February 27, 2009

பத்திரிகையாளர்களின் பிடியில் சினிமா


பேசாப் பொருளைப் பேசுவது என்பதாக ஒரு phrase உண்டு! நான் இப்போது பேசப்போகிற பொருள் பேசக்கூடாதது. அப்படியென்ன பெரிய National Secret என்று கேட்பவர்கள் தொடர்ந்து படிக்கலாம்.

சினிமா நாளுக்கு நாள் நலிவடைந்துகொண்டே போவதற்கான முக்கிய காரணங்களில் பத்திரிகைகள் மற்றும் மீடியாக்களின் போக்கும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். அறுபதுகளிலோ எழுபதுகளிலோ இந்தப் பத்திரிகைகளை நம்பி சினிமா இருந்திருக்கவில்லை. சினிமாவை நம்பித்தான் சினிமா பத்திரிகைகள் என்று சில வந்துகொண்டிருந்தன. ஆனால் இப்போது விஷயம் அப்படியே தலைகீழ்!

இன்றைக்கு ஒரு சினிமா வெற்றிபெறவேண்டுமானால் அதற்கு மிக முக்கிய தேவை பப்ளிசிடி என்று சொல்லப்படுகிற பரவலாக அறிவிக்கப்படல். அது போஸ்டர்கள், பத்திரிகை விளம்பரங்கள், டீவி ட்ரெய்லர்கள் என்பனவற்றோடு அடங்கியிருந்த காலம் இப்போது மலையேறிவிட்டது. ஒரு படம் பூஜை போடப்படும்போதே போஸ்டர்கள் ஒட்டப்படுகிற அவசியம் இப்போது நேர்ந்துவிட்டது. அதே நேரம், அந்தப் படத்தைப் பற்றிய செய்திகள், புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளிவந்தேயாக வேண்டிய கட்டாயத்துக்குள் தமிழ் சினிமா தன்னைத்தானே வலுக்கட்டாயமாக செலுத்திக்கொண்டும் விட்டது.

படம் கொஞ்சம் கொஞ்சமாக வளரும்போதும் -அது ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் நடக்கும் வெளிப்புறப் படப்பிடிப்பாக இருந்தாலும் சரி - பத்திரிகையாளர்களை செலவு செய்து வரவழைத்து, 'கவனித்து', புகைப்படங்களையும் செய்திகளையும் கொடுத்து, படப்பிடிப்புக்கு இடையூறாக இருந்தாலும் நடிக நடிகைகளை கேரவனுக்குள் வைத்தாவது பேட்டி கொடுக்க வைத்து - இந்தக் கைங்கர்யங்களால் தின, வார, மாதப் பத்திரிகைகளில் செய்திகளாகப் பொங்கிப் பிரவகித்துதான் ஒரு சினிமா வெற்றி பெற வேண்டிய சூழல் இன்றைக்கு இருக்கிறது.

நாம் அன்றாடம் பத்திரிகைகளில் வாசிக்கும் நடிக நடிகையரின் பேட்டிகளைக் கூர்ந்து கவனித்துப் பார்த்தோமானால் இந்த உண்மை எளிதில் விளங்கும். குலுமனாலியில் ஷுட்டிங் ஸ்பாட்டில் குளிருக்கு இதமாக பச்சைக் கலர் கோட்டு அணிந்துகொண்டு சூடாக காஃபி பருகிக்கொண்டிருந்த படத்தின் நாயகன் வினோத் வியாஸிடம் படத்தின் கதை என்ன என்று நாம் கேட்டபோது... என்று ஒரேவிதமான ரிப்போர்ட்டிங்கை நாம் திரும்பத் திரும்ப்ப் படித்து சலித்துக்கொண்டுதானே இருக்கிறோம். முன்பெல்லாம் இந்த shooting spot visit என்பது பத்திரிகைகளைப் பொறுத்தவரை desk workகாக இருந்தது. இப்போது அப்படியில்லை. நாயகனாக மட்டுமல்ல, சினிமா பத்திரிகையாளராக இருந்தாலும் உங்களுக்கு இந்த லொகேஷன் லொகேஷனாகப் பார்க்கக்கூடிய வாய்ப்பு எளிதில் கிடைத்துவிடுகிறது.

ஒரு சினிமாவுக்கு இயக்குனர் என்பதாக ஒருவர் தேவையோ இல்லையோ, 'பீயாரோ' என்பதாக ஒருவர் கண்டிப்பாகத் தேவை என்கிற நிலைப்பாடு இன்று வலிதே உலவுகிறது. பொருள் ஏதாக இருந்தாலும் அதற்கு விளம்பரம் என்பது தேவைதான் என்கிற அவசர யுகத்தில்தான் நாம் வசிக்கிறோம். ஆப்பிளில் ஸ்டிக்கர் ஒட்டி வருவதைப்போல இப்போது இளநீரிலும்கூட ப்ராண்டட் ஸ்டிக்கர்கள் காணப்படத் தொலைத்திருக்கின்றன. நாளைக்கு டீவிக்களில் மயில் மார்க் இளநீர்களையே வாங்குங்கள் என்று விளம்பரங்கள் வரக்கூடும்.

விஷயம் இப்படியிருக்க இந்த பீயாரோக்களின் அவசியம் இல்லாமல் எப்படி? இவர்கள் விளம்பரங்கள் மீடியாக்கள் பத்திரிகைகள் ஆகியவற்றின் நெளிவு சுளிவுகள் தெரிந்தவர்கள். இதனால் ப்ரஸ் மீட்கள் முதல் பர்ஸனல் மீட் வரைக்கும் அரேய்ன்ஞ் செய்து ஒரு படம் ஆகாவளிப்படமாக இருந்தாலும் அதை உயரங்களுக்குக் கொண்டு செல்ல தங்களால் ஆன உதவிகளைச் செய்கிறார்கள். அவர்களின் சேவையைக் குற்றம் கூறவில்லை. முதல் போட்ட முதலாளிக்கு அதைவிட வேறு என்ன ஆறுதல் இருக்க முடியும்?

இந்தப் பதவி வேறு தொழில்களில் இல்லையா? எல்லா தொழில்களிலும் உண்டு. பஞ்சாலைக்கும், இரும்பு உருக்குபவர்களுக்கும், பெட்ரோலியக் கனிமங்களைப் பகுப்பவர்களுக்கும் யாவருக்கும் பப்ளிசிடிக்கான பணியைச் செய்வதற்கென்று கண்டிப்பாக ஒருவர் உண்டு.

மேற்கத்திய புராணக் கதைகளில் மோஸஸ், எகிப்திலிருந்து அடிமைகளை மீட்டுக்கொண்டுவந்து ஒரு கேம்ப் அடித்துக்கொடுத்துவிட்டு மலையேறிப்போய் பத்து கட்டளைகளுடன் திரும்பி வந்தபோது, தங்களுக்குள் எந்தவிதமான ஒழுக்கங்களும் இல்லாமல் அந்த மனிதக்கூட்டம் மிருகங்கள் போல கட்டுப்பாடிழந்து காணப்பட்டது என்கிற பிரபல்யமான கதை, கிருத்துவர்களல்லாதவர்களுக்கும் சினிமாக்களின் வாயிலாகத் தெரிந்திருக்கும். மனித இனம் கட்டுப்படுவதற்கு மதம் என்கிற ஒரு மாயப் போர்வை அப்போது தேவைப்பட்டது. இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும். ஆனால் இப்போது மதமே கட்டுப்பாடுகளை இழக்க வைத்துக்கொண்டிருக்கிற காலத்தில் நாம் உண்மையில் செய்ய வேண்டியது என்ன?

அப்படித்தான் ஒன்று சினிமாவுக்கும் தேவைப்படுகிறது. ஒரு படத்தை ஒரு கோடியில் எடுக்க முடிகிறது என்று சொன்னால் அரைக்கோடியாவது விளம்பரத்துக்காகச் செலவு செய்யப்பட வேண்டிய அவசியம் வந்து சேர்ந்திருப்பது எப்படி ஆரோக்கியமான சூழலாக இருக்க முடியும்?

அலிபாபா என்றொரு படம் சமீபத்தில் வெளிவந்தது. அது வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை. வந்தது தெரியாமல் டீவிப்பெட்டிக்குள் சரணடைந்துவிட்டது. அதை நானும் டீவியில்தான் பார்த்தேன். தற்போது வருகிற சாதாரணப் படங்களுக்கு மத்தியில் அது அசாதாரணமாக ஸ்க்ரிப்ட் கொண்ட படம். நேர்த்தியான படத்தொகுப்பு, கச்சிதமான இயக்கம், ஹாலிவுட் படங்களை அடிப்படையாகக் கொண்ட கதை. இந்தப் படம் ஏன் ஓடவில்லை? பப்ளிசிடி இல்லை. இந்தப் படத்தின் ஸ்டில்களை படம் வளரும் காலத்தில் நான் ஒரு பத்திரிகையிலும் பார்த்ததாக நினைவில்லை. திடீரென்று ஒருநாள் எங்கே பார்த்தாலும் போஸ்டர்கள். படம் ரிலீஸ். ஒரு உத்திரவாதமுமில்லாததால் தியேட்டர்களுக்குக் கூட்டம் போகவில்லை. படம் ஓடவில்லை.

திரும்பத் திரும்ப நினைவு படுத்தப்பட வேண்டிய சூழலை பத்திரிகைகள் வாயிலாக சினிமா உருவாக்கியிராமல் இருந்திருந்தால் இந்தப் படம் கண்டிப்பாக ஓடியிருக்கும்.

இயக்குனரோ, தயாரிப்பாளரோ, முக்கிய நடிகரோ கடவுள் நம்பிக்கை உள்ளவராக இருக்கிறாரோ இல்லையோ, படம் என்று ஒன்று தொடங்கப்படவேண்டுமானால் பூஜை என்பதாக ஒன்று போடப்பட்டே ஆகவேண்டும். இந்த பூஜை தெய்வங்களுக்காகப் போடப்படுவது என்பதாகப் பலரும் தப்பிதமாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இவை பத்திரிகைகளுக்காகப் போடப்படுபவை. அதேபோல்தான் ஆடியோ ரிலீசும்!

ஆடியோ ரிலீஸ் என்கிற புதிய கலாச்சாரமும் பாடல்களை ரிலீஸ் செய்வதற்கானதல்ல, அதன் வாயிலாக பத்திரிகைகள், டீவிக்கள் முதலான மீடியாக்களை எட்டுவதற்காக! பரபரப்பாக ஏதோ செய்துகொண்டிருக்கிறோம் என்பதை மீடியாக்களின் வாயிலாக தெரியப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டிய சூழலில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டதுதான் இந்த ஆடியோ ரிலீஸ்! உண்மையில் படம் ரிலீஸ் செய்வதற்கு யாராவது விழா எடுத்து பார்த்திருக்கிறோமா? படம் திடீரென்று ஒருநாள் ரிலீஸ் ஆகிவிடும். விழாக் கொண்டாடுவதெல்லாம் அது ஓடுவதைப் பொறுத்தே!

இந்த ஆடியோ ரிலீஸ் வேண்டுமானால் புதிதாக இருக்கலாம், ஆனால் ப்ரிவ்யூ ஷோ என்கிற சடங்கோ மிகப் புராதனமானது. இதை ஒரு சடங்கு என்று சொல்வது மிகவும் பொருத்தமானது. சடங்கு என்பது கட்டாயத்தின் காரணமாக நிகழ்த்தப்படுவது. ஒருவரைக் குளிர்வித்துவிட்டால் அதன்பிறகு அவருக்கு நகத்தை வெளியே பிதுக்க மனம் வராது என்பதை மையமாகக் கொண்டே இந்தச் சடங்கு நிகழ்த்தப்படுகிறது.

ஒரு ப்ரிவ்யூ ஷோ சரியாக ஆறு மணிக்குத் தொடங்குகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், மீடியாக்காரர்கள், படக்குழுவினர், அவர்களுக்குப் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் என்பதாக ஒரு கும்பல் வந்து படத்தைப் பார்க்கிறது. இன்டர்வெல்லில் எல்லோருக்கும் இலவசமாக காஃபி வழங்கப்படுகிறது. படம் ஒன்பது மணிக்கு முடிகிறது. தயாரிப்பாளர் எல்லோருக்கும் ஒரு கும்பிடு போட்டு வழியனுப்பி வைக்கிறார்.

பிறகு தன் காரில் ஏறப்போகும்போது அவர் பார்க்கிறார். இன்னும்கூட சிலர் எதற்காகவோ காத்திருக்கிறார்கள். அவர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவர் கிளம்பிவிடுகிறார். அந்தப் படத்துக்கு பீயாரோ என்பதாகவும் ஒருவர் கிடையாது.

இப்படி ஒரு சம்பவம் நிகழ்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். போலீஸ்காரர்கள் தாராளமாக அந்த ப்ரொட்யூசரைக் கைது செய்யலாம். ஏனென்றால் தற்கொலை முயற்சி தண்டனைக்குரிய குற்றம்.

சினிமாவிலும் சரி, பத்திரிகைத் துறையிலும் சரி, எனக்கு நண்பர்கள் உண்டு. பத்திரிகையாளர்கள் வாயிலாகவும் சில நேரங்களில் சினிமாக்காரர்கள் வாயிலாகவும் நான் ப்ரிவ்யூ படங்களைப் பார்த்திருக்கிறேன். ஷூட்டிங் ஸ்பாட்களுக்குச் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் நான் அப்பட்டமாகக் கண்ட உண்மை என்னை வியக்க வைத்தது. இப்போது வளர்ந்துவிட்ட; அப்போது வளர்ந்துகொண்டிருந்த நகைச்சுவை நடிகர் ஒருவர் பத்திரிகையாளர்கள் சிலரோடு நின்று தம்மடித்துக்கொண்டிருந்தார். அவர் வாதத் திறமை கொண்டவர் என்பதால் (கிசுகிசுவெல்லாம் எழுதவேண்டியிருக்கிறது பாருங்கள்!) அவர்கள் அறியாத வண்ணம் அவர்களை சிரித்து சிரித்துப் பேசிக்கொண்டே கேலி செய்துகொண்டிருந்தார். கூட நின்ற எனக்கு அப்பட்டமாகப் புரிகிறது. அவர்கள் முகத்திலோ எவ்விதமான மாறுதலுமில்லை. அவர் சொல்லும் ஜோக்குகளுக்கு வாயைப் பிளந்து சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். எனக்கானால் வியப்பு! இங்கே யார் புத்திசாலி? உங்களுக்கெல்லாம் இந்த மரியாதை போதும் என்று தன் புத்திசாலித்தனத்தால் அவர்களை - அவர்களே அறியாமல் கேலி செய்துகொண்டிருக்கும் நடிகர் புத்திசாலியா? இல்லை புரிந்துதான் புரியாததுபோல் இவர்கள் நடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால் இவர்கள் புத்திசாலிகளா?

எனக்கு ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்தது, அந்தக் கூட்டத்தில் ஒரே ஒரு முட்டாள் அபத்தமாக நின்று கொண்டிருந்தான். அது நான்தான்!

அந்த நடிகரின் ஸ்டைல் அப்படியென்றால் நடிகர் கவுண்டமணி ஒருபோதும் தன்னிடம் பத்திரிகையாளர்களை அண்ட விட்டதில்லை என்பது சினிமா வட்டாரத்தில் அனைவருக்கும் நன்றாகத் தெரிந்த விவகாரம். அவர் திரைப்படங்களில் நடிகர் செந்திலை நடத்துவதுபோலவே பத்திரிகையாளர்களை நிஜ வாழ்வில் நடத்தினார் என்பது யாவரும் அறிந்த உண்மை. சினிமாக்காரர்களில் இவர் மட்டுமே விதிவிலக்கு என்பதாக நான் நினைக்கிறேன். கவுண்டமணியின் பேட்டி என்பதாக பத்திரிகைகளில் படித்த ஞாபகம் ஏதாவது இருக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள். பெரும்பாலும் இராது. அவர் ஒருவர்தான் திரைத்துறையாகட்டும் பத்திரிகைத்துறையாகட்டும் இரண்டுபேரையுமே அச்சுறுத்தி வைத்திருந்தவர் என்பதாகச் சொல்வார்கள். ஹீரோக்களுக்குக்கூட இந்தத் துணிச்சல் வந்ததேயில்லை.

சினிமாக்காரர்களைப் பற்றிப் பொதுவாகவே ஒருவிதமான கற்பிதம் உண்டு. முகத்துக்கு நேராக சிரிப்பார்கள், முதுகுக்கு நேராக கதைப்பார்கள் என்று. அது சரியோ தவறோ, பெரும்பாலான சினிமாக்காரர்கள் பத்திரிகையாளர்களிடம் கொண்டுள்ள மரியாதை போலித்தனமானது என்பதை நேரில் பார்த்தால் சின்னக் குழந்தையும் சொல்லும்.

படிப்பு வராத குழந்தை வாத்தியாரிடம் கொண்டுள்ள பயம்கலந்த வெறுப்புதான் அவர்கள் பத்திரிகையாளர்களிடம் கொண்டுள்ளது. ஏற்கனவே, ஹீரோ பிரச்சினை, ஹீரோயின் பிரச்சினை, லொக்கேஷன் பிரச்சினை, டெக்னீஷியன் பிரச்சினை, தொழில்நுட்பப் பிரச்சினை என்று ஆயிரம் பிரச்சினைகளை சமாளித்து ஒரு படம் எடுக்க வேண்டிய சூழலில் உள்ள ஒரு முதலாளி, இந்த பத்திரிகையாளர்களை எதிர்கொள்ளும்போது மனதளவில் எவ்வளவு எரிச்சலடைவார் என்பதை பத்திரிகையாளர்களும் மீடியாக்களும் கண்டிப்பாக உணர்ந்தே இருப்பார்கள். ஆனால் இதெல்லாம் பேசாப் பொருளாக தவிர்க்கப்பட வேண்டியவை என்பதையே அவர்கள் அனைவரும் கடைப்பிடித்து வருகிறார்கள்.

இப்படியெல்லாம் எழுதுவதால் எனக்கு தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து யானையை அனுப்பி மாலையும் போடப் போவதில்லை, ப்ரஸ் க்ளப்பிலிருந்து கொலை மிரட்டலும் வரப்போவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. அத்தனை தூரம் ஸ்மரணை கெட்டுப் போய்விட்ட விவகாரம் இது.

4 comments:

மண்குதிரை said...

உயிரோசையில் படித்துவிட்டேன். உங்களுடைய நடை சினேகமாக இருக்கிறது. உங்களுடைய நாவல் படிக்க வேண்டும்.

ப்ளாகில் புதிதாக ஒரு கட்டுரை தொடர் எழுதுங்கள்.

பரிசல்காரன் said...

மிக மிக ஆழ்ந்த பதிவு தோழர்! இத்தனை நாள் உங்களை கவனிக்காமல் விட்டுவிட்டதற்காக வருந்துகிறேன்!!

ஷாஜி said...

பதிவு சூப்பர் sir...

Anonymous said...

நன்றி இகராஸ் பிரகாஷுக்கு அவர் சுட்டி தராமல் இருந்திருந்தால் நான் படித்திருக்க வாய்ப்பில்லை. சிநேகமான நடைக்கு நன்றி!