February 05, 2009

பீரியட் அவஸ்தை!

பள்ளி விழாக்களுக்காகவோ, இல்லத் திருவிழாக்களுக்காகவோ குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேஷம், விவேகானந்தர் வேஷம் என்று போட்டுவிடுவதில்தான் பீரியட் படங்களின் அவசியம் துவங்குகிறது. பிற்பாடு வந்த சினிமா மட்டும் இல்லாமல் போயிருந்தால் வரலாற்றுக்காலத்தின் மீட்டுருவாக்கம் என்பது அதிகபட்சமாக திரைச்சீலைகளின் தட்டையான நிச்சலனத்தோடு மேடைகளின் சட்டகத்துக்குள்ளேயே அடைந்துகிடந்திருக்கும்.

இந்தியாவைப் பொறுத்தவரை சினிமாவின் தொடக்கம் என்பதே முழுக்க முழுக்க பீரியட் படங்களாகவே இருந்தது. புராணக் கதைகள் மாத்திரமே படமாக்கப்பட்டதால் அத்தனை படங்களும் பீரியட் படங்கள் வைகையைச் சார்ந்தவைதான். ஆனால் புராணக் கதைகளின் பீரியட் எது என்பது யாருக்கும் தெரியாது. ஏனென்றால் புராணங்கள் பெரும்பாலும் நிகழ்ந்தவை அல்ல. நமது இதிகாசங்களாகட்டும், புராணங்களாகட்டும், அவை உருவாக்கப்பட்ட காலத்தின் சாயலையே அவை கொண்டிருக்க இயலுமேயல்லாமல் அவற்றுக்கென்று சொந்தமாக காலமோ சாயலோ அறவே இருக்க முடியாது. இதனால் நம் தொடக்ககாலப் படங்கள் எதுவுமே பீரியட் படங்களாக அமைவதும் இயலாதே போயிருந்தது.

அதேபோல் இதிகாசங்களின் காலம், மன்னராட்சிக் காலம், குறுநில மன்னர்கள் அல்லது பாளையக்காரர்கள் காலம், முகலாயர் ஆட்சிக் காலம், பிரிட்டிஷ் ஆட்சிக் காலம், சுதந்திரப் போராட்டக் காலம் - அதில் இரண்டாம் உலகப்போர்க் களம், சுதந்திரம் வாங்கி இருபது வருடக் காலம், அதற்குப் பிந்தைய இருபது வருடக் காலம் என்று இந்திய பீரியட் ஃபிலிம்களுக்கான களம் விரிந்து கிடக்கிறது.

இருந்தாலும் அவசியம் ஏற்பட்டாலேயொழிய யாரும் இந்த வம்பில் மாட்டிக்கொள்ள விரும்புவதில்லை. ஏனென்றால் இதில் தொல்லைகள் அதிகம். ராஜாக்காலப் படங்களில் மார்பில் கவசம் இருக்கிறதோ இல்லையோ, காவலனிலிருந்து ஏவலன் வரைக்கும் புஜங்களில் ஒரு காப்பு காணப்படுகிறதே, அது எதற்காக என்று யாரும் கேள்வி எழுப்பினால் வெளிப்படும் பதில் இதுதான், 'அம்மைத் தளும்பை மறைக்க!'

இப்படிப் பார்த்துப் பார்த்து பீரியட் ஃபிலிம் கொடுக்க விரும்புவர்கள் ஒருபக்கம் இருந்தாலும், பீரியட் ஃபிலிம் என்று பம்மாத்து காட்டி அதில் கண்டதையும் கலக்கும் பல கலைஞர்களையும் நாம் பார்த்து வந்திருக்கிறோம்.

Read more:http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=904

No comments: