May 20, 2009

நாடகமும் சினிமாவும் லேயர்களும்


சில வருடங்களுக்கு முன்பு கேரளத்திலிருந்து வந்த நாடகக்குழுவொன்று கோவையில் சில நாடகங்களை நிகழ்த்தியது. நம்மூரில் ஆரெஸ் மனோகர் கையாண்டதைவிடவும் அதிகமான தொழில்நுட்ப சாத்தியங்களை அந்தக் குழு கையாண்டது. அந்த நாடகங்கள் அனைத்தும் மாயாஜாலங்கள் நிறைந்தவை என்பதனால் அவற்றில் ஆச்சரியமான காட்சிகள் பலவும் நிறைந்திருந்தன. எதிர்பாராத விதமாக மேடையில் ஒரு விமானம் தரையிறங்கும், கார் வந்து நிற்கும், பதினைந்தடி உயர பூதம் தோன்றும். இது எல்லாம்கூடப் பரவாயில்லை, மேடையின் இடது மூலையில் நாயகியோடு பேசிக்கொண்டிருக்கும் நாயகன் ஒரே ஒரு வினாடி விளக்கணைந்து எரிந்ததும் வலது மூலையில் வேறொரு காஸ்ட்யூமில் வேறொருவரோடு காணப்படுவான். இப்படி ஏகப்பட்ட ரகளைகள்!

சாதாரணமாக நாடகம் என்பதை சிங்கிள் லேயர் என்றுதான் குறிப்பிடலாம் என்றபோதும் இந்தமாதிரியான அவசியங்களும் உழைப்பும் உள்ள நாடகங்கள் சிங்கிள் லேயரில் சாத்தியப்படுவதில்லை. மேடையிலேயே திரையின் அவசியமும் ஏற்படும்போது இரண்டாவது லேயர் தானாகவே நுழைந்துவிடுகிறது. மூன்று அரங்கங்கள் கொண்ட ரிவால்விங் ஸ்டேஜ்கூட பல நாடகங்களில் பயன்படுத்தப்பட்ட உத்தி. இந்த உத்தியில் விளக்கணைந்து எரிவதற்குள் மேடை சுழன்று அடுத்த செட்டை அந்தக் காட்சிக்கான நடிகர்களோடு முன்னால் கொண்டுவந்து நிறுத்திவிடும். இருந்தாலும் நாயகன் இந்தக் கடைசியிலிருந்து வேறு ஒரு காஸ்ட்யூமில் அந்தக் கடைசியில் நிற்பது எவ்விதம் சாத்தியம்? இது எப்படி என்று கட்டுரை முடியும் வரைக்கும் யோசித்துக்கொண்டிருங்கள் என்று சுஜாதா மாதிரி அபத்தமாக நான் சொல்லப்போவதில்லை. உடனடியாகக் கடைசியில் போய்ப் படித்துவிடுவீர்கள் என்பதனால் அந்த உத்தியை இங்கேயே விளக்கிவிடுகிறேன்.

கதையின் நாயகனாக நடித்தது ஒருவர் அல்ல, ஒரே மாதிரியான தோற்றமுடைய இரட்டைச்சகோதரர்கள். ஷங்கர் படம் பார்ப்பதுமாதிரி நாடகம் பார்த்து முடியும் வரைக்கும் மேடையில் விரியும் ஆச்சரியங்களுக்கு மத்தியில் நம்மால் இதை ஊகிக்கவே முடியாது என்பதே நாடகத்தின் வெற்றி. சரி, அதற்கென்ன இப்போது என்கிறீர்களா? சரி, விஷயத்துக்கு வருவோம்!

நாடகத்தைப்போலவே சினிமாவும் வெகுகாலம் சிங்கிள் லேயரில்தான் எடுக்கப்பட்டு வந்தது. சிங்கிள் லேயரில் மட்டுமல்ல, சிங்கள் ஆங்கிளில் முடிகிற காட்சிகளாகவே ஆரம்பகாலத்துத் தமிழ்ப் படம் எடுக்கப்பட்டது. என்னுடைய தந்தை என்னெஸ்கேயிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிவர். பணம் படத்தின் ஷூட்டிங்கின்போது என்னெஸ்கே காமராமேனுக்கு நல்கிய கட்டளையொன்றை அவர் வெகுகாலம் சொல்லிக்கொண்டிருந்தார். கேமராமேன் இந்த ஷாட்டை பேன் செய்யலாமா என்று கேட்டால் என்னெஸ்கே சொல்வது இதுதான், "கேமராவுக்கு இந்தப்பக்கம் ஒரு ஆணி அடி, அந்தப்பக்கம் ஒரு ஆணி அடி! அப்படி இப்படி நகரக்கூடாது! ஆமாம்!" கேமராவைத் திருப்புவதற்கே இத்தனை தடைகள் என்றால், பிற்காலத்தில் சினிமா லேயர்களால் நிறையப்போகிறது என்பதை என்னெஸ்கே எப்படி அறிந்திருப்பார்?

சரி, அது என்ன லேயர்கள் என்று கேட்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். கிராமங்களில் வருஷா வருஷம் பொங்கல் வந்தால் போதும், வீட்டுக்கு சுண்ணாம்பு பூசி விடுவார்கள். வீட்டின் சுவர் எத்தனை பொங்கலைப் பார்த்ததோ அத்தனை லேயர் சுண்ணாம்பு அதன்மீது படிந்திருக்கும். சுரண்டிப்பார்த்தால் அடுக்கடுக்காக வந்துகொண்டேயிருக்கும். இந்த லேயரையா நான் சொல்கிறேன்? அல்லது காய்ச்சிய பாலின் மீது படிகிறதே ஆடை, அதுவும்கூட ஒரு லேயர்தானே, அதையா நாம் பேசுகிறோம்? ஸ்ட்ரிப்டீஸ் என்பதாக ஒவ்வொரு ஆடையாக அவிழ்த்துப்போடுகிறாளே ஆட்டக்காரி, அந்த ஒவ்வொரு ஆடையும்கூட ஒவ்வொரு லேயர்தானே? அதைப்பற்றிக்கூட விவாதிக்கலாமே!\

இப்படி பல வகையான லேயர்கள் உலவினாலும், கம்ப்யூட்டர் வந்த பிறகு லேயர் என்பது பல பயன்பாடுகளிலும் முக்கியத்துவம் வகிக்கும் தவிர்க்க இயலாத தொழில்நுட்ப வசதி. ஓவியனொருவன் கையால் திரைச்சீலையில் படம் வரையும்போது ஒவ்வொரு வண்ணமாக வரைந்துகொண்டு வருகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள், அவைதனித்தனி லேயர்கள். ஆனால் கையால் வரையும் ஓவியத்தில் லேயர்கள் பிரித்தெடுக்க முடியாதவை. மென்பொருள் கொண்டு வரையும் ஓவியத்தில் லேயர்கள் தனித்தனியே இருக்கின்றன. இதனால் பிற்பாடு வேண்டாததை மறைத்துக்கொள்ளக்கூடிய வசதி உண்டாகிறது.

இசையில் ஆதிகாலத்தில் ஸ்பூலில் ஒரே ட்ராக்காகப் பதிவு செய்ததெல்லாம் போயே போய், மல்டிபிள் ட்ராக்குகளில் தனித்தனியே பதிவு செய்யப்பட்டு, இசை பிற்பாடு கோர்க்கப்படுவதைப்போல, ஆவிட் முதல் எஃப்சிபீ வரையிலான எடிட்டிங் முறைகள் நுழைந்த வகையில் சினிமா எடிட்டிங் நான்லீனியரானபோது ஆப்டிகல் எஃபக்ட்ஸ் என்பதன் அந்திமக் காலம் தோன்றி லேயர்களின் துவக்கம் ஏற்படத் தொடங்கியது. லேயர்கள் மட்டும் இல்லையென்றால் டைட்டானிக் படத்தின் கப்பல் புறப்படும் காட்சியை எடுப்பதற்கு இன்னும் பல கோடிகள் செலவு செய்திருக்கவேண்டும் என்பதாக ஜேம்ஸ்காமரூன் கண்டிப்பாக ஏதாவதொரு பேட்டியில் சொல்லியிருப்பார்.

டைட்டானிக் முதலான பீரியட் படங்கள், ஸ்டார் வார்ஸ் முதலான ஸயன்ஸ் ஃபிக்ஷன் படங்கள் என்று மிகைப்படுத்தப்படவேண்டிய காட்சிகளுக்காக உபயோகிக்கப்பட்ட இந்த லேயர்கள் இப்போது பல காரணங்களுக்காகவும் அவசியப்படுவனவாகவே உள்ளன.

சாதாரணமாக தமிழ் சினிமாவில் இரட்டை வேடக் காட்சி வருகிறது என்று சொன்னால் ஆப்டிகல் எஃபக்ட் எனும் பழைய முறையில் இரண்டு பேருக்கும் நடுவில் அணுகமுடியாத இடைவெளி இருந்தே தீர வேண்டிய கட்டாயம் இருந்தது. அதை இந்த லேயர்களே உடைத்தெறிந்தன. தமிழில் இரட்டை வேடத்துக்காக முதன்முறையாக லேயர்உபயோகிக்கப்பட்டது ஷங்கரின் ஜீன்ஸ் படத்தில்தான் என்று நினைக்கிறேன். ஜீன்ஸ், இந்தியன் ஆகிய படங்களுக்குப் பிறகுதான் இரட்டை வேடத்தில் நடிக்கும் நாயகர்கள் இருவராகவே தோன்ற ஆரம்பித்தார்கள். கையைக் குலுக்கிக்கொள்ளவும், கட்டிப்பிடித்துக்கொள்ளவும் அவர்களுக்கு வாய்ப்பு பெருகியது. இதன் அதிகபட்ச ரகளையாகத்தான் வெள்ளை ரஜினி என்று சிவாஜியிலும் பத்து கமல்கள் என்று தசாவதாரத்திலும் லேயர்களின் அதிகபட்ச ஆட்டமும் ஆடப்பட்டது. (வெறும் ஆப்டிகல் எஃபக்டில் நவராத்திரியில் இருந்த பர்ஃபெக்ஷன் தசாவதாரத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளில் இல்லாமற்போனதே ஆச்சரியமான கொடுமை!)

இந்த லேயர்களின் எதிர்காலம் இரண்டு முக்கிய ஆர்ட்டிஸ்டுகளின் கால்ஷீட் ஒருமித்துக் கிடைக்காத நிலைமை ஏற்படும்போது பிரேக்டவுனுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கக்கூடும். உதாரணமாக அவள் அப்படித்தான் என்று ருத்ரையா இயக்கிய படத்தை எங்காவது கிடைத்தால் பாருங்கள், படத்தில் பெரும்பாலான ரஜினி கமல் காம்பினேஷன் காட்சிகள் தனித்தனி க்ளோசப்களாக எடுக்கப்பட்டு எடிட்டிங்கில் ஒட்டப்பட்டிருப்பதை அப்பட்டமாகக் கண்டுபிடிக்கலாம். அந்தக் காலத்தில் இந்த அயோக்கியத்தனம் ரொம்பவுமே பிரபல்யம். பார்வையாளனால் கண்டுபிடிக்க முடியாது என்கிற தீர்மானம் தருகிற தைரியம்!

அப்போதைய சாத்தியம் அவ்வளவுதான், இப்போதோ லேயர்கள் வந்துவிட்டன. இதன் காரணமாக எதிர்காலத்தில் பத்துப் படங்களில் ஒருமித்து படுக்கையறைக் காட்சிகளில்கூட நடித்த ஒரு நடிகரும் நடிகையும் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக்கொண்டதேயில்லை என்கிற நிலைப்பாடுகூட நேரலாம்.

இது நல்லதற்கா கெட்டதற்கா என்று கேட்டால் கண்டிப்பாக கெட்டதற்குத்தான். தொழில்நுட்ப வளர்ச்சியைக் கலை உபயோகித்துக்கொள்வது தவறு என்று சொல்லவில்லை. அதிலும் சினிமா என்கிற, தொழில்நுட்பம் ஊடாடும் கலைத்துறை அதன் வளர்ச்சிநிலையை தொழில்நுட்பத்தின் வளர்ச்சியோடு ஒருமித்தே எய்த முடியும். ஆனால் தொழில்நுட்பத்தை அனாவசியமான காரணங்களுக்காக கையாள நேர்வதுதான் தவிர்க்கப்படவேண்டும் என்று நான் சொல்கிறேன். கால்ஷீட் என்பது உண்மையிலேயே பெரிய பிரச்சினைதான். அதற்காக நான் மேலே சொன்னபடி ஒருநிலைமை வந்துவிடாமல் தவிர்க்கவே இயலாதா என்பதையும் நாம் ஆராயவேண்டும்.

அடிப்படையில் தாம் சார்ந்திருக்கும் கலை மீது கலைஞர்கள் அனைவருக்கும் மரியாதை இருக்க வேண்டியது அவசியம். ஒரு நாள் ஒரு நடிகர் ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தாகவேண்டும் என்றால் அந்த இடத்தில் அந்த நேரத்தில் காலந்தவறாமல் சென்று சேர்ந்தாகவேண்டும் என்கிற முனைப்பு அந்தக் காலமாக இருந்தால் என்ன, எந்தக் காலமாக இருந்தால் என்ன, ஒருபோதும் தேய்ந்துபடக்கூடாது.

சமீபத்தில் ஒரு பிரபல வார இதழில் புதிய இயக்குனரொருவர் தன் படத்தில் நடிக்கும் புதிய குழந்தை நடிகனைப்பற்றி பேட்டி கொடுத்திருந்தார். அவனுக்கு எல்லா பாவங்களும் கச்சிதமாக வருகின்றன. மற்ற நடிகர்களோடு அவன் நடித்த காட்சி ஒன்றை ஷூட் செய்தபோது ரீ டேக் தேவைப்பட்டது. எடுத்த காட்சியை மானிட்டரில் பார்த்துவிட்டு அவன் கேட்டான், 'நீங்கள் சொன்னபடி நான் சரியாகத்தானே செய்திருக்கிறேன், மற்றவர்கள் தவறாக நடித்தால் அதற்காக நான் ஏன் திரும்பவும் நடிக்க வேண்டும்' என்று! இது ஒரு குழந்தைத்தனமான கேள்வி என்பதாக நீங்கள் நினைக்கலாம், என்னால் அப்படி எடுத்துக்கொள்ள முடியவில்லை. இப்போது யாருக்கும் கொஞ்சமும் பொறுமையில்லை. அதிலும் குழந்தைகள் மிக அதிகமாகவே அவசரப்படுவதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இந்த இயல்பின் நீட்சியாக ஓர் உச்ச நடிகர் இதே கேள்வியைக் கேட்டால் இயக்குனரால் என்ன செய்ய முடியும் என்பதே எனது கேள்வி!

இது நடைமுறைக்கு வந்தால் சினிமா திரும்பவும் செட்டுக்குள் சென்று ஒளிந்துகொள்ளும். பின்னணியில் மேட் விரித்துக் கீ செய்தே அத்தனை காட்சிகளும் ஷூட் செய்யப்படும் என்றெல்லாம் நான் அச்சுறுத்த விரும்பவில்லை. ஆனால் இப்படியொரு நிலை வந்து சேராது என்பது என்ன நிச்சயம் என்பதே எனது அச்சம்!

இந்த லேயர்களின் உதவியால் கடற்கரையில் தாஜ்மஹாலைப் பார்ப்பது எளிதாகிறது. ஐஃபில் டவருக்குப் பின்னணியில் இரண்டு நிலவுகள் உதயமாவது சாத்தியமாகிறது. அதிரப்பள்ளி அருவிக்கு முன்னால் அருவி உயரத்துக்கு புத்தர் சிலை சாத்தியமாகிறது. சண்டைக்காட்சிகளில் பறந்து பறந்து தாக்குவது சாத்தியமாகிறது. பாடல் காட்சிகளில்கூட இதன் நீட்சி நிகழ்கிறது. இதெல்லாம் நல்லதற்குத்தானே என்று கேட்டால், நல்லதற்குத்தான், கதைக்குத் தேவைப்படும் வரையிலும்! கதைக்குத் தேவைப்பட்டால் கவர்ச்சி காட்டுவேன் என்று தொன்று தொட்டு சொல்லிச் சொல்லி நமது நடிகைகள் நையாண்டி செய்யப்படுவது உங்களுக்கு நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அதற்கு உங்களுக்குள்ளே இருக்கிற மேல் சாவனிஸ்ட்தான் பொறுப்பு! நான் சொன்ன இரண்டு நிலவுகளின் உதயம் தி ஹுக் படத்தில் இடம்பெறுகிறது. இரண்டு நிலவுள்ள கிரகமொன்றைக் காட்ட வேண்டிய நிலையில் இது தேவைதான். ஆனால் ஐஃபில் டவருக்குப் பின்னால் எதனால் இதன் தேவை எழவேண்டும்? இருநாள் உணவை ஏலென்றால் ஏலாயெனும் ஒளவைக்கிழவியின் ஆதங்கம்போல, இருக்கிறது என்பதற்காகத் திணிப்பதுதான் தவறு என்று நான் சொல்கிறேன். அதாவது கதைக்குத் தேவைப்பட்டால்தான் கவர்ச்சி காட்டலாம். தேவைப்படும்போதும் காட்டாமல் இருப்பதுதான் கொடுங்குற்றம். அதாவது லேயராக இருந்தாலும் சரி, லோயர் ஹிப்பாக இருந்தாலும் சரி, கதைதான் அதைத் தீர்மானிக்க வேண்டும்.

சினிமா என்பது வெறும் தொழில்நுட்பமல்ல, அது ஒரு கலை என்பதை ஏற்கனவே இந்தத் தொடரில் பார்த்துவிட்டோம். தொழில்நுட்பத்தின் சமீபத்திய சாத்தியமான இந்த கிராஃபிக்ஸ் எனும் படிநிலை அறிவியலின் வழக்கப்படி சினிமாவை மேலும் சிக்கலில் கொண்டு சேர்க்கவே செய்யும் என்பதாகவே தோன்றுகிறது. இதை இன்னொரு விதமாகவும் பார்க்கலாம், சினிமா என்பது வெறும் அனுபவத்தால் மட்டுமே செய்யக்கூடியதாக இல்லாமல் தொழில்நுட்ப வல்லுனர்களால் உருவாக்கப்படுவதாக மாறிக்கொண்டிருப்பதால் முன்போல் படிக்காத மேதைகள் சினிமா கொடுக்கும் காலம் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது என்பதாக எடுத்துக்கொள்ளலாம். இது எவ்வளவு தூரம் சரி?

படிப்பைவிட பட்டறிவுதான் பெரியது என்பது சான்றோர் கூற்று! அது எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ, கலைத்துறை ஏதானாலும் அதற்குத் தவறாமல் பொருந்தவே செய்கிறது. வெறும் தொழில்நுட்ப அறிவைக்கொண்டு நல்ல சினிமாவை ஒருவரால் தரக்கூடிய காலம் உருவாகும்போது சினிமா கலைவடிவமாக இல்லாமல் வெறும் லேயர்களாக மாறிவிட்டிருக்கும். முன்னாலிருக்கும் லேயரை பின்னால் தள்ளலாம், பின்னாலிருக்கும் லேயரை முன்னால் கொண்டுவரலாம், இதன்வாயிலாக தரமான படமொன்றைத் தந்துவிடமுடியும் என்று சொன்னால் சினிமா கலைவடிவம் அல்ல என்று நான் ஏற்கனவே சொன்ன கூற்று திரும்பவும் மெய்ப்படவே செய்யுமே தவிர உருப்படியாக வேறு ஒன்றும் நிகழ்ந்திராது.

3 comments:

butterfly Surya said...

கலக்கல்...

எல்லா லேயர்களும் அருமை...

biskothupayal said...

ஒரு லேயர்லேயே இவ்வளவு பேசமுடியுமா ஆச்சரியம்!
பதிவு அருமை

Rajan said...

ur post was an eye opener for me about layers. in fact i feel if we can make use of layers effectively, the production cost can come down.that is a positive aspect.
but i dont know how costly it is(layering in small budget
movies)