். ஏனென்றால் திரும்பத் திரும்ப ஒரு காட்சியைப் பார்க்க விரும்பினால் திரும்பத் திரும்ப முழுப் படத்தையும் பார்த்தாக வேண்டிய சூழல் அதில் உண்டு. முழுப்படத்துக்கான டிக்கெட் கட்டணத்தையும் கொடுக்க வேண்டிய அவசியமும் அதில் உண்டு. இல்லையானால் ஆப்பரேட்டர் உங்கள் பிரண்டாக இருந்தால்தான் ஆகும். ஆனால் டீவிப்பெட்டி என்பதாக ஒன்றும் அதில் கேபிள் அல்லது டிஷ் இணைப்பு என்பதாக ஒன்றும் இருந்துவிட்டால் போதுமே போதும், வேண்டுமோ வேண்டாமோ, விண்டோ விண்டோவாகத் திறந்து அதே காட்சியைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். டீவிடி ப்ளேயர் என்பதாக ஒன்று இருந்துவிட்டாலோ இன்னும் விசேஷம்.

இதனால்தான் பிரச்சினை பிலிம் பெட்டியில் இல்லை, டீவிப் பெட்டியில்தான் இருக்கிறது என்று சொல்ல வேண்டி வருகிறது.

ஆங்கில அல்லது வெஸ்டர்ன் கலாச்சாரத்தில் பார்ட்டி உடை என்பதாக ஒரு பதம் உண்டு. சாதாரண பார்ட்டிகளுக்குக்கூட அசாதாரணமான உடையணிந்து செல்வதை ஒரு கலாச்சார நடவடிக்கையாகவே அவர்கள் பயின்று வந்திருக்கிறார்கள். முலைகள் பிதுங்க வயிற்றையும் மார்பையும் இறுக்கிக் கட்டிக்கொள்வது அங்கே மிகச் சாதாரணமான செயல்பாடு. முலைகள் கண் முன் பிதுங்கினாலும் அதைத் தொடுவது நாகரிகமற்ற செய்கை என்பதாக அங்குள்ள ஆண்களின் மனத்தில் சிறுபிராயம் முதலாகவே பதிவு நிகழ்ந்திருக்கிறது என்பதனால் அங்கே இது ஒரு பிரச்சினை இல்லை.

சில வருடங்களுக்கு முன்னால் யூட்யூப்.காமில் பிரபல நடிகை ஒருவரின் க்ளிப் ஒன்றைப் பார்த்தேன். அனேகமாக தமிழ்நாட்டிலுள்ள இணையப் பழக்கமுள்ள அத்தனைபேரும் இதைப் பார்த்திருப்பார்கள். நடிகை ஒரு கூட்ட நெரிசலில் சிக்கி பெண்மைக்குரிய அச்சம் மடம் முதலான அத்தனை பாங்குகளோடும் வெளியேற முனைகிறார். மிகுந்த கண்ணியமான தோற்றமுள்ள; போலீஸ்காரன் போல க்ராப்வெட்டிய இளைஞனொருவன் நடிகையை முன்னாலிருந்து கடக்கிறான். அவன் நடிகையின் முகத்தைக்கூட பார்க்க விரும்பாதவன் போல வேறெங்கோ பார்த்தவனாயிருக்கிறான். ஆனால் அவனது ஒரு கரம் நடிகையின் ஒரு முலையை ஒருகணம் பிசைகிறது.

இவ்வளவு அசிங்கமான ஒரு காட்சியை நீங்கள் சினிமாவில்கூட பார்த்திருக்க முடியாது. இதனால்தான் சமுதாயம் சினிமாவைவிடவும் வேகமாகக் கெட்டுக்கொண்டிருக்கிறது என்று சொல்கிறேன்.

சாதாரணமாக கிராமங்களில் திருவிழாக்கள் என்றால் இந்தமாதிரி மைனர்கள் நெரிசலைப் பயன்படுத்தி பெண்களின் முலைகளையும் பின்பக்கத்தையும் பிசைவதே நமது பாரம்பரிய கர்மமாக இருந்து வருவதன் நகரமயமாக்கம்தான் பேருந்துப் பிசைவுகள். பெண்ணை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தொட்டுப் பார்த்துவிட வேண்டும் என்கிற முனைப்பு அனாதி காலம் தொட்டே இருந்து வருவதுதான் என்றபோதும் ஒரு அரசனுக்குள்ள தைரியம் போல பொது இடங்களில் இவ்விதமாகத் துணிகிற செயல்பாடு எமது தேசத்தின் கறுப்புப் பக்கம். என் நண்பனொருத்தன் மிக ஆகிருதியாக இருப்பான். ஒருமுறை அவனோடு ரயில் நிலையத்துக்குப் போயிருந்தேன். அப்போதுதான் வந்த ரயிலிலிருந்து இறங்கிய கூட்டம் தூக்கக் கலக்கமும் களைப்புமாக வேகவேகமாக ஒற்றை வாசலை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது. நாங்கள் எதிரில் செல்கிறோம். நண்பன் இரண்டு கைகளையும் ராஜராஜசோழன் மாதிரி இடுப்பில் வைத்துக்கொண்டான். எதிர்ப்படும் பெண்களின் முலைகளில் தன் முழங்கையால் மோதிக்கொண்டே வந்தான். நான் பத்தடி பின்தங்கிவிட்டேன். அடி வாங்க தைரியம் இல்லை. ஆனால் அவனது ஆகிருதியோ அவர்களது அவசரமோ, ஒருத்தரும் சண்டைக்கு வரவில்லை. முடிவில் இது சரியா என்று நான் கேட்டபோது அவன் சொன்னதுதான் ஆச்சரியமூட்டும் பதில். அவன் சொன்னான்,

இது அவங்களுக்குப் புடிக்கும்.

அவர்கள் எப்போது இவனிடம் வந்து இப்படிச் சொன்னார்கள் என்பதுதான் தெரியவில்லை. இன்னொரு நண்பன் உண்டு. அவன் திரையரங்கில் திரையில் மட்டும்தான் சினிமா ஓடுகிறது என்பதில் நம்மைப்போல் நம்பிக்கை இல்லாதவன். இந்தமாதிரியான மனோபாவங்களே சமூகம் முன்னே செல்லாமல் தேங்க வைப்பவை. இந்த மனோபாவத்தை ஜீன்கள் வழங்குகின்றன அல்லது சமூக அழுத்தங்கள் நிகழ்த்துகின்றன. மற்றபடி சினிமா என்பது வெறும் நிழல்தான்.

இணையத்தின் இருட்டுப் பக்கங்கள், பப், டிஸ்கோதே, பிபீவோ கலாச்சாரம் ஆகியவையெல்லாம் சினிமாவிலிருந்து வந்தவை அல்ல. சமூகத்திலிருந்து சினிமாவுக்குள் நுழைபவை. எந்தக் காலத்திலும் தமிழ் சினிமாவின் பிழை மிகைப்படுத்தல்தான் என்பதுதான் அதன் தவறு. முன்பெல்லாம் ஒரு பெரிய ஹீரோவின் படத்தில் கவர்ச்சியான காட்சிகள் வில்லன்களை மையமாக வைத்தே காட்டப்பட்டன. இப்போதோ தலைகீழாக மாறிவிட்டது. ரஜினிகாந்த் நடித்த வீரா படத்தில் ரோஜாவும் ரஜினியும் இணைந்து வெத்தலை என்று வருகிற பாடலொன்றில் அசிங்கமான அங்க அசைவுகளோடு ஆடியதைப் பார்த்து ஒருவிதமான கலாச்சாரக் கலவரத்தில் விழுந்தேன். அந்தப் படத்துக்குப் பின்தான் ரஜினி படங்களில் கதாநாயகிகளின் கவர்ச்சி என்கிற அஸ்திரம் கையாளப்பட்டது. ரஜினிகாந்த் மாதிரி ஒரு ஸ்டாருக்கு இது தேவையா என்று ஆச்சரியமாக இருந்தது. ரஜினியைக் காலத்தோடு இணைந்து செயல்பட வைக்கிறார்களா, அல்லது வெறும் நடிகனின் புகழை மட்டும் நம்பினால் படம் ஓடாது என்று நினைக்கிறார்களா? சுரேஷ்கிருஷ்ணாதான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

சினிமாவை வெறும் வியாபாரமாகப் பார்க்கிற போக்கின் அவலம் இது. அவர்களைப் பொறுத்தவரை சினிமா ஜெயிக்க வேண்டும். ஏனென்றால் அதன் பின்னால் பெரும் உழைப்பும் பணமும் கொட்டிக்கிடக்கிறது.

டீவிப் பெட்டிக்கோ கிடைத்ததெல்லாம் அவல்தான். திரும்பத் திரும்ப மென்றுகொண்டே இருக்கத் தோதாக சினிமா எதைக் கொடுத்தாலும் அதை பகாசூரன் போல விழுங்கிக்கொள்ள அது தயாராக இருக்கிறது.

கள்ளத்தனமான சமூக மனமோ தமிழ் சினிமா ரொம்பவும் பரிதாபத்துக்குரியது, அதனால் இவ்வளவுதான் காட்ட முடியும் என்று உள்ளூர நகைத்துக் கொண்டேயிருக்கிறது.