January 12, 2007

இரண்டாவது நாவல்

2005 முடிவில் நான் எழுதி முடித்த எனது இரண்டாவது நாவல் ஆஸ்பத்திரி ஒருவழியாக 2006 முடிவில் வெளிவந்துவிட்டது. நண்பர் மனுஷ்யபுத்திரன் புண்ணியத்தில் கடந்த 30.12.2006 அன்று சென்னையில் வெளிவந்தது ஆஸ்பத்திரி. எழுதியதோடு சரி, சொந்த நாவலையே ஒரு சவலைப்பிள்ளை போல கவனிக்காமல் விட்டுவிட்டேனோ என்று இப்போது வருத்தமாக இருக்கிறது. feedbackகள் மிகுந்த நம்பிக்கை அளிப்பவையாக இருக்கும்போது இந்த எண்ணம் மனத்தின் மேல் மட்டத்தில் வந்து மிதக்கிறது. விழாவில் நண்பர் எம்.கோபாலகிருஷ்ணன் நாவலைப் பற்றிய நல்லதொரு உரையை வழங்கினார். அவருக்கு என் நன்றிகள். முன்னுரை வழங்கிய நாஞ்சில் நாடனுக்கும் என் நன்றிகள் உரித்தாகின்றன (மேடையில் ஏற்புரை வழங்குவதற்கு வாய்ப்பில்லாமல் போனதால் இங்கே அதைச் செய்துகொண்டிருக்கிறேன் போலிருக்கிறது). நான் முன்பே சொன்னதுபோல கடந்த புத்தகக் கண்காட்சிக்கு வெளிவர இயலாமல் போன நாவல் இந்த புத்தகக் கண்காட்சிக்குள் வந்துவிட்டது ஆறுதல்தான். அதிலும் உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்திருப்பது ஒரு கூடுதல் விசேஷம்.

திடீரென்று என்ன நடந்தது என்பது தெரியவில்லை, தொலைக்காட்சியும் சம்சாரமும் சலித்துப் போனதாலோ என்னவோ நம் மகாஜனங்கள் புத்தகங்களை வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். பதிப்பகங்கள் முழுவீச்சோடு ரியல் எஸ்டேட் போல பெருக ஆரம்பித்திருக்கின்றன. புத்தகங்களைப் பதிப்பித்துத் தள்ளுகின்றன. அதிலும் நல்ல புத்தகங்களாக பதிப்பிக்கப்படுகிற அவலம் வேறு நிகழ்கிறது. முன்பெல்லாம் புத்தகம் என்று சொன்னால் காதல் கவிதைகளாகவும், அதன்பிறகு சுயமுன்னேற்ற நூல்களாகவும் இருந்து வந்தது. இப்போது வாசகர்களின் கவனம் திரும்பிவிட்டதா அல்லது வேறு விதமான வாசகர்கள் புதிதாக உருவாகியிருக்கிறார்களா என்பதை அறிய இயலாத வண்ணம் நல்ல புத்தகங்கள் நல்ல அச்சில் நல்ல விலையில் கிடைக்கிற சூழ்நிலையும் விற்பனையாகிற சாத்தியமும் காண்கிறது.

நல்லது.

3 comments:

Mookku Sundar said...

//அதிலும் நல்ல புத்தகங்களாக பதிப்பிக்கப்படுகிற அவலம் வேறு நிகழ்கிறது. //

சந்தோஷமான அவலமோ..?!!!! ;-)

இளங்கோ-டிசே said...

வாழ்த்து.

விஜய் மகேந்திரன் said...

best wishes .your second novel ''hospital''(aspathiri) having lot of readable qualities,important one for modern middle class society.
vijay mahendran,chennai