March 18, 2009

களத்தூர் படிக்கட்டு

நான் கல்லூரியிலிருந்து வலிய வெளியே வந்தவன். அப்போது பிரின்ஸிபால் என்னிடம் படிப்பை இழந்து விட்டால் வாழ்க்கையையும் இழந்துவிடுவாய் என்று என் தகப்பனாரையும் வைத்துக்கொண்டு புத்திமதி சொன்னார். அதற்கு நான் சொன்ன பதில் இப்போதும் பசுமையாக நினைவிருக்கிறது. "நீங்கள் எல்லாம் படித்ததனால் இந்த நிலை வரைக்கும் உயர்ந்திருக்கிறீர்கள். அதனால் படிப்பு உங்களுக்கு பெரியதாகத்தான் தெரியும். ஆனால் படிக்காமலே எவ்வளவோ பேர் மிக மிக உயரங்களுக்குப் போயிருக்கிறார்கள். நான் அந்த வகையைச் சேர்ந்தவன்." உண்மையில் அவர் இதைக் கேட்டதும் ஆடிப்போய்விட்டார். கிட்டத்தட்ட அரை மணிநேரமாக நடந்துகொண்டிருந்த கவுன்சிலிங் அடுத்த கணம் முடிந்து விட்டது. எனது டீசியில் உடனடியாகக் கையெழுத்துப் போட்டுவிட்டார் அவர்.

ஆனால் அந்தத் திமிர் இன்னும் என் தலையிலிருந்து இறங்கவேயில்லை. நான் எந்த தைரியத்தில் இந்தமாதிரி பேசினேன் என்று எனக்கு சரிவரத் தெரியவில்லை. அந்த வயதிலேயே எழுத்திலும் சினிமாவிலும் எழுந்திருந்த ஆர்வம் என்னை ஒருசிலரை முன்னுதாரணமாகக் கொள்ளும்படி தூண்டியிருக்கலாம் என்பதே என்னுடைய கடைசி முடிவாக இருக்கிறது. அவர்களில் ஒருவராக ஒருவேளை கமலஹாசன் இருந்திருக்கலாம்.

படிப்பை முக்கியமானதாகக் கருதும் குடும்பத்தில் பிறந்தவர் கமலஹாசன். ஆனால் தன் குடும்பத்திலேயே குறைவாகப் படித்தவர் அவர்தான். சிறு வயதிலேயே பள்ளிப் படிப்பை இழந்துவிட்டவர் அவர். அதற்கு பதிலாக சிறுவனாக சினிமாவில் நுழைந்து, நடனம் பயின்று, நடன உதவியாளனாக உலவி, சிறு பாத்திரங்களில் தலைகாட்டி, இரண்டு நாயகர்களில் ஒருவராக வாய்ப்புப் பிடித்து, நாயகனாகி, முதன்மை நாயக வரிசைக்குள் நுழைந்து, பாடகர், தயாரிப்பாளர், கதாசிரியர், இயக்குனர் என்று தான் சார்ந்த துறையில் சகல பரிமாணங்களிலும் தன் ஆளுமையை வளர்த்துக்கொண்டு போகும் கமலஹாசன் மெத்தப் படித்தவர்கள் என்பதாக அறியப்படும் அவரது குடும்பத்தில் அதிக விசாலமுள்ள அறிவுள்ளவராக இப்போது இருக்கக்கூடும். இதை அவர் நமது கல்வியமைப்பின்மீது காட்டும் எதிர்க்குரல் என்பதாகக்கூட கொள்ளலாம்.

தற்போதைய தமிழ் சினிமாவின் மிக முக்கியமான ஆளுமை அல்லது
most promising veteran persololity யார் என்று கேட்டால் கமலஹாசன் என்று பெரிய குழந்தைகளும் சொல்லும் (ஏனென்றால் சின்னக் குழந்தைகள் வேறு ஒருவரைச் சொல்லும்). அவரது சமீபத்தியப் படமான தசாவதாரம் திரும்பவும் அவர்மீது லைம்லைட்டின் வெளிச்சத்தைப் படரவிட்டிருக்கிறது.

அதற்காக அவர் தனது புகழின் மதிப்பை இழந்திருந்தாரா என்று கேட்டால் இல்லை என்றுதான் பதில் சொல்ல முடியும். அவர் ஒருபோதும் கண்சோரா உழைப்பாளி என்பதில் எனக்கும் எவ்விதமான சந்தேகமும் இல்லை. சினிமா போன்ற பரபரப்பான மீடியாவில் எவ்விதமாக உலவ வேண்டும் என்பதை சினிமாவின் உயரத்தில் உள்ளவர்கள் மிகக் கச்சிதமாக உணர்வார்கள் என்பதாலோ, தொடர்ந்து பரபரப்பாக எதாவது ப்ராஜக்டில் வேலை செய்துகொண்டேயிருப்பதால் அதுவே பழகிப்போனதாலோ, மேலும்மேலும் பணம் வந்து கொட்டும் வாய்ப்பை எந்த ஒருவரும் தவறவிட விரும்பமாட்டார்கள் என்பதாலோ, தமிழை உலகத்தரத்துக்கு உயர்த்தியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டதனாலோ கமலஹாசனின் படங்கள் தொடர்ந்து வெளிவந்தவண்ணமே இருக்கின்றன.

1971ல் நூற்றுக்கு நூறு படத்தில் மீசை அரும்பும் இளைஞனாக அவர் தோன்றியதிலிருந்து இன்று வரைக்கும் அவரது வேகமோ ஆர்வமோ கொஞ்சமும் குறைந்திருக்கவில்லை. அதற்கு முன்னால் சிறுவனாக மூன்று படங்கள் நடித்திருந்த அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக சினிமா உள்வாங்கிக்கொண்டு பிற சிறுவர்களிலிருந்து அந்நியப்படுத்தி வைத்திருந்தது. இவ்விதமான பால்யம் கொண்ட முதல் தமிழ் கலைஞர் இவராகத்தான் இருக்க வேண்டும். அதற்கு முந்தைய காலத்து பாய்ஸ் கம்பெனி கலாச்சாரத்தை நான் தவிர்த்துவிட்டே பேசுகிறேன்.
அவரைப்போல மீசை அரும்பிய அல்லது அந்த அளவுக்குக்கூட அரும்பாத சிறுவர்களைப் புதுமுகங்களாகப் போட்டு மிகக் குறைந்த செலவில் சில நிறைவான படங்கள் வெளிவரக்கூடிய இந்தக் காலகட்டத்திலும் அவர் கொடி கொஞ்சமும் இறங்காதிருப்பது அவரது உழைப்புக்குக் கிடைக்கும் கூலியன்றி வேறென்ன? தன் வாரிசுகள் வளர்ந்து சினிமாவில் நுழைந்துவிட்ட காலகட்டத்திலும் காதாநாயகன் என்கிற அந்தஸ்திலேயே உலவக்கூடிய பாக்கியம் தமிழில் ஒருசிலருக்குத்தான் வாய்த்தது. அந்த வரிசையில் முதலில் சிவாஜி, அடுத்தது கமல். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், கமலஹாசனுக்கு சற்று மூத்தவரான சிவக்குமார் மிக முன்னதாகவே இந்த ஹீரோ பதவியிலிருந்து ரிட்டயர் ஆகிவிட்டார். அதற்குக் காரணம் அவருக்கு கமலஹாசனைப்போல ஒரு போராளியின் மனோபாவம் இல்லாததே என்று தோன்றுகிறது. அப்படிப் பார்த்தால் never ever give up என்பதே கமலஹாசனின் தாரக மந்திரமாக இருக்கவேண்டும். நல்ல மந்திரம்தானே!

இத்தனைக்கும் எனது சிறு வயதில் எம்ஜியார்-சிவாஜி அல்லது ரஜினி-கமல் என்று இரண்டே பேரின் ரசிகர்களாக ஒட்டுமொத்த தமிழ்தேயமும் இருந்த காலகட்டத்தில்கூட நான் பாக்கியராஜ் ரசிகன் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவன். இந்த நிலைப்பாடு மற்றவர்கள் அத்தனை பேரையும் ரசிக்கவும் பிழைகளைப் புரிந்துகொள்ளவும் வாய்ப்பாக இருந்தது. இதனால் நான் கமலஹாசனின் ரசிகனாகவும் கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும். அவர் நடித்த ஆகாவளிப் படங்களான சவால், ராம்லட்சுமண் முதலான படங்களைக்கூட நான் பள்ளிக் காலங்களில் ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தவன்தான். ஆனால் தமிழுக்கு அவர் கொடுத்த ஒரு வித்தியாசமான படமான ராஜபார்வை ஒருவிதமான குளிரனுபவத்தை என்னுள்ளத்தில் ஏற்படுத்தியிருந்தது. என்னதான் அது சிங்கீதம் சீனிவாசராவின் வித்தை என்றபோதும் அந்தப் படத்தின் கலர் மிகவும் புதிய அனுபவமாக இருந்தது என்றே நினைக்கிறேன். அஷோக்குமார், பாலுமகேந்திரா ஆகிய கேமராமேன்கள் மற்றும் மகேந்திரன் முதலான இயக்குனர்களின் வருகையைத் தொடர்ந்து ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா சில்லென்று இருந்ததாகத் தோன்றுகிறது. என் வாழ்வில் அந்தத் துவக்கத்தை ஏற்படுத்தியது ராஜபார்வையாகத்தான் இருக்க முடியும்.

கமலஹாசனைப் பிடிக்காத பலரையும் நான் சந்தித்திருக்கிறேன். ரஜினி ரசிகர்கள் என்பதாலோ, ஒருமாதிரி நளினமாக இருக்கிறார் என்று காரணம் சொல்பவர்களாகவோ அல்லது நமது கலாச்சாரத்துக்குப் பொருந்தாத கீழ்த்திசைப் பாணி அவருடையது. அதையும் அவர் செம்மையாகச் செய்வதில்லை என்பதாகவும் ஆயிரம் காரணங்கள் அதற்கு இருக்கலாம். எல்லோரையும் திருப்திபடுத்துவது எல்லாக் கலைஞர்களாலும் ஆகிற காரியமா என்ன? ஆனாலும் அவர்களையும் அவர் நிமிர்ந்து உட்காரச் செய்தது சாகர சங்கமம் என்று தெலுங்கிலும் தமிழில் சலங்கை ஒலி என்று டப் ஆகியும் வெளிவந்த படத்தில்தான். கமலஹாசன் மிகுந்த ஆற்றல் வாய்ந்த கலைஞன் என்பதை அந்தப் படத்தைப் பார்த்து அவரைப் பிடிக்காத ஒருசில நண்பர்கள் என்னிடம் வியந்தார்கள் என்பதை இப்போதும் நான் நினைவுகூரவே செய்கிறேன். இருந்தாலும் என்னால் அவரைப் பற்றிய முழுமையான முடிவுக்கு அப்போதும் வந்திருக்க முடியவில்லை.

சிங்கீதம் சீனிவாசராவோடு அவர் இணைகிறபோது நமக்குக் கிடைக்கிற விருந்து வேறு ஒருபோதும் கிட்டுவதில்லை என்பதே எனது கருத்து. மைக்கேல் மதனகாமராஜன் வெறும் கமர்ஷியல் காமடிப் படம்தான் என்றாலும் தமிழ் சினிமா பொக்கிஷமாகப் பாதுகாக்கப்படவேண்டிய படங்களில் அதுவும் ஒன்று என்பதாக நான் நினைக்கிறேன். இதற்கு நேரெதிரான கருத்து தசாவதாரத்தின்மீது எனக்கு இருப்பது. இதனால்தான் சில முக்கியமான முயற்சிகளில் சிங்கீதத்துக்கு லீவு கொடுக்கக்கூடாது என்று நான் சொல்கிறேன். புஷ்பக விமானம் என்று கன்னடத்திலும் தமிழில் பேசும் படம் என்றும் வெளிவந்த படத்தையும் கமலஹாசனின் களஞ்சியத்தில் சேர்த்துக்கொள்ள முடிகிறது என்று சொன்னால் அதில் சிங்கீதத்தின் பங்கு மிகவும் முக்கியமானது.

மைக்கேல் மதனகாமராஜனில் காணப்பட்ட காமேஷ்வரன் பாத்திரத்தை அனாயாசமாக செய்திருப்பார் கமல். அதைக்கூட நான் அடிப்படையில் பிராமணரான இவருக்கு பாலக்காட்டு ஐயர் பாத்திரம் என்ன கஷ்டமாக இருக்கப்போகிறது என்று சாதாரணமாகத்தான் எடுத்துக்கொண்டிருந்தேன். ஆனால் பிற்பாடு வந்த சதிலீலாவதிதான் அவரது உண்மையான ஆற்றலை எனக்குப் புரியவைத்தது. இத்தனைக்கும் அந்தப் படத்தில் அவர் நாயகனல்ல, காமெடியன். பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வந்த படம் அது என்கிறபோது இரண்டு அக்கறையுள்ள கலைஞர்களின் பங்களிப்பு ஒருங்கிணையும்போது சில அற்புதங்கள் சாத்தியமாகின்றன என்பதை நாம் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறதல்லவா!

அந்தப் பாத்திரத்தில் என்ன விசேஷம் என்று பார்த்தால், அந்தப் படத்தில் அவர் ஒரு ஆர்த்தோபிடீஷியன். டாக்டர்! ஆனால் திருப்பூர் கவுண்டர். கொங்கு மாவட்டங்களைச் சார்ந்த கவுண்டர்களில் திருப்பூர் கவுண்டர், பொள்ளாச்சிக் கவுண்டர், ஈரோடு கவுண்டர் ஆகியவர்களின் மத்தியில் (இவர்கள் ஒரே இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்தபோதும்) நுணுக்கமான வேறுபாடுகள் காணப்படும். இதை அருகிலிருந்து பார்த்துதான் புரிந்தகொள்ள முடியும். அதிலும் குறிப்பாக திருப்பூர் கவுண்டர்களின் attitude இருக்கிறதே அது மிகவும் அலாதியானது. அது எப்படியிருக்கும் என்பதை நான் விளக்கவே வேண்டியதில்லை. சதி லீலாவதி பார்த்தீர்களேயானால் அதுவே போதும்.

இந்த மாதிரி நுணுக்கமான வேலையைச் செய்யத்தான் கலைஞர்கள் வேண்டும். எம்ஜியாரின் மேனரிசங்களை காப்பியடித்து எத்தனையோ நடிகர்கள் செய்திருந்தபோதும் மணிரத்தினத்தின் இருவர் படத்தில் மற்றவர்கள் வழக்கமாக செய்து காட்டும் சேஷ்டைகளையெல்லாம் விட்டுவிட்டு, மோகன்லால் எம்ஜியாரின் வெகுசில நுணுக்கமான மேனரிசங்களை மட்டும் செய்து காட்டியதுபோல!

மோகன்லால் என்றதும் சாணக்கியன் நினைவுக்கு வருகிறது. மலையாளத்தில் வெளிவந்த இந்தப் படத்தில் கமலஹாசன் ஏற்ற பாத்திரம் மிகவும் வித்தியாசமானது. தெலுங்கில் வெளிவந்த இந்தருடு சந்தருடு (தமிழில் இந்திரன் சந்திரன்) படத்தில் செய்திருந்த பாத்திரம் போல இந்தப் பாத்திரமும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. அதுவும் க்ளைமாக்ஸில் ஃபால்ஸ் வாய்ஸில் "சோமா!" என்று அவர் கூப்பிடும் அழகு இருக்கிறதே, அதை உணர்ந்துகொண்டால்தான் கமலஹாசனின் ஸ்டைல் என்பது என்ன என்பதை உங்களால் விளங்கிக்கொள்ள முடியும். அந்தப் படத்தில் அவர்கள் மம்முட்டியையோ மோகன்லாலையோ போட்டிருக்கலாம், ஆனால் கமலஹாசன் கொடுத்த ஃபினிஷிங் டச் மற்றவர்கள் செய்திருந்தால் வந்திருக்குமா என்றால் கண்டிப்பாக இராது. (இத்தனைக்கும் இந்தியாவில் நான் மிக அதிகமாக மதிக்கும் கலைஞன் மோகன்லால்தான்!)

கிட்டத்தட்ட நாற்பது வருட கால திரை வரலாற்றின் அத்தனை அலைகளுக்கும் தாக்குப்பிடித்து புகழின் உச்சியில் புளங்கிக்கொண்டிருக்கும் ஒரு கலைஞனைப் பற்றி சிறு கட்டுரையில் முழுதும் சொல்லிவிட முடியாது. இருந்தாலும் அவர் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டிய முக்கியமான குறையைச் சுட்டிக் காட்டாமல் இந்தக் கட்டுரை முடியக்கூடாது.
தன் நடிப்புத் திறமைக்காக மிக மிக மதிக்கப்பட்ட சிவாஜிகணேசன் ஒரு காலகட்டத்தில் லுக்குடி லுக்குடி என்று ஆட்டம் போட்டார் என்று இந்தக் கட்டுரைத் தொடரில் ஒரு இடத்தில் சொல்லியிருந்தேன். திரிசூலம், சந்திப்பு, லாரி டிரைவர் ராஜாக்கண்ணு, எமனுக்கு எமன் என்று அவரது கேரியரில் ஒரு அசிங்கமான காலகட்டம் இருந்தது. அந்த மாதிரியான ஒரு நிலையையே கமலஹாசன் இப்போது எட்டியிருக்கிறார் என்று தோன்றுகிறது.
இல்லையானால் ஆள்வார்பேட்டை ஆண்டவா வேட்டியைப் போட்டு தாண்டவா என்று சதைபுஜநடனம் ஏதும் ஆடவேண்டிய அவசியம் அவருக்கு வந்திராது. கலக்கப்போவது யாரு என்று அவர் கேட்டால் முப்பது பேர் (இதில் நடிகர் பிரபுவும் அடக்கம்) நீதான் என்று அவரைப் பார்த்து புகழ்வது தேவைப்பட்டிராது. இந்த உதாரணங்களின் பட்டியல் ஆழ்வார்பேட்டையிலிருந்து அமிஞ்சிக்கரை வரைக்கும் நீளக்கூடியது.

கமலஹாசன் பொறுப்பாகத் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் இவைதான். இப்படியெல்லாம் சொல்வதனால்தான் அவரது புகழ் நிலைக்கும் என்று அவர் நினைக்கவேண்டியதில்லை. அவர் தன் தோற்றங்களில் காட்டும் அக்கறையை தரத்தில் காட்ட ஆரம்பிக்க வேண்டிய நேரம் இது என்பதே எனது கூற்று.

அவரளவு அனுபவமும் திறமையும் உள்ள இன்னொருவர் உருவாகவேண்டுமானால் அதற்குப் பல வருடங்கள் நாம் காத்திருக்க வேண்டியதிருக்கும். இதனால் அவரது திறமை வீணடிக்கப்பட்டால் நஷ்டம் அவருக்கு மட்டுமல்ல. நமக்கும்தான்!

4 comments:

Suresh said...

அருமையான பதிவு நணபரே

நண்பரே, நானும் ஒரு பதிவு போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,
படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)
வாழ்க்கை என்றால் என்ன ? - பதில் இங்கே ...
http://sureshstories.blogspot.com/

ttpian said...

புது விளையாட்டு!
தொப்புலிள் பம்பரம் விடுவது:
தேவையான பொருட்கள்
அரை /அல்லது முக்கால் கிழம்
பழய பம்பரம்
தொப்புல்(அ)சுகன்யா
பழய அரை ஙான் கவுறு
னாட்டு/வெளினாட்டு சரக்கு

Unknown said...

நான் தொடர்ந்து உங்கள் உயிரோசை பத்திகளை படிக்கிறேன். அருமையான கட்டுரைகள். நான் உங்கள் "காக்டைல்" இந்த புத்தக கண்காட்சியில் வாங்கி படித்தேன். சரளமான தலைப்பிற்கு பொருத்தமான மொழி நடை. "ஆஸ்பத்திரி" நாவல் இப்போது விற்பனையில் இருக்கிறதா? கண்ணில் படவில்லை. நீங்கள் சாருவின் பிச்சாவரம் சந்திப்பிற்கு வருவீர்கள் பேசலாம் என்று காத்திருந்தேன்.
நீங்கள் வேறு எதிலெல்லாம் இப்போது எழுதுகிறீர்கள் என்று தெரிவிக்க முடியுமா?

அன்புடன்,
பாஸ்கர்

சுதேசமித்திரன் said...

டியர் பாஸ்கர்

உங்கள் அன்புக்கு நன்றி

ஆஸ்பத்திரி உயிர்ம்மை வெளியீடு.

இப்போது என் மூன்றாவது நாவலை எழுதிக்கொண்டு இருக்கிறேன்

நீங்கள் என்னை கீழ்க்கண்ட ஈமெயில் விலாசத்தில் தொடர்பு கொள்ளலாம்

sudesi@gmail.com

நன்றி

என்று

சுதேசமித்திரன்