March 05, 2009

திரைக்கதை விவாதமும் வசன வியாக்யானமும்

சினிமா என்பது ஒருவகையில் கூத்து என்கிற வகைமையைச் சார்ந்தது என்பது யாவருக்கும் தெரியும். ஆனால் தெருக்கூத்து, கழைக்கூத்து, கேலிக்கூத்து இந்த அத்தனை கூத்துகளையும் ஒன்றாகப் பிசைந்து உருட்டினால் அதுதான் தமிழ் சினிமாஙு இதில் கேலிக்கூத்து என்பது திரையில் மட்டும் பார்க்கிற வகையைச் சார்ந்தது அல்ல. படத்துக்கு பூஜை போடும் முன்பாகவே நடக்க ஆரம்பித்துவிடுகிற ரகளை அது.

ஆதாம் ஏவாள் காலத்தில் ஸ்டுடியோக்களின் பிடியில் சினிமா இருந்தபோது கதை இலாகா என்பதாக ஒரு துறையே இருந்தது. (ஆதாம் ஏவாள் காலம் என்றால் ஆதாமும் அவரது தாலிகட்டாத மனைவியான ஏவாளும் வாழ்ந்ததாக விவிலியம் கூறும் காலத்துக்கெல்லாம் போய்விடக்கூடாது, சினிமாவின் ஆதிகாலம் என்பதாகக் கொள்ளவேண்டும்.) இந்தக் கதை இலாகா குறித்து விகடனில் ஜோக் கூட படித்ததாக ஞாபகம் வருகிறது. கதை இலாகா என்று ஒரு போர்டு மாட்டியிருக்கிறது. வாசலில் கையில் கதையுடன் பீமன் நின்றுகொண்டிருக்கிறான். அருகில் நிற்கும் ஒருவர் சரி நீங்க ஒரிஜினல் பீமனாவே இருக்கலாம், ஆனா இது நீங்க சொல்ற கதை இலாகா இல்ல என்று பேய் முழி முழித்தவராக சொல்லிக்கொண்டிருக்கிறார்.

கதை விவாதங்களில் நடக்கிற கூத்தோடு ஒப்பிட்டால் இந்த ஜோக் மிகச் சாதாரண ரகம்தான். ஏனென்றால் ஒரு சினிமாவுக்கான கதை என்ன என்பதை ஒரு போஸ்ட் கார்டில் எழுதிவிடலாம். அதை உருட்டிப் பிரட்டி திரைக்கதையாக மாற்றுவது எல்லோருக்கும் எளிதான வேலையல்ல. இதனாலேயே இந்த விவாதம் என்கிற வம்புக்குள் வந்து விழ வேண்டியிருக்கிறது. பழைய படங்களில் இந்த விவாதக்குழுவின் பெயர்கள்கூட டைட்டிலில் இடம் பெற்றுவந்தது. அப்புறம் அந்த வழக்கம் ஒழிக்கப்பட்டு கதை: கதை இலாகா என்று தங்கள் நிறுவனத்தின் பெயரை முன்னால் போட்டு டைட்டிலில் காட்ட ஆரம்பித்தார்கள். அதாவது கதை என்பதை ஒருவர் எழுதவில்லை. ஒரு கும்பல் சேர்ந்து எழுதியது என்பது அர்த்தம்.

இப்போது இந்தப் போக்கு வேறு விதமாக மாறியிருக்கிறது. என்னதான் கதை விவாதம் என்பது தவிர்க்கப்பட இயலாதது என்றபோதும் இப்போது கதை விவாதத்தில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் அந்தப் படத்தின் உதவி இயக்குனர்கள்தான். இவர்கள் சினிமாவின் அத்தனை வேலைகளையும் கற்றுக்கொள்ளும்பொருட்டு ஆதி முதல் அந்தம் வரை கூடவே அலைபவர்கள். கற்றுக்கொண்ட பின்னால் இயக்குனரின் வேலை பளுவைக் குறைத்துக் கொடுப்பவர்கள். இதனால் கதை விவாதத்திலும் இவர்கள் இடம் பெறுவது அவசியமானதுதான் என்பதில் மறுப்பேதும் இல்லை. ஆனால் இந்தக் கதை விவாதத்தில் அமரும் அத்தனை பேரும் கதை குறித்த சரியான பார்வை கொண்டவர்கள்தானா? ஊர்கூடி தேரிழுத்துவிட்டு பயில்வான்தான் இழுத்தார் என்று சொல்வது நியாயமானதுதானா? இப்படி இஷ்டத்துக்கு ஆளுக்காள் இழுத்தால் கதை ஜவ்வு மாதிரி நீண்டுகொண்டு போகாதா என்று ஆயிரம் கேள்விகள் உதிக்கின்றன அல்லவா! சரி, பார்க்கலாம்.

சினிமாவில் சேரவேண்டும் என்கிற ஆசையில் சென்னை மண்ணை நான் தொட்டபோது ஒருசில கதைகள் வெளிவந்து கொஞ்சம் பேருக்கு என் பெயர் தெரிந்திருந்தது. அதில் முக்கியமானவர் நான் பணியாற்றிய இயக்குனர். அவருக்கு என் மீது அபரிமிதமான நம்பிக்கை இருந்தது. நான் இப்போது ஒரு சீரியலில் கமிட் ஆகியிருக்கிறேன். உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் அதில் நீங்கள் பணி புரியலாம் என்று அவர் சொன்னார். அவர் பத்திரிகையாளராக இருந்து சினிமாவுக்கு வந்தவர் என்பதாலோ என்னவோ, என் மீது அந்த அளவுக்கு மரியாதை வைத்திருந்தார். நான் அந்த சீரியலில் உடனடியாக இணைந்துகொண்டேன்.

அன்றிலிருந்து பத்தாவது நாள் ஷøட்டிங் ஆரம்பிப்பதாக ஏற்பாடு. ஆர்ட்டிஸ் முதல் லொகேஷன் வரைக்கும் எதுவுமே தீர்மானிக்கப்படாத நிலையில் ஒரு சிறு அறையில் ஐந்தாறுபேருடன் நானும் அடைக்கப்பட்டு, டைரக்டர் கதையை சொன்னார். கதை இதுதான், நாயகன் ஒரு அனாதை இளைஞன்! அனாதை விடுதியில் வளர்ந்து, எம்பியே படித்து ஒரு நிறுவனத்தில் சேர்ந்து அந்த நிறுவனத்திற்கே ஜெனரல் மேனேஜர் என்கிற அந்தஸ்தில் இருக்கிறான். அவனுக்கு ஒரு கூட்டுக் குடும்பத்தில் திருமணம் செய்துகொண்டு நிறைய சொந்தங்களோடு வாழவேண்டும் என்பது ஆசை. நாயகி ஒரு கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவள். ஏகப்பட்ட சொந்தக்காரர்களுடன் ஒரே வீட்டில் வசிப்பவள். அவளுக்கு சொந்தங்களே இல்லாமல் தனியாக வாழ்கிற ஒருவனைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசை. இவர்கள் இருவருக்கும் கல்யாணம் நடக்கிறது. என்னென்ன சிக்கல்கள் வருகின்றன என்பதுதான் கதை! -இவ்வளவுதான் இயக்குனர் சொன்னார். அவருக்கு ஷøட்டிங் ஏற்பாடுகள் பலவும் இருந்த வகையில் திரைக்கதை தயாராக்குங்கள் என்று சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கும் போய்விட்டார்.

இதற்குப் பிறகுதான் ஆரம்பிக்கிறது கதை! அந்தக் காலகட்டத்தில் இப்போதுமாதிரி ஆயிரக்கணக்கில் எபிசோட்கள் உள்ள தொடர்கள் வந்திருக்கவில்லை. 13 எபிசோட் சீரியல்கள்தான் பாப்புலராக இருந்தன. வாரம் ஒரு எபிசோட் என்கிற வகையில் மூன்று மாதத்தில் அவை முடிந்துவிடும். எங்கள் சீரியல் 26 எபிசோட் வருகிற ஆறு மாத சீரியல். அதே காலகட்டத்தில்தான் முதல் 52 வார சீரியல் சக்தி (பானுப்பிரியா நடித்தது) வந்தது. இந்த போஸ்ட் கார்டு சைஸ் கதையை சுவாரஸ்யமான காட்சிகளாக 24 எபிசோடுகளுக்கு வளர்க்கவேண்டும். விளம்பரங்கள், டைட்டில்கார்டு, ரீகேப்ஸ் எல்லாம் போக ஒதுக்கப்படும் அரை மணிநேரத்தில் பத்து நிமிடங்கள் போக, இருபது நிமிடங்கள் தேறும். இருபதை இருபத்து நாலால் பெருக்கினால் 480நிமிடங்கள். ஒரு சினிமா அதிகபட்சம் 3 மணிநேரம் ஓடினாலும்கூட மொத்தமே 180 நிமிடங்கள்தான். ஆக இந்த சீரியல் கிட்டத்தட்ட மூன்று சினிமாக்களுக்குத் தேவையான திரைக்கதையைக் கோருகிறது. சினிமாவிலாவது பாட்டு சண்டை என்று பல விஷயங்களால் கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்கள் போக மீதமுள்ள நேரத்திற்கு மட்டும் திரைக்கதை செய்தால் போதும். நாங்களோ 480 நிமிடங்களுக்கும் திரைக்கதை செய்தாக வேண்டும். அதிலும் ஒவ்வொரு எபிசோடின் முடிவும் அடுத்த எபிசோடைப் பார்க்கத் தூண்டுகிற வகையில் ஒரு ஜெர்க்கை ஏற்ப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும் என்றெல்லாம் நான் பிரமாதமாக யோசித்துக்கொண்டு விவாதத்தில் கலக்க ஆரம்பித்தேன்.

ஆனால் முதல் நாளே எனக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்துவிட்டது. அந்த விவாதத்தில் உட்கார்ந்திருந்தவர்களில் ஒருத்தரோ ரெண்டுபேரோ வேண்டுமானால் தேறலாம். அனாவசியமாக நாலு பேர் உட்கார்ந்துகொண்டு கதையை வளர விடாமல் சொதப்பிக்கொண்டிருந்தார்கள். கதையின் முடிவு குறித்து முதல்நாளே விவாதம் எழுந்தது. அப்போது எனக்குத் தோன்றிய சில முடிவுகளை அவை முட்டாள்தனமானவை என்பதாக நான் ஒதுக்கிவிட்டேன். வெளியே சொல்லவில்லை. முதல் கதை விவாதம் என்பதால் மிகுந்த தயக்கத்தோடு லாஜிக் உதைக்கிற இடங்களை மட்டும் சுட்டிக்காட்டிக்கொண்டிருந்தேன். அதற்கு அவர்கள் மிகச் சாதாரணமாக சொன்னார்கள், "லாஜிக்கெல்லாம் பாக்கக்கூடாது சார்" எனக்கு அடப்பாவிகளா என்றிருந்தது. அதன்பிறகு எனக்கு வாயைத் திறக்கவே பயமாக இருந்தது. முழுக்க முழுக்க ஓட்டையாக ஒன்று உருவாகிக்கொண்டிருக்கையில் அதற்குள் எதையும் இட்டு நிரப்ப முடியாது என்பதாலும் நான் அதிகம் வாயைத் திறக்கவேயில்லை.

பத்தாம் நாள் அவர்கள் ஒரு க்ளைமாக்ûஸ கண்டுபிடித்தார்கள். இயக்குனர் அடக்கம் அத்தனை பேரும் அந்த க்ளைமாக்ûஸ கை தட்டி வரவேற்றார்கள். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அந்த க்ளைமாக்ஸ் எனக்கு முதல்நாள் முதன்முதலில் தோன்றியது. மிகவும் அபத்தமானது என்பதால் நான் வெளியே சொல்லாமல் விட்டவற்றில் முதலாவது அது! ஆக பத்து நாள் விவாத சாதனை ஒரு அபத்தமான க்ளைமாக்ஸ் மட்டும்தான்.

அதைத் தொடர்ந்து ஷøட்டிங் தேதி மேலும் பத்து நாட்கள் தள்ளிப்போடப்பட்டது. அடுத்த கட்டமாக மதிய உணவுக்காக வந்து உட்கார்ந்துகொண்டு கதையைக் குழப்பிக்கொண்டிருந்த உதவி இயக்குனர்கள், வசனகர்த்தா, பல படங்களில் பணியாற்றியவர் என்கிற அந்தஸ்தோடு வந்து அமர்ந்திருந்த மூத்த இணை இயக்குனர் ஒருவர் என எல்லோரும் இயக்குனரால் வேறு வேலைகளுக்கு அனுப்பப்பட்டு, நானும் அந்த சீரியலின் இணை இயக்குனர் ரவிச்சந்திரனும் மட்டும் மிஞ்சினோம். இயக்குனர் பத்து நாட்களில் முழு ஒன்லைன் ஆர்டரையும் செய்யவேண்டியது எங்கள் பொறுப்பு என்று நம்பி விட்டுவிட்டு மற்ற வேலைகளுக்குப் போனார். அதன்பிறகுதான் எபிசோட் வாரியாக ஒழுங்காக எழுதி பத்தே நாட்களில் அந்த ஒன்லைன் ஆர்டரை எங்களால் முடிக்க முடிந்தது.

ஒவ்வொரு எபிசோட் முடிந்ததும் அதை வசனகர்த்தாவுக்கு அனுப்பிக்கொண்டிருந்தோம். அவர் வீட்டில் உட்கார்ந்து வசனம் எழுதிக்கொண்டிருந்தார். எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. முதல்நாள் ஷøட்டிங்கில்தான் வசனங்களை இயக்குனர் முதலில் பார்த்தார். பிரேக்டவுன் பிரகாரம் முதல் காட்சி ஷூட் செய்யப்பட்டது. பாதிகூட முடிந்திருக்கவில்லை. டைரக்டர் என்னை அழைத்தார். அடுத்த சீன் என்ன? என்று கேட்டார். ஷøட்டிங் ஸ்பாட்டில் இப்படி கேட்டால் பிரேக்டவுன் பிரகாரம் அடுத்த சீன் என்ன என்பது அர்த்தம். அந்தக் காட்சி இருபதாவது காட்சி என்றால் அடுத்தது இருபத்தொன்று என்று சொல்லக்கூடாது. பிரேக்டவுன் என்பது நட்ட நடுரோட்டில் நின்று போகிற பஸ்ஸை குறிப்பது அல்ல. எமது சினிமா பாஷையில் அன்றைக்கு எடுக்கப்போகிற காட்சிகளின் வரிசை. லொக்கேஷன், ஆர்ட்டிஸ்ட் கால்ஷீட், ப்ராப்பர்ட்டீஸ், எக்யூப்மென்ட்ஸ் என்று இருப்பை வைத்து அவை எந்தெந்த காட்சிகளில் ஒத்து வருகின்றன என்கிற அடிப்படையில் தயாரிக்கப்படுவதுதான் பிரேக்டவுன் என்கிற அன்றைய ஃபுட்டேஜ். நான் அடுத்த காட்சி எது என்று கூறினேன். டைரக்டர் அடுத்த காட்சிக்கான வசனத்தை நீங்கள் எழுத முடியுமா என்று கேட்டார்.

எனக்கு இது என்னடா வம்பு என்று இருந்தது. ஏனென்றால் அந்த வசனகர்த்தா அந்தக் கூட்டுக் குடும்பத்தில் எம்மார்ராதா செய்கிற கேரக்டர் மாதிரி ஒரு கேரக்டரில் நடித்துக்கொண்டுவேறு இருந்தார். ஆசாமி அருகில் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இது இல்லாப் பொல்லாப்பு அல்லவா!

ஆனால் அந்த காட்சி எடுத்து முடிக்குமுன் நான் அடுத்த காட்சியை எழுதி முடிக்க வேண்டி இருந்தது. இயக்குனர் வாங்கி ஒரு பார்வை பார்த்தார். அப்படியே ஷாட் பிரிக்க ஆரம்பித்தார். இன்னிக்கு பிரேக்டவுன் சீன்ஸ் எல்லாம் நீங்களே எழுதிடுங்க என்று சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கும் ஷாட்டுக்குப் போய்விட்டார். இப்படி எனது முதல் சீரியல் முழுக்கவும் ஒரு அறையில் ஷூட்டிங் நடந்தால் அதற்கடுத்த அறையில் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தேன். அந்த முதல் பத்துநாள் விவாதக் கூத்து மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் ஷூட்டிங் போகுமுன் இந்த வசனப் பிரச்சனை வேறு ரூபத்தில் திரும்பியிருக்கும்.

நான் முதன்முதலில் இயக்குனரை சந்தித்தபோதே அவர் என்னிடம் சொன்னது அதுதான். நீங்கள் கடைசி நேரத்தில் வந்திருக்கிறீர்கள். இல்லாவிட்டால் வேறு பொறுப்பை கொடுத்திருப்பேன் என்று! அது என்ன பொறுப்பு என்பது போகப் போகத்தான் புரிந்தது. வசனம் எழுதுகிற வேலை. இருபத்தைந்து நாட்கள் ஷூட்டிங் நடந்தது. முடிந்து பார்த்தபோது முன்னூறு பக்கங்களுக்கும் மேல் என் கைப்பிரதி இருந்தது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், நான் காட்சிவாரியாக வசனம் எழுதவில்லை. பிரேக்டவுன் வாரியாக எழுதியிருக்கிறேன். முதல் முதலாக எழுத வருகிற ஒருவர் இவ்வளவு கச்சிதமாக எந்தக் காட்சியிலும் வசனம் பிசகாது எழுதுவது சாத்தியமேயில்லை என்று இயக்குனர் என்னிடம் வியப்பைத் தெரிவித்தார்.

நான் வசனம் எழுத ஆரம்பித்த ஒரே வாரத்தில் அந்த வசனகர்த்தாவுக்கும் எனக்கும் பிரச்சனை வந்து பிறகு நல்ல நண்பர்களாக ஆனபோது அவரும் இதே கருத்தைத் தெரிவித்தார். ஆரம்பத்தில் கோபித்துக்கொண்ட அவர் பிற்பாடு நல்ல நண்பராக ஆனதற்குப் பின்னணியிலும் ஒரு முக்கிய காரணம் இருந்தது.

அந்த சீரியலுக்கு வசனம் என்று வந்தது என் பெயர் அல்ல, அவரது பெயர்!

3 comments:

மண்குதிரை said...

வாசித்தேன். ரசித்தேன்.

Cable சங்கர் said...

/அந்த சீரியலுக்கு வசனம் என்று வந்தது என் பெயர் அல்ல, அவரது பெயர்!/
இதெல்லாம் சினிமாவுல ரொம்ப சகஜம்சார்.. ஒரே ஒரு லைனை வைத்து திரைக்கதை செய்ய சொல்லி என்னை கேட்ட என் நண்பன் ஒருவன்.. படம் கிடைத்த பின் அவன் ஆபீஸ் பக்கம் கூட நெருங்க விடவில்லை.. அட்லீஸ்ட் உதவின்னாவது போடுறான்னா.. அது அவன் திரைக்கதையாம்.? என்னத்தை சொல்ல.

உண்மைத்தமிழன் said...

ஸார்..

தங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பதிவுலகில் இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது..

இப்போதுதான் சக பதிவர் வெயிலான் அவர்கள்தான் இந்த லின்க்கை எனக்கு அனுப்பியிருந்தார்.

படித்தேன்.. தங்களது அனுபவம் வேறு சிலருக்கும் நடந்திருக்கிறது.. எனக்கும் நடந்திருக்கிறது..

படிக்க, படிக்க சுவாரஸ்யமாக உள்ளது தங்களது எழுத்து..

வாழ்த்துக்கள்..

திரட்டிகளில் இணைந்தீர்களானால் இன்னமும் நிறைய பேருக்கு உங்களுடைய எழுத்தாற்றல் பிடித்துப் போகும்..