February 21, 2009

சினிமாவில் ஜெயிக்க என்ன செய்ய வேண்டும்?

சினிமாவில் ஜெயிக்க வேண்டுமானால், கூட இருப்பவர்களின் கால்களை வாரி விடவேண்டும் என்பதாக பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் ஒரு உபாயம்தான். ஆனால் இன்றைக்கு சினிமாவில் ஜெயித்தவர்கள் எல்லாம் அந்த உபாயத்தின் வாயிலாகத்தான் தங்கள் உயரங்களை எட்டியிருக்கிறார்கள் என்று பொத்தாம் பொதுவாக எதையும் கற்பிதம் செய்து கொள்வது கூடாது.

இருந்தாலும் பன்னெடுங்காலமாக இவ்விதமான ஒரு மனோபாவம் எமது சினிமா உலகில் நிலவியே வருகிறது. காலை வாரி விடுவது என்பதன் அடிப்படை செயல்பாடு எதிலிருப்பவரை வானளாவப் புகழ்வதுதான். இதை ஒரு நற்குணம் என்பதாகவே மனோசாஸ்திரம்கூட சொல்கிறது. ஆனால் நோக்கம் கேடு விளைவிப்பதாக இருக்க, நாக்கில் சர்க்கரை தடவிக்கொள்வது சரியானது என்று மேலாண்மை படிக்கும் மாணவர்களுக்கு வேண்டுமானால் எமது பல்கலைக்கழகங்கள் போதனை செய்யலாமே தவிர, அது உண்மையாக ஆகவே ஆகாது.

தமிழகத்தைப் பொருத்தவரைக்கும் தென் மாவட்டங்கள் வட மாவட்டங்கள் என்று திசைக்கொரு குணாதிசயம் உண்டு. இதற்கும் சினிமாப்பாடல்களின் உதவியையே நாடலாம். கோயமுத்தூர் குசும்பு, கோவில்பட்டி திமிரு, தென்மதுரை பாசம் கொண்ட பெண்களை நாம் சினிமாவில் பார்க்கவில்லையா? சுப்ரமணியபுரத்தில்கூட நண்பர் சசிகுமார் பழக்கத்துக்காக கொலை செய்வதெல்லாம் நம்ம பசங்கதான் என்று எழுதவில்லையா? கோயமுத்தூரில் பழக்கத்துக்காக ஒரு ரோமத்தைக்கூட யாரும் கொடுக்கமாட்டார்கள் என்பது எனக்குத் தெயும். ஆனால் வீம்புக்காக தலையைக்கூட கொடுத்துவிடத் தயாராக இருப்பார்கள். கவனியுங்கள், தலையை எடுக்க அல்ல!

இப்படி ஊருக்கொரு குணாதிசயம் இருக்கிறது என்று சொன்னால் சென்னைக்கும் ஒரு குணாதிசயம் உண்டல்லவா? - இந்தக் கட்டுரை பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்குப் படையெடுக்கும் சினிமாக் கனவு கொண்ட இளைஞர்களுக்காக எழுதப்படுவதாக யாரும் தப்பிதமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் தப்பிதமாக எடுத்துக்கொண்டாலும் தப்பில்லை.

சென்னையில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு ஒரு ரகசியம் தெரியாது. தமிழகத்தின் வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு வந்து இறங்குபவர்கள்தான் அதை கால்வைத்த மாத்திரத்திலேயே உணர்வார்கள். தமிழகத்திலேயே மிகவும் வேகமான நகரம் சென்னைதான். நெரிசல், மக்கள் தொகை, வெய்யில் என்று அதை வர்ணித்துக்கொண்டு போக வேண்டியதில்லை. மும்பையோடு ஒப்பிடும்போது சென்னை நிதானமான நகரமாகவும், நியூயார்க்கோடு ஒப்பிடும்போது மும்பை நிதானமான நகரமாகவும் தோன்றுவதில் எப்படி வியப்பில்லையோ அப்படித்தான் இதுவும்.

அந்த வேகத்துக்கேயான அத்தனை அவசரங்களும் கொண்ட துறை எமது சினிமாத் துறை. ஒவ்வொரு மணித்துளியும் காசாக மாறுவதும், ஒவ்வொரு மணித்துளியிலும் முதலீடு கரைந்து ஒழுகிவிடுவதும் சினிமாவில் சகஜம். ஒருவகையில் பார்த்தால் இந்த வேகம், ஒருவிதமான ஒழுங்கையும் கட்டுத்திட்டங்களையும் கறார்த்தனத்தையும் சட்டதிட்டங்களையும்தான் ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாக உலகெங்கிலும் உள்ளதைப் போலவே, வருமானமும் புகழும் பெருகியோடும் வாய்ப்புள்ள இடங்கள் அனைத்திலும் பகிரங்கமாக உலவ ஆரம்பிப்பது பாசாங்கு மாத்திரமே! அது எமது சினிமாவுக்கும் விலக்கல்ல.

அரசியலுக்குப் பிறகு சினிமாவில்தான் வாரிசு, காலில் விழும் வைபவம், வகைதொகையில்லாமல் புகழ்ந்து தள்ளும் கபடம் எல்லாம் மலிந்து கிடக்கிறது. சாதாரணமாக தமிழகத்தின் மற்ற ஊர்களில் இந்தமாதிரி ஒருத்தர் காலில் மற்றவர் விழுவது, போலியாகப் புகழ்ந்து தள்ளுவது என்பதையெல்லாம் பார்க்கவே முடியாது. திண்ணையைத் தேய்த்துக்கொண்டு ஊர்வம்பு பேசுபவர்கள்கூட இந்தக் காரியத்தில் ஈடுபடுவதில்லை.

நான் கோவையிலிருந்து தொலைக்காட்சி சீரியல்களில் பணியாற்றும் பொருட்டு சென்னைக்கு வந்து சேர்ந்தபோது கோடம்பாக்கம் கங்கையம்மன் கோவில் வீதியில் நான் பணியாற்றப்போகும் சீயலில் ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்த ஓர் உதவி இயக்குனரைப் பார்க்கப் போயிருந்தேன். அவரும் நானும் அந்தத் தெருவில் செராமிக் டைல்ஸ்களில் விளம்பரங்கள் பதித்த ஒரு சிறு டீக்கடையில் உட்கார்ந்து டீ ஆர்டர் செய்தோம். இந்த சடுதியில் திடீரென்று அந்த நண்பர் ஒரு காரியம் செய்தார். சென்னைக்கு நல்வரவு, நீங்கள் பெரிய டைரக்டர் ஆக உங்களை வாழ்த்துகிறேன் என்பதை அவரது ஸ்லாங்கில் திடீரென்று சொன்னார். நான் இந்தமாதிரி வாழ்த்துக்களையெல்லாம் அதுவரைக்கும் எதிர்கொண்டதேயில்லை. தானே உதவி இயக்குனராக இருக்கும் ஒருவர் புதிதாக வந்த இன்னொருவரை இவ்விதமாக வாழ்த்துவது கோயமுத்தூர் பக்கமெல்லாம் துப்பாக்கியை வைத்து மிரட்டினாலும் காண இயலாதது. மீறிப்போனால் "அப்புறம்? பெய டைரக்க்டர் ஆகப்போறிங்க! அப்டித்தான?" என்று நக்கலாகத்தான் அங்கே ஆரம்பிப்பார்கள்.

அதே நண்பர் நாங்கள் ஒன்றாகப் பணியாற்றுங்காலத்தில் பலமுறை என்னிடம் குறிப்பிட்டுச் சொல்வார், உங்களுக்கென்ன சார், நீங்க பெரிய ரைட்டர். எங்க நிலைமை அப்படியா? என்று. உண்மையில் நான் அப்போது போலீஸ் ஸ்டேஷனில் ரைட்டராக இருந்திருந்தாலாவது நாலு எஃப்பையாராவது எழுதி காசு பார்த்திருக்கலாம் என்பதை என் தன்மானத்தை விட்டுக்கொடுத்து அவரிடம் ஒருபோதும் சொன்னதேயில்லை. எல்லாம் புகழப்படுவதில் உள்ள அற்ப சுகத்தை அனுபவிக்கிற ஆசைதான்.

இந்த ஆசையை அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள் சினிமாவில் அழிந்துபோவதையே நாம் இதுவரைக்கும் பார்த்து வருகிறோம்.

இப்படி சந்தர்ப்பம் கிடைக்கிறபோதெல்லாம் புகழாரம் சூட்டிக்கொண்டிருந்த அந்த நண்பர் ஒருமுறை ஒரு காரியம் செய்தார். இயக்குனர் என்னை ஷூட் செய்யச் சொன்ன காட்சியை கூடவே அவரும் ஸ்டார்ட் கட் சொல்லி இயக்கிக்கொண்டிருந்தார். இந்த சம்பவத்தை என் முதல் நாவலான காக்டெய்லில் விளக்கியிருக்கிறேன் என்பதனால் இங்கே இது போதும். நான் மிகுந்த கோபத்தோடு, இயங்கிக்கொண்டிருக்கும் கேமராவுக்குக் குறுக்கே நடந்து அந்த இடத்திலிருந்து வெளியேறினேன்.

அதன்பிறகு நான் நெடுங்காலம் சினிமாவை விட்டு விலகியிருக்க நேர்ந்தது. ஆனால் அந்த நண்பர் தற்போது இரண்டு படங்களையே இயக்கிவிட்டார். சரக்கு இல்லாததால் அத்தோடு முடிந்துபோய்விட்டது கதை. ஆக, இப்படி ஆளை வர்ணிப்பது, காலை வாரி விடுவது ஆகிய கபட நாடகங்கள் சினிமாவில் உங்களுக்கு வாய்ப்பை வாங்கித் தரலாமே தவிர அவை உங்களை உயரங்களுக்கு ஒருபோதும் கொண்டு செல்லாது என்பதே உண்மை.

சரி, சினிமாவில் ஜெயிக்க என்ன செய்ய வேண்டும்? இந்தச் சூத்திரம் மிகவும் இலகுவானது. தனந்தரும், வாழ்க்கைக் கல்விதரும் சினிமாவில் ஜெயிக்க அத்தியாவசியத் தேவை, ஒருபோதும் தளர்வறியா மனமும் தொழிலின் மீதான மாறாத காதலும் நில்லாத உழைப்பும் தீராத தேடலும்தான்!

இவை இருந்தால் சினிமாவில் ஜெயித்துவிடலாமா? கண்டிப்பாக ஜெயித்துவிடலாம். உங்கள் நெஞ்சில் அக்னி இருந்தால் மட்டும்தான் இந்தக் கோட்பாடுகளைக் கைக்கொள்வது எளிதாகும். இந்த குணங்களைக் கொண்டவர்கள் ஒருவரும் சினிமாவில் தோற்றதாக சத்திரமேயில்லை. அதே நேரத்தில் சினிமாவில் ஜெயித்தவர்களில் ஒருவரும் இவ்விதமான குணங்கள் இல்லாதவர்களாக ஒருபோதும் இல்லை.

எங்கோ பண்ணைப்புரத்தில் பிறந்த இளையராஜா சகோதரர்கள் கோடம்பாக்கத்தில் கோலோச்சியதெல்லாம் இந்த அடிப்படை குணங்களிலிருந்து வழுவாமல் போனதனால்தான். குறிப்பாக இளையராஜாவை எடுத்துக்கொள்ளலாம். இன்றைக்கு ஏயார்ரகுமான் ஆஸ்கார் வரைக்கும் உயர்ந்து நிற்கிறார் என்றால் இளையராஜா அந்த அளவுக்கு திறமை இல்லாதவர் என்பதாகக் கொள்ளலாமா?

நான் மேற்சொன்ன குணங்களில் ஒரே ஒரு குணத்தை மட்டும் தவற விட்ட வகையில்தான் இளையராஜா ஏயார்ரகுமானுக்கு வழிவிட வேண்டி வந்தது. சாதாரணமாகவே ஆன்மீக நாட்டம் கொண்ட மனம் இளையராஜாவுக்கு என்பதனாலேயே அவர் ஒரு முக்கியமான கோட்பாட்டிலிருந்து வழுவிவிட்டார். அதுவே அவரது பின்தங்கலுக்குக் காரணம். அது தீராத தேடல். அவரது தேடல் ஆன்மீகத்திற்குள் நுழைந்ததாகச் சொல்லப்பட்டபோது அவரது தொழிலில் அவர் கொண்டிருந்த தேடல் துவள ஆரம்பித்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

சாதாரணமாக கேரளாவின் கடைக்கோடியிலிருந்து புறப்பட்டு வரும் இருபது வயதுகூட ஆகாத ஒரு சிறுமி, கேரளாவில் இரண்டொரு படங்களில் முகத்தைக் காட்டியதும் தமிழுக்குத் தாவி, தமிழர்களின் சொப்பனங்களை நனைக்க ஆரம்பித்துவிடுவதை நாம் கண்கூடாகப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். தமிழில் ஒரு ரவுண்டு வந்துவிட்டதாகக் கருதப்படுமுன் தெலுங்கர்களின் சொப்பனங்களில் அவர்கள் புகுந்துவிடுகிறார்கள். தெலுங்கர்கள் தவித்துக்கொண்டிருக்கும்போதே திடீரென்று தேசிய அளவில் சீறிப் பாய்ந்துவிடுகிறார்கள். அந்நாள் ஸ்ரீதேவியிலிருந்து இந்நாள் அசின்கள் வரைக்கும் இதற்கு உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இதெல்லாம் அவர்களுக்கு எப்படி சாத்தியமாகிறது. அவர்களின் தேடல் நிற்காமல் போவதனால்தான். சினிமா தரும் புகழும் பணமும் மற்றவர்களைக் காட்டிலும் நடிகைகளுக்குத்தான் மிக சொற்ப காலத்தில் மட்டுமே கிட்டக்கூடியதாக இருப்பதனாலேயே அவர்களின் அவசரம் சினிமாவுக்கான அத்தனை குணங்களையும் அவர்களுக்கு வழங்கிவிடுகிறது.

என்னோடு பணியாற்றிய ஒரு குணச்சித்திர (?) நடிகர் ஒருமுறை புதிதாக நடிக்க வந்த நடிகை ஒருத்திக்கு சொன்ன அட்வைஸ் இப்போதும் என் காதில் ஒலிக்கிறது. அந்தப் பெண் அவரிடம், நீங்கள் நடிக்கும் படங்களில் எனக்கு சிபாரிசு செய்யுங்கள் என்று கேட்டது. அப்போது அவர் அவளிடம் சொன்னார், ஆம்பளைங்களுக்குத்தான் அதெல்லாம் தேவை. உனக்கு ஈஸி, பேசாம படுத்துக்கோ! என்று.

பேசாமல் படுத்துக்கொண்டால் ஒரு சிறுமி பெரும் நடிகையாக ஆக முடியுமா? இந்த உபாயத்தால் மட்டும்தான் எமது நடிகைகள் எல்லாம் உயரங்களுக்குப் போனார்களா? அப்படி நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால் மூளையை ஹார்ப்பிக் போட்டு கழுவுங்கள். தன்னோடு இரவைப் பகிர்ந்துகொண்டதற்காக அடுத்தநாள் படப்பிடிப்புத் தளத்தில் நடிகைக்காக ஓர் இயக்குனர் மாலை வரை காத்திருக்க நேர்ந்தால் அவரும் அழிந்துவிடுவார் அந்த நடிகையும் அழிந்துவிடுவார் என்பதே கண்கூடான உண்மை.

வினாடிக்காலம்கூட நில்லாத வேகம்தான் சினிமாவுக்குத் தேவையான அடிப்படை குணம். அதை விடுத்து வேறு எந்த மாயத்தாலும் ஒருவர் உயரங்களைத் தக்கவைத்துக்கொள்ளவே முடியாது.

திரும்பவும் இளையராஜாவுக்கே வருவோம். இளையராஜா மட்டும் தனக்குக் கிடைத்த பாலிவுட் வாய்ப்புகளை புதிய இசையமைப்பாளரின் உத்வேகத்தோடு உபயோகித்துக்கொண்டு இந்தித் திரைப்படத் துறையில் ஒரு போராட்டத்தை நிகழ்த்தியிருந்தாரேயானால் ஹாலிவுட்டுக்குப் போவதும் அவருக்கு எளிதாகவே இருந்திருக்கும். ஆஸ்கார் நமக்கு எப்போதோ கிடைத்திருக்கும்.

ரகுமானிடம் அந்தத் தீராத வேட்கை இருக்கிறது. இளையராஜாவைவிட இவர் ஆற்றல் மிக்கவரா இல்லையா என்பதை சாலமன் பாப்பையாக்களுக்கும் விஜய்டீவி கோபிநாத்களுக்கும் விட்டுவிடலாம். ரகுமான் இரண்டாவது படத்திற்கே தேசிய விருது வாங்கினார். தேசிய விருது வாங்கிய பின்னால் வேறென்ன இருக்கிறது என்று அவர் பின்தங்கிவிடவில்லை. சினிமாவில் உயரத்தில் இருக்கும்போதே தேசிய ஆல்பம் ஒன்றை வெளியிட்டார். மா துஜே சலாம் என்று அவர் குரலில் ஒலித்ததும் மத்திய அரசு சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் அவரைப் பாடச் சொன்னது. இந்திப் படங்கள் கதவைத் திறந்தன. திரும்பத் திரும்ப விருதுகள் குவிந்தன. ரகுமான் மலபார் ஹில்ஸில் வீடு கட்டிக்கொண்டு செட்டில் ஆகிவிடவில்லை. அவர் லண்டனுக்குப் பறந்தார்.

ரகுமான் நம்மைப் பார்த்து இப்படிச் சொல்லக்கூடும், உங்களுக்கு ஆஸ்கார் வேண்டுமானால் அது இருக்கும் இடத்துக்கு நீங்கள் போக வேண்டும். அதுவரைக்கும் நிற்கக்கூடாது. ஏன், அதற்குப் பிறகும்கூட நிற்கக்கூடாது. அவ்வளவுதான் சூத்திரம்!

7 comments:

kavi said...

நல்ல விஷயத்தைத்தான் எழுதியிருக்கிறீர்கள். ஆனால் ஏன் எல்லோருமே ஏஆர் ரகுமானைப் பற்றி எழுதும் போது தேவையில்லாமல் இளையராஜாவை வம்புக்கு இழுக்கறீர்கள் என்றுதான் புரியவில்லை. இளையராஜா பணிபுரிந்து வரும் தளம் வேறு ரகுமான் பணிபுரிந்து வரும் தளம் வேறு. இருவரும் இரு வேறு திசைகளில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஷாஜி said...

/, உங்களுக்கு ஆஸ்கார் வேண்டுமானால் அது இருக்கும் இடத்துக்கு நீங்கள் போக வேண்டும். அதுவரைக்கும் நிற்கக்கூடாது. ஏன், அதற்குப் பிறகும்கூட நிற்கக்கூடாது. அவ்வளவுதான் சூத்திரம்!//

--செம நச்சு point sir..

ஷாஜி said...

/இருவரும் இரு வேறு திசைகளில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.//

---ஆனால் இசையால் ஒன்றானவர்கள்.

butterfly Surya said...

அருமை.

ரசித்த பதிவு.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

உங்கள் ஒவ்வொரு இடுகையாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். நெடுநாள் கழித்து தமிழில் ஒரு நல்ல வலைப்பதிவைக் கண்ட மகிழ்ச்சி. நன்றி.

athmika said...

நல்ல விஷயத்தை சொல்லியிருக்கீங்க பிரதர்.காலை வாரினால் ஒன்று,இரண்டு வாய்ப்புகள் கிடைக்கலாம் உயரத்தை தொடமுடியாது என்பது சத்தியம்.
keep it up ji.

athmika said...

நல்ல விஷயத்தை சொல்லியிருக்கீங்க பிரதர்.காலை வாரினால் ஒன்று,இரண்டு வாய்ப்புகள் கிடைக்கலாம் உயரத்தை தொடமுடியாது என்பது சத்தியம்.
keep it up ji.