June 12, 2009

சமூகத்தை சினிமா சீர்குலைக்கிறதா?

சமுதாயத்தை சீர்குலைக்கிற வேலையை சினிமா வெகுகாலமாகச் செய்து வந்தது உண்மைதான். ஆனால் இப்போதோ அந்தக் குற்றச்சாட்டு செல்லாது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் காண்கின்றன. முதலாவது அந்த வேலையை இப்போது செய்துகொண்டிருப்பது தொலைக்காட்சிப் பெட்டி. இரண்டாவதும் மிக முக்கியமானதுமான காரணம், சினிமா என்னதான் முனைந்து இன்றைய சமுதாயத்தை சீர்குலைக்கவோ மாற்றவோ முயன்றாலும் முடியாதவாறு சமுதாயம் அதைவிட வேகமாகமாற்றம் அல்லது சீர்குலைவை, தானே முன்வந்து ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பதுதான்.

சும்மா திடீரென்று உனக்குத் தமிழ் சினிமா மேல் பாசம் வந்தால் இப்படி ஒரேயடியாக உளறாதே என்று நீங்கள் கேட்கமாட்டீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. அதனால் இந்தக் கூற்றுகளை விளக்கமுடியுமா என்று பார்க்கிறேன்.

பாகவதர் படக்காலங்களில் தொப்புளுக்கு ரெண்டு இன்ச் மேலே கொசுவம் வைத்த பதினாறு கஜ சேலை கட்டிக்கொண்டுதான் பெண்கள் நடித்தார்கள். அப்போது பெண்கள் நடிக்கக் கிடைப்பதே துர்லபமாக இருந்தது என்பதனால் கிடைத்த மூஞ்சிகள்தான் வெல்லம். இந்த லக்ஷணத்தில் கஜத்தையோ இன்ச்சையோ குறைப்பதெல்லாம் சாத்தியமேயில்லாமல் இருந்தது என்பதாகவெல்லாம் வாதாடக்கூடாது. அப்போதைய ஆணின் மனம் பெண்ணை அவ்வாறு பார்ப்பதையே விரும்பியது. இப்போதும் தங்கள் வீட்டுப் பெண்கள் என்றால் மட்டும் இறுக்கமான உடையணிந்து வீதியுலா வரக்கூடாது என்று கண்டிக்க முடிகிறதோ இல்லையோ, மனதிற்குள் அவாவுறும் ஆணுள்ளங்கள்தானே பெரும்பாலும்!

பாகவதர் வீதியில் பாடிக்கொண்டு போகையில் பெண்கள் தெறித்து ஓடுவதைப் பற்றிய விளக்கமொன்றை ஏற்கனவே எழுதியிருந்தேன். அதுகூட சமுதாயத்தை சீர்குலைக்கக்கூடிய வேலை என்பதாக எனக்கு இந்தக் கட்டுரை எழுதும் வேளையில் தோன்றவில்லை. பெண்களின் மனக்கிடக்கையில் சுதந்திரம் குறித்த ஆசை எத்தனை உயரத்துக்குத் தத்தளித்துக்கொண்டிருக்கிறது என்பதை பள்ளியறைகளிலேனும் புரிந்துகொள்ள இயலாத நிலையில் அன்றைய ஆண் மனம் இருந்திருக்க முடியாது அல்லவா!

ஏன் இந்த உதாரணத்தில் ஆரம்பிக்கிறேன் என்று சொன்னால் சமுதாயச் சீர்குலைவு என்பது முதலில் பெண்களின் சீர்குலைவு என்பதையே வெகுகாலம் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்தது. இப்போதுதான் கண் காது மூக்கு என்று நவதுவாரமும் திறந்துகொண்டு பிள்ளைகளின் சீர்குலைவே சமுதாயத்தின் சீர்குலைவுக்கான அச்சாணி என்பதை ஆணுள்ளங்கள் கண்டு தெளிந்து வருகின்றன.சினிமா பார்த்தால் பெண்கள் கெட்டுப் போவார்கள் என்பதாக நம்பிய அந்தக்கால சமூகம், அதே சினிமாவில் பெண்களைப் பார்ப்பதையும் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு விரும்பியது. ஊரில் தெருவில் கரகாட்டம் என்றாலோ, ரெக்கார்ட் டான்ஸ் என்றாலோ வெட்கமில்லாமல் வெகண்டை பேசிக்கொண்டும் விசிலடித்துக்கொண்டும் கூட்டமாகப் போய் அம்மியது.

பத்திரகாளி படத்தில் ஒரு காட்சி. பிராமணக் குடும்பம். கணவன் ரெகார்ட் டேன்ஸ் பார்ப்பதில் ஆர்வம் கொண்டுள்ளதை அறிந்த மனைவி வீட்டுக் கதவை சாத்திவிட்டு மடிசார் சகிதம் ஒரு ரெகார்ட் டேன்ஸ் ஆடிக் காட்டுகிறாள். போதுமா என்று கேட்கிறாள். அவன் பரம திருப்தி என்று தெரிவிக்கிறான். தமிழ் சினிமாவில் அப்போதெல்லாம் அவ்வளவுதான் காட்ட முடிந்தது பாவம். இப்போதானால் ஒரு மடிசார் ஸ்ட்ரிப்டீஸ் சகஜமாக நம்மால் எதிர்கொள்ள முடியும். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நான் ஆளான தாமர என்று ஷோபனாவை வைத்து மிக ஆச்சாரமான உடை என்பதாக பிராமணர்கள் கருதும் மடிசாரையே கவர்ச்சியுடையாக்கிக் காட்டிய பாக்கியராஜையும் இந்த நேரத்தில் நாம் பெருமிதத்தோடு நினைவுகூரவேண்டியதுதான்.

உண்மையில் தமிழகப் பெண்கள் அணியும் ஆடைகளிலேயே மிகவும் கவர்ச்சிகரமானது புடவைதான் என்பதை நுட்பமாகப் புரிந்துகொண்ட வகையிலேயே தமிழ் சினிமா பல உன்னதமான காட்சிகளை நாசூக்காகத் திணித்து வந்திருக்கிறது. பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னால்கூட கேரளத்தில் முண்டும் ரவிக்கையும் அணிந்த பெண்களை வீதியில் பார்த்திருக்கிறேன். ஆனால் இங்கோ, ரோசாப்பூ ரவிக்கை முழுசாகவும் பருத்த முலைகளின் பிதுங்கல் கனிசமாகவும் தெரியக்கூடிய நிலைமை வந்துவிட்டால் அத்தனை விசிலடிச்சான்குஞ்சுகளுக்கும் உறக்கம் போயே போய்விடுகிற நிலைமையே வெகுகாலம் இருந்தது (அந்தக் குஞ்சுகளுக்கு சம்சாரம் என்பதாக வேறு ஒருத்தி இருந்தால் அவளுக்கும் உறக்கம் போயிருக்கும் என்பது வெறும் செயின் ரியாக்ஷன்!).

இப்போதோ கேரளத்திலேயே அவ்விதமான உடையணிய ஒருத்தரும் தயாரில்லை. அந்த உடை சரியானதா தவறானதா என்பதைக்குறித்து ஏஷியா நெட்டில் விவாதித்து விவாதித்து முடித்தே விட்டார்கள். ஆனால் இங்கோ வாய்ப்பு கிடைத்தால் போதும், விவேகமான காமெடியன்கள் வாயிலாக மும்தாஜ் முதல், எனக்குப் பெயர் தெரியாத போலீஸ் இன்ஸ்பெக்டரை கொச்சச்சன் என்று ஆசையோடு விளிக்கிற கும்மென்ற இளம் நடிகை வரைக்கும் கேரள முண்டு கலாச்சாரத்தை தமிழ் நாட்டில் நிறுவிவருகிறார்கள். உண்மையில் அப்படியொரு கனத்த இளம்பெண் அந்த ரவிக்கை உடையோடு இன்றைய சென்னை வீதியில் நடந்துபோனால் என்ன நடக்கும்? டைட்டான ஜீன்சும் தொப்புள் தெரிய இறுக்கமான டீஷர்ட்டும் அணிந்து செல்லும் பெண்களுக்கு மத்தியில் உண்மையான கவர்ச்சியுடை எது என்பது வெட்டென விளங்கும். நானும் எவ்வளவு நேரம்தான் என் எமோஷன கன்ட்ரோல் பண்றது என்று விவேக் கேட்டதுபோலத்தான் ஆகும்!

சினிமா நிகழ்த்தும் சீர்கேடுகளில் மிகவும் நுட்பமானது இந்த வகைதான். ஆனால் இந்த சீர்கேட்டை ஸிங்கிள் விண்டோ கொண்ட சினிமா தயாரித்து, டீவியிடம் விற்றுவிடுவதனாலேயே திரும்பத் திரும்ப சிறாரிலிருந்து பெரியோர் வரைக்கும் அதைப் பார்த்துப் பார்த்து மூளையின் செதில்களைக் காமத்தின் கழிவுகளால் நிரப்பிக்கொள்கிற அவலம் நிகழ்ந்து வருகிறது.

ஒரு மோசமான காட்சியை சினிமா எடுத்துக் கொடுக்கலாம், டீவி காட்டக்கூடாதா என்று கேட்கக்கூடாது. அதனால்தான் ஸிங்கிள் விண்டோ என்கிற பதத்தை உபயோகித்தேன். சினிமாவை காசுகொடுத்து தியேட்டரில் போய்த்தான் பார்க்க வேண்டும் என்கிற நிலைமை இருந்தவரைக்கும்தான் சினிமாவை குற்றஞ்சாட்டலாம். ஏனென்றால் திரும்பத் திரும்ப ஒரு காட்சியைப் பார்க்க விரும்பினால் திரும்பத் திரும்ப முழுப் படத்தையும் பார்த்தாக வேண்டிய சூழல் அதில் உண்டு. முழுப்படத்துக்கான டிக்கெட் கட்டணத்தையும் கொடுக்க வேண்டிய அவசியமும் அதில் உண்டு. இல்லையானால் ஆப்பரேட்டர் உங்கள் பிரண்டாக இருந்தால்தான் ஆகும். ஆனால் டீவிப்பெட்டி என்பதாக ஒன்றும் அதில் கேபிள் அல்லது டிஷ் இணைப்பு என்பதாக ஒன்றும் இருந்துவிட்டால் போதுமே போதும், வேண்டுமோ வேண்டாமோ, விண்டோ விண்டோவாகத் திறந்து அதே காட்சியைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். டீவிடி ப்ளேயர் என்பதாக ஒன்று இருந்துவிட்டாலோ இன்னும் விசேஷம்.

இதனால்தான் பிரச்சினை பிலிம் பெட்டியில் இல்லை, டீவிப் பெட்டியில்தான் இருக்கிறது என்று சொல்ல வேண்டி வருகிறது.

ஆங்கில அல்லது வெஸ்டர்ன் கலாச்சாரத்தில் பார்ட்டி உடை என்பதாக ஒரு பதம் உண்டு. சாதாரண பார்ட்டிகளுக்குக்கூட அசாதாரணமான உடையணிந்து செல்வதை ஒரு கலாச்சார நடவடிக்கையாகவே அவர்கள் பயின்று வந்திருக்கிறார்கள். முலைகள் பிதுங்க வயிற்றையும் மார்பையும் இறுக்கிக் கட்டிக்கொள்வது அங்கே மிகச் சாதாரணமான செயல்பாடு. முலைகள் கண் முன் பிதுங்கினாலும் அதைத் தொடுவது நாகரிகமற்ற செய்கை என்பதாக அங்குள்ள ஆண்களின் மனத்தில் சிறுபிராயம் முதலாகவே பதிவு நிகழ்ந்திருக்கிறது என்பதனால் அங்கே இது ஒரு பிரச்சினை இல்லை.

சில வருடங்களுக்கு முன்னால் யூட்யூப்.காமில் பிரபல நடிகை ஒருவரின் க்ளிப் ஒன்றைப் பார்த்தேன். அனேகமாக தமிழ்நாட்டிலுள்ள இணையப் பழக்கமுள்ள அத்தனைபேரும் இதைப் பார்த்திருப்பார்கள். நடிகை ஒரு கூட்ட நெரிசலில் சிக்கி பெண்மைக்குரிய அச்சம் மடம் முதலான அத்தனை பாங்குகளோடும் வெளியேற முனைகிறார். மிகுந்த கண்ணியமான தோற்றமுள்ள; போலீஸ்காரன் போல க்ராப்வெட்டிய இளைஞனொருவன் நடிகையை முன்னாலிருந்து கடக்கிறான். அவன் நடிகையின் முகத்தைக்கூட பார்க்க விரும்பாதவன் போல வேறெங்கோ பார்த்தவனாயிருக்கிறான். ஆனால் அவனது ஒரு கரம் நடிகையின் ஒரு முலையை ஒருகணம் பிசைகிறது.

இவ்வளவு அசிங்கமான ஒரு காட்சியை நீங்கள் சினிமாவில்கூட பார்த்திருக்க முடியாது. இதனால்தான் சமுதாயம் சினிமாவைவிடவும் வேகமாகக் கெட்டுக்கொண்டிருக்கிறது என்று சொல்கிறேன்.

சாதாரணமாக கிராமங்களில் திருவிழாக்கள் என்றால் இந்தமாதிரி மைனர்கள் நெரிசலைப் பயன்படுத்தி பெண்களின் முலைகளையும் பின்பக்கத்தையும் பிசைவதே நமது பாரம்பரிய கர்மமாக இருந்து வருவதன் நகரமயமாக்கம்தான் பேருந்துப் பிசைவுகள். பெண்ணை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தொட்டுப் பார்த்துவிட வேண்டும் என்கிற முனைப்பு அனாதி காலம் தொட்டே இருந்து வருவதுதான் என்றபோதும் ஒரு அரசனுக்குள்ள தைரியம் போல பொது இடங்களில் இவ்விதமாகத் துணிகிற செயல்பாடு எமது தேசத்தின் கறுப்புப் பக்கம். என் நண்பனொருத்தன் மிக ஆகிருதியாக இருப்பான். ஒருமுறை அவனோடு ரயில் நிலையத்துக்குப் போயிருந்தேன். அப்போதுதான் வந்த ரயிலிலிருந்து இறங்கிய கூட்டம் தூக்கக் கலக்கமும் களைப்புமாக வேகவேகமாக ஒற்றை வாசலை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது. நாங்கள் எதிரில் செல்கிறோம். நண்பன் இரண்டு கைகளையும் ராஜராஜசோழன் மாதிரி இடுப்பில் வைத்துக்கொண்டான். எதிர்ப்படும் பெண்களின் முலைகளில் தன் முழங்கையால் மோதிக்கொண்டே வந்தான். நான் பத்தடி பின்தங்கிவிட்டேன். அடி வாங்க தைரியம் இல்லை. ஆனால் அவனது ஆகிருதியோ அவர்களது அவசரமோ, ஒருத்தரும் சண்டைக்கு வரவில்லை. முடிவில் இது சரியா என்று நான் கேட்டபோது அவன் சொன்னதுதான் ஆச்சரியமூட்டும் பதில். அவன் சொன்னான்,

இது அவங்களுக்குப் புடிக்கும்.

அவர்கள் எப்போது இவனிடம் வந்து இப்படிச் சொன்னார்கள் என்பதுதான் தெரியவில்லை. இன்னொரு நண்பன் உண்டு. அவன் திரையரங்கில் திரையில் மட்டும்தான் சினிமா ஓடுகிறது என்பதில் நம்மைப்போல் நம்பிக்கை இல்லாதவன். இந்தமாதிரியான மனோபாவங்களே சமூகம் முன்னே செல்லாமல் தேங்க வைப்பவை. இந்த மனோபாவத்தை ஜீன்கள் வழங்குகின்றன அல்லது சமூக அழுத்தங்கள் நிகழ்த்துகின்றன. மற்றபடி சினிமா என்பது வெறும் நிழல்தான்.

இணையத்தின் இருட்டுப் பக்கங்கள், பப், டிஸ்கோதே, பிபீவோ கலாச்சாரம் ஆகியவையெல்லாம் சினிமாவிலிருந்து வந்தவை அல்ல. சமூகத்திலிருந்து சினிமாவுக்குள் நுழைபவை. எந்தக் காலத்திலும் தமிழ் சினிமாவின் பிழை மிகைப்படுத்தல்தான் என்பதுதான் அதன் தவறு. முன்பெல்லாம் ஒரு பெரிய ஹீரோவின் படத்தில் கவர்ச்சியான காட்சிகள் வில்லன்களை மையமாக வைத்தே காட்டப்பட்டன. இப்போதோ தலைகீழாக மாறிவிட்டது. ரஜினிகாந்த் நடித்த வீரா படத்தில் ரோஜாவும் ரஜினியும் இணைந்து வெத்தலை என்று வருகிற பாடலொன்றில் அசிங்கமான அங்க அசைவுகளோடு ஆடியதைப் பார்த்து ஒருவிதமான கலாச்சாரக் கலவரத்தில் விழுந்தேன். அந்தப் படத்துக்குப் பின்தான் ரஜினி படங்களில் கதாநாயகிகளின் கவர்ச்சி என்கிற அஸ்திரம் கையாளப்பட்டது. ரஜினிகாந்த் மாதிரி ஒரு ஸ்டாருக்கு இது தேவையா என்று ஆச்சரியமாக இருந்தது. ரஜினியைக் காலத்தோடு இணைந்து செயல்பட வைக்கிறார்களா, அல்லது வெறும் நடிகனின் புகழை மட்டும் நம்பினால் படம் ஓடாது என்று நினைக்கிறார்களா? சுரேஷ்கிருஷ்ணாதான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

சினிமாவை வெறும் வியாபாரமாகப் பார்க்கிற போக்கின் அவலம் இது. அவர்களைப் பொறுத்தவரை சினிமா ஜெயிக்க வேண்டும். ஏனென்றால் அதன் பின்னால் பெரும் உழைப்பும் பணமும் கொட்டிக்கிடக்கிறது.

டீவிப் பெட்டிக்கோ கிடைத்ததெல்லாம் அவல்தான். திரும்பத் திரும்ப மென்றுகொண்டே இருக்கத் தோதாக சினிமா எதைக் கொடுத்தாலும் அதை பகாசூரன் போல விழுங்கிக்கொள்ள அது தயாராக இருக்கிறது.

கள்ளத்தனமான சமூக மனமோ தமிழ் சினிமா ரொம்பவும் பரிதாபத்துக்குரியது, அதனால் இவ்வளவுதான் காட்ட முடியும் என்று உள்ளூர நகைத்துக் கொண்டேயிருக்கிறது.

1 comment:

butterfly Surya said...

அருமையான பதிவு. ஆழ்ந்த அர்த்தம் கொண்ட தெளிவான கருத்துகள்.


தொடரட்டும்.

நன்றிகள் பல.