April 23, 2009

சினிமா கலை வடிவம் அல்ல!


பொத்தாம்பொதுவாக சினிமா என்பது கலைவடிவம் அல்ல என்பதாக ஒரு அறிக்கையை வெளியிட்டால் உலகில் உலவும் அத்தனை மொழிகளிலிருந்தும் வசைமாரி பொழிந்துவிடுவார்கள். ஆனால் தமிழர்களுக்கு மட்டும் அந்த யோக்கியதை இல்லை. ஏனென்றால் தமிழ் சினிமாவில் கலைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் கலைதான் இல்லை.

நடிகன் என்பவன் நிகழ்த்துகலைஞன். ஆனால் அவன் நடிப்பைக் கற்றுக்கொண்டு வந்தால்தான் வாய்ப்பு என்பதாக தமிழ் சினிமா கோருவதில்லை. பொதுவாகவே தமிழ் சினிமா அது ஒரு கூட்டு முயற்சி என்றபோதும் இயக்குனரின் திறமையை சற்றே அதிகமாகவே நம்புவதாகவே இருக்கிறது. ஓர் இயக்குனர் நினைத்தால் திருவிழாவில் காருக்குள் தலையை நுழைத்து வணக்கம் போட்டவன்கூட ஹீரோவாக ஆகிவிட முடிகிறது. இந்த இடத்தில் திரும்பவும் பாரதிராஜாவை வம்புக்கிழுக்க வேண்டியிருக்கிறது. அவர் தன் படத்தின் நாயகர்களை பெரும்பாலும் இவ்விதமாகத்தான் கண்டெடுத்தார். நாட்டியமாடத் தெரியாத பெண்ணை நாயகியாக்கிவிட்டு தவித்த சுரேஷ் கிருஷ்ணாவைப்போல நடிக்கத் தெரியாத இளைஞனை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வந்து நடிகனாக்கிக் காட்டுகிறேன் என்று அவர் படுத்திய இம்சைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. ஒருவர் நல்ல இயக்குனர் என்பதற்காக நடிக்கவே தெரியாத ஒருவரை நடிகராக்கிவிடலாம் என்கிற கொடுமை உலகின் வேறு எந்தெந்த மொழிகளில் எல்லாம் நடக்கிறதோ தெரியவில்லை.

சினிமா என்பது பல கலைகளின் கூட்டுத் தயாரிப்பு என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் பல கலைஞர்களும் தங்கள் மூளையைக் கசக்கிப் பிழிந்து, வியர்வையை ஆறாய் ஓடவிட்டு தயாரித்துக் கொடுக்கும் கடைசிப் பண்டமான சினிமா உண்மையில் கலைவடிவமாகத்தான் இருக்கிறதா என்பதாக நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். பதிலை நான் சொல்ல வேண்டியதில்லை.

ஏதோ மகேந்திரன் ஒரு சில படங்கள் கொடுத்தார். எப்போதோ ஒரு மணிரத்னம், அமீர், கேபிடல் சசிகுமார், ராம் என்று ஒருசிலர் வருகிறார்கள் (இந்தக் கட்டுரைத் தொடரில் திரும்பத் திரும்ப இவர்களின் பெயர்களையே சொல்ல நேர்வதிலிருந்தே இங்கே காணும் வறட்சியைப் புரிந்துகொள்ளலாம். மற்றபடி இவர்கள் எனக்கு மாமன்மார்களோ மச்சான்மார்களோ இல்லை. அல்லது இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு என்னைக் கதாநாயகனாக்கி எதிர்காலத்தில் ஆட்சிப்பொறுப்பையும் ஒப்படைக்கப்போகிறார்கள் என்பதாகவும் நான் அபத்தமாக யோசிப்பதில்லை). நான் சொல்ல வருவதை மற்றவர்கள் சரிவர உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதே எனது கோரிக்கை.

முன்பே சொன்னதுபோல நடிகர் நடிகை தவிர வேறு யாராவது சினிமாவில் அனுபவம் அல்லது திறமை இல்லாமல் பணியாற்றிவிட முடிகிறதா? அதோடு சினிமாவில் பணியாற்றும் அத்தனைபேரும் கலைஞர்களா? உண்மையில் பல கலைஞர்களும் தொழில் நுட்ப வல்லுனர்களும் தொழிலாளர்களும் இணைந்து உருவாக்குவதே சினிமாவாக இருக்கிறது. அப்படிப் பார்த்தால் சினிமா கலைவடிவமாகவும் சொல்லப்படலாம், தொழில்நுட்ப சாத்தியமாகவும் அறியப்படலாம், உற்பத்தி செய்யப்பட்ட விற்பனைப் பொருளாகவும் சந்தைப்படுத்தப்படலாம் என்பதுதானே உண்மை! இங்கேதான் வம்பே இருக்கிறது!

ஒரு சினிமா எடுக்க, பல கலைஞர்களை ஒருங்கிணைக்க வேண்டியிருக்கிறது. பல மூளைகள் ஒரே இடத்தில் செயல்படும்போது எதிர்கொள்ளப்படும் அத்தனை பிரச்சினைகளும் வெல்லப்படவேண்டிய கட்டாயம் இருக்கிறது. தொழில்நுட்ப விற்பன்னர்கள் பலரின் பின்னாலும் அலைய வேண்டியிருக்கிறது. அந்த சினிமாவுக்குத் தேவைப்படும் அத்தனை தொழில்நுட்ப வடிவங்களையும் வகுத்துத்தருவது அவர்களது கடமையாக இருந்தபோதும், ஓர் இயக்குனர் தன் மனத்தில் வரைந்துவைத்திருக்கும் சினிமாவை அதேவிதமாக வடிவமைத்துத்தர அவர்களிடம் மன்றாட வேண்டியதிருக்கிறது. அதேபோல்தான் பல தொழிலாளிகளும் ஒரே இடத்தில் கூட்டப்பட்டு அவரவர் வேலையை செவ்வனே செய்யவைக்கப்பட வேண்டியதிருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டமெல்லாம் முடிந்துதான் சினிமா என்பது நமது பார்வைக்கு வந்து சேர்கிறது. ப்ரீ ப்ரொடக்ஷன், ப்ரொடக்ஷன், போஸ்ட் ப்ரொடக்ஷன், ப்ரீ ரிலீஸ், ரிலீஸ், போஸ்ட் ரிலீஸ் என்று பல கட்டங்களை சினிமா கடந்து வருகிறது. இது ஒரு தொழில்நுட்பக் கண்ணோட்டம்.

ஆனால் இந்தக் கண்ணோட்டமே கலைவடிவத்துக்கான எமனாகவும் இருந்துதொலைக்கிறது. சினிமாவின் அத்தனை விஷயங்களையும் தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு பெரும்பாலும் இயக்குனரின் தலையிலேயே விழுகிற அவலம் தமிழ் சினிமாவில் வெகுகாலமாக நிகழ்ந்துவருகிறது. கிட்டத்தட்ட ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் சீயீவோ போல இயக்குனர் செயல்படவேண்டுமானால் அவர் கொடுப்பது ஒரு வெற்றிகரமான பண்டமாகத்தான் இருக்குமே தவிர எப்படி கலைவடிவமாக இருக்க முடியும்?

மற்றக் கலைகள் அனைத்திலும் கலைக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. ஓவியன் தனியாகத்தான் ஓவியம் வரைகிறான். அவனது சுதந்திரத்தை அவன் ஒருபோதும் இழந்துபோவதில்லை. வரைந்து முடிக்கிறவரைக்கும் அவனுக்கும் கலைக்கும் ஊடாக நிகழும் புணர்ச்சியின் பூரணத்துவமே வரைந்து முடிக்கும் ஓவியமாக இருக்கிறது. கவிஞன் மற்றும் எழுத்தாளர்களின் நிலைமையும் இதேவிதமானதுதான்.

பாடகன் பக்க வாத்தியக்காரர்களோடு இணைந்துகொள்கிறான். மேடையில் ஏறுமுன்பாக எத்தனையெத்தனையோ ஒத்திகைகளை அவர்கள் கூடி நிகழ்த்திவிட்டுத்தான் வந்திருக்கிறார்கள். இயைந்து செயல்படக்கூடிய வல்லமையை அவர்கள் கற்றிருக்கும் இசையறிவு கொடுக்கிறது. ஒரே லயத்தில் ஐந்தாறு வாத்தியங்கள் இணைவதை இது சாத்தியமாக்குகிறது. இதற்கு பதிலாக எல்லா வாத்தியங்களையும் பாடகனே வாசிக்க முனைந்தால் அல்லது திருத்தங்கள் சொல்லிக்கொண்டிருந்தால் கச்சேரி கச்சேரியாகவா இருக்கும்?

சினிமா கலைஞர்களால் மட்டும் உருவாக்கப்படுவதில்லை என்பதனாலேயே இயக்குனர் என்பவனது பார்வை 360 டிகிரி சுழலவேண்டியதாயிருக்கிறது. இது எல்லாம் போதாது என்று சினிமாவின் வெற்றி தோல்வி என்கிற இரண்டு நிலைப்பாடுகளைத் தீர்மானிப்பவன் என்பதாகவும் இயக்குனனே அறியப்படுகிறான். ஒரு சினிமாவின் தோல்வி அல்லது வெற்றி முதலில் பாதிப்பது அவனைத்தான். அல்லது தார்மீகப் பொறுப்பேற்பவன் அவன்தான். இந்தக் கருத்தாக்கமும் திரைப்பட உருவாக்கத்தில் கலையின் போதாமையைத் திணிக்கிறது.

தமிழ் சினிமாவைப் பிடித்துள்ள இன்னொரு மிகப்பெரிய கொடுமை, கலைக்காக சினிமாவுக்கு வருபவர்கள்கூட காசுக்காகத்தான் சினிமா என்கிற நிலைப்பாட்டை மிக விரைவில் எட்டிவிடுவதுதான்! ஓர் இளம் நடிகை, தன் இளமை உள்ளவரைக்கும்தான் சினிமாவில் சம்பாதிக்க முடியும் என்கிற அவசரத்தோடு செயல்படுவதைப்போல கிட்டத்தட்ட சினிமாவின் அத்தனை கலைஞர்களும் ஒருவிதமான அவசரகதியிலேயே செயல்படக்கூடிய சூழலே இன்று உருவாகியிருப்பது! சினிமா ஒரு தொழில் எனக் கொண்டு வாழும் தொழிலாளர்களாலும் தொழில்நுட்பக் கலைஞர்களாலும்தான் கொஞ்சம் நிதானமாகச் செயல்பட முடிகிறது. ஏனென்றால் அவர்களின் மீது லைம்லைட்டின் வெளிச்சம் விழாது. சினிமாவின் வெற்றி தோல்வி நேரடியாக அவர்களை பாதிக்கவும் செய்யாது. ஆனால் இயக்குனர்களின் நிலையோ பரிதாபத்துக்குரியது.

ஒரு கதை கதாசிரியரால் எழுதப்பட்ட பிறகு அந்தக் கதையின் திரை வடிவம் குறித்த விவாதம் என்பதாக ஒன்று நிகழ்ந்து அதில் இயக்குனர் தன் பங்களிப்பைச் செலுத்துவது என்பது நேர்மையான நிகழ்வு. ஆனால் இயக்குனரே கதையைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இங்கே இருக்கிறது. அதாவது கதை விவாதம் என்பது கதையைப் பண்படுத்துவதாக இல்லாமல் கதையைக் கண்டுபிடிப்பதாக இங்கே இருக்கிறது. ஏற்கனவே வெளிவந்த படங்கள், அதில் வென்ற படங்கள், தோற்ற படங்கள், அதற்கான காரணங்கள் இவையே கதை விவாதங்களின் முக்கிய வாக்குவாதங்களாக இருக்கின்றன. இதற்குப் பிறகே கதை விவாதிக்கப்படுகிறது. இவ்விதமாக விவாதிக்கப்படும் கதை, கலை என்பதன் வாசனையைக்கூட மோந்து பார்க்கத் துப்பில்லாததாகவே இருக்க முடியும். திரைப்படத்தின் ஆதாரமாகிய கதையிலேயே கலை என்கிற வகைமை கோரப்படாதபோது திரைப்படம் ஆரம்பத்திலேயே 'கலை' இழந்து வியாபாரத்தை நோக்கியே நகர்வதாக ஆகிவிடுகிறது.

இந்தப் போக்கு மாறவேண்டுமானால் என்ன செய்யவேண்டும்?

பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. இயக்குனரை கலையைக் குறித்து மட்டும் யோசிக்க வைக்கப்பட்டால் போதும். சினிமாவின் பல்வேறு பிரிவுகளும் அதற்கதற்கான விற்பன்னர்களைக் கொண்டே இயக்கப்படுகின்றன. முக்கியமாக நிதி, லொக்கேஷன், கால்ஷீட் என்கிற இம்சைகளை எக்ஸிக்யூட்டிவ் ப்ரொட்யூசர், ப்ரொடக்ஷன் மேனேஜர் ஆகியோர் பார்த்துக்கொள்கிறார்கள். அந்த வேலைகளையும் இயக்குனர்களே செய்யவேண்டிய பல சூழல்களும் தமிழில் நிலவுகின்றன. இதனால் ஒரு படம் எடுக்கப்படுவதன் பின்னணியில் உள்ள அத்தனை பிரச்சினைகளையும் இயக்குனரே எதிர்கொள்ள வேண்டும் என்கிற நிலைமை மாறவேண்டியதே முதல் தேவை. இயக்குனர் கதையை உள்வாங்கிக்கொள்வது. அதன் திரைவடிவத்தை அனுமானிப்பது, அதற்குத் தேவையான கலைஞர்களைக் கோருவது (தீர்மானிப்பதல்ல, தீர்மானித்தால் அதில் தலையிட வேண்டியிருக்கும்) ஆகியவற்றோடு தன் முதல்கட்ட வேலையை முடித்துக்கொள்ள முடியும் என்றால் அவரது மண்டையில் கலையின் ஊற்று தவிர வேறொன்றும் பெருக வாய்ப்பில்லாது போகும். இது முதல்கட்ட தேவை. அடுத்தகட்ட தேவை அவர் கோருவதையெல்லாம் அவர் கோரியபடியே கச்சிதமாகக் கொண்டுவந்து சேர்க்கும் நகுலபாண்டியர்களின் சேவை.

அது சரியாக அமையவில்லையானால் - ஓவியன் ஓவியத்தை வரைய ஆரம்பித்த பிறகு மஞ்சள் நிறம் மட்டும் இல்லை என்றால் என்ன செய்வான்? அதுமாதிரிதான் ஆகிவிடும். சினிமா என்பது கூட்டுச் செய்கை என்பதனால் நினைத்தபடியே எல்லாம் நடந்து முடியவேண்டும் என்று ஒரு டைம்ஃப்ரேமுக்குள் வேலை செய்ய முனைவது அபத்தமானதுதான் என்பதை மறுப்பதற்கில்லை. அப்படித் தடைகள் வரும்போது காம்ப்ரமைஸ் காலத்தை நீட்டுவதாக அமையவேண்டுமே தவிர கலையை விட்டுக்கொடுப்பதாக அமையக்கூடாது. எத்தனையோ காரணங்களுக்காக வீண் செலவு செய்யப்படும் சினிமாவில் கலைக்காகக் கொஞ்சம் காசை விட்டுக்கொடுப்பதால் என்ன குறைந்துவிடப்போகிறது?

இன்று பல இயக்குனர்களும் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் சினிமா இயக்குகிற அவலம் வேறு நிகழ்கிறது. இந்த அடிப்படையில் உருவாகும் திரைப்படம் இயக்குனருக்கு மிகுந்த சுதந்திரத்தைத் தருவதைப்போலக் காணப்பட்டாலும், அது ஒரு நிதி நெருக்கடியையே உண்மையில் ஏற்படுத்துகிறது. இதனாலேயே இந்த வகையில் தயாரிக்கப்படும் எந்தப் படமும் கலைவடிவமாக இருக்கவே முடிவதில்லை.

சமீபத்தில் ஒரு புதிய இயக்குனரிடம் ஒரு புதிய தயாரிப்பாளர் என்னிடம் சொன்ன கதையை அப்படியே சினிமாவாக்கிக் கொடுங்கள். செலவைப்பற்றிக் கவலைப்படவேண்டியது நான்; நீங்களல்ல! என்று சொன்னதாக ஊடகச் செய்தியொன்று பார்த்திருப்பீர்கள். இந்த உத்திரவாதம்தான் ஒரு நல்ல படத்தை ஓர் இயக்குனர் கொடுப்பதற்கான அஸ்திவாரம்.

இந்தமாதிரி ப்ரொடியூசர்கள் எத்தனை இயக்குனர்களுக்கு வாய்க்கிறார்கள்? பாரதி, நான் தமிழ்க் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன். எப்படியாப்பட்ட மேலான காரியம் அது! இதற்கிடையில் உப்புக்கும் புளிக்கும் பருப்புக்கும் அல்லல்படவேண்டிய கவலைகளை எப்படி என் மண்டைக்குள் செலுத்தலாம் என்று தமிழன்னையைக் கடிந்துகொண்டதுதான் ஞாபகம் வருகிறது.

April 21, 2009

ஒரு ரூபா சினிமாவும் 100 கோடி சினிமாவும்!

சினிமா என்றாலே கோடிகள் என்பதாக ஆகிவிட்ட இன்றைய சூழலில் உண்மையாகவே சினிமாவின் அத்தனை செலவை எவையெவையெல்லாம் தீர்மானிக்கின்றன என்கிற விழிப்புணர்வு சினிமாக்காரர்களுக்காவது இருக்கிறதா இல்லையா என்பது தெரியவில்லை.

சினிமாவுக்கு வெளியே இருந்து சினிமாவைப் பார்த்து ரசித்துக்கொண்டு அல்லது சபித்துக்கொண்டு இருப்பவர்களாகட்டும், விமர்சித்துக்கொண்டிருப்பவர்களாகட்டும், சினிமாவுக்குள்ளிருந்து அதை இன்ச் இன்ச்சாக உருவாக்குகிற பணியில் இருப்பவர்களின் கருத்துகளோடு நேரதிராக மோதுகிறார்கள். எந்தவொரு தொழிலிலும் உள்ளே நுழைந்து பார்த்திருப்பவர்களின் கருத்து வேறாகவும் வெளியே இருந்து பார்ப்பவர்களின் கருத்து வேறாகவும் இருக்க நேர்வது உலக நியதிதானே! ஞாயிற்றுக்கிழமையானால் மட்டன் எடு என்று புறப்படுகிறவர்களில் எத்தனை பேருக்கு ஆட்டுத்தொட்டிகளில் ஆடு எவ்விதமாகக் கொல்லப்படுகிறது என்பது தெரியும்? ஆடு கொல்லப்படுவதற்கும், மாடு கொல்லப்படுவதற்கும், பன்றி கொல்லப்படுவதற்கும் உள்ள வித்தியாசத்தை அவர்கள் எப்படி அறிவார்கள்? அதுமாதிரிதான் கிரிடிக் மற்றும் பார்வையாளர்களின் பார்வையில் உள்ள சினிமா வேறு, சினிமாக்காரர்களின் பார்வையில் உள்ள சினிமா முற்றிலும் வேறு!

ஒரு சினிமாவை மதுரைப்பக்கம் ஒருமாதிரி ரசிக்கிறார்கள், கோயமுத்தூர்ப் பக்கம் வேறுமாதிரி ரசிக்கிறார்கள், ராமநாதபுரத்தில் வேறுவிதமான ரசனை காண்கிறது. ஒருத்தருக்கு அரிவாள் எடுத்தால் பிடிக்கிறது, இன்னொருத்தருக்கு அணைத்துக்கொண்டால் பிடிக்கிறது. தமிழ் சினிமா தொடக்க காலம் தொட்டே மசாலா என்கிற தன்மைக்குள்ளேயே யோசிக்கப்படுவதனால் வந்து சேர்ந்த வன்கொடுமைதான் இப்போதைய எமது சினிமாவுக்கான செலவையெல்லாம் தீர்மானித்துத் தொலைக்கிறது.

உருப்படியாகக் கதைகூட இல்லாமல் பலகோடி செலவில் குப்பையாக ஒரு படத்தை மிகப்பெரிய இயக்குனர் மிகப்பெரிய நடிக நடிகையரை இயக்கிக் கொடுக்கிறார் என்பதற்காகத் தியேட்டர்களில் டிக்கெட்டுகளின் விலையை உயர்த்திக்கொள்ளலாம் என்பதுதான் சினிமாவால் உயர்ந்து அரசோச்சும் எமது அரசியல்வாதிகளுக்கும் நியாயமாகப் படுகிறது. தமிழில் பெயர் வைத்தால் வரிநீக்கம் என்ற அறிவிப்பிலும்கூட, நீக்கப்பட்ட வரிச்சலுகை யாருக்குப் போய்ச் சேருகிறது என்கிற பிரக்ஞையை எழுப்ப ஒரு என்ஜிஜிஓ கூட இல்லாத நிலையில், கஷ்டப்பட்டு படம் தயாரிக்கும் தயாரிப்பாளனுக்கோ, பார்வையாளனுக்கோ இல்லாமல் விவசாயியின் வயிற்றில் வியாபாரி அடிப்பதைப்போல நான்குவேளைக் கொள்ளையாக நடந்துகொண்டிருக்கிறது.

நட்சத்திர அந்தஸ்து என்பது தமிழில் மட்டுமல்ல, ஹாலிவுட்டிலும்கூட உண்டு. ஆனால் நட்சத்திரத்தை மட்டுமே நம்பி அங்கே படம் எடுக்கப்படுவதில்லை. நட்சத்திரத்திற்குள் ஒரு நடிகன் உண்டு என்பதும் அவர்களது பிரக்ஞையின் இன்னொரு முக்கிய அம்சம். அவனை வேலை வாங்குவதற்கான கதைக்களமும் பார்வையாளனை உட்காரவைப்பதற்கான திரைக்கதை வடிவமும்தான் பிரதானமாக அங்கே கருதப்படுகின்றன. கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்னால் ரொமான்சிங் தி ஸ்டோன் என்று ஒரு சூப்பர் ஹிட் ஹாலிவுட் படம் வெளிவந்தது. அது ஒரு அட்வென்சர் காமெடி வகைப்படம். மைக்கேல் டக்ளஸ் மற்றும் காத்தலீன் டர்னர் நாயகன் மற்றும் நாயகியாக நடித்த ஹாலிவுட் கமர்ஷியல் படம். அருமையான என்டர்டெய்னர். கொலம்பியாவின் மழைக் காடுகளில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம். அதன் இரண்டாவது பாகம்கூட அதே நடிகர்களோடு ஜ்வெல் ஆஃப் தி நைல் என்று வெளிவந்து சக்கைப்போடு போட்டது. இந்தப்படங்களில் ஒரு காமெடி வில்லன் பாத்திரத்தில் டேனி டீ விட்டோ நடித்திருப்பார். குள்ளமான தோற்றமும் சொட்டைத் தலையும் கொண்ட அவர் அந்தப் பாத்திரத்துக்கு வெகு பொருத்தமாக இருப்பார். ஆனால் இந்தப் படங்களைத் தொடர்ந்து வார் ஆஃப் தி ரோஸஸ் என்று ஒரு படம் அதே மைக்கேல் டக்ளஸ், காத்தலீன் டர்னர், டானி டீ விட்டோ நடித்து வெளிவந்தது. இந்தப்படத்தை இயக்கியது டேனி டீ விட்டோ. இந்தப்படம் ஒரு காதலைச் சொல்லி, அவர்கள் கல்யாணம் செய்துகொள்வதைச் சொல்லி, பிள்ளைகள் பிறந்து வளர்ந்து காலப்போக்கில் அவர்களுக்குள் விரிசல் எழுந்து ஒருத்தரை ஒருத்தர் கொலை செய்யவிரும்புகிற வரைக்கும் சென்று முடிகிறது. அட்வென்சர் கிடையாது, கமர்ஷியலாக எதுவும் கிடையாது. நம் ஊரில் இப்படி ஒரு வெற்றிக்கூட்டணி அமைந்தால் திரும்பவும் ஓர் அட்வென்சர் படம் தவிர வேறொன்றை எதிர்பார்க்க முடியுமா? முன்னால் போகிற கழுதை கதைதான்!

ஒரு படத்தின் வெற்றி அல்லது தோல்வி என்பது அந்தப் படத்தில் சம்பந்தப்பட்டவர்களைத்தான் பாதிக்கவேண்டுமே தவிர, ஒட்டுமொத்த திரை உலகத்தையே பாதிப்பது எவ்விதத்தில் நியாயம்? இதற்குக் காரணம் ஒன்றைப் பார்த்தே மற்றது எடுக்கப்படுவதுதான். தனது ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு மாதிரி எடுக்க ஆரம்பித்த வகையில்தான் ராம்கோபால் வர்மா தற்போதைய தன் உயர்ந்த நிலைக்கு வந்து சேர்ந்தார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அதேபோல்தான் மணிரத்னமும். என்னதான் அவருக்கென்று ஒரு ஸ்டைல் உள்ளது என்றபோதும், அவரது ஒரு படம் அவரது இன்னொரு படம்போல இல்லாமல் இருப்பதே அவரது வெற்றியின் சூத்திரம். பல்லவி அனுபல்லவி, உணரு, பகல்நிலவு, மௌனராகம், நாயகன், கீதாஞ்சலி, அக்னிநட்சத்திரம், அஞ்சலி என்று அவரது துவக்கத்தைக் கவனித்துப் பாருங்கள். அதே நேரத்தில் இப்போதைய மற்ற இயக்குனர்களின் படங்களையும் பட்டியலிட்டுப் பாருங்கள். வித்தியாசம் தெரியும். செல்வராகவன், அமீர், மிஷ்கின் ஆகியவர்கள் இந்தக் குற்றச்சாட்டிலிருந்து மீள்பவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

இவர்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் வெற்றிகரமாக உள்ள அத்தனை இயக்குனர்களும் அவரவர் ஃபார்முலாவையும் அவ்வப்போது உருவாகும் சினிமாவின் புதிய டிரெண்டையும் மட்டுமே நம்பி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஃபார்முலாவானாலும் சரி, யாரோ ஒருவர் கொண்டுவந்த ட்ரெண்டாக இருந்தாலும் சரி, அது செலவு வைப்பதுதான். நீரில் பல உயிர்களும் வாழ்கின்றன என்பதற்காக எல்லோரும் தண்ணீருக்குள் வீடு கட்ட முனைந்தால் என்ன நடக்குமோ அதுதான் நடக்கிறது. நீரிலும் தரையிலும் வாழ முயற்லும்போதோ சொந்த அடையாளம் இழந்து தவளைகளாகிப்போவதே நேர்ந்துவிடுகிறது.

அமீர் பருத்தி வீரன் எடுத்தார். உலகத்தரத்தில் இருக்கிறது என்று எல்லோரும் கொண்டாடுகிறோம். ஆனால் அவர் சொல்கிறார், தான் உலகப் படங்களைப் பார்த்ததே இல்லை என்பதாக. மிஷ்கின் அஞ்சாதே என்கிற விறுவிறுப்பான படத்தைக் கொடுக்கிறார். அதில் அகிரா குரோசோவாவின் படத்திலிருந்து தான் கற்றுக்கொண்ட ஷாட்டை உபயோகிக்கிறார். நீங்கள் உலகத்திடமிருந்து கற்றுக்கொள்கிறீர்களா இல்லை உங்களிடம் இருப்பதை உலகுக்குக் கொடுக்கிறீர்களா என்பதல்ல முக்கியம். நீங்கள் உண்மையிலேயே அக்கறையுடன் செயல்படுகிறீர்களா இல்லையா என்பதுதான் முக்கியம்! பாட்டு, நடனம், சண்டை என்று பாதிப் படத்தை நிரப்பி, மீதிப்படத்தை எதையாவது வசனத்தை எழுதி முடித்துவிடலாம் என்கிற மாயமான சூழல் ரொம்பகாலம் தாங்காது.

ஆஃப்லைன் என்றொரு ஈரானியப்படம். ஃபுட்பால், பேஸ்பால், ஸ்கேட்டிங், ஒலிம்பிக்ஸ் என்று எத்தனையோ படங்கள் விளையாட்டை மையமாகக் கொண்டு உலகெங்கும் வந்திருக்கின்றன. ஹிந்தியில் லகான், தமிழில் சென்னை 600 028, வெண்ணிலா கபடிக்குழு என்று ஒருசில படங்களும் சமீபத்தில் வந்தன. இந்தப் படங்களில் மிகவும் முக்கியமானது ஃபுட்பாலையும் போர்க்கைதிகளையும் கலந்துகட்டி சில்வஸ்டர் ஸ்டாலோன், ஃப்ர்ஸ்ட் ப்ளட் படத்துக்கும் முன்னால் நடித்த படமான எஸ்கேப் டு விக்டரி. அந்தப் படம்கூட இந்த ஆஃப்லைனுக்கு ஈடாகாது. ஏனென்றால் இந்தப்படம் ஒரு ஃபுட்பால் மேட்சை உள்ளடக்கியிருக்கிறது. மேட்ச் ஆரம்பிப்பதிலிருந்து முடிவதோடு படமும் முடிந்துவிடுகிறது. ஆனால் படத்தில் ஃபுட்பால் மேட்ச் மருந்துக்கும் காட்டப்படுவதில்லை.

கிட்டத்தட்ட இதே விதமானதுதான் வெங்கட் பிரபுவின் இரண்டாவது படமும்! ஹைதராபாத்தில் நடக்க இருக்கும் கிரிக்கெட் மேட்ச்சைப் பார்க்க நண்பர்கள் போகிறார்கள். வழி தவறுகிறார்கள். வழியில் கார் நின்றுவிடுகிறது. அங்கே ஒரு கடத்தல் கும்பலை எதிர்கொள்கிறார்கள் என்று கிரிக்கெட்டைக் காட்டாமலே முடிந்துவிடுகிறது. ஆனால் இந்தப்படத்தின் கதையில் கிரிக்கெட் இல்லை. ஆனால் ஆஃப்லைனில் ஃபுட்பால் இருக்கிறது. ஈரானில் ஈரானியப் பெண்கள் ஓபன் ஸ்டேடியத்தில் ஆண்களோடு சமமாக உட்கார்ந்து விளையாட்டு பார்க்க அனுமதியில்லை. ஆண் வேடமிட்டு உள்ளே நுழைய முயல்கிற பெண்கள் சிலரை போலீஸ் பிடித்து ஸ்டேடியத்திலேயே ஒரு இடத்தில் விளையாட்டைப் பார்க்க இயலாத வகையில் அடைத்துவைக்கிறது. படம் முழுக்க விளையாட்டின் ஒலி கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஒரு போலீஸ்காரன் காமென்ட் சொல்கிறான். இந்த அளவு உயிர்த்துடிப்புள்ள ஒரு ஸ்க்ரிப்ட் தமிழில் உருவாகவேண்டுமானால் இன்னும் எனர்ஜி உள்ள தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் உருவாகவேண்டும்.

மலையாளத்தில் தன் அம்ம அறியான் படத்தை எடுப்பதற்காக ஜான் ஆபிரகாம் பொதுமக்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு ரூபாய் நன்கொடை வாங்கினார். அந்தப் பணத்தைக் கொண்டே அவர் அந்தப் படத்தை எடுத்தும் முடித்தார். பணம் கொடுத்தவர்களுக்கு அவர்களின் ஊரில் அதைக் கொண்டுபோய் போட்டுக்காட்டினார். அவர்கள்தான் அதற்கான பணத்தை ஏற்கனவே கொடுத்துவிட்டார்களே! இந்தமாதிரி ஒரு சம்பவத்தை நம்மால் இப்போது கற்பனை செய்ய முடியுமா? இது என்ன ஈரானிலா நடந்தது? நமக்கு அடுத்த மாநிலத்தில், அதுவும் நம் மாநிலத்தில் அதிகம் பயணித்த ஒரு நண்பன் சாதித்துக் காட்டியதல்லவா இந்த அற்புதம்! ஜான் ஆபிரகாம் மட்டும் பட முதலாளிகளின் பின்னால் அலைந்துகொண்டிருந்திருந்தால் ஒன்றேனும் படம் எடுத்திருக்கமாட்டார். அல்லேல் நாலு ஃபைட் ரெண்டு குத்துப்பாட்டு என்று எதையாவது எடுக்கவேண்டிய கட்டாயத்தில் காணாமல் போயிருப்பார்.

ஜான் ஆபிரகாமுக்கு நேரெதிராக இயக்குனர் ஷங்கர் மெகா இயக்குனராக இன்று அறியப்படுகிறார். தமிழின் மிக அதிக செலவாகும் படத்தை இப்போது அவர் இயக்கிவருகிறார். அவரது ஆரம்பப் படங்களில் காதலன் மட்டும் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த படமல்ல, அதில் ஒருசில பகுதிகள்! ஒருவிதமான கவித்துவமான காதல் காட்சிகள் அந்தப் படத்தில் காணும். கவர்னர் மகளை கான்ஸ்டபிள் மகன்... என்கிற அவரது கதையை விட்டுத் தள்ளுங்கள், அவளுக்கு அவன் உணவு தயாரித்துத் தரும் இடம் ஒன்று உண்டு. அப்போது நான் நினைத்தேன். இந்த ஷங்கரால் பொருட்செலவில்லாத அழகான காதல் கதை ஒன்றை கட்டாயம் தர முடியும் என்று. ஆனால் அவரது பாதை முற்றிலும் திரும்பிவிட்டது. ஒரு தயாரிப்பாளராக இப்போது அவர் செய்ய முனைவதெல்லாம் அவரது மனத்தில் உள்ள அந்த அழகான ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும் வேலைதான் என்றே தோன்றுகிறது. இருந்தாலும் ஷங்கர் ஒரு விஷயத்தைக் கொஞ்சம் சீரியசாகவே யோசிக்கலாம். ராம்கோபால் வர்மா வளர்ந்துவரும் காலத்தில் மணிரத்னம்தான் எனது மானசீக குருநாதர் என்பதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். ஷங்கர் மணிரத்னத்தைக் காப்பியடிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அவர் கொஞ்சம் கமர்ஷியல் என்பதற்கும் வெளியே ஏன் யோசிக்கக்கூடாது என்பதே எனது கேள்வி! அவரால் முடியாமல் இருந்தால் பரவாயில்லை. அவரால் அது முடியும் என்கிறபோது ஏன் முயலக்கூடாது?

ரஜினிகாந்த் கால்ஷீட் கிடைக்கிறது என்று சொன்னால் ரஜினிகாந்த்தை எத்தனை காஸ்ட்யூமில் காட்டலாம், எத்தனை லொக்கேஷன்களில் காட்டலாம், எத்தனை நாயகிகளுடன் காட்டலாம், எவ்வளவு கிராஃபிக்ஸ் பண்ணலாம் என்பதாக யோசிப்பதை விட்டுவிட்டு, ரஜினிகாந்த்தின் இதுவரை வெளிவராத முகத்தைக் காட்டலாம், இதுவரை வெளிவந்ததை விட அதிகமான நடிப்பாற்றலைக் கோரும் பாத்திரத்தைக் கொடுக்கலாம், ஹாலிவுட் படங்களைப்போல புத்தம்புதிதான விறுவிறுப்பான ஸ்க்ப்ட்டை ரஜினிகாந்த்தின் தலையில் ஏற்றலாம் என்பதாகவெல்லாம் அவர் யோசித்தால், ஒரே காஸ்ட்யூமில் ஒரே லொக்கேஷனில்கூட ரஜினிகாந்த் ஒரு சூப்பர் படத்தைக் கொடுத்துவிடுவார்.

சுஜாதா மாதிரி ஓர் எழுத்தாளரையும் கையில் கொடுத்து, ஷங்கர் படத்துக்கு ஆகிற பணத்தையும் செலவு செய்ய ஒருத்தர் தயாராக இருந்தால் இப்போது ஷங்கர் இயக்கும் படங்களைப் போன்ற படங்களை சுந்தர்.சி கூட இயக்கிவிடுவார் என்பதே உண்மை. இந்த உண்மையை இன்னுமா யாரும் ஷங்கரிடம் சொல்லவில்லை?

April 17, 2009

அன்பார்ந்த உதவி இயக்குனர்களே!


அன்பார்ந்த வாசகரே, உங்களுக்கு எத்தனையோ பேர் எத்தனையோ விஷயங்களில் உதவியிருப்பார்கள். ஆனால் அவர்களின் பெயர்களையெல்லாம் எழுதியா வைத்திருக்கிறீர்கள்? கல்வெட்டு வேண்டாம், ஒரு நாற்பது பக்க ரூல்டு நோட்டிலோ பழைய டைரியிலோவாவது எழுதிவைத்திருக்கிறீர்களா? ஏன் எழுதவில்லை? உங்கள் தலை சாய்ந்த பிறகு சொத்தில் பங்குக்கு வந்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறீர்களா?

ஆனால் சினிமா உங்களளவு மோசமானதல்ல. நீங்களே பாருங்கள், டைட்டில் கார்டு என்பதாக ஒன்று ஆதியிலும் அந்தத்திலும் அனுசரணையாக அத்தனை படங்களிலும் ஓடுகிறது. அதில் உதவியவர்களுக்கும் ஒரு பட்டியல் உண்டு. நான் சொல்ல வருகிற உதவி, நன்றி என்கிற தலைப்பில், ஊட்டி தாவரவியல் பூங்கா மேலாளர், அமிர்தசரஸ் ஓட்டல் உரிமையாளர், முட்டம் இறைத்தூதராலய போதகர், ஏர்வாடி தர்கா காவல்காரர் என்று எந்தப் பொருத்தமுமில்லாத ஒரு பட்டியல் படத்தின் பெயர் வருமுன்பாக வருகிறதே அதையல்ல! ஆர்ட் டைரக்டர், இசையமைப்பாளர், எடிட்டர், காமிராமேன், இயக்குனர் ஆகியவர்களுக்கு உதவியவர்களின் பட்டியலொன்று காண்கிறதே, அதை உண்மையில் இவர்கள் இல்லையென்றால் சினிமா என்பதாக ஒன்று கிடையாது என்பதை நீங்கள் முதலில் அறிந்துகொள்ளுங்கள். வீட்டில் முள்ளங்கி சாம்பார் தயாரிக்க வேண்டுமானால் ஒரே ஆளே நல்ல சிவப்பு முள்ளங்கியாக வாங்கி வந்து, நறுக்கி, வெங்காயத்தை உரித்து, பருப்பையும் தக்காளியையும் மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து, புளியை ஊறவைத்து, மிளகாய் வற்றல், தனியா, அரிசி, மிளகு, தேங்காய் என்று அரைத்து, கடுகையும் வெந்தயத்தையும் தாளித்து, வெங்காயத்தை வதக்கி சாம்பாராக அவற்றை மாற்றிவிட முடியும்.

இப்படி அரைப் பாராவில் உருவாகிற சாம்பார் ஒரு வீட்டுக்கு வேண்டுமானால் போதுமானதாக இருக்கும். ஆனால் ஒரு விருந்துக்கு சமைக்க வேண்டுமானால் ஒற்றை ஆள் அதைச் செய்ய முடியுமா? இந்த மாயாபஜார் வித்தை யாராலாகும்! அப்படித்தான் சினிமாவும்!
அதிலும் தமிழ் சினிமாவில் இந்த உதவியாளர்கள் என்கிற பட்டியலில் உதவி இயக்குனர்கள் என்பதாக ஒரு தனி இனமே வாழ்ந்து வருவது வருத்தத்துக்கும் வேதனைக்கும் இடைப்பட்ட செய்தி. நானும் அந்த வேலையைச் செய்தவன் என்கிற சகோதர பாவத்தோடே நல்லது கெட்டது இரண்டையும் முன்வைக்க விரும்புகிறேன். அடிக்க வருவதாயிருந்தால் இரண்டு நாட்கள் முன்னதாகச் சொல்லிவிட்டு வரவும். ஏனென்றால் இந்த நடுவுநிலைமை என்பதெல்லாம் திருவள்ளுவர் காலத்திற்கு சரிப்பட்டு வந்திருக்கலாம். அப்போதெல்லாம் பெயிலபிள் நான்-பெயிலபிள் என்கிற பதங்கள் கிடையாது பாருங்கள்!

பழைய படங்களின் டைட்டில் கார்டுகளைப் பார்க்கும்போது எனக்குள் ஓராச்சரியம் ஓடும். ஒவ்வொரு படத்திலும் மூன்றிலிருந்து கிட்டத்தட்ட பத்துப் பேர் வரைக்கும் உதவி இயக்குனர்கள் என்பதாகக் காண்கிறார்களே, இவர்களெல்லாம் ஏன் இயக்குனராகவில்லை? இந்தக் கேள்விக்கான பதில், என் பெயரும் அந்தப் பட்டியலில் வந்தபோதுதான் தெரிந்தது.

அதை சற்று விரிவாகப் பார்க்கலாம். ஏனென்றால் எந்த ஒரு விஷயத்துக்கும் ஒரே ஒரு காரணம் மட்டும் இருக்க முடியாது. ஒருகோடிப்பேர் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தில் ஓராயிரம் கோடி காரணங்கள் கொட்டிக் கிடக்கக்கூடும்.
முதற்கண், உதவி இயக்குனராக வேலை பார்ப்பவர்கள் எல்லோரும் இயக்குனராகவேண்டும் என்கிற கனவோடுதான் சினிமாவுக்கு வந்தார்கள் என்று நாம் நம்புவது நமது அறியாமையையே உலகுக்கு உணர்த்தும். இன்றைக்கு பாலச்சந்தரும் பாரதிராஜாவும் எதற்காக நடிகர்களாக மாறினார்கள் என்பதைக் கூர்ந்து நோக்குங்கள். இத்தனை காலம் அவர்கள் கொடுத்த சினிமாக்கள் எல்லாம் அவர்கள் திருப்தியாக எடுத்த படங்கள் அல்ல என்பது நன்றாகவே விளங்கும். அவர்கள் சினிமாக்களை இயக்கியதெல்லாம் நடிகனாக முடியவில்லையே என்கிற ஆதங்கத்தினால்தான்! உண்மை துவர்க்கும்தான் என்ன செய்வது!

பாக்கியராஜையே எடுத்துக்கொள்ளுங்கள், அவர் ஒரு நல்ல திரைக்கதாசிரியர், அடுத்தபடியாக ஒரு நடிகர். ஆனால் அவர் இயக்குனராகவேண்டிய காலக்கட்டாயம் இருந்தது. இருந்தாலும் அவருக்கு நடிக்கவும் வாய்த்த வகையில் வாய்ப்புகளை அவர் கொண்டாடத் தொடங்கினார். எஸ்யேசந்திரசேகரின் உதவியாளராக இருந்த இயக்குனர் ஷங்கர் எத்தனை படங்களில் காமெடியனாக அபிநயித்திருக்கிறார் என்பதை உங்களில் பலரும் அறிந்திருக்கவே செய்வீர்கள். செல்வி என்பதாக ஒரு படத்தில் அவர் முழுநீள காமெடியன் என்பதாக ஞாபகம்.

இவர்கள் உணர்த்தும் உதாரணம் முதன்மையான வகை. டைட்டில் கார்டில் காணும் உதவி இயக்குனர்கள் என்கிற பட்டியலில் இந்த வகைமையைப் பொருத்திப் பார்த்தால் தொண்ணூறு சதமான பெயர்கள் காணாமல் போய்விடும். இவர்களில் பலரும் குடும்பப் பிரச்சினைகள், காத்திருக்கும் மாமன் மகள் என்கிற அடிப்படைக் காரணங்களுக்காக ஓரிரு படங்களில் அட்மாஸ்ஃபியரில் தலையைக் காட்டிய திருப்தியோடோ, டைட்டிலில் கார்டு வந்தது என்கிற சப்பைக்கட்டோடோ, அல்லது அதுகூட இல்லாமல் ஞாபகங்களில் தேங்கியிருக்கும் பொற்காலத்தை ஒரு மிலிட்டிரிக்காரன் போல வாழ்நாள் முழுக்க சொல்லிக்கொண்டிருக்கலாம் என்கிற வேதனையோடோ விலகிப் போயிருப்பார்கள்.

இந்த வம்பை இளைஞர் மனத்தில் வலியச் செலுத்திய பிழை பாரதிராஜா செய்தது என்பதாகவே நான் நினைக்கிறேன். ஏனென்றால் பாரதிராஜாக்கூட்டத்தில்தான் உதவி இயக்குனர்கள் சிறு காட்சிகளில் தலைகாட்டுவது அதிகமாகக் காணப்பட்டது. அந்தப் பரம்பரையிலிருந்துதான், பாக்கியராஜ், மணிவண்ணன், பொன்வண்ணன், லிவிங்ஸ்டன், பாண்டியராஜன், பார்த்திபன் என்று பெரும் அபிநயப் பட்டியல் புறப்பட்டது.

ஆக, சினிமாவில் உதவி இயக்குனராக இருந்தால் நடிகனாகிவிடலாம் என்கிற அபத்தமான காரணம்தான் டைட்டில் கார்டுகளின் பெரும் இடத்தை நிரப்பிவிடுகின்றன. ஏனென்றால் சினிமாவுக்கு வந்த பிறகே சினிமா என்றால் என்ன என்று தெரிந்துகொள்கிற கூட்டம்தான் இங்கே அதிகம்.
அப்படியில்லாமல் உண்மையிலேயே நல்ல சினிமாவுக்கு ஆசைப்பட்டு, தாங்கள் பணியாற்றும் சூழலில் அது சாத்தியமேயில்லை என்கிற நிலைப்பாட்டைத் தெளிந்து வேறு தொழில்கள் தெரிந்த வகையில் இயக்குனர் என்பதாக டைட்டில் கார்டு வராமலே சென்னையிலிருந்து புறப்பட்டுவிட்டவர்களும் சொற்பம்பேர் உண்டு. இந்தப் பட்டியலில் தற்கொலை செய்துகொண்டவர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அவர்களையெல்லாம் காப்பாற்றிக்கொள்ள முடிந்திருந்தால் எமது சினிமா எப்போதோ உய்ந்திருக்கும்.

நிதர்சனத்தை உணர்ந்தபோதும் இழந்த இளமையும், பழகிய வறுமையுமாக வேறு வழியில்லாமல், கன்னிமை போன புண்ணியவதி பழக்கத்தின் நிர்ப்பந்தத்தால் பரத்தையாகிப்போவதுபோல குமைந்துகொண்டு சென்னையின் சூட்டையெல்லாம் உடம்பில் வாங்கிக்கொண்டு புழுங்கிக்கொண்டிருக்கும் நண்பர்கள் பலரும் உண்டு. இவர்களின் நிலைமைதான் உண்மையிலேயே துக்ககரமானது. ஏனென்றால் இவர்களுக்கு வேறு தொழில்களும் தெரியாது. அதோடு சினிமாவில் வேலை பார்த்தவன் என்று சொன்னால் ஜெயிலுக்குப் போய்விட்டு வந்தவன் என்பதைப்போல இவர்களின் சமூகம் இவர்களைப் பார்க்கக்கூடும். ஜெயிலுக்குக் போவதைவிடவும் சினிமாவுக்குப் போவது கொடுமையானது என்பதாகவும் ஓர் எண்ணப்பெருக்கு உண்டு. ஏனென்றால் ஜெயிலுக்குப் போனவன் திருந்தி வருவான், சினிமாவுக்குப் போனவன் கெட்டு வருவான் என்கிற எண்ணப் பதிவை ஒரு சந்ததியின் அத்தனை மூளைகளிலிருந்தும் அகற்றுவது அத்தனை சுலபமானதல்ல.

இப்போது எம்பியே படித்த மணிரத்தினம் எம்பியே படித்தவர்களை மட்டும்தான் உதவி இயக்குனர்களாக வைத்துக்கொள்கிறார் என்பதாகச் சொல்கிறார்கள். அப்படிப் பார்த்தால் டாக்டர் ராமதாஸ் இயக்குனரானால் எம்பிபியெஸ் படித்தவர்களை மட்டும்தான் உதவிக்கு வைத்துக்கொள்வார் என்பதாகவே தெரிகிறது. இப்படியெல்லாம் சட்டம் போட்டிருந்தால் பாலச்சந்தரும் பாரதிராஜாவும் தனியாளாகத்தான் சாம்பார் தயாரித்திருக்க வேண்டும். எம்பியேவாவது வெறும் பியேவுக்கே அப்போது வகையில்லை. பியே படித்தால் பாங்க்கிலோ, கருவூலத்திலோ வேலை காத்திருக்கும்போது என்னத்துக்கு சினிமாவுக்கு பிள்ளையை அனுப்பவேண்டும் என்கிற நிலைப்பாடே அப்போது இருந்தது. நான் வேலை பார்த்த யூனிட்டில் எனக்கு மட்டும்தான் இங்லீஷ் தெரியும் என்பதாக மொத்த யூனிட்டே முட்டாள்தனமாக நம்பிக்கொண்டிருந்தது. ஒரு காலேஜ் ட்ராப் அவுட்டுக்கே அவ்வளவு மரியாதை!

இந்த வெகண்டையையெல்லாம் விட்டுவிட்டுப் பார்த்தால், இப்போது காலம் முற்றிலும் மாறிவிட்டது. இன்ஸ்ட்டிட்யூட் மாணவர்கள் என்றால் கலைப்படங்கள்தான் எடுப்பார்கள் என்பதை ஆபாவாணன் முதலானவர்கள் உடைத்துக் காட்டிய பிறகே தமிழ் சினிமாவில் டியெஃப்டி எனும் படிப்பு டைட்டில் கார்டுகளில் தென்படத் தொடங்கியது. ஆனால் அப்போதும் உதவி இயக்குனர்கள் என்கிற பட்டியலில் அந்தப் படிப்புக்கான வாசனையும் இல்லை. இப்போது அந்தச் சூழல் தலைகீழாக மாறிக்கொண்டிருக்கிறது.

உதாரணமாக கோவையில் எனது நண்பர் ஜீவாவின் மகன் ஆனந்த், விஷுவல் கம்யூனிகேஷன் முடித்தார். அடுத்தது சினிமாவுக்குள் இறங்கப்போகிறார் என்று பார்த்தால், சென்னை ஃபிலிம் இன்ஸ்ட்டிட்யூட்டில் ஒளிப்பதிவாளருக்கான படிப்பில் சேர்ந்தார். எனக்கு ஆச்சரியம். அதையும் முடித்துவிட்ட பிறகே, நீரவ்ஷாவிடம் தற்போது உதவி ஒளிப்பதிவாளராக இணைந்திருக்கிறார். என்னுடைய ஆச்சரியம் என்னவென்றால், ஜீவாவின் சொந்தத் தம்பி இந்தியில் முன்னணி காமிராமேன்! ஷாரூக்கானின் ஆல்டைம் ஃபேவரிட்டான மணிகண்டன்! என் சித்தப்பாவெல்லாம் இப்படி இருந்திருந்தால் நான் எஸ்ஸெஸ்ஸெல்ஸி கூட தேறியிருக்க மாட்டேன். (வாரிசு நடிகர்களைப் போல!)

ஆக, இந்த மாற்றங்கள் நல்லவையே! சென்னைக்குப் போகிற ரயிலில் ஏறினால் சினிமாவில் சேர்ந்துவிடலாம் என்பதாக இளைஞர்கள் நினைத்த காலம் இப்போது மலையேறிவிட்டது என்பதையே இது உணர்த்துகிறது. போகிற வழியில் போனால்தான் போக வேண்டிய இடத்துக்குப் போய்ச்சேர முடியும் என்பதோடு போகிற இடம் என்பதும் என்ன என்பது தெரிந்திருக்க வேண்டும் என்பதையும் இது வலியுறுத்துகிறது.

டூரிஸ்ட் விசாவை வைத்துக்கொண்டு மலேஷியாவில் பதுங்கி, கிடைத்த வேலையைப் பார்த்து காசு சம்பாதிக்கலாம் என்கிற மனோபாவம் போன்றதுதான் சினிமாவில் என்ன செய்யப் போகிறோம் என்பது தெரியாமலே சினிமாவுக்குப் போவதும். அப்படிப் போனவர்களில் பலரும்தான் உதவி இயக்குனர் என்கிற மாயமான வலையில் விழுந்து ஊரும் பேரும் சீரும் கெட்டு திசைகளின் நடுவில் திக்கித்து நின்றுகொண்டிருப்பவர்கள்.

சென்னையில் வாழும் பல உதவி இயக்குனர்களைப் பற்றியும் பொதுவாக ஒரே விதமான கருத்தே நிலவுவதும் இதனால்தான். உதாரணமாக என்னுடைய எழுத்தாள நண்பரொருவர் அடிக்கடி சொல்வார், இந்த அசிஸ்டென்ட் டைரக்டர் என்பவன் அதைச் சொன்னான் இதைச் சொன்னான் என்று என் எழுத்தைக் குறை கூறினால் கொன்னேபுடுவேன் என்று! அவர் பெயர் வேண்டாம். ஏனென்றால் இருதய நோயாளிகளை இரும்புக்கம்பியால் தாக்குவது இறையாண்மைக்கு அழகல்ல!

என் திரையுலக நண்பர்களில் பலரும் இவ்விதமான கருத்தாக்கத்தால் தாக்கப்பட்டு வருவதுண்டு. வருத்தமாகத்தான் இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் எழுதிய ஸ்க்ரிப்ட்டை இன்றைக்கும் கையில் சுமந்துகொண்டு அலையும் பல நண்பர்களையும் நான் பார்த்திருக்கிறேன். ஒருவேளை உங்களுக்கு ஒரு ப்ரொட்யூசர் கிடைத்து அதைப் படமாக்கினால் அதோடு முடிந்தது உங்கள் சோலி என்று திரும்பத் திரும்ப அவர்களிடம் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். அப்போதெல்லாம் அவர்கள் தங்கள் பிள்ளைகளைப் பழித்ததுபோல என்னைப் பார்க்கிறார்கள். சமீபத்தில் வெளியான ராமேஸ்வரம் என்கிற படத்தை அவர்களுக்கு உதாரணமாகத் தருகிறேன். பழைய ஸ்க்ரிப்டுகளை தூசி தட்டினால் அந்தப் படத்துக்கு நேர்ந்ததுதான் உங்களுக்கும் நேரும்!

காலம் கடுமையாக மாறிக்கொண்டிருக்கிறது. படித்த இளைஞர்களோடு இப்போது நீங்கள் போட்டி போட வேண்டும். துறை சார்ந்த படிப்பு, இளமை என்கிற இரண்டு கண் துப்பாக்கியை அவர்கள் கஸாபைப்போல கையில் வைத்திருக்கிறார்கள். அவர்களோடு போட்டி போட உங்களிடம் இருப்பது அனுபவம் என்கிற பீரங்கி. ஆனால் அதனை ம்யூசியத்திலிருந்து நீங்கள் மீட்டுக்கொண்டு வந்தால்தான் காரியம் ஆகும்!

பாட்டெழுத்துப் பாரம்பர்யம்

சின்னஞ்சிறு துளியில் ஒரு உலகம் உருவாகும் என்று ஒரு பாடல் உண்டு. இந்தப் பாடல் ஒரு தமிழ் சினிமாவில் வந்ததுதான் என்றபோதும் பெரும்பாலும் யாருக்கும் நினைவிருக்க வாய்ப்பில்லை. பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் படத்தில் இந்தப் பாடல் வந்தது. ஆயினும் ஞாபகத்தில் தேங்காததற்குக் காரணம் இந்தப் பாடல் இசையமைக்கப்பட்டு அந்தப் படத்தின் பாடல் தொகுப்பில் இணைக்கப்படாததுதான்.
கதையின் நாயகன் சினிமாப் பாட்டெழுதும் ஆசையில் பட்டணம் வந்து கம்பெனிகம்பெனியாக ஏறி இறங்குகிறான். கடைசியாக அவனுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ஒரு தயாரிப்பாளர் அவனை பாடல் சொல்லச் சொல்கிறார். அந்தநேரத்தில் அவனுக்கு ஒரு வரியும் வந்து தொலைய மாட்டேனென்கிறது. சரி, முகத்தை கிகத்தைக் கழுவிக்கொண்டு வா, பதட்டம் தணியும் என்று அவனை குளியலறைக்குள் அனுப்புகிறார்கள். அங்கே ஷவரிலிருந்து தண்ணீர் சொட்டுச் சொட்டாக விழுந்துகொண்டிருக்கிறது. அந்தச் சொட்டுக்களிலிருந்து வெள்ளமெனப் புறப்படுகிறது அவன் மனத்தில் கவிதை. ஷவரில் நனைந்த கோலத்தில் அவன் மேற்சொன்ன வரிகளைப் பாடியவனாக அந்த அறைக்குள் பிரவேசிக்கிறான். அவ்விதமாகஅவனது கலைப்பயணம் தொடங்குகிறது.


இது பாரதிராஜாத்தனமான காட்சி விஸ்தரிப்பானாலும், ஒரு பாடல் என்பதன் இன்ஸ்பிரேஷன் எங்கிருந்தெல்லாம் கிடைக்க முடியும், கவிஞனின் எவ்விதமான மனநிலை ஒரு நல்ல பாடலைக் கொடுக்க முடியும் என்பதற்கான ஒரு எளிய உதாரணமாகசொல்லப்பட வேண்டியது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

இப்போது ஒரு பாடலைப் பார்க்கலாம், சிறுபொன்மணி அசையும், அதில் தெறிக்கும் புது இசையும். இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்ஙு இந்த வரிகள் எந்த மாதிரியான உன்னதப் பொழுதில் கவிஞனின் மனத்தில் உதித்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். இப்படியொரு வரிஎழுதிக்கொண்டிருக்கும்போது கவிஞனிடம் ஒரு கத்தியைக் காட்டினாலும் குத்திவிட்டுப் போ என்றுதான் சொல்வான் என்பதே உண்மை.சும்மாவேணும் மனத்தின் அசைக்கு ஏற்பப் பாடல் எழுதும்போதே மனம் இத்தனை உற்சாகம் கொள்ளும் என்று சொன்னால், இசையின் அசைக்கும் ஏற்ப இந்தமாதிரியானஅற்புதமான வரிகளைப் பிரசவம் செய்ய முடிகிற பொழுதுகள்தானே கவிஞனின்உச்சக்கட்ட வாழ்க்கைப் பொழுதுகளாக இருக்க முடியும்!

சிறுபொன்மணி போன்ற பாடல் இன்றைக்கு ஏன் எழுதப்படுவதில்லை? காலமாற்றம்சினிமாக் கவிக்குள்ளும் நுழைந்து கவித்துவத்தைக் களவாடிக் கொண்டுவிட்டதா?அல்லது கவிஞன் தன் கலையுச்சம் முடிந்து கீழே இறங்க ஆரம்பித்துவிட்டானா?அப்படியானால் இன்னொரு கவிஞன் உச்சநிலையை எட்டுவது ஏன் சாத்தியமற்றுப்போயிருக்கிறது?

சாதாரணமாகவே எல்லோரும் குறிப்பிடும் பாடலான வைரமுத்துவின் விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே, வைரமுத்துவின் உச்சம் என்றே தோன்றுகிறது. இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுது என்று சொல்லும்போது அந்த உரசலில்தான் கவிதை ஊஞ்சலாடிக்கொண்டிருக்கிறது. பகலும் இரவும் உரசினால்தானே அந்திப்பொழுது, இரவும் பகலும் உரசுவது அதிகாலைப் பொழுதல்லவா என்றெல்லாம் லாஜிக் பேசக்கூடாது. உதாரணமாக என் முந்தைய கட்டுரையில் ஜெயமாலினியின் நடனப் பாடல் ஒன்றைக் குறிப்பிட்டிருந்தேன். அன்னை ஓர் ஆலயம் படத்தில் வந்த இரவு நேரம், நிலவு காயும்... என்கிற பாடல். நல்லகாலமாக திரும்பவும் அந்தப் பாடல் பார்க்கக் கிடைத்தது. என் ஞாபகத்தில் உள்ள 'லாஜிக் பேழை"யால் நேர்ந்த பிசகு அப்போதான் தெரியவந்தது.

இரவு நேரம் நிலவு காய்வதில் என்ன கவிதை இருக்கிறது? பாடல் இவ்விதமாக இருக்கிறது, 'நிலவு நேரம், இரவு காயும்.' இதுதானே கவிஞனின் வேலை. இரவு நேரத்தில் நிலாக்காய்கிறது என்கிற லாஜிகல் மனோபாவம் அவ்விதமாகக் கவிதையைத் தவறாக மனத்தில் பதித்திருக்கிறது. கவிஞனுக்கு லாஜிக் தேவையில்லை. அது கதாசிரியனுக்கும் திரைக்கதாசிரியனுக்குமானது. அவர்கள்கூட ஒருசில காட்சிகளின் கவித்துவநிலைக்காக லாஜிக்கை தந்திரமாக மீறுவது உண்டு என்கிறபோது கவிஞனிடம் எதற்கு இந்த விதண்டாவாதம்!

இருந்தாலும் அறிவியல்தான் வளர்ந்துகொண்டே போகிறதே தவிர, கலை தேய்ந்துகொண்டேதான் போகிறது என்கிற உலகியல் நடப்பின்படிக்கு கம்பன்,
இளங்கோ, பாரதி என்று வந்த வம்சம் கண்ணதாசன், வாலி, வைரமுத்து, பா.விஜய் என்று படிப்படியாகத் தேய்ந்துகொண்டேதான் போவது தவிர்க்க இயலாததுதான். நுகர்வாளனின் ரசனை காலத்துக்கேற்ப மாறிக்கொண்டே போகையில் அதன் தரமும் தேய்ந்துகொண்டே போவதுதான் கொடுமை. அதற்குக் கவிஞன் என்ன செய்வான் பாவம்!

கோவையில் வெள்ளியங்காட்டான் என்று ஒரு கவிஞர். அவர் இறந்தபிறகு அவரதுமகளின் முனைப்பால் அவரது கவிதைகளை வெளியிட்ட பணியில் நானும் இருந்தேன்.புத்தக ஆக்கத்துக்காகத்தான் அந்தக் கவிதைகளை வாசித்தேன் என்றபோதும் பாரதியின் சாரம் அப்படியே அதில் இருந்தது கண்டு வியந்து போனேன். சிறுபிரதேசத்தில் வறுமையின் பிடியிலும் வைராக்கியத்தை இழக்காமல் கவிஞன் என்கிற அகம்பாவத்தோடு வாழ்ந்து முடித்த அந்தக் கவிஞன் சினிமாவுக்கு பாட்டெழுதியிருக்க முடியுமா?
சினிமாப் பாடல் என்பது சிலருக்கு மிகவும் சுலபமானது. அதைக்காட்டிலும் பல உன்னதங்களை செய்து காட்டிவிடும் சிலருக்கோ மிகவும் புதிரானது. இன்றைய திரைக் கவிஞர்கள் பொதுவாக நவீன கவிதை குறித்த பிரக்ஞையை புரியாமொழி, அனாவசியமான புதிர்மொழி என்பதாகவெல்லாம் புரிந்துகொள்ள முடியாமல் எப்படி தவிர்த்தே வருகிறார்களோ (இதற்கு நாமுத்துக்குமார் விதிவிலக்காக இருக்கக்கூடும்), அதேபோல்தான் நவீன கவிஞர்களும் சினிமாப் பாடல்களைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள்.
பாட்டெழுத்து பெரிய வித்தையொன்றும் இல்லை என்றபோதும் பெரும்பாலான நவீனகவிஞர்கள் சந்தம் அசை என்று ஒரு இளவும் தெரியாமல் கவிதை எழுதிக்கொண்டிருப்பதே இதற்கான காரணம். மாடர்ன் ஓவியங்கள் வரைகிற ஓர் ஓவியரை உங்கள் முகத்தை வரைந்துகொடுக்கச் சொல்வதுபோல இது. நல்ல நவீன ஓவியன் ஓவியத்தின் அடிப்படைகளும் தெரிந்தவனாகவே இருக்கிறான் என்பதால் அவனுக்கு அது இடதுகை செய்கிற வேலை. இதேபோல்தான் நவீன நாட்டியங்களை நிகழ்த்தும் கலைஞர்கள் பாரம்பர்ய நாட்டியங்களை அறிந்தவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் நவீன கவிஞர்கள் வெண்பா எழுத வேண்டாம், குறைந்தபட்சம் சந்தம் என்றால் என்ன என்பதுகூட தெரியாமலா இருப்பது?

சிலவருடங்களுக்கு முன்னால் மரபுக்கவிதை மற்றும் சந்தக் கவிதை மட்டுமே புனையும் நண்பரொருத்தரிடம் எழுத்தாளர் ஜெயமோகன் நவீன எழுத்தார்களை நான் அழைத்து வருகிறேன். அவர்களுக்கு செவ்விலக்கியத்தை அறிமுகம் செய்துவையுங்கள் என்று கேட்டுக்கொண்டார். கேட்டுக்கொண்டதோடு முடிந்துபோன விஷயம் அது. கட்டுச் சோத்துக்குள் பெருச்சாளியைக் கட்டிவைக்க சந்தக் கவிஞனும் விரும்பமாட்டான், தன் சுதந்திரத்தை இழந்து கட்டுச் சோத்துக்குள் பொதிந்துபோக நவீன கவிஞனும் விரும்பமாட்டான் என்பதைத்தான் காலம் அறியுமே!

மலையாளத்தில் உள்ளதுபோல் நவீன கவிதையும் பாடத்தகுந்த சந்தக் கவிதையாகவேஇருக்க வேண்டும் என்கிற கோஷத்தோடு தமிழகம் முழுக்க வலம் வந்துகொண்டிருந்தகும்பகோணம் சிலிக்குயில் வே மு பொதியவெற்பன்தான் என் நினைவுக்குவருகிறார். ஆரண்யம் வெளிவந்துகொண்டிருந்த சமயத்தில் அவர் எங்களை வந்துசந்தித்தார். ஒருநாள் எங்களோடு தங்கியிருந்தார் (எங்கள் என்பது நானும் ஸ்ரீபதி பத்மநாபாவும் என்பதை ஒபாமா கூட அறிவார்!). அப்போது அவரது இந்தப் பிரகடனம் எனக்கு சிரிப்பையே வரவழைத்தது. நவீன கவிதை என்பது மிகவும் நுணுக்கமானது மற்றும் மிகவும் சுதந்திரமானது. சந்தக்கவிதை மற்றும் மரபுக் கவிதை என்பது சந்தம் மற்றும் மரபு என்கிற அடைப்புகளின் காரணமாகவே வேண்டாத வார்த்தைகள் நிறைந்தது என்பதாக இருந்தது என்னுடைய வாதம்.
பிற்பாடு சாம்பல் என்று நான் கொண்டுவந்த இதழில் நுண்கவிதை என்பதாகக்கூடஒரு வடிவத்தை முன்வைத்தேன். நேனோட்டரி (நேனோ பொயட்ரி என்பதன் சுருக்கம்)என்பதாக அதற்கொரு ஆங்கிலக் கலைச்சொல் வேறுஙு (உலக அளவில் போகும்போதுஉதவும் பாருங்கள்!) அனந்தஷங்கர், லக்ஷ்மி மணிவண்ணன், பாலைநிலவன்ஆகியவர்களின் சில கவிதைகள், நுண்கவிதைகள் என்றும், யவனிகாஸ்ரீராம்,சிபிச்செல்வன், மகுடேசுவரன் முதலானவர்களின் கவிதைகள், கவிதைகள் என்றும்அதில் வெளிவந்தன. அவற்றை வாசித்துப் பார்க்குங்கால் நான் முன்வைத்தநுண்கவிதை என்பதன் நுட்பம் புரியும். சாம்பல் நின்றதோடு இந்த அடைப்பும்முடிந்துபோய்விட்டது. நவீன கவிதை நவீன கவிதை என்று உயிரை விடுபவர்கள்இதைக்குறித்து ஒரு அறிக்கைகூட விடவில்லை என்பதே அவர்கள் கொண்டுள்ளஅக்கறைக்கான நல்லுதாரணம்!

ஆனாலும் இந்த அனுபவங்களின் பிறகே பொதியவெற்பனின் ஆதங்கம் புரிகிற மாதிரிஇருந்தது. இப்போது தபூசங்கர், வைரமுத்து முதலானவர்கள் எழுதுகிற பாணியில் எழுத ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக புரிந்தும் புரியாமலும் நவீன கவிதைகளுக்குள் பிரவேசித்து, பின் மரபுக் கவிதை வெண்பா என்பனவற்றின் முக்கியத்துவத்தையும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் தண்டியலங்காரத்தைக் கையில் வைத்துக்கொண்டு வெண்பா, கோமூத்ரி, எட்டாரைச் சக்கரம், நாகபந்தம் என்ற எழுதிப் பார்த்து, சில ஆல்பங்களுக்குப் பாட்டெழுதி, நவீன கவிதைகளின் பல சாத்தியங்களையும் முனைந்து பார்த்துவிட்டு திரும்பிப் பார்த்தபோது இது சரி இது தவறு என்கிற முடிவுக்குள் என்னால் வந்து சேர்ந்திருக்க முடியவில்லை.

நாவலாசிரியர் நாஞ்சில்நாடனின் ஒரே கவிதைத் தொகுப்பான மண்ணுள்ளிப் பாம்புவெளியீட்டில் அவரது கவிதைகள் அவுட் டேட்டட் என்று குறிப்பிட்ட எனது தைரியம் இப்போது சருக்குகிறது. எது கவிதை எது கவிதையில்லை என்பதை யார் தீர்மானிப்பது? உங்களுக்கு மூன்று குழந்தைகள் பிறக்கின்றன. ஒன்று ஆணாயிருக்கிறது இன்னொன்று பெண்ணாயிருக்கிறது. மற்றதுதிருநங்கையாயிருக்கிறது. இதில் எது உசத்தி எது தாழ்த்தி? உங்கள்கண்ணுக்கு மூன்றும் சமானந்தானே!

நாஞ்சில் நாடன் உட்பட சில நவீன எழுத்தார்கள், விரைவில் வெளிவரவிருக்கும் படமொன்றுக்கு இளையராஜா இசையில் தலைக்கொன்றாகப் பாட்டெழுதியிருக்கிறார்கள். என் கணிப்பில் சுலபமாக இந்த வேலையைச்செய்தவர்கள் ஜெயமோகன் மற்றும் எஸ்ராமகிருஷ்ணன் ஆகியவர்களாகத்தான் இருக்க வேண்டும். நாஞ்சில்நாடனுக்கு கண்டிப்பாக கண்ணாமுழியெல்லாம் பிதுங்கியிருக்க வேண்டும் என்பதே எனதுஅனுமானம்.
பொதியவெற்பன் இதைத்தான் சொல்கிறார். அவரால் கண்டிப்பாக சினிமாச் சந்தத்துக்கு சிறப்பாக பாடல் எழுதிவிட முடியும் என்பதாகவே நான் நம்புகிறேன். இளையராஜாவுக்கு யாராவது கும்பகோணத்துக்கு டிக்கெட் வாங்கித் தாருங்கள்!

குதிப்பதுவே! மிதப்பதுவே! குலுங்குவதே!

இந்தக் கட்டுரைத் தொடரின் வெகுமுதல் பாராவை அலங்கரித்த ஒருசில அற்புதங்கள் பின்வருவன...

ஜெயமாலினியின் இடுப்பு, ஜோதிலட்சுமியின் அலட்சிய ஆட்டம், சில்க் ஸ்மிதாவின் கண்கள், அனுராதாவின் தொடைகள்...
இந்தப் பட்டியல் இன்னும் நீளக்கூடியது. விஜயலலிதாவின் கபடம், டிஸ்கோ சாந்தியின் ஆண்மை, குயிலியின் கள்ளத்தனமான புன்னகை, பபிதாவின் பின்பக்கம், ஷர்மிலியின் முன்பக்கம், ஷகிலாவின் சதைப்பிளவுகள்...
எத்தனை முறை சொன்னாலும் ஆண்களின் நாக்கில் எச்சிலையும் பெண்களின் வாக்கில் எரிச்சலையும் ஊற வைக்கிற பட்டியல் இது.

ஹெலன் கிலன் என்று இந்திப் படங்களைப் பார்த்துதான் தமிழிலும் இந்த மாதிரியான ஒரு வகைமை உற்பத்தி செய்யப்பட்டது. சாதாரணமாக பார்களில் நடக்கிற காபரே நடனமாகவே இவை ஆதிகாலத்தில் உற்பத்தி செய்யப்பட்டன. அதன்பிறகு விவாதக்குழுக்களின் சால்ஜாப்பு வாதங்களில் இவ்வாறு அவை திரிந்திருந்தன. அதாவது பார்கள் அல்லது காபரேக்கள் என்பது ஹீரோக்கள் போகிற இடமல்ல. அது வில்லன்கள் போகிற இடம். அந்த இடங்களில் அவிழ்த்துப் போட்டு ஆடுகிற பெண்கள் காணப்படுவது சகஜம். அப்படியானால் வில்லன்கள் இன்னும் கொஞ்சம் வசதியாகிறபோது தங்களுக்கென்று அந்தப்புரம்போல சில இடங்களை நிர்மாணித்துக்கொண்டு அந்தப் பெண்களைத் தங்கள் பங்களாவிலோ அல்லது அண்டர் கிரவுண்ட் ஃப்ளோர்களிலோ ஆட வைக்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? அதிலும் அகில உலக கடத்தல் மன்னர்களின் மாநாடு பகிரங்கமாக ஒரு பொதுவான பாரில் எப்படி நடக்க முடியும்? அப்படி ரகசியமாக நடக்கிற மாநாட்டில் மதுவும் மாதுவும் ஆட்டமும் பாட்டமும் இல்லாமல் எப்படி இருக்க முடியும்? இந்த நியாயமான காரணங்களால் வில்லன்களின் இருப்பிடங்களிலேயே கற்பிலாப் பெண்டிர் காலிற் சலங்கைகளும் இல்லாமல் சதிராடுவதில் என்ன தப்பு இருக்க முடியும்?

இப்படியெல்லாம் யோசிக்கப்பட்டு யோசிக்கப்பட்டு காபரே பார்களிலிருந்து மாளிகை செட்டுகளுக்கு வந்து சேர்ந்தார்கள் எங்கள் கவர்ச்சிக் கன்னியராம் கனவுக்கன்னிகள்! அதன் அடுத்த டெவலப்மென்ட்டாக அவர்கள் கதையின் மற்ற பாத்திரங்களின் மீது லைவ் பாம்களாக ஏவப்பட்டார்கள். அவர்களில் ஹீரோக்கள் முதல், பணக்காரர்களான ஹீரோக்களின் அப்பாக்கள், சகோதரர்கள் என்று யாரும் விதிவிலக்கல்ல. அந்தப் பெண்களின் வேலை ஏவப்படுபவனின் உடன் இருந்து, ஆட்டமாடிப் பாட்டுப்பாடிக் காட்டக்கூடாததையெல்லாம் காட்டிக்காட்டி அவனை அப்படியே வசப்படுத்தி, குறிப்பிட்ட இடத்துக்குக் குறிப்பிட்ட நேரத்துக்குக் கூட்டிச் சென்று சேர்க்கவோ, பத்திரங்களில் கையெழுத்து வாங்கவோ, அல்லது இன்னும் அடுத்த கட்டமாக, தங்கள் கையாலேயே கொன்றுவிடவோ செய்வதுதான்!

இவர்களுக்கு பிற்பாடு தவறாமல் ஒரு கடமையும் வழங்கப்பட்டது. உச்சக் காட்சியில் வில்லனும் ஹீரோவும் நேராக மோதும்போது இவர்கள் டைட்டாக கால்சராய் அணிந்துகொண்டு ஹீரோயினோடு கட்டிப் புரண்டு சண்டை போட வேண்டும். இந்த விதிக்கு ஆங்கிலப் படங்களும்கூட விலக்கல்ல.
அதுவும் போனால் சில நேரங்களில் இவர்கள் ஒரு அயோக்கியத்தனத்தைச் செய்துவிடுவார்கள். ஹீரோவின் நல்ல மனத்தைப் பார்த்தோ, அல்லது வில்லனிடம் அடிமையாக இருப்பது பிடிக்காமலோ, உள்குத்தாக வில்லன் அவர்களின் உறவினர்கள் யாரையாவது ஒளித்துவைத்து டபுள்கேம் ஆடுகிறான் என்பதாலோ, கடமை தவறி, ஹீரோவுக்கு வில்லன் குறித்த ரகசியங்கள் சிலவற்றைத் தெரியப்படுத்திவிடுவார்கள். இவ்வாறு அவர்கள் நடந்துகொண்டால் நாம் உடனே கொஞ்சம் வாய்க்கரிசியும் ரெண்டு லிட்டர் பாலும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

அழகு எப்போதுமே ஆபத்தானது என்பதன் அடையாளமாகவே இந்த மாதிரி பெண் பாத்திரங்கள் உற்பத்தி செய்யப்பட்டன என்று சினிமா சப்பைப்கட்டு கட்டக்கூடும் என்று என்னால் எழுத முடிவில்லை. அப்படி எழுதினால் அது உண்மையாகாது. ஆரம்பத்திலிருந்தே நடிகைகளை அவிழ்த்துக் காட்டுகிற ஆசையில்தான் சினிமா குறியாக இருந்தது. சாதாரணமாக வீதியில் முந்தானை விலகினால் அத்தனை கண்களும் அந்தப் பக்கம் திரும்புவதன் அடுத்த பரிமாணமே இது. ஆகவே இது மிகவும் இயல்பானதே! சினிமாக் கலைஞனின் வேலை என்ன, எது பார்வையாளனைக் கவருகிறதோ அதை அவனுக்குக் கொடுக்க வேண்டியது! முலைகள் கவர்ந்தால் முலைகளைக் கொடுத்துவிடவேண்டியதுதான்! தொப்புள் கவர்ந்தால் அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றிவிடவேண்டியதுதான், அல்குல் சென்சாரால் தடை செய்யப்பட்ட பகுதி என்பதனால் அதன் குறியீடாகவே இந்தத் தொப்புள் பல படங்களிலும் செயல்பட்டு வந்திருக்கிறது.

அதோடு ஒரு கவர்ச்சி நடிகை நடனமாடும்போது வெறும் நடனம் மட்டுமா நடக்கிறது? குதிப்பதுவே! மிதப்பதுவே! குலுங்குவதே! என்று ஒரு வசந்த விழாவே அல்லவா நடந்தேறுகிறது! சாதாரணமாக பாட்டுவந்தால் தம்மடிக்கப் போகிற தம்பிகள் யாரையாவது இந்தப் பாடல்களில் வெளியே போகச் சொல்லுங்கள் பார்க்கலாம், தம்முக்கு பதிலாக விரலை வாயில் வைத்துக்கொண்டு விசிலடித்துக்கொண்டிருக்கும் அவர்களின் காதுகளில் உங்கள் வார்த்தைகள் விழுவது சாத்தியமேயில்லாத ஒரு விஷயம்.

இதனாலேயே கவர்ச்சி நடிகைகள் என்கிற வம்சமொன்று எமது மொழியிலும் உற்பத்தி செய்யப்பட்டது. அவர்கள் துணிச்சலானவர்கள் என்பதாக பரவலாக ஒரு கருத்து வேறு! இதில் எதிர்பாராத விதமாக அவுட் டோரில் நடக்கிற ஒரு ஷுட்டிங் ஸ்பாட்டில் ஜெயமாலினியோ சில்க் சுமிதாவோ நடித்துக்கொண்டிருந்தால் அந்த இடத்தில் பெரும் காத்திருப்பு நிகழும். நடிகை ஒரு குடைக்குக் கீழே காணும் மடக்கு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறாள். அவளது உடம்பை ஒரு போர்வை முழுவதும் போர்த்தியிருக்கிறது. இந்தக் கோலத்திலேயே அவள் கிட்டத்தட்ட ஒருமணிநேரம் உட்கார்ந்திருக்கிறாள். மத்த படவாக்கள் எல்லாம் காமிராவைத் தூக்கவும், வைக்கவும், ட்ராக்குகள் போடவும் கீடவும், லைட்டுகளை நிறுத்தவும் கொள்ளவுமாக ஏதேதோ செய்துகொண்டிருக்கிறார்கள். நடிகையைக் கூப்பிடுகிற வகையாகவும் இல்லை, அவள் அந்தப் போர்வையை விலக்குவதாகவும் இல்லை. வெய்யிலானால் சுட்டெரிக்கிறது. அதைவிடவும் அதிகமாக உள்ளேயிருந்து ஒன்று சுட்டெரிக்கிறது. போர்வைக்குள் அவள் அணிந்திருக்கும் ஆடை எந்த அளவுக்கு சிறியதாக இருக்கும் என்கிற மனநெருப்பு தகதகவென்று எரிந்துகொண்டிருக்கிறது. இந்த சொப்பன உச்சத்திலேயே ஸ்கலிதமாகிவிடும்போல இருக்கிறது. கடைசியாக ஒருவழியாக ரெடி என்று ஒரு ஓசை கேட்கிறது. அதைத் தொடர்ந்து திருப்பதியில் பிரம்மோற்சவம் நிகழ்வதுபோல மாபெரும் மனிதக்கூட்டத்தின் கோஷம் வானைப் பிளக்கிறது.

இந்த அவலத்தை பலரும் பலவிதமாகக் கதைத்துக்கொண்டிப்பார்கள். சினிமாவிலேயே அவிழ்த்துப் போட்டு ஆடுகிறாள், நேரில் காட்டினால் என்ன? அந்தப் படுபாவிகளுக்கு அவர்கள் சொல்ல விரும்பும் பதில் இப்படி இருக்கலாம், சினிமாவில் பாம்பு கடிக்கிறது என்பதற்காக உண்மையில் அதைக் கூப்பிட்டு நாகமே நாகமே ஒரு நக்கு நக்கிவிட்டுத் தீண்டு என்று சொல்ல முடியுமாடா முட்டாள் காமுகர்களா!

நீண்ட நெடும்காலம் இருந்துவந்த இந்த நடனப் பாரம்பரியம் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்தது. டைட்டில் கார்டில் ஹீரோ பெயருக்கப்புறம் கவர்ச்சி நடிகையின் பெயர்தான் கைதட்டல் வாங்கி வந்திருந்த சாதனை ஒருநாள் முறிந்தது. நாயகிகளின் கண்கள் மாரியம்மனின் கண்கள் போல திறந்துகொண்டன. அவர்கள் ஏகாந்தத்திலும் அந்தரங்கப் பொழுதுகளிலும் தங்கள் உடலைத் தாங்கள் பார்க்கவும் மற்றவர்கள் பார்த்துச் சொல்லவும் அறிந்துகொண்டார்கள். இப்படி திண்ணென்று இவ்வுடம்பு இருக்கும்போது இன்னொரு உடம்பு வந்து என்ன, காசையும் ரசிக உள்ளங்களின் மனசையும் கொள்ளை கொண்டு போவது என்று அப்போது அவர்களின் மனங்களில் ஒருவிதமான மயக்கம் தோன்றியது. அது ஒருவழியாக நிலைபெறவும் செய்தது. ஸ்ரீப்ரியா முதலான நாயகிகள் முலைகளின் பிளவுகளை ஜீனத் அமன்களை அடியொற்றி வெளிப்படுத்தத் தொடங்கினார்கள். மாதவிப் பொன் மயிலாள் இன்னும் ஒரு படி உயரம் போய் டூபீஸில் ஒரு தோற்றம் கொடுத்தாள். தமிழ் சினிமா வரலாற்றிலேயே அத்தனை குறைவான துணியில் தைக்கப்பட்ட டூபீஸ் வேறொன்று இருக்க முடியாது. டிக்டிக்டிக் படத்தில் அந்த இளநீல டூபீஸ் உடையில் மாதவியைப் பார்த்தபோது மனந்தடுமாறி விழுந்தெழாதவர்கள் என்பதாக ஒருத்தரும் இருந்திருக்கவில்லை. இன்றைக்குத்தான் எஃப் டீவி கிஃப் டீவியெல்லாம். அன்றைக்கு மாதவிதான் ஒட்டுமொத்த தமிழ் தேயத்தின் ஃபேஷன் சேனலே!

இப்படியாரம்பித்த இந்த திவ்ய தரிசனங்கள் வில்லன்கள் முன்னால் நாயகிகள் ஆடுகிற அளவுக்குக் கொண்டு சேர்த்தது. இது பரிணாமத்தின் தவிர்க்க இயலாத அடுத்த வளர்ச்சி என்பதாக சினிமா சொல்லக்கூடும். ஆனால் அது எப்படி நியாயமாகும்? வில்லன் முன்னால் தன்னுடம்பைக் காட்டிக்கொண்டு நாயகி ஆடினாள் என்றால் அவள் எப்படி கற்புடையவளாகக் கருதப்பட முடியும் என்று ஒரு பெரும் விவாதம் எழுந்த வகையில்தான் இந்த அடுத்த விபத்தும் நேர்ந்திருக்கக்கூடும். நாயகியோடு நாயகனும் ஆடினால் முடிந்தது கதை! அது எப்படி? நாயகனைத்தான் வில்லனுக்கு அடையாளம் தெரியுமே! அதனால் என்ன? ஒட்டு தாடியைத் தாடையில் பொருத்தினால் அடையாளம் தெரியாமல் போய்விட்டுப் போகிறது. சிம்ப்பிள்!

அடப்பாவிகளா!

இந்த அட பாவிகளா என்கிற வியப்பு கவர்ச்சி நடனத்தின் மீதான எனது எதிர்க்குரல் என்று தப்பிதமாக எண்ணிக்கொள்ள வேண்டாம். எனக்கு கவர்ச்சி நடனங்கள் ரொம்பவும் பிடித்தமானவை. எனது எதிர்க்குரல் இப்படியெல்லாம் லாஜிக் யோசித்தவர்களின் மீதுதான்!

எனது ஆல்டைம் ஃபேவரிட்டாக உள்ள கவர்ச்சி நடனம், அன்னை ஓர் ஆலயம் படத்தில் ஜெயமாலினி ஆடிய இரவு நேரம், நிலவு காயும் என்கிற பாடலுக்கானதுதான். அதிக விரசமில்லாத அழகான நடனம் அது. பாடலும் மிகவும் சொக்க வைக்கக்கூடியது. ஜெயமாலினியின் ரோஸ்நிற இடுப்பும் அதன் குடுவைத்தனமான அமைப்பும் பார்க்கப் பார்க்கக் கிறங்கடிக்கக்கூடியது. நமது கோவில் சிலைகளில் காணும் சாமுத்திரிகா லட்சணத்தோடு பிறந்த முக்கியமான அழகி ஜெயமாலினி என்பதில் எனக்கு எவ்விதமான மாற்றுக் கருத்தும் இல்லை. சிம்ரனின் இடுப்பிலும் இந்தக் காலத்திலும் டூபீஸில் நடிக்க அஞ்சும் நயன்தாராவின் பில்லா இடுப்பிலும் மயங்கிக் கிடக்கும் இளம் மனங்கள் தயை கூர்ந்து நான் மேற்சொன்ன பாடலை அடுத்தமுறை உங்களிடம் மைக்கை முன்னால் நீட்டி நீங்கள் விரும்பும் பாடல் எது என்று கேட்கும் டீவிக்குட்டியிடம் கேளுங்கள். அகில உலகமும் உங்களை வாழ்த்திப் பாடும்.
சாதாரணமாக கவர்ச்சி நடிகைகள் அல்லது நடிகைகளின் கவர்ச்சி என்பதாக எழுதப் புகும் புளுகுணி ஆசாமிகள் அவர்கள் வாழ்வின் விளிம்பிற்கு விரட்டப்பட்டவர்கள், தற்கொலைக்குத் தள்ளப்பட்டவர்கள் என்பதாகவெல்லாம் டுபாகூர் கட்டுரைகளாக எழுதி உங்களின் கண்களைப் பனிக்க வைக்க முயன்று வருகிற வன்கொடுமைக்கு எதிராக என்னால் உருப்படியாக ஒரு கட்டுரை எழுத முடிந்ததற்காக பெண்ணுடம்பின் மென்சதைகளை தளதளப்பாகத் தொடர்ந்து படைத்துவரும் இயற்கையின் தன்மையைத் தொழுகிறேன்.

வசந்த விழாக்களும், களவு மணங்களுமாக நமது பாட்டன்களின் பாட்டன்மார்களும் பாட்டிகளின் பாட்டிமார்களும் கும்மாளமிட்ட தேயமிது. காமசூத்திரங்களும், மதனநூல்களுமாக எதிர்ப்பாலின் உடலை எவ்வாறெல்லாம் ரசிக்கலாம் என்பதை அனுபவித்து அனுபவித்து உலகத்திற்குக் கொடுத்த தேயமிது. போகிறவன் வருகிறவனெல்லாம் அடித்த கொள்ளையில் வறுமை என்கிற கொடிய நோய் பீடித்த வகையில்தான் எமக்கு எம்மைக் கட்டிய பெண்களின் நிர்வாணத்தைக்கூட ரசிக்க இயலாத பொறுமையிழப்பு நிகழ்ந்துவிட்டதே தவிர, அது உண்மையில் எமது யதார்த்தமான குணாதிசயமல்ல என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.