August 29, 2009

சினிமாவும் சமூக அங்கீகாரமும்

நாடோடிகள் படத்தில் ‘நேர்மை’யான கதாபாத்திரம் ஒன்று வருகிறது. தன் சொந்த மகளை, தன் சொந்தத் தங்கையின் மகனுக்கு மணமுடித்துக்கொடுக்க அந்தக் கதாபாத்திரம் ஓர் எளிய எதிர்பார்ப்பை முன்வைக்கிறது. மாப்பிள்ளை கவர்ன்மென்ட் உத்யோகஸ்தனாக இருக்க வேண்டும் என்பதே அது! கவர்மென்ட் உத்யோகம் உறவை விடவும் பெரியதா என்று கேள்வி கேட்கக்கூடாது. அதெல்லாம் அவரவர் மனோபாவத்தைப் பொறுத்தது!

கவர்மென்ட் உத்யோகம் என்பது நிலையானது; அந்தஸ்தானது; ஓய்வு பெற்ற பிறகும் ஊதியம் தரக்கூடியது என்பதனால் தன் மகள் எவ்விதமான பொருட்குழப்பமும் இல்லாமல் வாழ்வை நிம்மதியாகக் கழிக்க இயலும் என்பதாகக் கணக்கிடும் இந்த கிராமத்து மனப்போக்கு சற்று பரிணாமமடையும்போது ஏற்கப்பட வேண்டிய வேலைகள், மறுக்கப்பட வேண்டிய வேலைகள் என்று இளைஞர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் வேலைகள் இரண்டு விதமாகப் பிரிக்கப்படுகின்றன.

டாக்டர், என்ஜினியர், ஸயன்டிஸ்ட், லெக்சரர் ஆகிய வேலைகள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த கவர்ன்மென்ட் வேலை எதிர்பார்க்கப்பட்ட இடத்தில் இட்டு நிரப்பப்பட்டன. இவர்களெல்லாம் நல்ல வருமானமுள்ளவர்கள் என்பதாக பெண்ணைப் பெற்றவர்கள் கவனத்திற்கொள்ள ஆரம்பித்தார்கள். வக்கீல்கள் இந்த விஷயத்தில் அத்துணை பேணப்படவில்லை என்றே நினைக்கிறேன். ஏனென்றால் அவர்கள் மாமனாரிடமே சட்டம் பேசிவிடக்கூடும்.

ஆக, இந்த வெகு ஜாக்கிரதையான தேர்ந்தெடுப்பில் பின்னுள்ள வேலைகளெல்லாம் புறந்தள்ளப்படுகின்றன. வேண்டுமானால் குலத் தொழில் செய்கிற இளைஞர்களை குலத்தொழில் செய்கின்ற மாமனார்கள் தொழில் விருத்தி நிமித்தம் ஏற்றுக்கொண்டு வந்தார்கள் என்பது தொன்று தொட்டு இருந்து வருவதே என்பதனால் அதனை விட்டுத் தள்ளுங்கள்.

இப்படி ஒரு நிலைப்பாடு எழுவதற்கு முன்னும் ஒரு காலம் இருந்தது. அப்போது மணமகனின் தகுதி கவனிக்கப்படவில்லை, அவனது தகப்பனார் மற்றும் மூதாதையரின் அந்தஸ்தே பெண்ணைப் பெற்றவர்களால் கண்காணிக்கப்பட்டது. இன்னாருடைய பேரன்; இன்னாருடைய மகன்; இப்படியாப்பட்ட சொத்துடையவன்; இத்தனை பேரோடு பிறந்தவன்; உடன் பிறந்தவர்கள் இப்படியிப்படியெல்லாம் இருக்கிறார்கள்; அவர்களின் வம்சம் இப்படியிப்படியெல்லாம் பெருகிற்று என்பதெல்லாம் பெண்ணைக் கொடுப்பதற்கான உபாயமாக இருந்த காலம் அது. அதையும் விட்டுத்தள்ளுங்கள்.

நாம் வாழும் காலத்திற்கு வருவோம். இப்படி கொள்ளத் தக்கவை மற்றும் தகாதவை என்று இரண்டு தரப்பட்ட தொழில்கள் அல்லது வேலைகள் இந்திய தேசத்தில் விரிந்து பரந்து கிடக்கவே செய்கின்றன. ஐரோப்பிய நாடுகளைப் போல எல்லாத் தொழிலும் சமமானதே என்கிற நிலைப்பாடு வர்ணாசிரம தர்மத்தில் ஊறிய பாரதத் திருநாட்டில் இனியும்கூட எப்போது முகிழ்க்குமோ என்பதும்கூட ஐயப்பாடே.

சரி, என்னத்துக்கு இந்த முகாந்திரம் என்று கேட்கிற நேரம் வந்துவிட்டதா? வேறு எதற்கு? சொந்தமாக லட்சக்கணக்கில் முதலீடு செய்து லேத் வொர்க் ஷாப் வைத்திருப்பவன், டூரிஸ்ட் வாகனங்கள் வைத்துக்கொண்டு தொழில் செய்பவன், டைலரிங் கடை அல்லது ரெடிமேட் ஆடைக் கடை வைத்திருப்பவன், ஏஸி மற்றும் ரெஃப்ரிஜிரேட்டர் பழுது பார்ப்பவன், டிஃபார்ம் முடித்து மெடிக்கல் ஷாப் வைத்திருப்பவன், புத்தகங்களைப் பதிப்பிப்பவன் என்று பல்லாயிரம் தொழில்கள் மற்றும் வேலைகள் கல்யாணச் சந்தையில் பின்தள்ளப்பட்டே வருகின்றன. இவர்களுக்கு சமுதாய அந்தஸ்து மற்றும் கல்வி அந்தஸ்து ஆகியவற்றில் இரண்டாந்தர மணமகள்களே வேண்டா விருப்பாக கட்டிவைக்கப்படுகிறார்கள் என்பதோடு காலமெல்லாம் குத்திக்காட்டவும் படுகிறார்கள்.

இவர்களுக்கே இதுதான் நிலைமை என்றால், சமுதாயத்தால் மிகுந்த ஒழுக்கக்கேடு நிறைந்த தொழில் என்பதாகக் கருதப்படும் சினிமாத் தொழிலில் இயங்கும் இளைஞர்களின் நிலைமையை நினைத்துப் பாருங்கள்! (எப்புடீ? சுற்றி வளைத்தாலும் சப்ஜக்ட்டுக்கு வருவதில் என்னைவிட சமர்த்தன் யாராவது இருந்தால் நீங்களே சொல்லுங்கள்!)

எமது சினிமாவில் இருக்கும் பல்வேறு இளைஞர்கள் தம் இளமையை இவ்விதமாகவே தொலைத்து வந்திருக்கிறார்கள். சினிமாவில் வேலை பார்த்துவிட்டு அது தேவையில்லை என்று சொந்தத் தொழில் அல்லது ஏதாவது வேலைக்குத் திரும்ப நேர்ந்தாலும்கூட சமுதாயம் அவர்களை ஜெயிலுக்குப் போய்விட்டு வந்தவனைப் பார்க்கிற கோணத்திலேயே பார்க்கிறது. பொதுப்புத்தி சார்ந்து சமுதாயம் நினைக்கிறது, ‘ஒருமுறை ஜெயிலுக்குப் போய்விட்டு வந்தவன் மீண்டும் ஜெயிலுக்குப் போகவே செய்வான்!’ ஏனென்றால் அவனது முந்தைய குற்றப் பின்னணி அவனைப் பின்தொடரும்; போலீஸ்காரர்கள் அவனைக் கண்காணித்தவாறே இருப்பார்கள்; அந்த பிராந்தியத்தில் எந்தக் குற்றம் நிகழ்ந்தாலும் இவனும் விசாரிக்கப்படுவான் இந்தச் செயல்பாடுகள் அவனை மீண்டும் ஜெயிலுக்குள் செலுத்தவே முனையும் என்பதனால் அவனுக்குப் பெண்ணைக் கொடுக்கக்கூடாது என்பது எத்தனை நியாயமானதோ, அதே அளவுக்கு நியாயமானதுதான் சினிமாத்துறைக்குப் போய்விட்டு வந்தவன் அல்லது இப்போதும் அதில் இருப்பவனுக்கு பெண்ணைக் கொடுக்க மாட்டேன் என்று சொல்வதும்!

இது பெண்ணைக் கொடுப்பது என்பதில் மாத்திரம் முடிந்து போகிற விஷயமல்ல, ஒரு பாங்க் லோன் வாங்கப்போனாலும் சரி, ஒரு விற்பனைப் பிரதிநிதி வேலைக்கு மனுப் போட்டாலும் சரி, பெரும் தடையாகவே அவனது சினிமா ஆர்வம் அவனை இம்சித்து வருகிறது. இதனாலேயே சினிமாத் துறை என்பது ஒரு இளைஞனை புலி வாலைப் பிடித்ததைப்போல வருத்தவே செய்கிறது.

உண்மையில் மற்றவர்கள் குற்றஞ்சாட்டுமளவுக்கு இந்தத் துறை அத்தனை மலிவானதா? உண்மையிலேயே ஒழுக்கக் கேடுகள் நிறைந்ததா? சம்பாத்திய நிலையின்மையை முன்வைப்பதா என்கிற கேள்விக்கெல்லாம் பதில் ஒன்றே ஒன்றுதான், ‘இது முழுக்கவும் உண்மையுமல்ல, முழுக்கவும் பொய்யுமல்ல!’

இந்த மாதிரி ஒழுக்கக் கேடு என்பது வேறு தொழில்களில் இல்லையா? டாக்டர்கள், என்ஜினியர்கள் எல்லோருமே ரொம்பவும் ஒழுக்கசீலர்கள்தானா? நைட் டூட்டிகள், கார்ப்பரேட் அலுவலகத்தின் நான் சர்வயலன்ஸ் அறைகள் ஆகிய பொழுதுகள் மற்றும் ஸ்தலங்களில் அவர்களின் ஒழுக்கங்கள் சரியாகத்தான் பேணப்படுகின்றனவா? கலாச்சார மாற்றத்தின் முன்னால் கற்புநெறி தப்பிப் பிழைத்துதான் இருக்கிறதா என்கிற கேள்விகளுக்கெல்லாம் உங்களுக்கே விடைகள் தெரியும்.

நீங்கள் இருக்குமிடத்தில் உள்ள அத்தனை சாத்தியங்களையும் நீங்கள் முகர்ந்து பார்த்துவிடுகிறீர்களா? அதெல்லாம் தனி மனிதர்களின் ஆசாபாசங்கள், ஒழுக்கநெறிகள் சார்ந்த பூர்வீக மனப்பதிவுகள், நோயுறுநிலைகள் குறித்த தெளிவுகள் என்று வித்தியாசப்படத்தானே செய்கின்றன!

முதற்கண் இந்தச் சமுதாயம் சினிமாவைப் பார்க்கிற பார்வை மாற வேண்டும் என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்! இதற்கு சினிமா என்பது கூத்தாடிகளின் வேலையல்ல என்கிற தெளிவே பிரதானமானது. சினிமா என்பது ஒரு தொழில் என்கிற போதத்தை அப்போதுதான் சமூகத்தால் எட்ட முடியும். அந்த போதமே அங்கீகாரத்தை முன்வைக்க முடியும்.

சினிமா இவ்வாறு வெறுக்கப்பட்டு வந்ததற்கான அடிப்படைக் காரணம் முந்தைய தலைமுறையில் படிப்பு வராதவர்கள் சென்னைக்கு ரயிலேறி சினிமாவில் சேர்கிறேன் என்று அடித்த கொட்டத்தால்தான்! பொதுவாகவே, கலைத்திறன் உள்ள மனத்திற்கு கணக்கு வராது என்பது விதி. இதற்கு சுஜாதா மாதிரி விலக்குகள் இருக்கலாம். ஆனால் கணக்கு வராதவர்கள் எல்லாம் தாங்கள் கலைத்திறன் உள்ளவர்கள் என்பதாக கருதிக்கொண்ட அவலமே இவ்விதமான தப்பிதமான எண்ணப் பதிவை முன்வைத்துத் தொலைத்தது.

அந்தக் காலத்தை விட்டுத் தள்ளுங்கள்! இப்போது அப்படியா? சினிமா என்பது கல்லூரியிலேயே போதிக்கப்படும் தொழிலாக விஸ்வரூபமெடுத்துவிட்ட காலம் இது! விஷுவல் கம்யூனிகேஷன் என்பது திரைப்படக் கல்லூரிக்கு வெளியேயும் திரைப்படக் கலையை போதிக்கக்கூடிய வாய்ப்பை கல்வித்துறைக்கு நல்கியிருக்கிறது. சினிமா மட்டுமல்லாமல் விளம்பரத் துறை முதலான பல்வேறு கதவுகளை இந்தப் படிப்பின் வாயில் திறக்கிறது.

படித்த இளைஞர்கள் சினிமாவுக்குள் நுழைகிறார்கள். சினிமா என்கிற மகாவிருக்ஷத்தில் தங்கள் கிளை எது என்பதிலும் அவர்கள் தீர்மானமாக இருக்கிறார்கள். முன்னைப்போல டைரக்டராகப்போகிறேன் என்கிற ஒற்றைக் கனவோடு சினிமாவுக்குள் நுழைகிற போக்கு இப்போது முற்றிலும் மாறிவிட்டது. சினிமா என்பது எண்ணற்ற வேலைவாய்ப்புகளின் சாத்தியங்களை உள்ளடக்கியது என்கிற தெளிவு இளைஞர்களின் மத்தியில் இப்போது எழுந்துவிட்டது.

தொழில்நுட்ப வளர்ச்சியைத் தன் இரு கைகளாலும் தழுவிக்கொண்ட துறைகளில் மிக முக்கியத்துவம் பெறுவது சினிமா என்கிற நிலைப்பாடு மிகவும் ஆரோக்கியமானது. இது படித்த இளைஞர்களின் சேவையைப் பெருமளவில் கோரவே செய்கிறது. இதனால் முன்னைப்போல திருட்டு ரயிலேறி சினிமாவுக்கு வருகிற அவசியம் ஏதும் இல்லாத நிலையே இப்போது காண்பது. ஒரு வாரம் முன்பாகவே ரிசர்வ் செய்து ஏஸி கோச்சில் சென்னைக்கு இளைஞர்கள் வரக்கூடிய காலமிது.

மற்ற சாத்தியங்கள் கிடக்கட்டும், உதவி இயக்குனர் என்கிற வேலையையே எடுத்துக்கொள்வோம், இந்த வேலை எவ்விதமான சம்பாத்திய சாத்தியங்களை உள்ளடக்கியது என்கிற கேள்வி நியாயமானதே! உண்மையில் இன்றைய பொழுதில் திறமையுள்ள ஒரு உதவி இயக்குனர் சாதாரணமாக வருடத்திற்கு குறைந்த பட்சம் ஒன்றரை லட்சம் சம்பாதிக்கக்கூடிய நிலைப்பாடு உண்டு என்பதே உண்மை. இன்றைய காலகட்டத்தில் கடைசி உதவி இயக்குனர் என்பவருக்கே ஆறு மாதத்திற்கு நாற்பதாயிரம் கொடுக்கப்படவேண்டும் என்பதே இயக்குனர் சங்கத்தின் முன்வைப்பு! இது சரிவரக் கிடைக்கிறதா இல்லையா என்பதை சங்கம் சரிவரக் கண்காணிக்கிறதா என்பதே கேள்வி என்றபோதும், இந்தத் துவக்கம் நல்ல எதிர்காலத்தையே முன்வைக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது.

அதே உதவி இயக்குனர் ஒரு வெற்றிகரமான இயக்குனராக மாறும்போது மிகக் குறுகிய காலத்தில் அவர் சம்பாதிக்க முடிகிற தொகை எவ்வளவு என்று பார்த்தால், அது பல லட்சங்கள் செலவு செய்து ஸாஃப்ட்வேர் இன்ஜினியரான ஒருவர் ஆயுட்காலத்தில் சம்பாதிக்க முடிகிற தொகையை விடவும் பன்மடங்கு உயர்ந்தது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. அதை ஜாக்பாட் என்று நீங்கள் வேண்டுமானால் நினைக்கலாம், ஆனால் அதைக் கருத்தில் கொள்ளாமல் போவது எவ்விதத்தில் நியாயமானது என்பதே எனது கேள்வி!

சினிமாவின் போக்கில் இத்தனை மாற்றங்கள் இருந்தாலும் சமூகத்தின் போக்கில் ஏதும் மாற்றமிருக்கிறதா என்பதே எனது கேள்வி! சமூகம் சினிமாவை இன்னும் மாற்றாந்தாய்க் கண்ணோட்டத்தோடே பார்க்கிறது. ஒழுக்கக்குலைவு, நிரந்தரமில்லாப் பணிச்சூழல் ஆகிய காரணங்களை அது முன்வைக்கவே செய்கிறது.

அறை எண் 305இல் கடவுள் படத்தில் சிம்பு தேவன் நையாண்டி செய்ததைப்போல விரல்களை இழந்துவிட்டால் அப்புறம் ஒரு ஸாப்ட்வேர் இன்ஜினியர் என்ன செய்ய முடியும் என்கிற கேள்வியை இங்கே தாராளமாக முன்வைக்கலாம். இந்தக் கட்டுரை எழுதப்படும் காலம் ஐடி துறையில் ரெஸிஷன் உள்ள காலம் என்பதால் அந்தச் சகோதரர்களை மேலும் புண்படுத்துவதல்ல என் நோக்கம் என்பதனால் இதோடு நிறுத்திக்கொள்ளலாம்.

ஒரு சினிமா வெளிவருகிறது என்று சொன்னால் பால்குடம், பதினைந்தடிப் பூமாலை, தாரை தப்பட்டை என்று எதிர்கொள்ளத் தயாராகிறது சமூகத்தின் ஒரு பிரிவு. குடும்பத்தோடு அதைப் போய்ப்பார்ப்பதற்கு குடும்ப பட்ஜெட்டில் நிதி ஒதுக்குகிறது வேறொரு பிரிவு, போய்ப் பார்க்கிறதோ இல்லையோ, பத்திரிகைகள் மற்றும் மீடியாக்களின் வாயிலாக அந்தப் படத்தின் ரிஸல்ட்டை அறிந்து அதைத் தமக்குள் விவாதித்துப் பொழுதைக் கழிக்கிறது இன்னுமொரு பிரிவு, தான் பெற்ற உத்தியோக உயர்வு, வருமான உயர்வு, தனது பிறந்தநாள், கல்யாண நாள் ஆகிறவற்றுக்காக சக நண்பர்கள் அல்லது உத்தியோகஸ்தர்களை அந்தச் சினிமாவுக்கு அழைத்துப்போய் கடன் தீர்க்கிறது மற்றுமொரு பிரிவு.

இப்படி சினிமாவைத் தங்கள் வீட்டு விசேஷம் போலக் கொண்டாடுகிற இந்தச் சமூக மனம், சினிமாவில் கொடிகட்டிப் பறக்கிற ஆட்கள் தவிர்த்து மற்றவர்களெல்லாம் தரங்கெட்டவர்கள் என்பதைப்போன்ற நிலைப்பாட்டை எடுத்திருப்பது எதனால்?

சமூகம், பணம் என்கிற ஒரே சாளரத்தின் வாயிலாகவே உலகத்தைப் பார்க்கிற காலம் இது. சினிமாவில் சம்பாதித்து அந்தப் பணத்தை சரிவர வேறு இடங்களில் முதலீடு செய்து வைத்திருக்கும் ஒருவரை சமுதாயம் விரும்பவே செய்கிறது. எது எப்படியானாலும் அவன் பணக்காரன் என்பதனால் அவனை ஏற்றுக்கொள்வதில் எவ்விதமான தயக்கமும் வேண்டியதில்லை என்பதே அதன் வாதமாயிருக்கக்கூடும். டாக்டர்களும் இன்ஜினியர்களும் இந்த அடிப்படையில்தான் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள் என்பதே அடிப்படை உண்மை!

ஆனால் சினிமா என்கிற தொழிலில் கிட்டத்தட்ட நிரந்தர வருமானமுள்ள எத்தனையோ பேர்கள் உண்டு என்கிற போதம் சமூகம் முழுக்கப் பரவலாக இன்னும் சில காலம் பிடிக்கக்கூடும். அதற்கு இந்தக் கட்டுரை ஒரு திறவுகோலாக இருந்தால் நான் விரும்பும் சினிமாவுக்கு என்னாலான கொடையாக அது இருந்துவிட்டுப் போகட்டும்!

August 04, 2009

சினிமா எனும் சில்லரை வியாபாரம்!


சினிமா என்பதொரு தொழிலாகவும் இருப்பதனால் அதில் வியாபார நுணுக்கங்களைப் புகுத்துவதும் அவசியமாகவே ஆகிறது. ஒரு சினிமா வெற்றி பெறுவதற்கு விளம்பரங்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதை அலிபாபா திரைப்படத்தைக் குறிப்பிட்டு ஏற்கனவே எழுதியிருந்தேன். ஏனென்றால் இந்தக் காலத்தில் விளம்பரம் இல்லாமல் கன்ஸ்யூம் செய்யப்படுவது தாய்ப்பால் மட்டும்தான்!


ஒருகாலத்தில் மாட்டுவண்டிகளில் அல்லது குதிரை வண்டிகளில் மைக்செட் கட்டி கிராமம் கிராமமாக சினிமாவுக்கு விளம்பரம் செய்துகொண்டு போனார்கள். துண்டுப் பிரசுரங்களைப் பொறுக்குவதற்கென்றே குழந்தைகள் வண்டியின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தன. இந்தக் காட்சி பெரும்பாலும் இப்போது அழிந்தேவிட்டது. அதனிடத்தில் போஸ்டர்கள் பெருமிதத்தோடு வந்தமர்ந்துகொண்டன. இதனால் கழுதைகளுக்கும் மாடுகளுக்கும் பூதாகரமாக்கப்பட்ட முலைகள் உணவாயின. இப்போது வந்துவிட்ட ப்ளெக்ஸ் டெக்னாலஜியோ அவற்றைப் பட்டினி போடுவதாக இருக்கிறது. கடவுளுக்கு பயந்த ஒருவன் போகிற பாதையில் உள்ள கோவில்களுக்கெல்லாம் சலாம் போட்டுக்கொண்டு போவதுபோல சினிமா பேனர்களுக்கு சலாம் போடுகிற ஒருவனை ஒரு டிடீயெச் டீவி விளம்பரத்துக்காகப் பயன்படுத்தியது. அந்த அளவுக்கு திரும்பிய பக்கமெல்லாம் பேனர்கள் மயம்தான்.

இது இல்லாமல் பத்திரிகைகள் வாயிலாக செய்யப்படும் மறைமுக விளம்பரங்களோ அதைவிடவும் முக்கியமானவை. ஒரு படத்திற்கு டைரக்டர் அவசியமோ இல்லையோ, பீயாரோ அவசியம் என்பதையே இவை முன்னிறுத்துகின்றன. சரியான ஆள் கையில்தான் அந்த வேலையைக் கொடுக்கவேண்டும். எந்த பத்திரிகைக்கு எந்த ஸ்டில்லை கொடுக்கலாம், அதை எப்போது கொடுக்கலாம்; ஒவ்வொரு பத்திரிகையிலும் யாரை கவனித்தால் படமும் செய்தியும் வருகிற சைஸில் வரும்? படத்தைப் பற்றி கவர்ஸ்டோரிகள் வரவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? டைரக்டரின் பேட்டி வரவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? என்று எண்ணற்ற கேள்விகளுக்கு பதில் தெரிந்த ஒருவர்தான் அந்த வேலையைச் சரியாக செய்ய முடியும்.

படங்களின் ஸ்டில்கள் பத்திரிகைகளில் வெளிவருவதால் பத்திரிகை விற்கிறதா அல்லது படம் ஓடுகிறதா என்கிற கேள்வி கோழி-முட்டை கதை மாதிரி பதிலே இல்லாதது. இதன் அடுத்த கட்டமாகத்தான் படத்தின் ஸ்டில்கள் என்பதற்கு முந்தியே, பூஜை போடும்போதே அல்லது அதற்கு முன்பாகவே ஸ்டில் செஷன்கள் நடந்தேறுகின்றன. படத்தில் சம்பந்தப்பட்ட நாயகன் மற்றும் நாயகி ஆகியோரை ஒருநாள் முன்கூட்டியே கால்ஷீட் பெற்று வித விதமான காஸ்ட்யூம்களில் சுட்டுத் தள்ளுவது என்பதாக ஆரம்பித்த இந்த ஸ்டில் செஷன்கள் இப்போது முக்கிய ஆர்ட்டிஸ்டுகளையும்கூட சேர்த்துக்கொண்டுவிட்டது. இதனால் படம் எடுக்கப்படுகிறதோ இல்லையோ, பப்ளிசிடி உறுதியாகிவிடுகிறது.

ஒரு பத்திரிகையில் ஒரு பக்கம் விளம்பரம் தரவேண்டுமானால் சில லட்சங்கள் செலவாகும், அதே பத்திரிகையில் படத்தைப் பற்றிய செய்தி வரவேண்டுமானால் சில ஆயிரங்கள் செலவு செய்தால் போதும் என்கிற நிலைப்பாடு எப்போதுமே சிறப்பானதுதானே! சமீபத்தில் தினமணிக் கதிரில் மூன்று பக்கங்கள் சினிமா செய்திகளைப் பார்த்து ஆச்சர்யமாக இருந்தது. சினிமா என்கிற பூதம் அவ்வளவு பெரியது.

பரஸ்பரம் கொடுத்து வாங்கிக்கொள்கிற இந்த யுக்தி பிழையானதல்ல. இரண்டு பக்கமும் பிழைப்பு ஓடத்தானே வேண்டியிருக்கிறது. அதிலும் திடீர் திடீரென்று சுவரொட்டி ஒட்டுவதற்குத் தடை, ஃப்ளெக்ஸ் பேனர் வைப்பதற்குத் தடை என்று அரசாங்கம் அதன் இஷ்டப்படி சில ரகளைகள் செய்வதும் பிற்பாடு தளர்த்துவதுமாக விளையாடிக்கொண்டிருக்கையில் கிரகண காலங்களில் வெளிவரும் படங்கள் வம்பில் மாட்டிக்கொள்வது தவிர்க்க இயலாததுதானே, இந்த நேரத்தில் அவர்களுக்குக் கை கொடுப்பது பத்திரிகை வாயிலான செய்திகளைத் தவிர வேறென்ன!

அடுத்த கட்ட விளம்பர யுக்தி டீவியோடு தொடர்புள்ளது. டீவிக்கு காட்சிகளைக் கொடுப்பது என்பதில் தொடங்கி, டீவியில் விளம்பரம் கொடுப்பது என்று விரிவடைந்து, இப்போது படம் வெளி வந்த முதல் வாரமே சம்பந்தப்பட்ட டெக்னீஷியன்கள் மற்றும் நடிக நடிகைகள் கூட்டாக பேட்டி கொடுப்பது, படத்தைப் பற்றி உரையாடுவது என்பதாக வந்து நிற்கிறது. இதனால் கதை தெரியாமல் படம் பார்க்க விரும்புபவர்கள், முதல் நாள் முதல் ஷோவிலேயே க்யூவில் நின்றோ, ஃபோனில் புக் செய்தோ, திருட்டு டிவிடி வாங்கியோ படத்தைப் பார்த்துவிடுவதே சாலச் சிறந்தது என்கிற நிலைப்பாடே இன்று எழுந்திருப்பது.

அப்படிப் பார்க்கவில்லையானால் சம்பந்தப்பட்ட நடிகையை டீவியில் பார்த்ததும் சித்தம் இழந்து வாயைப் பிளந்துகொண்டு பார்க்க ஆரம்பிக்கிற வகையில் அந்த நடிகையின் வாய் வாயிலாகவே கடைசிக் காட்சியில் நான் செத்துப்போகும்போது என்கிற வார்த்தைகளைக் கேட்டு வாயடைத்துப் போவது தவிர்க்க இயலாததாகும். இப்படியாக படத்தின் முக்கிய திருப்பங்கள், கதை முதலான எதுவும் ரகசியமில்லாமல் போகும்.

மணிரத்னம், ஷங்கர், என்று ஏதோ ஒரு சில டைரக்டர்கள்தான் இப்போதும் தங்கள் பாப்புலாரிடி கொடுக்கிற தைரியத்தில் இவற்றை ரகசியமாக வைத்துக்கொள்ள சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த பத்திரிகையாளர் ஒருவர், சிவாஜி வெளிவருவதற்கு முன் என்னிடம் ஒரு செய்தியை சொன்னார். இந்தப் படத்தில் ஒரு பாடலை ஸ்டன்ட் காட்சியாகப் படமாக்குகிறார்கள் என்று. இந்த செய்தியை அவர் பத்திரிகையில் எழுதியபோது ஷங்கரே ஆச்சர்யப்பட்டார் என்பதும் பின்னால் நிகழ்ந்த சம்பவம். அவர் எப்படி இதை அறிந்தார் என்று கேட்டால், அவர் ரொம்ப 'கூலாக' சொன்னார், ஏவியெம்மில் செட் போட்டு உள்ளே யாரையும் விடாமல் ரகசியமாக ஷூட் செய்துகொண்டிருந்தார்கள். உள்ளேயிருந்து பாட்டு சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. அதனால் பாடல்காட்சி பதிவாவது தெரிந்தது. ஆனால் ஸ்டன்ட் நடிகர்கள் வெளியே வந்து தம்மடித்துக்கொண்டிருந்தார்கள். இந்த இரண்டையும் ஒட்டுவது என்ன சிரமமா?

இப்படியெல்லாம் ரகசியமாக ஷூட் செய்தாலும் இந்தச் செய்திக் கசிவுகளை விரும்பாத சினிமாக்காரர் ஒருவர் இருக்க முடியுமா என்ன? மணிரத்னம் ஊட்டி மலைக் காட்டில் ஆதிவாசிகளின் குடியிருப்பை அமைத்திருக்கிறார். ராவணா படத்துக்காக பலநாட்கள் அங்கும் சாலக்குடியிலும் ஷூட்டிங் நடக்கிறது என்று சொன்னால், ராமாயணத்தில் வரும் போர்க்காட்சிகளுக்கு பதிலாக வனத்தில் நீண்ட சேஸிங் காட்சிகள் இருக்கப் போகின்றன என்று அனுமானிப்பது பிழையாகப்போவதில்லை. ஆங்கிலத்தில் வெளிவந்த எத்தனையோ வன விரட்டல் காட்சிகள் நம் மனத்தின் மேல்மட்டத்தில் மிதக்க ஆரம்பிப்பதிலும் வியப்பில்லை.

வீட்டில் உலை கொதிக்கிறதோ - ரைஸ்குக்கர் விசிலடிக்கிறதோ – இல்லையோ பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பாதவர்கள் யாரும் உண்டா? அதே ஆவல்தானே சினிமாவில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதிலும் இருந்து தொலைக்கிறது. இந்த ஆர்வத்துக்கான தீனி என்கிற பெயரில் மறைமுகமான இவ்விதமான கிசுகிசுக்களும், செய்திகளும் எல்லோருக்கும் ஏதாவதொரு பலனை அளிப்பதாக இருக்கத்தானே செய்கின்றன!

சரி, படத்துக்கு பூஜை போட்டாயிற்று, போஸ்டர் ஒட்டியாயிற்று, விளம்பரங்கள் கொடுத்தாயிற்று, பத்திரிகைகளுக்கு செய்திகள் கசியவிட்டாயிற்று. ஸ்டில்கள் வழங்கப்பட்டாயிற்று. படம் ரிலீஸ் ஆகப்போகிறது. படம் வேறு சுமாராகத்தான் வந்திருக்கிறது. ஓடவேண்டுமானால் இவை மாத்திரம் போதாது. என்ன செய்யலாம்?

இப்படியொரு குழப்பம் வந்தபோது சமீபத்தில் நம்மாட்கள் ஒரு மிகப்பெரிய லூட்டியை அடித்தார்கள். கலா மாஸ்ட்டர் தயவால் கெமிஸ்டரி என்கிற வார்த்தை இந்த நேரத்தில்தான் டீவியில் வாயிலாக பிராபல்யமடைந்திருக்கிறது. இதை ஏன் நாம் உபயோகித்துக்கொள்ளக்கூடாது? இந்த யோசனையின் பலன்தான் இப்போது நாம் படிக்கும் ஒருசில செய்திகள்.

நகுலுக்கும் சுனைனாவுக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகிறது. அடுத்த படத்திலும் அவர்களே ஜோடியாக நடிப்பதற்கான காரணம் அவர்களுக்டையே பூத்துள்ள காதல்தான்! ஸ்நேகாவுக்கும் ப்ரசன்னாவுக்கும் கெமிஸ்டரி ஒர்க் அவுட் ஆகிவிட்டது. அடுத்தது கல்யாணம்தான்!

இந்த மாதிரி செய்திகள் முன்பெல்லாம் பத்திரிகையாளர்களால்தான் புனையப்பட்டு வந்தன. ஆனால் இன்றைக்கோ சம்பந்தப்பட்ட படத்தின் டீமே இதை தீர்மானித்துவிடுகிறது. படம் நன்றாக ஓட இதுவொரு விளம்பர யுக்தியாகக் கையாளப்படுகிறது. எல்லோரும் சேர்ந்தே செய்கிற இந்தக் கூட்டுக் களவாணித்தனத்துக்கு பத்திரிகைகளும் துணைபோவதே இப்போது நடப்பது. அதாவது, அதைப் படிப்பவர்களைத் தவிர மற்ற அனைவருக்குமே தெரியும், அது பொய் என்பது!

நம்ம விசிலடிச்சான் குஞ்சுகள், அடடா ஸ்நேகா கல்யாணம் செய்துகொண்டால் அப்புறம் சினிமாவில் நடிக்க வாய்ப்பில்லையே, இந்தப் படத்தைப் பார்த்துத் தொலைத்துவிடுவதுதான் சரியாக இருக்கும்போல இருக்கிறதே என்று அஞ்சி அஞ்சி குறிப்பிட்ட சினிமாவைப் போய் பார்த்துவிடுவார்கள் என்பதே அவர்கள் போடும் கணக்கு!

காதல் என்பதும் கல்யாணம் என்பதும் அவரவர் சொந்த விவகாரங்கள் என்பதை யாரும் மறுக்க இயலாது. ஆனால் பிரபலங்களின் அசைவுகள் அனைத்துமே கண்காணிக்கப்படுவனவாக இருப்பதனால் அவர்கள் எங்கே போகிறார்கள், யாரோடு உறங்குகிறார்கள், யாருடைய வலையில் விழுகிறார்கள், யாரை வலையில் வீழ்த்துகிறார்கள் என்பன யாவுமே செய்திகளாகிவிடுகின்றன.

இப்படியொரு செய்தியுருவாக்கத்தை சாதிப்பதன் வாயிலாக பத்திரிகைகள் சம்பாதிக்க முடியுமானால் அதே உத்தியை உபயோகித்து படமுதலாளிகள் ஏன் சம்பாதிக்கக்கூடாது என்பதே இப்போது எழுந்திருக்கும் கேள்வி.

எம்ஜியார் கத்தி வைத்துக்கொள்ளச் சொன்னதுபோல பரபரப்பான செய்தியொன்று எப்போதும் தேவைப்படுவதாகவே இருந்து வருகிறது. அதை யார் எதற்காக உற்பத்தி செய்கிறார்கள் என்பதைப்பற்றியெல்லாம் யாருக்கு அக்கறை? சம்பந்தப்பட்ட நடிகரும் நடிகையும் அல்லது இயக்குனரும் நடிகையும் உள்ளூர புன்னகைத்துக்கொள்வார்கள். நடிகர் அல்லது இயக்குனர் வீட்டில் பார்க்கும் பணக்காரப் பெண் ஒருத்தியை மணந்துகொண்டு வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிடுவார், நடிகை மார்க்கெட் சரியும் நேரத்தில் வலையில் விழும் என்னாரையை மணந்துகொண்டு தேசத்தைப் பார்த்துப் போய்விடுவார். அதையெல்லாம் எப்போதோ மறந்துவிட்டு அப்போதுதான் புதிதாக கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆன புதிய நடிகர்களைப் பற்றி படித்து முதுகைச் சொறிந்துகொண்டிருப்பார்கள் ரசிகமஹாஜனங்கள்.

சினிமா ஒரு சில்லரை வியாபாரம் என்று சொல்வது இதனால்தான். ஒரு படம் ஜெயிக்க வேண்டுமானால் எந்தவிதமான சில்லரைத்தனமான காரியத்தையும் செய்யத் துணியவேண்டும் என்பதே பாலபாடமாக இருக்கும்போது இந்த வாக்கியம் பொருந்தவே செய்கிறது.

சரி விளம்பர யுக்தி என்பது இவ்வளவு தூரம் வந்துவிட்டது. அடுத்து வேறென்னவெல்லால் செய்யலாம்?

சம்பந்தப்பட்ட நடிகரையும் நடிகையையும் உல்லாசமாக இருக்க வைத்து அந்தப் பொழுதுகளை ரகசியமாகப் படம் பிடித்து இன்டெர்நெட்டில் போடலாம். அது நாங்கள் இல்லை என்று மிகச் சாதாரணமாக அவர்கள் மறுத்துவிட்டுப் போய்விடுவார்கள் என்பதனால் ஒரு வம்பும் வரப்போவதில்லை.

அல்லது, ரகசியம்கூட வேண்டாம், கான்ட்ராக்டில் விளம்பரம் வரைக்கும் எழுதும்போது இதையும் எழுதி வாங்கிக்கொள்வது உசிதமாக இருக்கும். ரசிகர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் இரட்டை லாபமாகத்தானே போகும்!

சம்பந்தப்பட்ட நடிகர் கல்யாணமானவராக இருந்தால் அவரது மனைவியையும் ஒரு ஒப்பந்தத்துக்குள் கொண்டு வரலாம். அதாவது இவ்விதமாக ஒரு வதந்தி பரப்பப்படும். அதைப் பார்த்து மனைவியானவர் நடிகருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப வேண்டும். படம் ஓட ஆரம்பித்து வெற்றி பெற்றுவிடும் என்கிற நம்பிக்கை வரும்போது சமாதானமாகிவிட்டதாக கூட்டாக காஃபி வித் ஹாசனில் நடிகை சகிதம் காட்சி தந்துவிடவேண்டும். இதைவிட வேறென்ன பப்ளிசிடி வேண்டும்?

தன் மனைவியை மீடியாக்களுக்குக் காட்ட விரும்பாதவர்கள், மாமனாரின் கையில் ஒரு அரிவாளைத் தரலாம். கொஞ்சம் படித்தவராக இருந்தால் துப்பாக்கியைக்கூட கொடுக்கலாம். ஏனென்றால் மகள் விதவையாவதை எந்தத் தகப்பனும் விரும்புவதேயில்லை!

இந்த மாதிரி உங்களுக்குத் தோன்றும் ஐடியாக்களை ஒரு போஸ்ட் கார்டில் எழுதி நீங்களே கிழித்துப் போட்டுவிடுங்கள், அவர்களின் கண்களில் கிண்களில் தென்பட்டுத் தொலைக்கப்போகிறது!