October 03, 2007

திரைக்கதை இல்லாத சினிமா

திரைக்கதையைப் பற்றிய தெளிவான கட்டுரைகள் தமிழில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. கடந்த அம்ருதா இதழில் (செப்டம்பர் 2007) வெளிவந்த எனது கட்டுரை ஓரளவுக்காவது ஆறுதல் தருகிறதா என்று பாருங்கள்...

திரைக்கதை இல்லாத சினிமா என்பது ஆணுறை அல்லது பெண்ணுறை இல்லாமல் பாலியல் தொழிலாளியிடம் போவதைப் போல துணிகரமானது. உலகத்திலேயே முற்றிலும் அபத்தமானதொரு சினிமாவுக்குக்கூட திரைக்கதை என்பதாக ஒன்று இருந்துதான் தீர வேண்டும். என்ன, அது ஒரு கேவலமான திரைக்கதையாக இருக்கும். ஏனென்றால் குறைந்தபட்சம் எடிட்டிங் டேபிளுக்காவது திரைக்கதை என்பதாக ஒன்று சமர்ப்பிக்கப்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் கடந்து எடிட்டர் பார்த்து எதைச் செய்து தருகிறாரோ அதுவே சினிமா என்று கையைக்கட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்த வகையில் தமிழ் சினிமா, உலக சாதனையொன்றையே படைத்துவிட்டது என்பதுதான் முதல் விசேஷம். எடிட்டிங் என்பது வேறு. திரைக்கதை என்பது வேறு என்பதை நமது கலைஞர்கள் புரிந்துகொள்வதற்கே வெகுகாலம் பிடித்தது.


மேற்கண்ட கூற்றை உங்களுக்கு விளங்கக் கூறவேண்டுமானால் அது ஒருவேளை இவ்வாறிருக்கலாம்...


இந்தியாவின் பிற மாநிலத்தவரைப்போலவே தமிழனின் மனமும் புராணங்களிலிருந்தே புறப்பட்டு வந்திருக்கிறது. அதே வகையில் புதிதாக உருவெடுத்த சினிமா எனும் உச்ச கலையும் தொடக்கத்தில் புராணங்களையே திரையில் வார்த்தெடுக்க முயன்று வந்தது. இந்த அடிப்படை மனோபாவம், நீதியொழுக்கம், அறநெறி, நாயக அபிமானம் ஆகியவற்றையே அடியொற்றி எழுந்தது என்பதனால் ஏன் எதற்கு என்பதாகவெல்லாம் யோசிக்காமல் தமிழ் சினிமா தனக்கென்று ஒரு பாதையை (பிற இந்திய மாநிலங்களைப் போலவே) தீர்மானித்துக்கொண்டு நடைபோடத் தொடங்கிற்று.


செய்யுளுக்கு வெளியே உரைநடை என்பதாக ஒன்று தமிழுக்கு அறிமுகமானது. வெளி தேச மொழிகளிலிருந்துதான் என்கிற அடிப்படை பீடமொன்றில் சினிமா ஒரு சிற்பம் போல வந்து உட்கார்ந்து கொண்டது என்று சொல்லலாம். எல்லாம் முன்னால் போன கழுதை கதைதான். இந்த வகையில் சொந்தமாக எதையும் யோசிக்கக்கூட தேவையில்லாத நிலைப்பாட்டையே ஆரம்பகால சினிமா கர்த்தாக்கள் எடுத்திருந்தார்கள். உண்மையில் சினிமா எடுக்க சொந்தமாக யோசிக்க வேண்டும் என்பதைக்கூட அவர்கள் அறிந்திருக்கவேயில்லை. ஏனென்றால் சிறுகதைகள், நாவல்கள் என்பனவற்றைப் போலவே சினிமாவும் வேறு மொழியில் ஏற்கனவே சிந்திக்கப்பட்டும் சித்தரிக்கப்பட்டும் வந்திருக்கும் வகையில், அதை அப்படியே காப்பி அடித்தால் மட்டும் போதுமானது என்பதாகவே ஆரம்பகால நிலைப்பாடு இருந்து வந்திருந்தது.


இதற்கு ஓர் உதாரணம் சொல்லலாம். நடிகர் சிவாஜி கணேசன் வாழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் அவரைப் புகழ விரும்புபவர்கள் குறிப்பாக ஒரு வி்ஷயத்தை முன்னிலைப்படுத்துவார்கள். அவருக்குப் பிற்பாடு வந்த கமலஹாசன் போன்றவர்கள் அவரிடமிருந்துதான் தொழிலைக் கற்றார்கள் என்பதாகவும் (இதைக் கமலஹாசனே கூட சொல்லியிருக்கக்கூடும்) சிவாஜி ஒரு சுயம்பு என்பதாகவும் காணப்படும் அந்தக்கூற்று. அதாவது பாய்ஸ் கம்பெனியில் சிவாஜிகணேசனுக்குக் கிடைத்த டிரெய்னிங்தான் அவரைப் பக்குவப்படுதிற்று என்பதாகவும் அவர் தனக்கென்று ஒரு நடிப்பு பாணியை உருவாக்கிக்கொண்டார் என்பதாகவும் (அல்லது அவர் ஒரு பிறவிக் கலைஞர் என்பதாகவும்) சந்தர்ப்பம் கிடைக்கிறபோதெல்லாம் மேடையிலும் பேட்டிகளிலும் பெரும்பாலான சினிமாக்காரர்கள் பேசிக்கொண்டு அலைந்தார்கள். வாழ்வில் உயர நினைக்கும் ஒரு தமிழனும் உண்மையைப் பேசியதில்லை என்பதற்கு இதைக்காட்டிலும் வேறு உதாரணம் வேண்டியதில்லை. சிவாஜி கணேசன் எனும் நடிகரின் performance-ஸை நன்கு பார்த்து அனுபவித்தவர்கள் கொஞ்சநஞ்சமேனும் அந்தக் காலகட்டத்து ஆங்கிலப் படங்களைப் பார்த்திருந்தார்களேயானால் அவர்களின் மனசாட்சி உங்களுக்குச் சொல்வதற்கு நிறைய செய்திகளை வைத்திருக்கும் என்பதே உண்மை.


இவ்விதமாக திரைக்கதை அல்லது சினிமாவுக்கான அடிப்படைக் கதை ஆகியவை சொந்த மண்ணிலிருந்து உருவாகாமல் அப்போதிருந்த தேசங்களின் தூரங்களைத் துணைக்கொண்டு களவாடப்பட்டவையாக இருந்தன. அந்தக் காலத்துக் கதாநாயகர்கள் புஷ்கோட் அணிந்து அலைந்ததெல்லாம் அந்தப் படம் எந்தப் படத்தின் inspiration-ல் அமைந்ததோ அதை அடியொற்றி நடந்ததுதான்.


கதை மற்றும் நடிப்பு போன்ற வெளிப்படையான வி்ஷயங்களே இப்படி காப்பி அடிக்கப்பட்டுத்தான் நமக்குக் கிடைத்தன என்று சொன்னால் சினிமாவின் மிக நுட்பமான துறையான திரைக்கதை என்பது மட்டும் நம்மாட்களால் சொந்தமாகச் சித்தரிக்கப்பட்டு நமக்கு வழங்கப்பட்டது என்று சொல்வது எப்படி சரியான கூற்றாகும்?


இதற்கு அடுத்த நிலையில்தான் திரைக்கதை இல்லாத சினிமாவின் உதயம் ஆரம்பிக்கிறது. ஏனென்றால் இந்தக் காலகட்த்தில் பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே எனும் திரைக்கடம் 1970ல் வெளிவந்த Robert Bolt எழுதி David Lean இயக்கிய Ryan's Daughter எனும் ஆங்கிலப் படத்தின் பாத்திரங்களைக் காப்பியடித்து வெளியாகிறது. இந்தக் காப்பி யுகத்தின் கடைசிப் பகுததியாக அதைக் கொள்ளலாம். ஏனென்றால் அது நேட்டிவிட்டியில் பிசைந்த பணியாரம் என்பதனால் அது காப்பி என்று ரயான்ஸ் டாட்டரை அறிந்திராதவர்கள் தெரிந்துகொள்ள இயாலாத வகையில் திரையுலகினுக்குள் பெரும் புரட்சி ஒன்றை செய்து காட்டியது. ஸ்டுடியோவுக்குள்ளிருந்து சினிமா வெளிவந்தபோது தன் சொந்தக் கலாசாரத்தைக் கொண்டும் சமூக நிகழ்வுகளிலிருந்தும் சினிமாக் கதைகள் ஆக்க முடியும் என்கிற நிலைப்பாட்டை சினிமா முதல் முறையாகப் புரிந்துகொண்டது. இதற்குப் பின்னால்தான் அதுவரை திரைக்கதையாசிரியராக இருந்த மகேந்திரன் இயக்குனராக மாற சினிமா வழி விடுகிறது. இல்லையானால் தங்கப்பதக்கம் போன்ற அன்னிய சினிமாக்களின் வசனகர்த்தாவாகவே அவர் வாழ்ந்து முடிந்திருக்க நேர்ந்திருக்கும். ஓரளவு குறிப்பிடத்தக்க சினிமாக்களை அவரால் தர இயலாமலும் போயிருக்கும். மகேந்திரனைப் போன்ற திறமை வாய்ந்த திரைக்கதையாசிரியர்கள் பிறகு தோன்றாமற் போனதே மகேந்திரன் அடுத்த கட்டத்தை எட்டாமல் நின்று போனதற்கும் காரணமாக அமைகிறது. அவருக்குப் பிறகு முக்கியமானவராகக் கருதப்படும் பாக்கியராஜின் திரைக்கதை உத்தி மகேந்திரனின் பாணியிலிருந்து முற்றிலும் வேறானது என்பதனால் அவர் மகேந்திரனுக்குப் போட்டியாக வந்தவர் இல்லை என்பதே மகேந்திரனின் தேக்கநிலைக்குக் காரணமாகிறது. போட்டி இல்லாதபோது படைப்பாளி தேங்கிப்போவது தவிர்க்க இயலாதது.


அதோடு நல்ல திரைக்கதையாசிரியர்கள் இயக்குனர்களாக மாறிவிடுகிறபோது திரைக்கதை தனி மனிதனின் சொத்தாகிவிடுகிறது. அதன்பிறகு அவர்கள் வேறு இயக்குனர்களுக்கு திரைக்கதை அமைக்க முன்வருவதில்லை. ஆனால் மற்றவர்கள் இதைப் புரிந்துகொண்ட விதம் வேறு மாதிரியானது. நல்ல திரைக்கதை எழுதக்கூடிய ஒருவர் இயக்குனராகும்போது அவர் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' என்று டைட்டில் கார்டு போட்டுக்கொள்வதைப் பார்த்துக்கூட இந்த அபத்தம் நிகழ்ந்திருக்கலாம். இப்படித்தான் ஒரு டைரக்டர் கதாசிரியராகவும் மாற வேண்டிய கட்டாயச் சூழல் தமிழில் வந்து சேர்ந்தது. இந்தக் கட்டாயத்தின் பேரில்தான் திரைக்கதை விவாதம் என்பதாக ஒன்று தோன்றுவது இன்றியமையாததாக அமைந்தது. ஏனென்றால் இயக்குனர் என்கிற வேலை, கதாசிரியர் என்கிற வேலை, திரைக்கதாசிரியர் என்கிற வேலை ஆகயி மூன்றும் வேறு வேறு தளத்திற்குட்பட்டவை. திரைப்பட இயக்கம் என்பது பழக்கத்தில் கற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று. இதை யார் வேண்டுமானாலும் பயிலலாம். ஆனால் கதாசிரியன் என்கிற அமைப்பு கலையின் ஊற்றுள்ள மனத்திலிருந்து புறப்படுவது. திரைக்கதை என்பது எதற்குப் பிறகு எது என்பதைத் தீர்மானிக்கும் டெக்னிகல் அமைப்புதான் என்ற போதும் இதற்கு நுணுக்கமான டேபிள் வொர்க் தேவைப்படுகிறது. திரைக்கதை குறித்த பரந்த ஞானம் பெற்ற ஒருவரோ அல்லது திரைக்கலையையும் அறிந்தவோர் தேர்ந்த நாவலிஸ்ட்டோ மிகச் சுலபமாகச் செய்து காட்டக்கூடிய வித்தை அது. (ஏனென்றால் ஒவ்வொரு நாவலும் தனக்குள்ளே பல திரைக்கதைகளை நிகழ்த்திக் கொண்டிருப்பதே!)


ஆனால் கதை விவாதம் என்பதாக நம் சூழலில் தோன்றிய ஒன்று இயலாமையிலிருந்து தோன்றியது என்பதனாலும், இயக்குனர் என்பவர்தான் முதல்வர் என்கிற காரணத்தாலும் கெட்டுக் குட்டிச் சுவராக அடிக்கக்கூடிய வேலையாகப் போய்விட்டது. இயக்குனர் கதை வி்ஷயத்தில் weak-ஆக இருக்கும்போது கதை விவாதத்திற்கு பிறர் வந்து உட்கார நேர்கிறது. அப்படி வந்து உட்காருபவர்கள் யார் யார் என்று பார்த்தால் அவர்களும் இயக்குனராக வேண்டும் என்கிற கனவுகளோடோ நடிகராக வேண்டும் என்கிற கனவுகளோடோ அலைந்து கொண்டிருப்பவர்கள்தான் என்பதே உண்மை. இலக்கிய பரிச்சயமோ, திரைக்கதைப் பரிச்சயமோ அறவே இல்லாத இந்த அஸிஸ்ட்டன்ட்டுகள் மாத்திரமே கதை விவாதத்திற்கு அழைக்கப்படுவதன் காரணம் என்ன? இலக்கியவாதிகளே இந்த வேலையில் உட்படுத்தப்படாத நிலை உருவாகியிருப்பதற்கான காரணம் என்ன? அதற்குப் பெயர்தான் இயக்குனரின் ஈகோ.


பாரதிராஜா, பாலச்சந்தர் போன்ற மிகச் சிலரைத் தவிர, தன்னை இயக்குனர் என்று மனதார நினைத்துக்கொள்ளும் ஒரு சமூகம் ஏன் ஏற்படாமலே போயிற்று என்பதை நாம் கேள்விக்குள்ளாக்க முடியும். திரைக்கதையும் கதையும் தன்னுடையதாகவே இருக்க வேண்டும் என்று எல்லா இயக்குனர்களும் நினைக்கும் நிலைமை ஏன் வந்தது என்பதை நாம் ஆராயவேண்டும். இந்த ஆராய்வின் முடிவில் உண்மையான கதை ஞானம் உள்ள மனிதர்கள் எப்படி இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறார்கள் என்பது புலனாகும்.


கதையைப் பொருத்தவரைக்கும் தற்போது தயாரிப்பாளர்களே கூட தங்கள் பெயரைப் போட்டுக்கொள்ள விரும்பும் சூழல் இருந்துவருகிறது. இதற்குக் காரணம் யாவரும் அறிந்ததே. சமீபத்தில் நாஞ்சில் நாடனின் முதல் நாவலான தலைகீழ் விகிதங்கள், சொல்ல மறந்த கதை என்ற பெயரில் சினிமாவாக்கப்பட்டபோது கதை இயக்குனருடையது என்பதாகவே டைட்டில் கார்டு சொல்லிற்று. இதற்குக் காரணம் ரீமேக் ரைட்ஸ்ஸில் உள்ள பெரும் பணம்தான். இதனால்தான் தான் தயாரித்த பெரும்பாலான படங்களில் கே.டி.குஞ்சுமோன் கதை என்று தன் பெயரைப் போட்டுக்கொண்டார். இது சினிமா உலகத்தை அறிந்தவர்கள் தங்களுக்குள் புலம்பிக்கொள்ளும் செய்தி. இருந்தாலும் அந்த மாதிரி ரைட்ஸ் பிரச்சனையெல்லாம் இல்லாத திரைக்கதை என்கிற அமைப்பையும் தங்கள் பெயருக்கு மேல் போட்டுக்கொள்ள எதற்காக நமது இயக்குனர்கள் ஆசைப்படுகிறார்கள் என்பதுதான் அவர்களின் பேராசைக்கான sample!


இப்படி நம் இயக்குனர்களின் பேராசையும், தப்பான புரிதலும், இயலாமையும்தான் 'திரைக்கதைத்துறை' என்பதாக ஒன்று தோன்றாமலே போய்விட்டதற்கான மூலகாரணம். பாரதிராஜாவுக்கு பாக்கியராஜ், மணிவண்ணன், செல்வராஜ், ரத்னகுமார், பாலச்சந்தருக்கு ஒரு அனந்து என்று யாராவது ஒருவர் துணை நின்றதைப் போல ஒவ்வொரு இயக்குனருக்குப் பின்னாலும் இவ்வாறு வெளிக்காட்டப்படாமல் மறைந்து போன திறமையாளர்கள் எத்தனை எத்தனையோ மேற்கண்டவர்கள் வெளிச்சத்துக்கு வந்தது பாரதிராஜவும் பாலச்சந்தரும் தங்களை இயக்குனர்கள் என்பதாக தமக்குத்தாமே நம்பியதால்தான். என் வேலை இயக்கம. அதை நான் சரியாகச் செய்கிறேன். மற்றவர்கள் எனக்கு அவரவர் துறையில் உதவுகிறார்கள் என்று ஒரு இயக்குனர் நினைக்கும் போது உண்மையிலேயே நல்ல திரைக்கதையோடு கூடிய சினிமாக்கள் வெளிவருவது இயல்பாகிறது.


பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே ஏற்படுத்திய அலையில் ஆளாளுக்கு கிராமத்துக்குள் கேமராவைத் தூக்கிக்கொண்டுபோய் சினிமா எடுக்கிறேன் என்று ஆரம்பிக்க நேர்ந்த அவலம்தான் 'திரைக்கதை இல்லாத சினிமா'வின் தொடக்க காலம். பாரதிராஜா கண்டுபிடித்துக் கொடுத்த உத்தியின்படி சினிமா தயாரிப்புக்கான தொகை குறைகிறது. புதிய நடிகர்களின் வரவு நேர்கிறது. இது செலவை மேலும் குறைக்கும் வேலையாகிறது. இதனால் எவ்வித முன்னேற்பாடுமில்லாமல் குறிப்பாக திரைக்கதை என்று சரியான பேப்பர் வொர்க் இல்லாமல் கதையை மட்டும் தூக்கிக்கொண்டு talky portion முழுக்க ஒரே மூச்சில் எடுத்துக்கொண்டு வந்து எடிட்டிங் டேபிளில் கொட்ட ஆரம்பித்தார்கள் ஒரு சில இயக்குனர்கள். எடிட்டர் அவற்றை அறுத்து ஒட்டும்போது அவர்களுக்கு உணர்த்தப்பட்டது இவைதான். 1. அவர்கள் தேவையில்லாத காட்சிகளை நிறைய படம் பிடித்திருந்தார்கள். 2. அவர்கள் தேவையான பல காட்சிகளை படம் பிடிக்காமல் விட்டிருந்தார்கள்.

இந்தக் கட்டத்தில் எடிட்டரின் கையிலிருந்துதான் திரைக்கதை என்பதாக ஒன்று வழிய வேண்டிய கட்டாயம் நேர்கிறது. அதன்படி எவ்வித சுவாரஸ்யமோ அத்தியாவசியமோ இல்லாமல் டாக்கி போர்்ஷன்களும், தேவையில்லாத இடத்தில் பாடல்களுமாகத் தொகுக்கப்பட்ட பல தமிழ்ப்படங்களை நாம் பார்த்து மகிழ்ந்திருக்கிறோம். அவைதான் நான் குறிப்பிடும் திரைக்கதை இல்லாத சினிமாக்கள்.

தேவையேயில்லாத பல ஃப்ளாஷ் பேக்குகள் படங்களில் திணிக்கப்பட்டதற்கான காரணம் படத்தின் footage போதாமைதான். ஏற்கனவே கதையின் நகர்வில் நாம் பார்த்திருந்த காட்சிகள் வேறு இடங்களில் நினைவுத் தொடர்புகளை ஒட்டி திரும்பத் திரும்பக் காட்டப்பட்டன. பாமர ரசிகனுக்கு எளிதில் புரிவதற்காக இந்த உத்தி கையாளப்பட்டது என்று நாம் நினைத்தது உண்மையல்ல. எவை திரைப்பட நீளத்தின் அவசியம் கருதியே அவ்வாறு இணைக்கப்பட்டன.

இதற்கு அடுத்த கட்டத்தில்தான் திரைக்கதை என்பதன் உருவாக்கம் வேறு விதமாகத் திரண்டது. அதன்படி திரைக்கதை என்பது பார்வையாளனிடம் ஆவலைத் தூண்டுவதற்கான உத்தி என்பதாக ஒரு பிழையான புரிதல் நம் கலைஞர்களுக்கு நேர்ந்தது. இதுவே கமர்்ஷயல் படங்களுக்கான ஊற்றாக உருவெடுத்தது. அதன்படி ஒரு graph அல்லது formula சித்தரிக்கப்பட்டது. படத்தின் இத்தனாவது இத்தனாவது ரீல்களில் கதையில் திருப்பங்கள் அமையவேண்டும் என்பதாகவும், குறிப்பிட்ட வகையான பாடல்கள் இடம்பெறவேண்டும் என்பதாகவும், ஒரு ஆக்்ஷன் காட்சிக்கு அடுத்து ஒரு காமெடி காட்சி அமைய வேண்டும் என்பதாகவுமெல்லாம் ஒருசில ரகசிய உடன்படிக்கைக்குள் எல்லோரும் வந்து விழுந்தார்கள். இன்றைக்கு வரைக்கும் இந்த உத்தியே பிரதானமானதாகக் கையாளப்படுகிறது.

இதன் காரணமாக நமக்குக் காணக் கிடைப்பவை சுவாரஸ்யமான படங்கள் என்பது மிகையில்லை. அந்த வகையில் திரைக்கதை குறித்த ஓர் அக்கறை நம் கர்த்தாக்களுக்கு எழுந்திருப்பது ஆரோக்கியமானதுதான். இருந்தாலும் இதனாலேயே சினிமா கமர்்ஷியல் என்கிற எல்லையைத் தாண்ட இயலாத நிலையை எட்டிவிட்டதை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?

தமிழில் சமீபத்தில் வெளிவந்த பருத்தி வீரன் மட்டும்தான் உண்மையிலேயே திரைக்கதை என்பதன் சகல சுதந்திரங்களையும் தனதாக்கிக் கொண்ட சினிமா என்று சொல்லலாம். ஏற்கனவே சினிமாவுக்கென்று ஏற்படுத்தப்பட்டிருக்கும் எந்த வலுக்கட்டாயங்களையும் கருத்தில் கொள்ளாமல் இயல்பான திரைக்கதையின் பலத்திலேயே பெரும் வெற்றியடைந்த படம் அது.

அப்படியானால் திரைக்கதை என்பதை சுவாரஸ்யத்தை உண்டாக்கும் கருவியாகப் பயன்படுத்துவது தவறா என்று நீங்கள் கேட்கலாம். ஒரு திரைப்படம் சுவாரஸ்யமாக இருக்க வேண்டியது அவசியம்தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் சுவாரஸ்யத்திற்காக வலுக்கட்டாயமாகப் பல்வேறு அம்சங்களும் திணிக்கப்படுவதை திரைக்கதை உத்தி என்று சொல்லிக் கொள்வதுதான் அபத்தமானது. உண்மையில் திரைக்கதை என்பதின் பணி கதையை அதன் சுவாரஸ்யம் குறையாமல் அதன் இயல்பான நடையில் நடத்திக் கொண்டு போவதுதான். அதோடு திரைப்பட ஆக்கத்திற்கான செலவைப் பெருமளவில் குறைத்துத் தருகிற வேலையை உபரியாகச் செய்து தருகிறது திரைக்கதை. ்ஷாட்களாகப் பேப்பரிலேயே பகுக்கப்பட்டு விடும்போது அவசியமற்ற ஃபிலிம் செலவோ காலச் செலவோ கால்்ஷீட் செலவோ தவிர்க்கப்படுகிறது. இதற்கு அடிப்படை அவசியமாக இருப்பது ஆரோக்கியமான திரைக்கதைதான். இது post production வேலையையும் கூட எளிதாக்கி விடுகிறது. உண்மையில் கதையை நகர்த்துவதே திரைக்கதையின் முக்கிய பணி என்பதை§ ய இங்கே எல்லோரும் மறந்து போய்விட்டதுதான் ஆச்சர்யமூட்டுகிறது.

ஹாலிவுட் திரைப் படங்களில் திரைக்கதையை பெரும்பாலும் இருவர் அல்லது மூவர் சேர்ந்து உருவாக்குவது கடைசிக் கட்ட மாற்றங்கள் ஏதும் நேர்ந்துவிடக்கூடாது என்கிற நுண்ணிய அக்கறையால்தான். அங்கே ஒரு professional திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் நல்ல திரைக்கதையையே பெரிதும் நம்புகிறது. கதை திரைக்கதையான பிறகே இயக்குனர் யாரென்பது முடிவெடுக்கப்படுகிறது. இதுவே இயக்குனருக்கு முந்தைய நிலையிலேயே திரைக்கதையின் ஆக்கம் அவசியப்படுவதைக் காட்டுகிறது.

தமிழில் நல்ல திரைக்கதையாசிரியர்கள் எனும் அமைப்பு இன்னும் தோன்றவேயில்லை. மலையாளத்தில் எம்.டி., லோகிததாஸ், ஸ்ர்நிவாசன் போன்ற திரைக்கதாசிரியர்கள் உருவானதைப்போல தமிழிலும் உருவாக நேரும்போதுதான் நல்ல திரைக்கதை என்றால் என்ன என்பதை ரசிகர்கள் அறிந்து கொள்ள முடியும். குறிப்பாக ஸ்ர்நிவாசன் போன்ற ஆற்றலுடைய திரைக்கதாசிரியர் ஒருவரும் தமிழில் இன்னும் வெளிச்சத்துக்கு வரவில்லை என்பது தமிழ் சினிமாவுக்கு நேர்ந்த அவலமேயன்றி வேறில்லை. எம்.டி., ஸ்ர்நிவாசன் ஆகியோர் சில திரைப்படங்களை வெற்றிகரமாக இயக்கியிருந்தபோதும் திரைக்கதாசிரியர்களாகவே தொடர்வதானல்தான் மலையாளத்தில் இன்னும் நல்ல திரைக்கதைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. லோகிததாஸ் சொந்தமாக இயக்க ஆரம்பித்த பிறகு முழுமையான தோல்வியையே எதிர்கொண்டார். இதிலிருந்தே ஒரு நல்ல இயக்குனரின் வேலை நல்ல திரைக்கதையாக்கத்திற்குப் பிறகு கட்டாயம் தேவைப்படுகிறது என்பதை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. எல்லா வேலையையும் ஒருவரே செய்வதாகக் காட்டிக்கொள்ளும் அயோக்கியத்தனம் எப்போது குறைகிறதோ அப்போதுதான் நீங்கள் கண்டிப்பாக நல்ல சினிமாக்களைப் பார்க்க முடியும்.

February 28, 2007

சலவைக்காரர்கள்

சென்னை சங்கமம் என்கிற பெயரில் முதல்வர் மகள் கனிமொழியின் கனிவால் மிக பிரம்மாண்டமான விழா ஒன்று ஓசையில்லாமல் நிகழ்ந்து முடிந்தது. ஓசையில்லாமல் என்று நான் குறிப்பிடுவதற்குக் காரணம், சென்னையைத் தவிர வேறு மாவட்டங்களிலிருந்து கலந்து கொண்ட கலைஞர்கள் தவிர வேறு யாரும் அதைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்பதுதான். இதுவே, ஒரு சினிமா விழா என்றாலோ, ஃபிலிம் ஃபெஸ்டிவல் என்றாலோ பாமரர்களும் படித்தவர்களும் சென்னைக்கு டிக்கெட் கிடைக்குமா என்று க்யூவில் நிற்க ஆரம்பித்துவிடுவது நாம் அவ்வப்போது காணும் கூத்துதான் என்பதால், ஒரு முக்கியமான கலாச்சார விழா மாநிலத்தின் மற்ற இடங்களில் எவ்விதமான அதிர்வையும் ஏற்படுத்தாமல் போனது ஆச்சர்யமான ஒன்றுதான்.

சென்னை சங்கமம் எனும் நீண்ட விழாவின் ஒரு பகுதியாக தமிழ் சங்கமம் என்கிற தலைப்பில் பொழுதுபோக்கு வடிவங்களிலிருந்து தீவிர இலக்கியம் வரைக்கும் கடந்த பிப்ரவரி 21 முதல் 25 வரை சென்னை ஃபிலிம் சேம்பர் அரங்கில் பட்டிமன்றம், வழக்காடுமன்றம், கவியரங்கம், நவீன கவிதை வாசிப்பு, கட்டுரை வாசிப்பு, கதை சொல்லல் நவீன நாடக அரங்கேற்றங்கள் என்று ஒரே கோலாகலமாக இருந்தது (மேம்பாலங்கள் மட்டுமல்ல, இந்த மாதிரி கொண்டாட்டங்கள்கூட சென்னைத் தமிழனுக்கு மட்டும்தான் என்று பத்திரம் எழுதிக்கொடுத்துவிட்டார்கள் என்று தோன்றுகிறது).

இந்த விழாவின் கடைசி நாளில் நிகழ்ந்த கருத்தரங்கில் 21ம் நூற்றாண்டில் தமிழ் இதழியல் என்கிற தலைப்பில் நான் ஒரு கட்டுரை வாசித்தேன். அரங்கில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற அந்தக் கட்டுரை உங்கள் பார்வைக்கு...


சலவைக்காரர்கள்
இக்கால இதழியல் கண்ணோட்டம்

ஆற்று மணலை எண்ணினாலும் எண்ணலாம், அர்ச்சுனன் பெண்டாட்டிகளை எண்ண முடியாது என்று சொல்வது தமிழில் வெளிவந்த / வெளிவந்துகொண்டிருக்கும் இதழ்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். ஜான் கூட்டன்பெர்க் தயவால் அச்சு இயந்திரம் தோற்றுவிக்கப்பட்டபின் ஈய எழுத்துக்களைக் கையால் அச்சுக் கோர்த்து, காலால் அடித்துப் பார்த்த காலந்தொட்டே தமிழர்களுக்கு இதழ்களைத் தயாரிக்கிற ஆர்வமும் தொற்றிக்கொண்டுவிட்டது என்பதே உண்மை. அப்புறம் ஃபோட்டோ டைப் செட்டிங் வந்தபோது பத்திரிக்கைகளின் முகங்கள் மாறுகின்றன. நான்கு வண்ண இயந்திரங்களில் நெகடிவ் பிளேட்கள் கொண்டு லட்சக்கணக்கில் பத்திரிக்கைகள் அச்சடிக்கக்கூடிய சாத்தியம் இச்சமயத்தில் ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து நிகழும் லேசர் புரட்சியில் டிடீபி என்கிற முறை அமலுக்கு வருகிறது. இந்த வகையில் உங்கள் மேஜை மீதே உங்களுடைய இதழை நீங்களே தயாரித்துக்கொள்ள முடியும் என்கிற அளவுக்கு வந்துவிட்டோம். -இது இதழியலில் அச்சுத் துறையின் பங்கு. ஆனால் இதேவிதமான வளர்ச்சி இதழ்களின் உள்ளடக்கங்களிலும் இருக்கின்றதா என்று கேட்டால், ஆழ்ந்த மெளனத்தின் குழியில் நாம் விழுந்து விடுகிறோம்.

விடுதலைப் போராட்ட காலகட்டத்தில் நாடு முழுக்க வெளிப்படையாகவும் ரகசியமாகவும் நிகழ்ந்த பொதுக்கூட்டங்கள், தேசவிடுதலை என்கிற எண்ணத்தைப் பாமர மக்களின் மனத்தில் பதிய வைக்க எவ்வளவு உதவி செய்தனவோ, அதை விடவும் பல மடங்கு வீரியத்தோடு, படித்தவர்களின் மத்தியில் விடுதலை தாகத்தைத் தோற்றுவிக்கத் தூது சென்றன அந்நாள் பத்திரிகைகள். பத்திரிகைகள் இல்லாது போயிருந்தால் பாரதி என்ன செய்திருப்பான் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். விடுதலை விடுதலை என்று ஒரே நோக்கமாக இருந்துவிட்டு கடைசியில் விடுதலை கிடைத்தபோது வேறு வேலை வெட்டி இல்லாது முடங்கிப்போன பல துறைகளைப் போல பத்திரிக்கைத் துறை ஸ்தம்பித்து போகவில்லைதான். அது அடுத்தபடியாக கனவுகளைப் புனைகிற வேலையை எடுத்துக்கொண்டது. அது மிகவும் சுலபமானது. கனவுகளைப் புனைந்துகொண்டே போகலாம். ரீல் ரீலாகப் புனையலாம். நடப்பது நடக்கட்டும், நடக்காதது பற்றி பத்திரிக்கைக்கு எந்த அக்கறையும் இருக்க வேண்டியதில்லை. ஏனென்றால் நூறு கல்லை வீசினால் ஒரு கல்தான் காயில் படும் என்பதை அது அறிந்தே இருக்கிறது.

அந்தக் காலத்தில் வாசனும் கல்கியும் போட்டுக்கொண்ட சண்டையைப் பற்றி விலாவாரியாக எழுதி முடித்துவிட்டார்கள். அதைப் பற்றி இங்கே நாம் பேச வேண்டியதில்லை. தனிமனிதர்களுக்குள் இருக்கின்ற விருப்பு வெறுப்புக்கள் பொது புத்தியாக மாற்றப்படுகிற அவலத்தை அவர்கள்தான் தமிழில் முதலில் நடைமுறைப்படுத்தினார்கள் என்பதாகச் சொல்லலாம். அதுதான் இப்போது மீடியாக்களின் அத்தனை வடிவங்களிலும் பரவிக்கிடக்கிறது. கட்சிக்கு ஒரு பத்திரிக்கை ஜாதிக்கு ஒரு பத்திரிக்கை கட்சிக்கு ஒரு டீவி ஜாதிக்கு ஒரு டீவி என்று பெரும் வணிக மற்றும் அதிகாரப் போட்டி இப்போது ஏற்பட்டிருப்பதற்கான ஆணிவேர் அந்தக் காலத்து விகடன் கல்கி போரில்தான் அடங்கியிருக்கிறது. பத்திரிகை அதிகார மையமாக உருவாகும்போது அது ஒரு அரசனைப் போன்ற வடிவத்தை எடுத்துவிடுகிறது. அரசனை யாரும் அசைத்துப் பார்க்க முடியாது. அரசனை எதிர்கொள்ள இன்னொரு அரசன்தான் வரவேண்டும். புரட்சியாளர்கள் வரலாம். ஆனால் அதிகாரத்தைக் கைப்பற்றும்போது அவர்களும் அரசர்களாகிப் போய்விடுகிறார்கள். அதனால் அதிகாரம் தன் கொலைப் பற்களால் அத்தனைபேரையும் காயப்படுத்திக்கொண்டேயிருக்கிறது. குறுக்கீடுகளை நசுக்கிவிட யத்தனிக்கிறது.

பத்திரிகைகளின் மிகப் பெரும் ஆயுதம் பொய்கள் என்று சொன்னால் மிகையில்லை. உண்மையைத் திரிப்பதன் வாயிலாக இல்லாத ஒன்றின் பூதாகரத்தை உருவாக்கிக் காட்டும் அதிகாரம் பத்திரிகைகளை சிதைத்துப்போட்டிருக்கிறது. சிறியதாக உள்ள ஒன்றை மிகப் பெரியதாகவும், மிக உன்னதமான ஒன்றை அப்படி ஒன்று இல்லவே இல்லை என்பதாகவும் பத்திரிகைகளால் நம்ப வைக்க முடிகிறது. ஏனென்றால் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இயலாதவனாகவே வாசகன் எப்போதும் இருக்கிறான். அவனைப் பொருத்தவரை அவன் எதையெல்லாம் வாசிக்கிறானோ அவையெல்லாம் உண்மைகள். எழுதப்படுகிற அத்தனை செய்தியும் உண்மையைத் தவிர வேறில்லை. வணிகப் பத்திரிகைகளில் 'கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே' என்று குறிப்பிடுவதைப்போல - ஒரு செயதித் தாளில், 'பத்திகளில் காணும் செய்திகள் யாவும் உண்மையே' என்று எந்த உத்திரவாதமும் வழங்கப்படவில்லை என்பதை அவன் ஒருபோதும் யோசித்துப் பார்த்ததுமில்லை. இதனாலேயே கதைகளில் உள்ள உண்மையையும் செய்திகளில் வரும் பொய்யையும் பிரித்தறிய இயலாதவனாக இருக்கிறான் வாசகன். இது யாருக்குத் தெரியுமோ இல்லையோ பத்திரிகைகளுக்கு நன்றாகவே தெரியும்.

வணிக சினிமாக்காரர்கள், ரசிகர்கள் விருப்பத்திற்கேற்ப படம் எடுக்கிறோம் என்று சொல்வதன் வாயிலாக ரசிகர்களின் விருப்பம் என்பதாக ஒரு மாயையை உருவாக்குவதைப் போல, பத்திரிகைகளும் வாசகர்களின் விருப்பம் என்பதாக ஒன்றை தாமே உருவாக்கிக்கொள்வதில் கைதேர்ந்து வந்திருக்கின்றன. அனேகமாக அனைத்து வணிகப் பத்திரிகைகளுமே - அது நாளிதழாகவோ வார இதழாகவோ மாத இதழாகவோ இருக்கட்டும் -'பல்சுவை' என்கிற ஒரு வார்த்தையை மையமாகக் கொண்டே இயங்குகின்றன. சினிமாவில் மசாலா என்றால் புரிந்துகொள்ளும் பலரும் இந்தப் பல்சுவை என்ற வார்த்தையைப் புரிந்துகொண்டிருக்கவில்லை என்பதே உண்மை. பல்சுவைத் திரைப்படங்களும் மசாலா பத்திரிகைகளும் என்று மாற்றிப்போட்டு அவர்களுக்கு அதை விளக்க முயலலாம் என்று தோன்றுகிறது.

அரசியல் ஆன்மீகம், செக்ஸ், வன்முறை, விளம்பரம் ஆகியவற்றை மட்டும் ஒரு பாத்திரத்தில் போட்டு பிசைந்தால் ஒரு சினிமாவையோ பத்திரிகையையோ உருவாக்கி விட முடிகிறது.

ஒரு இதழின் அடுத்த இதழ்கள் ஒரே மாதிரியான வடிவத்தையே கொண்டவையாக அமைய வேண்டும் என்பதே முக்கிய நியதி. அதுவே அதன் அடையாளம் என்பதால் அது தவிர்க்க இயலாதது. ஆனால் இந்த அமைப்பிற்குள் இயங்கும்போது நோக்கம் ஆத்மார்த்தமானதாக இருக்க வேண்டியது முக்கியம். பத்திரிகை என்பது கடற்கரையில் கிடைக்கும் 'டைம் பாஸ்' கடலை இல்லை என்பதை வாசகன் உணர வேண்டும். இன்றைய சமூகச் சூழலில் இது வாய்ப்பே இல்லை என்பதே வேதனையான உண்மை.

செய்தித்தாள்கள்

சமூகம் அல்லது ஒரு தேசம் நான்கு தூண்கள் நிற்கும் மண்டபம் என்று சொல்வார்கள். Judiciary, Legislation, Bureaucracy & Journalism. இதில் நான்காவது தூணாக இருப்பது பத்திரிகைகள். மற்ற மூன்று தூண்களை விடவும் நான்காவது தூண் சக்தி மிகுந்தது என்பது யாவருக்கும் நன்றாகவே தெரியும். ஏனென்றால் பேனாவின் வலிமையைப் பற்றி பாடல்கள்கூட புனைந்து முடித்துவிட்டோம். இந்த இடத்தில் மற்ற இதழ்களைக் காட்டிலும் மிகச் சரியாகப் பொருந்திப் போகக்கூடியவை நாளிதழ்களாக வெளிவரும் செய்திப் பத்திரிகைகள்தான்.

மற்ற மூன்று துறைகளும் மக்களுக்கு அன்னியப்பட்டு விலகி நிற்கின்றன. அவை வெளியிலிருந்து தம் வாழ்வில் நுழைபவை என்பதாக மக்கள் நினைக்கிறார்கள். அவை தங்களை ஆள விரும்புவை என்பதாகவும், தங்களை அடிபணிய வைப்பவை என்பதாகவும் அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் பத்திரிகை என்பது அப்படியில்லை. அது வாசகனின் எண்ணவோட்டமாகவே இருக்கிறது. காகிதத்தில் காண்பது வாசகனின் கருத்தாக மாற்றமடைந்துவிடுகிறது. இதனால் செய்தித்தாள்களை ஒரு தேசத்தின் மக்கள் தங்களிடமிருந்து பிரித்துப் பார்க்க முயலுவதேயில்லை. அவர்கள் வேறு; செய்தித்தாள்கள் வேறு என்பதில்லை என்பதாக அவர்கள் ஆகிவிடுகிறார்கள்.

தமிழகத்தைப் பொருத்தவரைக்கும் அரசியல் வாழ்வில் உள்ளவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சிக்கு ஆதரவான பத்திரிகைகளையே தங்கள் எண்ணவோட்ட ஒருங்கிணைப்புக்காகப் பயன்படுத்துகிறார்கள். கட்சி சார்பு இல்லாத பொதுமக்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை எது ஈடு செய்கிறதோ அந்த நாளிதழை நாடுகிறார்கள். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புகளை அவர்களுக்குத் தெரியாமலே அவர்களை ஊடுருவி அவர்களுக்குள் உருவாக்குவதே அந்த நாளிதழ்கள்தான் என்பதை அவர்கள் அறிந்திருப்பதில்லை.

ஒரு கோர விபத்து நிகழ்ந்தால் அது வெறும் செய்தியாக இருந்தால் தனக்குப் போதாது என்று இருபத்தொன்றாம் நூற்றாண்டு வாசகன் நினைக்கிறான். அந்த கோரத்தை அவன் பார்த்து ரசித்தாக வேண்டும். அப்போதுதான் அவனது மனம் திருப்தியடைகிறது. இந்தியா பாகிஸ்தான் பார்டரில் ஒரு ரயில் வெடித்துச் சிதறுகிறது. அது எரிந்துகொண்டிருப்பதை வாசகன் பார்த்தாகவேண்டும். அந்தத் தீயின் கொழுந்தை அவன் தீண்டிப் பார்த்தாக வேண்டும். காகிதத்தில் ஒரு பக்கம் முழுக்க எரிந்துகொண்டிருக்கிறது தீ. அதை அவன் கண்களால் பருகுகிறான். எரிந்த; சிதைந்த பிணங்களை அவன் அள்ளிப் புசிக்கிறான். உயிருக்குப் போராடும் சக மனிதனை அவன் தன் அனுதாபத்தோடு ரசிக்க வேண்டுமானால் அவனைப் பார்த்தாக வேண்டுமல்லவா? அதற்காகத்தானே - அவன் உறங்கும் வேளையில் செய்தித்தாள் சகோதரர்கள் உறக்கம் கெட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அடிப்படைக் கடமை என்ன? வாசகன் காலையில் எழுந்து பல் துலக்காமல் காஃபி குடிக்கும்போது கையில் முந்தைய நாள் செய்திகளைக் கொண்டுவந்து கொட்டிவிடவேண்டும். அவன் பருகும் காஃபியில் பிணங்களும், பாலியல் வன்முறைகளும் காணாமல் போன குழந்தைகளும், கள்ள உறவுகளும் கலந்து கொடுத்தாகவேண்டும்.

இந்த மாயவலைக்குள் வாசகனைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டபின்தான் பத்திரிகைகளின் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறிவிட்டது என்று தோன்றுகிறது. இதனால் மேலும் மேலும் தவறுகளைச் செய்துகொண்டே போகவேண்டிய நிர்பந்தத்தை அவை எட்டிவிட்டன.

செய்தித்தாள்கள் தாங்களே நினைத்தாலும் வாசகனின் தரத்தை மேம்படுத்திவிட முடியாது என்கிற நிலையை அடைந்துவிட்டன. ஒரு பத்திரிகை ஒரு செய்தியையோ அதற்கான புகைப்படத்தையோ கொடுக்க தவறினால், அதைத் தவறாமல் கொடுத்துவிடும் வேறொரு பத்திரிகை பெரும் நம்பிக்கையைப் பெற்றுவிடுகிறது. இவ்வாறாகப் போட்டி என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகவும், மிகுந்த கொடூரம் நிறைந்த ஒன்றாகவும் ஆகிவிடுகிறது. இந்த வேகத்தில் இதயம் என்கிற ஒன்றைச் சுமந்துகொண்டு செய்தி சேகரிக்கப் போனால் வெறும் வெள்ளைக் காகிதத்தைத்தான் அடுத்த நாள் கொடுக்க முடியும் என்கிற நிலையைப் பத்திரிகைகள் எட்டிவிட்டன. இந்த இடத்தில் ஒரு உதாரணம் சொல்ல முடியும்.

தமிழகத்தின் முக்கிய மாலைப் பத்திரிகை ஒன்றின் ஆசிரியர் குழுவில் உள்ள என்னுடைய நண்பர் ஒருவர் தெரிவித்த செய்தி இது. ''தினப் பத்திரிகைகள்தான் உண்மையாகவே வார மற்றும் வார இருமுறை செய்திப் பத்திரிகைகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகின்றன''. தினப்பத்திரிகைகள் தங்களுக்குள் நிகழ்த்திக்கொள்ளும் பந்தயம் மிகுந்த பயங்கரங்களை உள்ளடக்கியது. நீங்கள் நினைத்துப் பாருங்கள், யாரோ ஒரு ஆள், அவர் பிரபலமானவர் அல்ல. அவரை யாரோ எதற்காகவோ கொலை செய்துவிடுகிறார்கள். போலீஸ் கேஸ். செய்தி எங்களுக்கு எட்டுகிறது. எல்லாப் பத்திரிகைகளுக்கும்தான் எட்டுகிறது. ஆனால் புகைப்படம் வேண்டுமென்றால் என்ன செய்வர்கள். பல இதழ்களிலும் புகைப்படம் இல்லாமல் அந்தச் செய்தி வெளிவருகிறது. ஒரு பத்திரிகை மட்டும் புகைப்படம் வெளியிடுகிறது. அதற்கு அது என்ன செய்தது என்பது தெரியுமா? அந்தப் பத்திரிகையின் புகைப்படக்காரர் மரணம் நிகழ்ந்த வீட்டுக்குப் போகிறார். பிணத்தைப் போட்டுக்கொண்டு உறவினர்கள் அழுதுகொண்டிருக்கிறார்கள். அவர் யாருடைய தயவுக்காகவும் காத்திருக்கவில்லை. சுவற்றில் தொங்குகிற படங்களைப் பார்வையிடுகிறார். தானே ஒரு சேரை இழுத்துப்போட்டு இறந்து போனவரின் புகைப்படத்தை (அது குடும்பத்தோடும் இருக்கலாம்) கழற்றி தரையில் வைக்கிறா¡ர். அதை ஒரு புகைப்படம் எடுக்கிறார். திரும்பவும் சேரில் ஏறி இருந்தவிதமாகவே மாட்டுகிறார். கேமராவை எடுத்துக்கொண்டு புறப்படுகிறார். ஒருவரிடமும் ஒரு வார்த்தை கூட பேசியிருக்கவில்லை. அது அவருக்குத் தேவையில்லாதது.

இந்த உதாரணத்தை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்? கடமையை செய்யும்போது மனிதாபிமானம் இருக்கக்கூடாது என்று சொல்லப்படுகிற துறைகளைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அந்தத் துறைகளில் பணியாற்ற நீங்கள் விரும்புகிறீர்களா என்று உங்கள் மனதைக் கேட்டுப் பாருங்கள்.

பல வருடங்களாகவே தமிழகத்தின் நேரடியான அரசியல் சார்பில்லாத டாப் 3 நாளிதழ்கள் என்று சொன்னால் அவை தினத்தந்தி, தினமணி மற்றும் தினமலர் ஆகியவைதான். இந்த மூன்றும் எவ்விதமான நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டன? எவ்விதமான வளர்ச்சி நிலைகளை எட்டின? தற்போது எவ்விதமான போட்டியில் ஈடுபடுகின்றன?

தமிழகத்தைப் பொருத்தவரை சிவந்தி ஆதித்தனாரின் தினத்தந்தி ஏற்படுத்திய பரபரப்பு மிகவும் முக்கியமானது. சாதாரண மனிதனையும் செய்தித்தாள் படிக்கக்கூடியவனாக மாற்றிய பெருமை அவரையே சாரும் என்று பலரும் சொல்லுவார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தைப் பாருங்கள். அந்த செய்தித்தாள் தன் அடையாளத்தைக் கொஞ்சம்கூட மாற்றிக்கொள்ளாமல் வெளிவந்து கொண்டிருக்கிறது. அது ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்த கல்வி விழுக்காடு என்ன இப்போது உள்ள கல்வி விழுக்காடு என்ன என்பதைப் பற்றி யோசித்துப் பார்க்கையில் சாமான்ய மனிதர்களுக்கான இதழ் என்கிற தளத்திலிருந்து அது ஏன் இன்னும் கொஞ்சம் ஒருசில படிகள் முன்னேறி வரக்கூடாது என்கிற ஆதங்கம் எழவே செய்கிறது.

அதற்கு நேரெதிரான நோக்கத்தோடு துவங்கப்பட்டது தினமணி. படித்தவர்களுக்கான இதழ் என்கிற பரவலான அடையாளம் அதற்கு உண்டு. அதன் முக்கிய ஆசிரியர் ஒருவர் சில வருடங்களுக்கு முன்பு விலகும் வரைக்கும் அது எந்த இதழையும் போட்டியாக எடுத்துக்கொள்ளாமல், தன் வழியில் பயணித்துக்கொண்டிருந்தது. உதாரணமாக, அப்போது கற்பழிப்பு, பலாத்காரம் போன்ற வார்த்தைகளை அது வெளியிடாது. பாலியல் வன்முறை என்றுதான் நீங்கள் அதில் வாசிப்பீர்கள். ஆனால் இப்போது அந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது. அவர்களும் கற்பழிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பதுதான் மிகுந்த அவலம்.

என் வாகனத்தைப் பழுது பார்ப்பவருக்கு மூன்று பெண் குழந்தைகள். குழந்தைகளின் பொது அறிவை வளர்க்க என்ன செய்யலாம் என்று ஒருநாள் அவர் என்னிடம் கேட்டார். வீட்டில் என்ன செய்தித்தாள் வாங்குகிறீர்கள் என்று கேட்டேன். எதையும் வாங்குவதில்லை என்று அவர் சொன்னார். செய்தித்தாள்தான் குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் முக்கிய ஊடகம் என்று நான் சொன்னேன். அதற்கு அவர் சொன்ன பதில் விசித்திரமாக இருந்தது. செய்தித்தாள் வாங்கிப்போட்டால் பெண் குழந்தைகள் கெட்டுப்போய்விடுவார்கள் என்று அவர் சொன்னார். எனக்கு மிகுந்த அதிர்ச்சி. அவர் தொடர்ந்து சொன்னார். கற்பழிப்பு, அவனோடு இவள் ஓடினாள், இவளுக்கு அவன் கள்ளப்புரு்ஷன் என்றெல்லாம் என் குழந்தைகள் படித்தால் அவர்களை எப்படி நான் கரை சேர்ப்பேன்?

எப்படி இருக்கிறது பாருங்கள், தன் மூன்று மகள்கள் எதைப் படிக்கக்கூடாது என்று அவர் நினைக்கிறாரோ அதை அவர் மிகுந்த ஆசையோடு படிக்க முனைகிறார். செய்தித்தாள் என்று சொன்னாலே அவரைப் பொருத்தவரைக்கும் செக்ஸ் மற்றும் வன்முறைதான். இந்த நிலையில் அவருக்கு நான் பரிந்துரைத்த பத்திரிகை தினமணி. அதற்கு அவர் சொன்ன பதில் அதில் எதுவுமே விபரமாக வராதே என்பதுதான். அவர் விபரம் என்று சொல்வது எதை என்பது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். ஆனால் அந்த நிலையையும் தினமணி கடந்து வந்துவிட்டது என்பதுதான் வேதனையான உண்மை.

இந்தப் போட்டியில் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே தன் அமைப்பிலும் செய்திகளிலும் பெரும் மாற்றங்கள் செய்து முன்னணிக்கு வந்து நிற்பது தினமலர்தான் என்று தோன்றுகிறது. நான் குறிப்பிடுவது வணிகப் போட்டியில் மட்டும்தான் என்பதை நினைவு கொள்ளுங்கள். சரியான ஒரு தருணத்தில் தினமலர் தன் போட்டியாளர்களான தினத்தந்தி மற்றும் தினமணி ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு இடத்தைக் கண்டுபிடித்து செயல்படுத்த ஆரம்பித்தது. அதுவே அதன் வர்த்தக ரீதியான வெற்றிக்குக் காரணம் என்று தோன்றுகிறது.

ஆனால் இந்தப் போட்டிகளால் வாசகனுக்குக் கிடைத்திருப்பது சகல அயோக்கியத்தனங்களையும் வீட்டின் வரவேற்பறையில் கொட்டிவைத்துக்கொள்ள ஒரு வாய்ப்பு மட்டுமே. இவற்றின் வாயிலாக அவனது மனத்தில் மெல்ல மெல்லக் கலந்துவிட்டிருக்கும் விஷம் முறிய மருந்துகள் இனியும் கண்டுபிடிக்க இயலாதவை.

வணிக இதழ்கள்

செய்தித்தாள்களின் நிலை இப்படியிருந்தால் வாரப்பத்திரிகைகளான வணிக இதழ்களின் பங்களிப்போ வேறு வகையில் சிறப்பு வாய்ந்தது. அவை எழுத்தாளர்களை பிச்சைக்காரர்களாக்கிய பெரும் கைங்கர்யத்தை நிகழ்த்திக் காட்டின.

வழவழப்பான காகிதங்கள், வண்ண வண்ண பக்கங்கள், சினிமா அழகிகளின் சிரித்த முகங்கள் கொப்பளிக்கும் முகப்புகள், முலைகள் தத்தளிக்கும் நடுப்பக்கங்கள், பக்கத்துக்குப் பக்கம் அவர்களின் அங்கலாவண்யங்கள், ஆங்காங்கே தெரியும் உள்ளாடைகளை உரசிக்கொண்டு சின்னச் சின்ன சினிமா செய்திகள், திரைப்படங்களுக்கு மேதைகள் போல மார்க் போடும் மதிப்பீடுகள், அந்தந்த மாதத்துக்கான தெய்வங்களின் அழகான ரூபங்கள், வாழ்வியலைக் கற்பிக்கும் சாமியார்களின் பெயரைப் போட்டு கோஸ்ட் ரைட்டர்கள் எழுதும் தொடர் கட்டுரைகள், ட்ராட்ஸ்கி மருது முதலான நவீன ஓவியர்களின் ஓவியங்களோடு பரபரப்பான இலக்கியவாதிகளின் தொடர்கள், ஆறெழு வித்தியாசங்கள் முதலான வாசகர்களுக்கான போட்டிகள், பணம்தான் வாழ்க்கை என்கிற அறிவிப்போடு தொடர் கட்டுரைகள், பரபரப்பான செய்திகளின் follow up-கள், இலவசங்கள், விளம்பரங்கள், விளம்பரங்கள், விளம்பரங்கள்.

-இவைதான் இன்றைய வணிகப் பத்திரிகைகளின் அடையாளங்கள். இந்தக் காலகட்டத்தில் வெளிவரும் ஒவ்வொரு இதழும் மசால்வடையை ஐஸ்க்ரீமில் போட்டுப் பிசைந்தது போன்ற வடிவத்திலேயே இருப்பது வியப்புக்குரியது. சுண்டல் மடித்துக் கொடுக்கப்படும் வணிக இதழ்களின் ஒரு காகிதத்தைப் பாருங்கள், ஒருபக்கம் ஏதாவது ஒரு தெய்வத்தின் படம் தென்பட்டால் அதன் மறுபக்கம் கண்டிப்பாக ஒரு அசின் அம்மனோ, நயன்தாரா சிம்புவுக்குக் கொடுக்கிற முத்தமோ, நமீதாவின் வளைவுகளோதான் தென்படும். என்னைப் பொருத்தவரைக்கும் இரண்டு படங்களுமே ஆபத்தானவைதான். அது அசினாக இருந்தாலும் சரி, அம்மனாக இருந்தாலும் சரி.

வாரப் பத்திரிகைகளில் ஒரு சில அற்புதங்கள் அடிக்கடி அரங்கேறும். திடீரென்று ஒரே நடிகையின் புகைப்படத்தை அட்டையில் தாங்கி அத்தனை முன்னணி பத்திரிகைகளும் வெளிவரும். ஒரு சில நடிகர்கள், ஒரு சில பிரபலங்கள், ஒரு சில விளையாட்டு வீரர்கள், ஒரு சில அரசியல்வாதிகள், ஒரு சில அதிகாரிகள் மட்டும் திரும்பத் திரும்ப பத்திரிகைகளில் தென்பட்டுக்கொண்டேயிருப்பார்கள். நாட்டில் நாள்தோறும் எத்தனையோ பேர் போலீசின் பிடியில் மாட்டிக்கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களில் ஒருசிலரை மட்டும் ஜாமீனில் வெளிவந்தாலும் வெளியே தலைகாட்ட இயலாத அளவுக்கு பத்திரிகைகள் துரத்தும். முந்தைய இதழில்தான் அருள்பொங்க சாத்வீகமாகப் பேட்டியளித்திருந்த மடாதிபதி அடுத்த இதழில் காமுகனாக மாறிப்போயிருப்பார். இவையெல்லாம் எந்த அடிப்படையில் நிகழ்கின்றன என்று சிந்திக்க இயலாத அளவுக்கு அடுத்தடுத்த பரபரப்புகளில் வாசகனின் மனத்தை செலுத்தும் வித்தையில் கைதேர்ந்துவிட்டன பத்திரிகைகள்.

வணிகப் போட்டியில் இதுவரைக்கும் இல்லாத புதுமையாக அகில உலகத்திலேயே அதிகமாக விற்பனை ஆகிற பத்திரிகை எங்களுடையதுதான் என்று அத்தனை பத்திரிகைகளும் சொல்லிக்கொள்கிற அவலம் இப்போதுதான் நிகழ்கிறது. வாசகன் எதை நம்புகிறான் என்பதுதான் தெரிவதேயில்லை.

படைப்புகளைப் பொருத்தவரைக்கும், முந்தைய தலைமுறையில் முக்கிய படைப்பாளிகள் யாவரும் பெரும் வணிகப் பத்திரிகைகளையே சார்ந்திருக்குமாறு நிகழ்ந்து வந்திருக்கிறது. ஆனால் இன்றைய நிலை என்ன? தமிழின் முக்கிய படைப்பாளிகள் யார் என்பது தமிழனுக்குத் தெரியாத விதமாக ரகசியமான ஒரு இருட்டடிப்பு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. வணிகப் பத்திரிகைகள் நவீன எழுத்தாளர்களை சீண்டுவதுமில்லை. அப்படியே சீந்தினாலும் அது ஒரு தீபாவளி மலராகவோ, பொங்கல் மலராகவோ மட்டுமே இருக்க முடியும். அதோடு அவர்களின் கடமைகள் முடிந்துபோய்விடுகின்றன. ஒரு நல்ல படைப்பாளி தன் அடுத்த படைப்பை அடுத்த தீபாவளிக்கு செய்தால் போதுமானது. இல்லையானால் வணிகப் பத்திரிகைகளின் படைப்புக் குவியலில் அவனுடைய படைப்புகளும் புதைந்து போய்விடும் அபாயம் நேர்ந்துவிடும்.

ஒரு இதழின் ஆதாரமாக இருப்பது அந்த இதழில் இடம்பெறும் படைப்புகள்தான் என்கிற ஞாபகம்கூட இல்லாமல் பத்திரிகைகள் செயல்படுகிற காலகட்டம் இது. படைப்பாளி பிச்சைக்காரன் போல. அவனுக்குத் தேவைப்படுவது ஒரு எலும்புத்துண்டு மாத்திரமே என்று அவர்கள் தீர்மானித்து பல வருடங்கள் ஆகிறது. எழுதுவதன் வாயிலாக வயிற்றைக் கழுவ ஒருவன் முனைந்தால் அவன் என்ன கதியை அடைவான் என்பதற்கு முந்தைய தலைமுறையிலேயே பாரதி, புதுமைப்பித்தன் என்று உதாரணங்கள் காணப்படுகின்றபோது இந்தக் காலகட்டத்தில் எதை நாம் புதிதாக எதிர்பார்க்க முடியும்?

உலகிலேயே, ''நான் ஓர் எழுத்தாளன்'' என்று அறிமுகப்படுத்திக்கொள்ளும் ஒருவனிடம் ''சரி பிழைப்புக்கு என்ன செய்கிறீர்கள்?'' என்று கேள்வி கேட்கப்படுவது நமது தமிழ்ச் சூழலில் மட்டுமே நடக்கும் விபரீதம். இது விளையாட்டான வி்ஷயம் என்பதாக எனக்குத் தோன்றவில்லை. இந்த அவல நிலைக்கு அவனைத் தள்ளியது அவனது வாசகனா? அவனது வறுமையா? இல்லை. அந்தப் பாவம் பத்திரிகைகளை மட்டுமே முழுமையாகச் சாரும். பத்திரிகை வெளிவர படைப்புகள் வேண்டும். ஆனால் அதைவிட முக்கியமானவை விளம்பரங்கள். விளம்பரங்கள் கிடைக்க 'தாங்கள்தான் நம்பர் ஒன்' என்கிற விதத்தில் விளம்பரம் செய்துகொள்வதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம். படைப்பாளிக்கு அதில் ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூடக் கண்ணில் காட்ட வேண்டியதில்லை. அவனுக்கு அதைக் கேட்கக்கூடத் தெரியாது. ஒருவேளை அவன் குரலை உயர்த்திவிடாமல் இருக்கவேண்டுமானால் அதற்கும் ஓர் உபாயம் இருக்கிறது. அந்த உபாயம் தமிழ்நாட்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டதோ என்று நான் அஞ்சுகிறேன். அதை எந்த வார இதழ் முதலில் செய்தது என்று நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்பவில்லை. அந்த உத்தி என்ன என்று மட்டும் சொல்கிறேன். படைப்பாளி எதிர்த்துக் குரல் எழுப்பாமல் இருப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட உபாயம் இதுதான். அது வாசகனை படைப்பாளியாக்கி விடுவது. வாசகன் தன் படைப்பைப் பார்த்து பூரிக்கட்டும், அடுத்த வாசகன் அடுத்த இதழில் பூரிப்படையட்டும். சமத்துவம்தான். ஒருசிலர் மட்டும் ஆள்வதற்கானதல்ல இந்த சாம்ராஜ்யம்.

எத்தனை வியாபார தந்திரம் பாருங்கள். வெளி தேசங்களிலும் நம் நாட்டிலேயே வெளி மாநிலங்களிலும்கூட ஓர் எழுத்தாளன் மிகுந்த கர்வத்தோடு தன் படைப்புக்கான கூலியை நிர்ணயிக்க முடிகிற நிலை இருக்கும்போது, உங்கள் அன்னைத் தமிழிலோ தன் படைப்பு பரவலான வாசகர்களுக்கு மறுக்கப்படும் நிலையே ஓர் எழுத்தாளனுக்கு வரமாகக் கிடைத்திருக்கிறது.

பல்சுவை என்கிற எல்லையையும் வணிக இதழ்கள் இப்போது கடந்துவந்து கொண்டிருப்பதும் உண்மைதான். அரசியல், ஆன்மீகம், ஜோதிடம், இலக்கியம், குழந்தைகள், வாகனங்கள், விவசாயம் என்று தனிப்பட்ட வி்ஷயங்களுக்கான இதழ்கள் வெளிவந்துகொண்டிருக்கும் சூழல் இன்றைக்கு காணப்படுகிறது. பல்சுவை என்று இல்லாமல் தனித்தனி வி்ஷயங்களுக்கான இதழ்கள் வெளிவருவது ஆரோக்கியமான சூழல்தானே என்று நீங்கள் நினைக்கலாம். தனித்தனித் துறைகளுக்கான தனித்தனிப் பத்திரிகைகள் வெளிவருவது முன்னேற்றப் பாதையில் ஒரு மைல்கல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவை ஒரு சில பத்திரிகைகளின் வியாபார வடிவங்கள் என்பதே கவனிக்க வேண்டிய வி்ஷயம். இதன் வாயிலாக பத்திரிகைத் துறை monopoly அல்லது deopoly நிலையையே எட்ட முடியும். நாட்டில் ஒருசிலர் வைத்ததுதான் சட்டம் என்கிற நிலையையே எட்ட முடியும். நாட்டில் ஒருசிலர் வைத்ததுதான் சட்டம் என்கிற நிலையையே எதிர்காலம் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். தங்கள் பலத்தைக்கொண்டு பிறர் உள்ளே நுழையவே முடியாத துறையாக பத்திரிகைத்துறை, ஒருசில முதலாளிகளின் கைகளில் முடங்கிப்போகிற அபாயம் நிகழ்ந்துவிடும். இதுவே உண்மையான பயங்கர நிலை.

சிற்றிதழ்கள்

வணிக இதழ்களின் வண்டவாளம் இப்படி இருந்தால், தமிழில் வெளிவரும் சிற்றிதழ்களின் உண்மையான முகம் என்ன?

நான் ஆரம்பத்தில் சொன்னேன், ஆற்று மணலும் அர்சுனன் பெண்டாட்டிகளும் என்று. அதை ஊர்ஜிதம் செய்துகொள்ள வேண்டுமானால் இந்திய அரசின் http://rni.nic.in வெப்சைட்டுக்குள் நுழைந்து பாருங்கள். பதிவு செய்யப்பட்டு வெளிவந்துகொண்டிருக்கும் தமிழ் இதழ்கள் என்கிற பட்டியலில் மட்டும் இன்றைய தேதிக்கு 3831 பத்திரிகைகள் இருக்கின்றன. பொள்ளாச்சி நசனின் வெப்சைட்டான http://www.thamizhm.net-ல் அவர் தனக்கு தற்போது வரும் இதழ்கள் என்று ஒரு பட்டியல் கொடுத்திருக்கிறார். அதில் மட்டும் கிட்டத்தட்ட நூறு இதழ்களின் பெயர்கள் காண்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை தனிச்சுற்றுக்கான இதழ்கள். நசனுக்குக் கிடைக்காத இதழ்களின் பட்டியல் தனியாக ஐநூறோ ஆயிரமோ இருக்கலாம். மொத்தக் கூட்டுத் தொகையைப் பாருங்கள். இத்தனை இதழ்கள் உண்மையாகவே வருகின்றனவா, இத்தனை இதழ்களை யாரெல்லாம் நடத்துகிறார்கள், யாரெல்லாம் வாசிக்கிறார்கள், எங்கே இவை கிடைக்கின்றன, இதில் ஏதாவது வர்த்தகம் இருக்கிறதா, இந்த இதழ்களின் நோக்கம் என்ன, உள்நோக்கம் என்ன? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

ஆதியில் கையெழுத்துப் பத்திரிக்கை நடாத்திக்கொண்டிருந்த தமிழாசிரியர்களும், இளைஞர்களும், போராளிகளும் அச்சுத்துறையின் வளர்ச்சியால் பெரும் உற்சாகம் அடைந்தார்கள். கிட்டத்தட்ட ஆர்வக்கோளாறு என்று சொல்லப்படத் தக்க இந்த உற்சாகத்தால் அருகம்புல் போல விளைந்தவைதான் சிறு பத்திரிகைகள். இது பொதுவான கருத்தல்ல. ஏனென்றால் உண்மையாகவே தமிழுக்கும் இலக்கியத்துக்கும் கலைகளுக்கும் தொண்டு செய்த சிறு பத்திரிகைகளின் கணிசமான பட்டியல் நாம் யாவரும் அறிந்த ஒன்றுதான்.

இருந்தாலும் இன்றைய தமிழ்ச்சூழலில் சிற்றிதழ்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றன என்பதை சற்று உற்றுப் பார்க்கலாம். உண்மையான சமூக அக்கறையோடு வெளிவரும் சிற்றிதழ்கள் எவை என்ற நாம் பட்டியலைத் தயாரிக்க முற்பட்டால் அதில் எத்தனை இதழ்கள் தேறும் என்பதே மிகப்பெரிய கேள்விக்குறி. அதற்கான அடிப்படைக் காரணம், சிற்றிதழ்கள் நடத்துபவர்களின் பிரக்ஞைநிலை குறித்த தெளிவு நமக்கு இல்லாது போவதுதான் என்று தோன்றுகிறது. அதோடு சிற்றிதழ்கள் அனைத்தையும் நாம் தரிசித்துவிடவும் முடிவதில்லை. மிகச் சொற்பமாக உள்ள படைப்பாளிகளுக்கு மத்தியில் அவை பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. அடுத்த இதழுக்கான படைப்புகளின் தேவை முன்னிட்டும், சுயத்தம்பட்டம் பொருட்டுமே அவை பலருக்கும் இலவசமாக அனுப்பி வைக்கப்படுகின்றன.

ஒரு சிற்றிதழ் மிகுந்த வீரியத்தோடு தொடங்கப்படுகிறது. பல நவீன எழுத்தாளர்களையும் அதன் ஆசிரியர் அணுகுகிறார், கடிதங்களாகப் பொழிகிறார். தொலைபேசி அழைப்புகள் பறக்கின்றன. இலக்கிய சந்திப்புகளில் நேரிலேயே வேண்டுகோள்கள் வைக்கப்படுகின்றன. ஒருசில சிற்றிதழ் ஆசிரியர்கள் படைப்பாளிகளின் ஊருக்கே வீட்டுக்கே போய், உங்களுக்கு இருக்கிறதா என்று கூட கேட்காமல் இரண்டு மூன்று வேளை உணவையும் உண்டு, உறங்கி, அவர்களின் கையைப் பிடித்தே எழுத வைத்து, ஊருக்குத் திரும்புகிற வண்டிச்சத்தத்தையும்கூட அவரிடமே வாங்கி வருகிற அற்புதத்தையும்கூட நிகழ்த்திவிடுகிறார்கள். இதழ் சிறப்பாக வரவேண்டும் என்கிற காரணத்தை முன்னிருத்தி தங்கள் வாழ்வைக்கூட இழந்து தெருத்தெருவாக அலைய அவர்கள் தயாராக இருக்கிறார்கள். அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு ஒரு இதழுக்கான படைப்புகள் சேகரிக்கப்பட்ட பிறகு அடுத்த பிரச்சனை முளைக்கிறது. அச்சக உரிமையாளர் காகிதம் வாங்கவும் அச்சடித்துத் தரவும் காசு கேட்கிறார். என்ன அநியாயம் பாருங்கள், ஒரு மனிதன் தன் வாழ்வையும் உறவுகளையும் தொலைத்து, தெருத்தெருவாக அலைந்து, ஏறாத படியெல்லாம் ஏறி ஒருசில உலக இலக்கியங்களைத் திரட்டிக்கொண்டு வந்திருக்கிறான், கேவலம் ஓர் அச்சக உரிமையாளன் அதை அச்சடிக்க காசு வேண்டும் என்று கேட்கிறான். இது எந்த ஊர் நியாயம்? எப்போது இந்த நாடு திருந்தும்? நீங்களே சொல்லுங்கள்.

இதற்குப் பிறகும் ஏதோவொரு அற்புதம் நிகழ்ந்து, வரவேண்டிய காலத்திற்குப் பிந்தைய ஏதோ ஒரு மாதத்தில் அந்த இதழ் வெளிவந்தே விடுகிறது. என்ன, ஆயிரம் இதழ் ஆசைப்பட்டது முன்னூறு என்று முடிந்து விட்டது. அவ்வளவுதானே? தமிழில் முன்னூறு பேருக்கு அதிகமாக ஒரே ஒரு அறிவு ஜீவியைக் காட்டுங்கள், அப்புறம் பார்க்கலாம். இதழ் வந்துவிட்டது. ஒரே கொண்டாட்டம்தான். அதை இரண்டாக மடித்து ஒரு ரூபாய் ஸ்டாம்ப்பு ஒட்டி அந்த முன்னூறு பேருக்கு அனுப்பியுமாகிவிட்டது. இனி அதன் தலையெழுத்து. ஒரு இரண்டு மாசத்துக்கு சோலியைப் பார்த்துக்கொண்டு கிடக்கலாம். அப்புறம் வீட்டில் உணவு மறுக்கப்படும்போதோ, ஏதாவது வேலைக்குப் போக நிர்பந்திக்கப்படும்போதோ படைப்புகளைக் கோரி ஒரு தேசாந்திரம் புறப்பட்டுவிட வேண்டியதுதான்.

இது ஒரு வகை. இன்னொரு வகை, மூன்று அல்லது நான்கு இதழ்கள் கொண்டுவந்து பரவலாகத் தன் பெயரைப் பதிவு செய்துகொண்ட பிறகு உடனடியாக இதழை நிறுத்திவிட்டு வணிகப்பத்திரிகைகளில் ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா என்று அலைவது, அல்லது அறிவு ஜீவிகளின் வரிசையில் இடம் ஏதாவது காலியாக இருக்கிறதா என்று நோட்டம் விடுவது.

இப்படியெல்லாம் இல்லாமல் வங்கியிலோ, கல்லூரியிலோ, அரசாங்கத்திலோ வேலை பார்க்கிற தைரியத்தில் உண்மையாகவே ஏதாவது செய்ய முடிகிறதா என்று முயன்று பார்க்கிற விருப்பத்தோடு ஆரம்பிக்கப்பட்ட சிறு பத்திரிகைகளும் உண்டு. ஏனென்றால் சிறுபத்திரிகைகளின் முதுகுக்குப் பின்னால் கையை வைத்துத் தாங்கிக்கொள்ள பொருளாதார நம்பிக்கை ஒன்று மிகுந்த அவசியம். ஏனென்றால், அறிந்தோ அறியாமலோ ஆரம்பிக்கப்படுகிற சிற்றிதழ்கள் வர்த்தக ரீதியாக எவ்விதமான பலனையும் அடைவதேயில்லை என்பதே உண்மை. இதனாலேயே தனி மனித விருப்பத்தை முன்னிட்டே அவை வெளிவருவதும் பிறகு நின்று போய்விடுவதும் காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

இதையும் தாண்டி வெகு சில சிற்றிதழ்கள் வெற்றி பெற்றுவிடுகின்றன. அதற்கு சமீபத்திய இரண்டு உதாரணங்கள் காலச்சுவடு மற்றும் உயிர்மை. நவீன இலக்கியத்தின் முன்னணி எழுத்தாளர்களின் பத்திகள், சிறுகதைகள், ஆழமான கட்டுரைகள், கவிதைகள் ஆகியவை வெளிவருவதற்கான பீடமாக இவை உருவெடுத்திருக்கின்றன. இருந்தாலும் குழுக்களோடு இயங்குபவர்கள் என்கிற, வழக்கமாக சிற்றிதழாளர்கள் மீது எய்யப்படும் அம்பு இவர்கள் மீதும் பாயவே செய்கிறது. காலச்சுவடு மற்றும் உயிர்மை ஆகிய இன்றைய முக்கிய இலக்கிய இதழ்கள் நிற்காமல் வெளிவருவதற்கான காரணம் அவை பதிப்பகங்களாக உருவெடுத்ததுதான் என்று சொன்னால் மிகையில்லை. அவை தங்கள் வெளியீடுகளுக்கான ஊடகமாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த வகையில் இவை சிற்றிதழ்கள் என்கிற எல்லையைத் தாண்டி வணிக இதழ்களின் ராஜபாட்டையில் காலை எடுத்துவைத்துவிட்டன என்பதே உண்மை.

கைப்பிரசுரங்கள்

ஒத்த கருத்துள்ள சிலரை இணைத்துக்கொண்டு சிறு பத்திரிகைகள் தங்களுக்குள் பெரும் சண்டைபோட்டுக்கொண்டிருக்கின்றன என்கிற பொதுவான கருத்து ஒருபுறம் இருக்க, ஒருசில கைப்பிரதிகள் தீவிர இலக்கியவாதிகளின் வீடுகளுக்கோ, இலக்கிய சந்திப்புகளின்போது நேரிலோ வந்து சேருகின்றன. இவை இரண்டு பக்கம், நான்கு பக்கம், ஆறு பக்கம் அல்லது எட்டுப் பக்கம் வரைக்கும் போகலாம். அவை இதழியலின் நசிவுற்ற ஒரு அச்சு நிலை எனலாம். ஒரு குறிப்பிட்ட இலக்கியவாதியையோ, இலக்கியப் பத்திரிகையையோ பற்றிய தன்னுடைய சொந்தக் கருத்தை ஒருவர் தன் சொந்தக் காசில் அச்சிட்டு அதை அந்த இலக்கியவாதி அல்லது பத்திரிகை பங்குபெறும் கூட்டத்தில் தானே நேரில் வந்து, பார்வையாளர்களிடம் தன் கைப்படவே கொடுத்துவிட்டு மேடையில் அமர்ந்திருக்கும் அந்த நபரை முறைத்துக்கொண்டு முன் வரிசையில் விழா முடிகிற வரைக்கும் உட்கார்ந்திருந்துவிட்டு, எவ்விதமான எதிர்ப்புகளையும் வெளிக்காட்டாமல் விழா முடிந்ததும் கிளம்பிப் போவார்.

அரசு மற்றும் அதிகாரத்துக்கு எதிராக போராளிகள் கையாண்ட இந்த தந்திரம், தனி மனிதர்களை வசை பாடுவதற்காக வீணடிக்கப்படுவது அவலம் நிறைந்தது. தன் கருத்தை மற்றவர்களுக்கு தெரிவிக்கும் உரிமையை சட்டம் எல்லாப் பிரஜைகளுக்கும் தந்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் இந்த வகையில் கைப்பிரதிகள் கொண்டு தனி நபர்கள் நிகழ்த்தும் இதழியல் புரட்சி எங்கே போய் முடியும் என்பதை எண்ணிப் பார்க்க இயலவில்லை. தன் கருத்தை எந்த ஊடகமும் வெளியிட விரும்பாத நிலையில் ஒரு தனி மனிதன் இந்த நிலையை எட்டுகிறான். இந்த தந்திரத்தைக் கொண்டே பரபரப்பான எழுத்தாளர்களாக உருவான இலக்கியவாதிகளின் பட்டியலும் யாவரும் அறிந்ததே.

இணைய இதழ்கள்

நாளிதழ்கள், வணிக இதழ்கள், சிற்றிதழ்கள் வரிசையில் இந்த நூற்றாண்டின் இணையற்ற சாதனை இணைய இதழ்கள்தான். ஆனால் இணைய இதழ்களின் இடத்தையும் பெரும்பாலும் வணிக இதழ்களே ஆக்ரமித்துக்கொண்டிருக்கும் அபாயம் தமிழில் நிகழ்ந்துவிட்டது.

அடிப்படையில் இணைய இதழ்கள் வெளிதேசங்களில் வாழும் தமிழர்களை மனதிற்கொண்டே துவங்கப்பெற்றன. ஆனால் அவற்றிலும் காணப்பட்ட வணிக சாத்தியங்கள் வணிக இதழ்களின் கவனத்தைக் கவரவே, அவை தங்கள் போட்டியை அங்கேயும் ஆரம்பித்துவிட்டன. இருந்தாலும் தற்போதைக்கு மேலதிக வணிக சாத்தியம் இல்லாமையால் சுயம்புவான பல இணைய இதழ்கள் வலம் வந்துகொண்டிருப்பதைப் பொறுத்துக்கொண்டிருக்கும் தமிழ் வணிக இதழ்கள், சரியான நேரத்தில் மிகப்பெரிய பாய்ச்சலாக இணையத்தை ஆக்கிரமிக்கப்போவது நிச்சயம் என்பது அனுமானிக்கத்தக்கது.

தற்போது இணையத்தில் ஸிஃபி தமிழ் (http://tamil.sify.com), திண்ணை (http://www.thinnai.com), ஆறாம்திணை- http://www.aaraamthinai.com), திசைகள் (http://www.thisaigal.com), தமிழோவியம்- (http://www.tamiloviam.com), பதிவுகள் (http://www.pathivukal.com), நிலாச்சாரல்- (http://www.nilacharal.com), கீற்று (http://www.keetru.com), வெப் உலகம் (http://www.webulagam.com) என்று பல்வேறு இணைய இதழ்கள் வலம் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றை நிர்வாகம் செய்பவர்களின் மனப்பக்குவத்தைப் பொறுத்தே அவற்றின் தரம் இருக்கிறது. உதாரணமாக திண்ணை 'வெப் உலகின் காலச்சுவடு' என்று சொல்லப்பட்டால், தமிழோவியம் 'இணைய குமுதம்' என்று வர்ணிக்கப்படுகிறது. தமக்கென இணையப் படைப்பாளிகளின் பெரும் உலகை இணைய இதழ்கள் உருவாக்கிக்கொண்டிருக்கின்றன. -இது எதிர்காலத்தில் தரமான படைப்புகள் வெளிவரும் சாத்தியங்களை வெகுவேகமாகச் சுருக்கிக்கொண்டுபோகிற வேலை.

அச்சு ஊடகத்தைப் போல இல்லாமல் எழுதியதைத் திருத்தவும், மறுபதிவு செய்யவும் இணையம் மிகுந்த சாத்தியங்களை உள்ளடக்கியிருக்கிறது. இதுவே இணைய இதழ்களின் எதிர்காலத்தைப் பிரகாசமாக்குகிறது. இணைய இதழ்களைப் போலவே தனிப்பட்ட முறையில் ஆளாளுக்கு ஆரம்பித்திருக்கும் ப்ளாக் எனப்படும் கலாச்சாரம் சில வேளைகளில் சில அற்புதமான பதிவுகளை வெளியிட்டுவிடுகிறது. கிட்டத்தட்ட டைரி எழுதுகிற மாதிரி வேலைதான் என்பதனால் இணைய இதழ்களின் எதிர்காலத்தில் நேரடியான போட்டியாக உருவாகியிருப்பது இந்த ப்ளாகுகள்தான். பெரும்பாலான எழுத்தாளர்கள் ப்ளாக் என்கிற அமைப்புக்குள் நுழைய இன்னும் முன்வராததால் உலகெங்கிலுமுள்ள எழுத்தறிந்த பலரும் அங்கே திண்ணை போட்டு உட்கார்ந்திருக்கிறார்கள். தேன்கூடு (http://www.thenkoodu.com), தமிழ்மணம் (http://www.thamizmanam.com) போன்ற இணைய விலாசங்கள் ப்ளாகர்களின் படைப்புகளை உடனடியாக இணைய வாசகர்களுக்கு தெரிவித்துவிடுகிற வேலையை செய்துகொண்டிருக்கின்றன. இருந்தாலும் ப்ளாகுகளில் நல்லதைத் தேடிப்போனால் அதைக் கண்டுபிடிக்குமுன்னால் நாம் பின்தங்கிவிடும் நிலையே நிலவுகிறது.

இறுதியாக

இணைய இதழோ, சிற்றிதழோ, வணிக இதழோ, செய்தித்தாளோ அது எதுவாக இருந்தாலும் மனித மனத்தின் வக்கிரத்தைத் தூண்டிவிட்டு - அது காமம், குரோதம், மதம், வன்முறை என்று எதுவாகவேண்டுமானாலும் இருக்கட்டும் - அதன் வாயிலாகத் தன் பிழைப்பை ஓட்ட நினைக்கும் நிலைப்பாடே இந்தக் காலகட்டத்தில் வெகுவாக விரிந்திருக்கிறது. மாயமான கற்பிதங்களால் மனங்களைச் சலவை செய்து அதன் மூலமாகக் குளிர்காய நினைப்பதுதான் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் இதழியல் சாதனை என்று தோன்றுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை செய்தித்தாள்கள் மற்றும் வணிக இதழ்கள் எடுத்திருக்கும் விஸ்வரூபம், நம் யாரையும் அவற்றைக் குறித்து விமர்சனம் செய்யவேண்டும் என்று எண்ணிப் பார்ப்பதற்குக்கூட இயலாத நிலையில் வைத்திருக்கிறது. ஒரு வணிக இதழ் அல்லது செய்தித்தாள் நினைத்தால் உங்களை நடுத்தெருவில் நிறுத்திவிட முடியும் என்பதே நிதர்சனம்.

போலீஸ்காரர்களையும், அரசியல்வாதிகளையும், சினிமாக்காரர்களையும் பக்கம் பக்கமாக விமர்சிக்கும் இதழ்கள், அவர்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவை அல்ல என்பது யாவரும் அறிந்த உண்மை. இருந்தாலும் அதை அந்த போலீஸ்காரர்களோ, அரசியல்வாதிகளோ, சினிமாக்காரர்களோகூட வாயைத் திறந்து பேசிவிட இயலாத நிலை இன்று இருக்கிறது. அவர்களின் நிலையே அப்படியென்றால், மீடியாக்களின் தயவில்லாமல் வாழ்க்கை இல்லை என்கிற நிலையை யாவரும் எட்டிவிட்டிருக்கும் இன்றைய சூழலில், அவற்றைப் பற்றியெல்லாம் அக்கறை கொள்ளக்கூட இயலாத தரித்திர நிலையில் இருக்கும் ஒரு சாதாரண மனிதனின் சுதந்திரம் மிகுந்த கேள்விக்குறியாகி இருப்பதில் வியப்பென்ன இருக்கிறது? ஏதாவது ஒரு காரணத்திற்காக போலீசால் சந்தேகிக்கப்பட்டு நிரபராதியான ஓர் எளிய மனிதன் விசாரணை செய்யப்பட்டால் அதோடு அவனது வாழ்க்கை வெளிச்சத்தை இழந்து போய் விடுகிறது. இதற்குக் காரணம் காவல்துறையா இல்லை நீதித் துறையா என்று கேட்டால் இரண்டுமே இல்லை என்றுதான் நாம் பதில் சொல்ல முடியும். அந்தத் துறைகளின் பங்கு குறிப்பிட்ட சட்டகங்களுக்குள் நடந்து முடிந்துவிடுகின்றது. ஆனால் அதை ஊருக்கே உலகுக்கே கொண்டு சேர்ப்பதில் நமது பத்திரிகைகள் காட்டுகிற ஆர்வம் இருக்கிறதே, அதுதான் அந்த எளிய மனிதனை மிதித்து துவம்சம் செய்கிறது.

ஒரு தேசத்தின் முதல் மூன்று தூண்களான நீதித்துறை, அரசுத்துறை, அதிகாரிகள் ஆகியோர் தங்கள் கடமையை செய்யும்போது ஏற்படும் தவறுகளினாலேயே ஒரு தனி மனிதனின் சுதந்திரம் பாதிக்கப்பட முடியும். ஆனால் அந்த மூன்று துறைகளையும் கேள்வி கேட்கக்கூடிய அதிகாரம் உள்ள ஒரே துறையான பத்திரிகையோ தன் கடமை இன்னதென்பதையே மறந்து செயல்படுவதால்தான் தனிமனித சுதந்திரம் உடைந்து நொறுங்கிப்போகிறது. இதுவே இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இதழியல் ஒரு தேசத்தின் மக்களுக்கு, கொஞ்சம்கூட வெட்கமேயில்லாமல் மனமுவந்து இழைக்கும் அநீதி.

ஒரு தனிமனிதனின் வாழ்வில் மற்ற எந்த அதிகாரம் பொருந்திய அமைப்பு குறுக்கிட்டாலும் அவனுக்கான நியாயம் கிடைப்பதற்கான போராட்டத்தைத் துவக்கி வைப்பதும், அதை வென்று தருவதுமே பத்திரிகைகளின் உண்மையான கடமையாக இருக்கும்போது பத்திரிகைகளோ பரபரப்பு என்கிற ஒரே வாதத்தைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு சிறு குற்றங்களையும் ஊதிப் பெருக்கி, தனி மனிதனின் வாழ்வை கொஞ்சம்கூட குற்றவுணர்வே இல்லாமல் குலைத்துவிடுகின்றன. நீங்கள் ஏனென்று கேட்டால் அவை சொல்கின்றன, ''அதுதான் பத்திரிகை தர்மம்''.

இதுபோல் ஒரு தனிமனிதனை Character assacination செய்வர்களுக்கு நமது நீதித் துறையில் வழங்கப்படும் தீர்ப்பு என்ன? செக்ஸ், வக்கிரம், வன்முறை என்று ஒரு மாநிலத்து மக்களின் மூளைகளை சலவைசெய்து கொடுக்கும் இந்தக் காகித வியாபாரிகளுக்கு வழங்கப்படவேண்டிய தண்டனை என்ன?

அதைத் தீர்மானிக்கக்கூடிய அதிகாரம்கூட பத்திரிகைகளின் கைகளில்தான் இருக்கிறதா?

January 18, 2007

விக்ரமாதித்யனின் வேதாளங்கள்

திரிகூட ஞாபகம் - 3

1

நம்பி என்கிற நம்பிராஜன் என்கிற விக்ரமாதித்யன் நம்பி என்கிற அபராஜிதா என்கிற, சமீப காலமாய் புட்டா (கிழவன் என்பதாக விளக்கப்படுகிறது) என்கிற பெயரிலெல்லாம் எழுதிக்கொண்டேயிருக்கும் அண்ணாச்சி என்கிற விக்ரமாதித்யனை நான் முதன் முதலில் சந்தித்தபோதே அவர் தாடி வைத்திருந்தார்.

ஆரண்யம் என்கிற சிற்றிதழை நடத்தத் தீர்மானித்திருந்த காலை ஒரு காலை சென்னையில் கவிஞர் ராஜமார்த்தாண்டனின் சிற்றறையில் புத்ககங்கள் அடுக்கியிருந்த ஒரு கட்டிலுக்கும் முண்டா பனியன் அணிந்திருந்தவர் படுத்திருந்த கட்டிலுக்கும் மத்தியில் காணப்பட்ட சொற்ப இடத்தில் உறங்கிக்கொண்டிருந்த பெரியவர்தான் விக்ரமாதித்யன் என்பதை அப்போதுதான் ஒருகையில் டூத்பிரஷ்ஷும் மறு கையில் பேஸ்ட்டும் வைத்துக்கொண்டு என்னை எதிர்கொண்ட ராஜமார்த்தாண்டன் தெரிவித்திருந்தார். தற்போதைக்கு உறங்கிக்கொண்டிருக்கும் இந்தக் கவிஞர்தான் பிற்பாடு ஆரண்யத்துக்கு எழுதும்போது கவிஞனுக்கு யோனி ஒரு பெருங்கனவு என்று பிரகடனம் செய்யப்போகிறார் என்பது விழித்திருந்த எனக்கும் தெரியாது என்றாலும் அவர் ஒருசில கவிதைகளை உடனடியாக என் கையில் கொடுத்தார். அப்படி ரெடிமேடாக கவிதைகளைக் கையில் வைத்துக்கொண்டு திரியும் ஒரு கவிஞரை அதற்கு முன்னால் நான் சந்தித்ததில்லை. அவருக்கு அது பழக்கம் என்பது பின்னாளில் தெரிந்துகொண்டது. அவர் எழுதிக்கொண்டே இருக்கிறார். பயணங்களில் ஆங்காங்கே எழுதியதை ஆங்காங்கே கொடுத்துவிடுகிறார். பல கவிதைகள் அவரிடம் பிரதி இருப்பதில்லை.

தொடர்ந்து மிகுந்த தெளிவான முகத்துடனும் அக்கறையுடனும் மெல்லிய குரலில் அப்பா என்கிற எனது கவிதைத் தொகுப்பைப் பற்றிய அவருடைய கருத்தை வெளியிட்டார். அது என் முதல் தொகுப்பு. தமிழ்க்கவிஞனின் தலையெழுத்துப்படி நானே வெளியிட்டது. (இப்படித்தான் பிற்பாடு ஆரண்யம், சாம்பல் ஆகிய சிற்றிதழ்கள் கொண்டுவந்த தரு வெளியீடு பிறந்தது) 'அப்பா'வைக் கிட்டத்தட்ட ஒரு தனிமனிதச் சரிதை என்பதாகக் கூறலாம். அவ்விதமான முயற்சிகள் அதுவரை நிகழ்ந்ததில்லை என்பதை மட்டுமே நானறிவேன். அதை விக்ரமாதித்யனும் குறிப்பிட்டார் என்றபோதும், அந்த புத்தகத்தின் மொழி மிகவும் ஏமாற்றம் தருகிறது என்பதாக அவர் சொன்னார். அதை ஒரு வணிகப் பத்திரிகை வெளியிடும் என்பதாக நம்பி எழுதினேன் என்பதை ஒப்புக்கொண்டேன். தொடர்ந்து அவர் ஒரு உத்தேசத்தை ஏற்படுத்தினார். அதன்படி ஐரோப்பிய மொழிகளிலெல்லாம் செய்யப்படுவதுபோல படைப்பை புனர்நிர்மானம் செய்யலாம் என்று அவர் தெரிவித்தார். கவிதைக்கான சரக்கல்ல என்பதால் அதை வேறு வடிவத்தில் எழுதிப் பார்க்கலாம் என்று அவர் குறிப்பிட்டார். அது என் மனதுக்குள்ளேயே கிடந்தது. என்னுடைய புதிய நாவல் ஆஸ்பத்திரி அந்த வேலையைத்தான் செய்து பார்த்திருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. அது உண்மையானால் நம்பிக்கு நன்றி (இதை ஏற்கனவே 'ஆஸ்பத்திரி' எனும் பதிவில் எழுதிவிட்டேன் என்றபோதும் இங்கேயும் கொஞ்சம் தேவைப்படவே செய்கிறது).

2

நம்பியை அடுத்தமுறை நான் சந்தித்தது கோவையில். ஆரண்யம் வெளிவந்த வேகத்தில் பாலைநிலவனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான கடல்முகத்தைக் கொண்டுவந்தோம். அதில் அபராஜிதாவைப்பற்றிய கவிதையொன்றும் உண்டு. அப்போது நண்பர் சித்ரன் (
http://www.chithran.blogspot.com) கோவையில் இரண்டு வேலைகள் செய்துகொண்டிருந்தார். ஒன்று கோவையின் முக்கிய விளம்பர ஏஜென்ஸியில் டிசைனர் உத்யோகம். மற்றது, வேலை முடிந்து வீட்டுக்குப் போகிற வழியில் என்னை வந்து பார்த்து ஃபோட்டோ்ஷாப் டிப்ஸ் கொடுப்பது. அதுவரைக்கும் கோரல்டிராவை வைத்துதான் ஒப்பேற்றிக்கொண்டு அலைந்தேன் என்பதால், கடல்முகம் என்கிற தொகுப்பிற்கு புட்டாவின் முகத்தை வைத்தே கடலும் கரையுமாக ஒரு முகப்பட்டை செய்து கொடுத்தது சாக்ஷாத் சித்ரனேதான் என்கிற தேவரகசியமொன்றை இப்போது வெளியிட்டுவிட்டேன். அந்த முகப்பு இதுதான்.



அட்டையை அலங்கரிப்பவராகவே அமைந்துவிட்டதாலும் கவிஞர் பாலைநிலவனால் ஒரு தகப்பனார் ஸ்தானத்தில் நினைத்துப் பார்க்கப்படுபவராகவும் இருந்த காரணத்தால் அவரையே வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராகக் கொண்டுவருவதுதான் சரியானது என்கிற ஏகமனத் தீர்மானத்தின் பேரில் விக்ரமாதித்யன் கோவைக்கு வந்துசேர்ந்தார். Stop. இங்கேயிருந்துதான் தலைப்பில் காணப்படும் வேதாளங்கள் புறப்படுகின்றன.

விழா நடைபெற இருந்த கல்யாண மண்டபத்திற்குக் காலையே வந்து சேர்ந்துவிட்டார் என்கிற செய்தி எங்கள் அலுவலகத்தை எட்டியது. அங்கே அவரை கவனித்துக்கொள்வதற்காக பாலைநிலவன் காத்திருந்ததால் மற்றவர்கள் மற்ற வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தோம். மத்தியான வாக்கில் திடீரென்று வந்து நின்ற ஆட்டோவிலிருந்து விக்ரம் வெளிப்பட்டார். அவரைக் கைத்தாங்கலாக அழைத்து வர கூடவே பாலைநிலவன். எல்லாம் கள்ளாமை இல்லாததால் வந்த தள்ளாமைதான். அவருக்கு இன்னொரு தோள் இருந்ததால் எழுத்தாளர் ஷாராஜ் அந்தப்பக்கமாகத் தாங்கிப் பிடித்ததோடு வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் நான்தான் ஷாராஜ் என்கிற அறிவிப்பை வெளியிட்டார். விக்கியிடமிருந்து ஒரு ஆஹாகாரம் எழுந்தது. தொடர்ந்து நீதானா அது? அதுசரி ஏண்டா தப்புத்தப்பா கவிதை எழுதறே? என்று ஒரு கேள்வியும் புறப்பட்டது. அதற்குப் பிறகும் ஷாராஜ் ஏகலைவனைப்போல அவரை உள்ளே வரைக்கும் அழைத்து வந்தது புட்டாவின் அதிர்ஷ்டம்தான் (அவர் அதன்பிறகும் கவிதை எழுதுவதும்கூட...).

அலுவலகத்திற்குள் சண்டமாருதம்போல நுழைந்த அவரைப்பார்த்து எனக்கானால் ஆச்சர்யமான ஆச்சர்யம். சென்னையில் தென்றல்போல் கோரைப்பாயில் தவழ்ந்த ஆத்மாவா இது? அலுவலகத்தின் அறை அறையாகப் புகுந்து மனிதர் அடித்த லூட்டிகளைக் கண்ட நாங்கள் சமூக மனிதர்களாய் இருந்ததனால் நெளிய ஆரம்பித்திருந்ததில் வியப்பென்ன இருக்கிறது. சப்தம் அடுத்த அலுவலகங்களுக்கும் எட்டும்போது கொஞ்சம் பயமாகத்தானே இருக்கிறது. அதைத் தொடர்ந்து புயல் மையம் கொண்டதைப்போல ஒரு அறையில் அங்கே கிடந்த நாற்காலிகளையெல்லாம் நிராகரித்துவிட்டு அவர் தரையில் உட்கார்ந்ததுதான் தாமதம். அடுத்த கட்டளை பிறந்தது. போயி குவாட்டர் வாங்கிட்டு வாங்கடா. அதற்கு முன்னால் சாமி வந்த கவிஞர்களைப் பார்த்தறியாத பாவங்களாய் இருந்ததால் அவரே கைவசம் கொண்டுவந்திருந்த மிச்ச சரக்கை அங்கே உட்கார்ந்து அடித்தபோது நாவிலும் கண்ணிலும் ஊறும் நீருடன் பார்த்துக்கொண்டிருந்தோம்.

ஒரு வழியாக தலைவரை தாஜா செய்து திரும்பவும் மண்டபத்திற்கு அனுப்பிவிட்டு நாங்களும் புறப்பட்டு அங்கே போனபோது மாலை ஐந்து மணியாகியிருந்தது. அங்கே பெரும் அதிர்ச்சி ஏற்படும் சம்பவமொன்றை நாங்கள் எதிர்கொண்டோம். விழாத்தலைவர் விக்ரமாதித்யன் freshஆகக் குளித்துவிட்டு பளிச்சென்ற ஆடைகள் அணிந்து மிகுந்த பணிவான மென்மையான மனிதராக அங்கே நின்றுகொண்டிருந்தார். பாலைநிவனின் புத்தகம் சிறப்பாக வந்திருப்பதாகவும் பாலைநிலவன் என்கிற கவிஞனின் மேன்மைகள் குறித்துமெல்லாம் மேடையில் பேச வேண்டியதன் முன்வெளியீட்டுத் திட்டம்போல அவர் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்து அவரைப்பற்றி மதியானம் மரியாதைக் குறைவாக நினைத்துவிட்டோமோ என்று எங்களுக்குள் ஒரு குற்ற உணர்ச்சி எழுந்துவிட்டிருந்தது.

அந்த மாபெரும் விழாவிற்கு மொத்தம் பதினைந்துபேர் வந்திருந்ததனால் (அதில் ஐந்துபேர் பாலைநிலவனின் family) மேற்கொண்டு காத்திருக்க முடியாமல் இரண்டு மணிநேரம் தாமதமாக ஆரம்பிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சரியான நேரத்திற்கு ஆரம்பிக்காதது எங்கள் தவறாயிருக்க, அதற்குள் 'ஒரு' மனிதராகக் காணாமல்போய் 'இரண்டு' மனிதராகத் திரும்பிவந்த விக்ரமாதித்யனைப் பற்றி குற்றம் கூற என்ன இருக்கிறது. அதன்படி விழா துவங்கும்போது மேடையில் உட்கார்ந்திருக்கவேண்டிய அவர் வராண்டாவில் flat ஆகி மல்லாந்து கிடந்தார். இதனால் விழாப் புகைப்படங்களில் அவர் இடம்பெற முடியாமல் போய்விட்டது. என்ன செய்வது?

விழாவின் முடிவில் நள்ளிரவில் full flat ஆக உள்ள ஒரு மனிதரைத் தூக்கிக்கொண்டு போய் லாட்ஜ் அறை எடுப்பது பெரிய சவாலாக இருந்தது. நண்பரொருவருக்குத் தெரிந்த லாட்ஜ் ஒன்றில் மூன்றாந்தர அறை ஒன்று கிடைத்தது. மிகுந்த கறைகளைக் கொண்ட ஸ்பான்ச் மெத்தையில் விக்கியைக் கிடத்திவிட்டு நல்ல படுக்கைகளை நாடி நாங்கள் புறப்பட்டோம். வென்டிலேஷன் இல்லாத அந்த அறையில் இரவைக் கழித்திருந்த விக்ரமாதித்யனையும் பாலைநிலவனையும் பார்க்க அடுத்தநாள் காலை நாங்கள் போனபோது அவர்கள் இருவரும் குடியை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். மற்ற நண்பர்களும் சேர்ந்து அவரோடு மதுவருந்தத் தொடங்கினோம். கவிதைகள் குறித்தும் பயணங்கள் குறித்தும் கவிஞர்கள் குறித்தும் மிகுந்த ஆச்சர்யமளிக்கக்கூடிய உரையாடலாக ஒன்று அப்போது உருவாகியிருந்தது. நம்பி கையில் எப்போதும் சரக்கு நிறைந்த தம்ளரை வைத்துக்கொண்டிருப்பதை விரும்புபவராக அப்போது காணப்பட்டதை நான் கவனித்தேன். நாங்கள் குடித்த அளவு கூட அவர் குடிக்கவில்லை. தம்ளர் கையில் ஆடிக்கொண்டேயிருக்கிறது. எப்போதாவது வாய்வரைக்கும் போகிறது இரண்டு சொட்டு நாக்கிலும் ஒரு மடக்கு தாடியிலும் வழிகிறது. வலதுகையால் சட்டையில் படரும் ஈரத்தைத் துடைத்துக்கொள்கிறார். பேச ஆரம்பித்துவிடுகிறார். அவ்வளவுதான். ஆகாரம் ஏதேனும் உட்கொள்ளத்தான் வேண்டும் என்கிற எங்களின் விண்ணப்பத்தை அவர் தொடர்ந்து நிராகரித்துக்கொண்டேயிருந்தார். உணவு தருவிக்கப்பட்டபோது நாங்கள் எல்லோரும் உண்டபிறகும்கூட அவர் சாப்பிட்டா குடிக்க முடியாதுடா என்றே சொல்லிக்கொண்டிருந்தார். கடைசியாக நாலு மணிக்கு அவர் உட்கார்ந்த இடத்திலேயே படுத்து உறங்கிப்போனதும் அவரை ஊருக்கு அனுப்புவதற்கான பணத்தைத் தேடுவதற்காக நாங்கள் வெளியே வந்தோம். ஸ்ரீபதி எங்கோ அலைந்து முன்னூறு ரூபாய் கொண்டுவந்தான்.

மாலை ஏழுமணிக்கு அவர் விழித்ததும் கிளம்பலாமா என்று கேட்கவேண்டிய துர்பாக்கிய நிலை என் மீது சுமத்தப்பட்டது. முற்றிலும் போதை தெளிந்திருந்த புட்டா மிகுந்த பணிவுடன் நேரம் என்ன என்று கேட்டார். ஏழு என்று கேட்டதும் உடனடியாக ஒரு அவசரக் குளியல் போட்டு பளிச்சிடும் உடைகள் அணிந்து வெளியேக ஆயத்தமானார். நாங்கள் நாலைந்து பேர் இருந்தோம். அறைச் சத்தத்தைக் கொடுத்துவிட்டு வாசலுக்கு வந்தபோது விக்கி எங்கும் எரியும் விளக்குகளின் வினோதமான வெளிச்சத்தைப் பார்த்து வியந்தார். வானத்தை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தார். தன் ஆச்சர்யத்தை எங்களிடம் பகிர்ந்தளித்தார். அடப்பாவிகளா, சாயந்திரமாடா? என்று அப்போது அவர் கேட்டார். அதைத் தொடர்ந்து, அப்ப குடிக்கணுமேடா என்று ஒரு அறிவிப்பையும் வெளியிட்டார்.

3

இந்த விபரங்களெல்லாம் ஏன் திரிகூட ஞாபகத்தில் வந்துகொண்டிருக்கவேண்டும் என்று கேட்கிற உங்களைப்போன்ற பாமரர்களுக்காகவே எழுதப்பட்டதுதான் இந்த மூன்றாவது பாகம். எழுத்தாளர்கள் என்றால் இப்படித்தான். உங்களைப்போல சொல்ல வந்தததை நேரடியாகச் சொல்லிக்கொண்டுபோனால் எழுத்தாளன் என்று ஒருத்தன் இருப்பதாக எதைக்கொண்டு அடையாளம் காண்பீர்கள்? இந்த உத்திகள் உங்களுக்கென்ன புதுசா? கவனியுங்கள்...

நான் அடக்கம் ஐவர் குழு குற்றாலம் வந்த கதையைத்தான் நீங்கள் ஏற்கனவே அறிவீர்களே... அறியாதவர்கள் முந்தைய பத்திகளை வாசித்துத் தொலையுங்கள். அறிந்தவர்கள் என்னை மிகவும் மகிழ்விக்கிறார்கள். அவர்களுக்கு எனது சக தெய்வங்கள் எல்லா செளபாக்கியங்களையும் தருமாறு ஏற்பாடு செய்து வைத்திருக்கிறேன் (இந்த இடத்தில் நிறுத்திவிட்டு திரிகூட ஞாபகம் பழைய பத்திகளைப் படித்துவிட்டு இதைத் திரும்பவும் வந்து தொடரும் அன்பர்களுக்கும் இந்த offer செல்லுபடியாகும். இருந்தாலும் சக தெய்வங்கள் என்று குறிப்பிடப்படுவதைப் புரிந்துகொள்ள விரும்புபவர்கள் கண்டிப்பாக இந்த ப்ளாகில் காணப்படும் 'நீர்நிலையிலிருந்து ஒரு குரல்' எனும் சிறுகதையைப் படித்தேயாகவேண்டும்). குற்றாலத்தில் நாங்கள் தங்க ஏற்பாடு செய்திருந்த நண்பர் டிகேசி (நண்பர் என்று சொல்லக்கூடாதா என்ன)யின் பெயரர்களின் வீடுகள் தென்காசியில் இருந்ததால் நாங்கள் நேராக தென்காசியை அடைந்தோம். பின்னாளில் என் பழைய காதலி ஒருத்தியை நினைவுபடுத்தும் நயன்தாரா என்கிற ஒரு வார்த்தை பேச ஒரு வரு்ஷம் காத்திருந்த நடி(கை) தமிழில் தன் அறிமுக சினிமாவுக்காக திருவல்லாவிலிருந்து வந்து மிதிக்கப்போகிற மண் என்கிற மகத்துவம் அறியாது அந்த ஊருக்குள் நாங்கள் ஆரோகணித்திருந்த 'சாந்திரோ' என்கிற வகை வெள்ளை வாகனம் நுழைந்தது. காரில் உடன் இருந்தவர்கள் யாரார் என்பதை திரும்பவும் ஒருமுறை சொல்லித் தொலைக்கிறேன். அது இங்கே அவசியம் தேவைப்படுகிறது. காரை ஓட்டிக்கொண்டிருந்தவரும் அதன் உரிமையாளருமான கோவையைச் சார்ந்த தொழிலதிபர் ரவீந்திரன், எழுத்தாளர் நாஞ்சில் நாடன், எழுத்தாளர் சூத்ரதாரி (இவர் தன் பெயரை தற்போது எம். கோபாலகிருஷ்ணன் என்பதாகவே குறிப்பிடுகிறார்) கஸ்தூரிமான் புகழ் மரபின் மைந்தன் முத்தையா மற்றும் தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளனும் சுதேசமித்திரனுமான அடியேன். இதில் முன் இருக்கையில் நாஞ்சிலும், பின்னிருக்கையில் இடது பக்கம் நானும் வலது பக்கம் சூத்ரதாரியும் நடுவில் மரபின்மைந்தனும் உட்கார்ந்திருந்தோம். டிகேசியின் வீட்டிற்கு ரவீந்திரன் ஏற்கனவே போயிருக்கிறார் என்பதால் மிகச்சரியாக தவறான ஒரு தெருவுக்குள் வாகனம் நுழைந்துவிட்டிருந்தது. தென்காசிக்குள் நுழைந்தபோதே எங்களுக்குள் ஒருவிதமான சம்பாஷணை எழுந்திருந்தது. வழியில் விக்கியிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டுமே என்பதுதான் அது. அதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா என்று வினவுபவர்கள் மிகுந்த அழுத்தக்காரர்கள் என்பதாக இப்போது நான் பகிரங்கமாக அறிவிக்கிறேன். அவர்களிடம் நான் பரிந்துரை செய்வது இதைத்தான், தொடர்ந்து வாசியுங்கள்.

தவறான சாலைக்குள் நுழைந்துவிட்டோம் போலிருக்கிறது என்று ரவீந்திரன் ஒரு அறிவிப்பை அப்போது வெளியிட்டார். அதைத் தொடர்ந்து நான் ஒரு அபாய அறிவிப்பை வெளியிட்டேன். எதற்கும் ஜாக்கிரதையாக இருங்கள், நாம் தவறுதலாக வக்கீல் அனந்தபத்மனாபபிள்ளை வளவுக்குள் நுழைந்துவிடப் போகிறோம் என்பதுதான் அது. அதைக்கேட்டு எல்லோரும் ஒருமுறை சிரித்து வைத்தார்கள். அந்த வளவில்தான் விக்ரமாதித்யனின் வீடு இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், அவர்களுக்குமா தெரியாது.

ஆனால் அவர்களின் சிரிப்பு அடுத்த கணம் மறைந்து விட்டது. ஏனென்றால் நாங்கள் உண்மையாகவே வக்கீல் அனந்தபத்மனாபபிள்ளை வளவுக்குள்தான் வண்டியை செலுத்திக்கொண்டிருந்தோம் என்பது ஒரு பெயர்ப்பலகையிலிருந்து தெரியவந்தபோது சாந்திரோவுக்குள் பெருத்த அமைதி நிலவியது. நாங்கள் ஏதோ ஜுராசிக் பார்க்குக்குள் நுழைந்துவிட்ட ஆட்டுக்குட்டிகள் போல ஒருவித பீதியை அடைந்தோம். எதற்கும் கண்ணாடியை ஏற்றிக்கொள்ளலாமா என்று நான் அச்சத்துடன் வினவினேன். அதற்கும் எந்த பதிலும் இல்லை. அதற்குள் அந்த வளவு முடிந்து சாலை வந்துவிட்டிருந்தது. அதில் இடது புறமாக ரவீந்திரன் காரைத் திருப்பினார். அவ்வளவுதான், அந்தச் சாலைக்கு வரும் அடுத்த வளவில் விக்ரமாதித்யன் நடந்து வந்துகொண்டிருப்பதை நாங்கள் எங்கள் கண்களால் பார்த்துவிட்டோம். கதவோரம் இருந்தவர்கள் மிகுந்த அச்சத்தோடு கண்ணாடியை ஏற்றினோம். அவர் நல்லகாலமாக எங்களைப் பார்த்திருக்கவில்லை என்பது எங்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது. அதைத் தொடர்ந்து நாஞ்சில் இது என்ன அநியாயம் என்று தன்னைத் தானே நொந்துகொண்டார். என்ன இருந்தாலும் அவர் ஒரு சக படைப்பாளி என்பதாக அப்போது அவர் சொன்னார். அதை நானும் மிகுந்த குற்ற உணர்வோடு ஏற்றுக்கொண்டேன். அந்த நேரத்தில் ரவீந்திரன்தான் மிகவும் அப்பாவித்தனமாக ஏன் அவரைப் பார்த்து இப்படி பயப்படுகிறீர்கள் என்று கேட்டார். அதைத் தொடர்ந்து அவரைப் பார்த்து நாங்கள் ஏன் பயப்படுகிறோம் என்பதைப் பற்றிய ஒரு உரையாடல் எழுந்த வகையில் அப்போதைக்கு எங்களின் குற்ற உணர்வு மறைந்துவிட்டிருந்தது.

டிகேசி வீட்டிற்குப் போனபிறகு குற்றாலம் போய் மூன்று நாட்கள் முடிந்தன. அதுவரைக்கும் நாங்கள் விக்ரமாதித்யனை எதிர்கொள்ளாததாலும் நில்லாப் பிரசங்கங்களை எதிர்கொள்ள நேர்ந்ததாலும் அவரை முற்றிலும் மறந்தே போயிருந்தோம். மூன்றாம்நாள் மாலை ரசனை மாத இதழ் வெளியீட்டு விழாவும் டிகேசி பிறந்தநாள் விழாவும் தென்காசியில் ஒருங்கே நடந்தது. நாங்கள் அதற்காகத்தான் போயிருந்தோம் என்பதால் எப்படியும் விழாவுக்கு விக்ரமாதித்யன் வருவார் என்பதை எதிர்பார்த்தோம். ஆனால் அவர் வந்திருக்கவில்லை என்பது எங்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது. ஒரு வழியாக விழா முடிந்ததும் ஏதோ சினிமா முடிந்ததும் எல்லாம் முடிந்துவிட்டது என்று நாம் சாதாரணமாகக் கருதுவதுபோல நாங்கள் மிக நிதானத்தோடு வெளியே வந்தோம். அப்போது கோபால் வாசலைக் கடக்காமல் எதற்காக ஒரு ஓரமாக இருட்பிரதேசமாகப் பார்த்து நின்றுகொண்டிருக்கிறார் (கொஞ்சம் desentஆகச் சொல்லவேண்டுமானால் எவ்வளவு கஷ்டப்படவேண்டியிருக்கிறது பாருங்கள்!) என்று எனக்குள் ஒரு வியப்பு விரிந்தது. அதைத் தொடர்ந்து நான் படிகளைக் கடக்க யத்தனித்தபோது எதிரில் ஓர் உருவம் தென்பட்டது. பழுத்த தாடியும் மெலிந்த திரேகமும் காவியேறிய வெள்ளாடையும் போதை ஏறிய தள்ளாட்டமுமாக ஓர் உருவம். சாக்ஷாத் புட்டாவேதான். நான் அப்போது ஓர் அசிங்கமான வேலை செய்தேன். அருகில் காணப்பட்ட காருக்குப் பின்னால் போய் மறைந்துகொண்டேன். அடப் படுபாவி என்று என் மனமானால் பதைக்கிறது. எனைத் தொடர்ந்து யாரெல்லாம் அப்படி வந்து ஒளிந்துகொண்டார்கள், காரில் ஏறி தப்பித்துக்கொண்டார்கள் என்பதையெல்லாம் சொல்லி அவர்களைப் போட்டுக்கொடுக்க விரும்பவில்லை (ஏனென்றால் அது உங்களுக்கே தெரியும்!). கார் நாங்கள் போக வேண்டிய திசைக்கு எதிர்த் திசையில் போகிறது என்பதைக் கண்டுபிடிக்கவே அரை கிலோ மீட்டர் போக வேண்டியிருந்தது. அதற்குள் நண்பர் ரவீந்திரன் மிகவும் விசனப்பட்டு காணப்பட்டார். ஏன் ஒரு மனிதரை இப்படி அஞ்சவேண்டும் என்று அவர் வருத்தப்பட ஆரம்பிக்கவும், நாஞ்சிலும் தன் குற்ற உணர்வை வெளிப்படுத்த ஆரம்பித்தார். காரைத் திருப்பிக்கொண்டு அதே வழியாக வந்தோம். அந்த நிகழ்ச்சி நடந்த மண்டபத்தைக் கடந்துதான் டிகேசி பெயரர்களின் வீட்டுக்குப் போகவேண்டியிருந்ததால் அந்த மண்டபத்தை அச்சத்தோடு நெருங்கினோம். நல்லகாலமாக கவிஞர் வாசலில் இல்லை. உள்ளே போய்விட்டார் போலிருக்கிறது என்று யாரோ சொன்னார்கள். அவர் யாரையாவது கவனித்தாரா என்று வேறொருவர் கேட்டபோது, நல்ல போதையில் இருப்பதால் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்று ஒரு ஆறுதல் வாக்கியம் நிலவியது.

டிகேசி வீட்டிற்கு வந்து இரவு உணவு உண்டுவிட்டுத்தான் போகவேண்டும் என்று எங்களை அன்போடு வற்புறுத்தியிருந்தார்கள். இருந்த கும்பலில் குடிப்பழக்கம் உள்ளவர்களில் ஒருவனான நான் அதை என்ன செய்து தவிர்க்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்திருந்தேன் (விவரம் தெரியாதவர்கள் சாப்பிட்டுவிட்டால் குடிப்பது சிரமம் என்று விக்கி சொன்னதை நினைவிற்கொள்க). யோசனை ஒன்றும் ஓடுவதற்கு முன்னால் சாந்திரோ டிகேசி வீடுவரைக்கும் ஓடிவந்துவிட்டது. அருமையான உணவு அன்போடு மீண்டுமொருதரம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து டிகேசியின் சொந்த புத்தக அலமாரியை கொஞ்சநேரம் மேய்ந்தபிறகு (மூலதனம் அந்தக்காலத்து முதல் பதிப்பு காணக்கிடைத்தது ஓர் ஆச்சர்யம்!) வெளியே வந்தோம். வாசலில் நின்றுகொண்டிருந்தார் நம்ம அண்ணாச்சி.

அதற்குப் பிறகும் என்னால் சும்மா இருக்க முடியவில்லை. ஒருதடவை நாய் வேஷம் போட்டதற்காக ஆயுள் முழுக்கவா குரைக்க முடியும்? ஆனது ஆகட்டும் என்று (வந்து மூன்று நாட்கள் ஆயிற்று என்ற உண்மையை மட்டும் மறைக்க முடிந்தால் தேவலை!) அவர் அருகில் போய் நின்றேன். பின்னாலேயே கோபால்! விக்ரமாதித்யன் கழனியூரனோடு பேசிக்கொண்டிருந்தார். என்னைத் திரும்பிப் பார்த்தார். வணக்கம், அடையாளம் தெரிகிறதா என்று கேட்டு புன்னகைத்தேன். அவர் என் முகத்தை ஊடுருவிப் பார்த்தார். என்னை அடையாளம் கண்டுகொண்ட சுவடே காணவில்லை. அதைத் தொடர்ந்து யார் நீங்க? என்று வினவினார். எனக்கு இப்படிக்கூட லக்கி பிரைஸ் அடிக்குமா என்று இருந்தது. இப்படியென்று தெரிந்திருந்தால் முன்னால் வந்து நின்றிருக்கவே வேண்டாமே என்று என் அவசர புத்தியை கடுமையான வசவுகளால் தாக்க ஆரம்பித்திருந்தேன். ஒருபக்கம் கோபமாகவும் இருந்தது. சரி உன் மூஞ்சி என்ன எம்ஜி ராமச்சந்திரன் மூஞ்சியா இல்லை கருணாநிதி மூஞ்சியா மக்கள் மறக்காமல் ஞாபகம் வைத்துக் கொள்வதற்கு என்று ஓர் ஆறுதல் எழுந்தது. அதைத் தொடர்ந்து ரொம்ப சந்தோ்ஷம் என்று நான் அவரை விட்டு விலகி நடக்க ஆரம்பித்தேன். ஒரு பத்தடி நடந்திருப்பேன். பின்னாலிருந்து ஒரு குரல். 'டேய் சுதேசமித்திரா!'. மிகுந்த உற்சாகத்தோடு திரும்பிப் பார்த்தேன். அவர் 'உன்னை மறப்பேனாடா?' என்று கூவினார். அதற்குள் நான் அவருக்கு அருகில் போயிருந்தேன். மிகுந்த வாஞ்சையோடு அவர் என்னோடு உரையாட ஆரம்பித்தார். எனக்குள் குற்ற உணர்வு கத்தியை எடுத்துக்கொண்டு துரத்த ஆரம்பித்தபோது, அவரிடம் எல்லா உண்மையையும் சொல்லிவிடலாமா என்று நான் நினைத்தேன். அதற்கு பதிலாக ஒரு நூறு ரூபாய் நோட்டை அவரிடம் கொடுத்தேன். அதை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. என்னடா இது? என்று கேட்டார், கையை உயர்த்திப் பார்த்தார். இவ்வளவுதானாடா நீ என்பதை வேறு வார்த்தைகளால் சொன்னார், 'இருக்கட்டும்டா!' தன் சட்டைப் பையில் அதை வைத்துக்கொண்டார்.

*

கோவையில் அவர் மாலை ஏழு மணிக்கு வெளியே வந்து சாயந்திரமாடா? என்று கேட்டபிறகு, பாலை நிலவனும் அவரும் சென்று குடித்துவிட்டு வந்தார்கள். அதைத் தொடர்ந்து அவரை பஸ்நிலையத்திற்கு நாங்கள் அழைத்துப் போனோம். ஒரு மதுரை பேருந்து கிளம்பிக்கொண்டிருந்தது. அதில் அவருக்கு முன்னதாகவே ஒருவன் ஏறி அவரது பையை வைத்துவிட்டு வந்தான். அவர் எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டார். அவரிடம் காசில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். எல்லோருக்கும் தெரியும் என்பது அவருக்கும் தெரியும். அவரை நாங்கள் பஸ்ஸில் ஏற்றி விடுகிறோம். அவர் ஏறுகிறார். கடைசிவரைக்கும் பணம் என்று ஒரு வார்த்தை அவர் கேட்கவில்லை என்பது அப்போது எனக்கு ஞாபகம் வந்தது. கடைசி நேரத்தில் அவரது கையில் இதேபோலத்தான் நான் இரண்டு நூறு ரூபாய்த் தாள்களையும் ஒரு ஐம்பது நூறு ரூபாய்த் தாளையும் திணித்தேன். அதை என்ன என்றுகூட அவர் பார்க்கவில்லை. பஸ்ஸில் ஏறிக்கொண்டார். பஸ் நகர்ந்து போவதை நாங்கள் பார்த்துக்கொண்டு நின்றோம் - ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க சகியாமல்!

January 12, 2007

இரண்டாவது நாவல்

2005 முடிவில் நான் எழுதி முடித்த எனது இரண்டாவது நாவல் ஆஸ்பத்திரி ஒருவழியாக 2006 முடிவில் வெளிவந்துவிட்டது. நண்பர் மனுஷ்யபுத்திரன் புண்ணியத்தில் கடந்த 30.12.2006 அன்று சென்னையில் வெளிவந்தது ஆஸ்பத்திரி. எழுதியதோடு சரி, சொந்த நாவலையே ஒரு சவலைப்பிள்ளை போல கவனிக்காமல் விட்டுவிட்டேனோ என்று இப்போது வருத்தமாக இருக்கிறது. feedbackகள் மிகுந்த நம்பிக்கை அளிப்பவையாக இருக்கும்போது இந்த எண்ணம் மனத்தின் மேல் மட்டத்தில் வந்து மிதக்கிறது. விழாவில் நண்பர் எம்.கோபாலகிருஷ்ணன் நாவலைப் பற்றிய நல்லதொரு உரையை வழங்கினார். அவருக்கு என் நன்றிகள். முன்னுரை வழங்கிய நாஞ்சில் நாடனுக்கும் என் நன்றிகள் உரித்தாகின்றன (மேடையில் ஏற்புரை வழங்குவதற்கு வாய்ப்பில்லாமல் போனதால் இங்கே அதைச் செய்துகொண்டிருக்கிறேன் போலிருக்கிறது). நான் முன்பே சொன்னதுபோல கடந்த புத்தகக் கண்காட்சிக்கு வெளிவர இயலாமல் போன நாவல் இந்த புத்தகக் கண்காட்சிக்குள் வந்துவிட்டது ஆறுதல்தான். அதிலும் உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்திருப்பது ஒரு கூடுதல் விசேஷம்.

திடீரென்று என்ன நடந்தது என்பது தெரியவில்லை, தொலைக்காட்சியும் சம்சாரமும் சலித்துப் போனதாலோ என்னவோ நம் மகாஜனங்கள் புத்தகங்களை வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். பதிப்பகங்கள் முழுவீச்சோடு ரியல் எஸ்டேட் போல பெருக ஆரம்பித்திருக்கின்றன. புத்தகங்களைப் பதிப்பித்துத் தள்ளுகின்றன. அதிலும் நல்ல புத்தகங்களாக பதிப்பிக்கப்படுகிற அவலம் வேறு நிகழ்கிறது. முன்பெல்லாம் புத்தகம் என்று சொன்னால் காதல் கவிதைகளாகவும், அதன்பிறகு சுயமுன்னேற்ற நூல்களாகவும் இருந்து வந்தது. இப்போது வாசகர்களின் கவனம் திரும்பிவிட்டதா அல்லது வேறு விதமான வாசகர்கள் புதிதாக உருவாகியிருக்கிறார்களா என்பதை அறிய இயலாத வண்ணம் நல்ல புத்தகங்கள் நல்ல அச்சில் நல்ல விலையில் கிடைக்கிற சூழ்நிலையும் விற்பனையாகிற சாத்தியமும் காண்கிறது.

நல்லது.